Wednesday, December 24, 2008

சீமானும் செல்வியும்

-ஷோபாசக்தி

யக்குனர் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்கள் அண்மையில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் கைதுகளைக் கண்டித்தும் தமிழக அரசின் கருத்துச் சுதந்திர மறுப்பு எதோச்சதிகாரத்தைக் கடுமையாகச் சாடியும் வலைப்பதிவுகளில் தோழர்கள் எழுதிக் குவித்துள்ள கட்டுரைகளைப் படிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நீண்ட நாட்களாகவே பேசியும் எழுதியும் வருபவன் என்ற முறையில் உள்ளபடியே எனது கண்கள் பனிக்கின்றன. இந்த வலைப் பதிவாளர்களல்லவா எனது தோழர்கள் எனத் திரும்பத் திரும்ப எனது உதடுகள் முணுமுணுக்கின்றன.



மேலும் விரிவான கட்டுரைகக்கு சத்தியக்கடதாசி இணையத்தளம் செல்க .

http://www.satiyakadatasi.com

Thursday, November 27, 2008

ஈழத்தின் அவலமும் தமிழகத்தின் குரல்களும்

- ஷோபாசக்தி

(ஈழப் பிரச்சினையின் இன்றைய நிலை குறித்து, இம்மாத இறுதியில் தமிழகத்தில் வெளிவரவிருக்கும் தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை.)

சிறிலங்காப் பேரினவாத அரசால் இன்று தமிழ்மக்கள் மீது உச்சக்கட்டத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களிற்கு எதிராகவும், சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக இரத்தமும் கண்ணீரும் சிந்திக்கொண்டிருக்கும் தமிழ் மக்களிற்கு பரிவும், ஆதரவும் காட்டும் முகமாகவும் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எழுச்சிகளையும் நிகழ்வுகளையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச அரசின் அப்பட்டமான இனவாத அணுகுமுறையையும், மனிதவுரிமை மீறல்களிற்குச் சர்வதேச அளவில் பெயர் பெற்ற இலங்கை அரசபடைகளையும் நியாயப்படுத்திவரும தினமலர், 'இந்து' ராம், 'துக்ளக்' சோ போன்ற ஊடகக் கிரிமினல்களின் நச்சு வார்த்தைகளையும் நாம் ஆற்றாத கோபத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.

மேலும் விரிவான கட்டுரைகக்கு சத்தியக்கடதாசி இணையத்தளம் செல்க .

Wednesday, November 26, 2008

1958 டிசம்பர் 13

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் தினம் :50 ஆண்டுகள்

-சுகன்

நிறவெறியிலும் கொடுமையான தேசவழமைச் சட்டங்கள் நிலவிய காலமது!பொதுவீதியால் போகக்கூடாது, படிக்கக்கூடாது, (மேற்)சட்டை போடக்கூடாது,கோவில்கள் உணவகங்கள் இவற்றிற்குப் போகக்கூடாது.... என கொடூரமான வன்கொடுமையும் சாதி அடக்குமுறையும் நிலவிய யாழ்ப்பாண சமூகத்திலே இக்கொடுமைக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் தத்தமக்குரிய வழி வகைகளில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.அப்போதிருந்த வெகுசன அமைப்புகள் 1958 டிசம்பர் 13 அன்று இவ் அடக்குமுறைக்கெதிராக பரந்த அளவில் எதிர்ப்பும் சத்தியாக்கிரகப் போராட்டமும் நடாத்துவதென்று முடிவெடுத்து போராட்டக்களத்தில் இறங்கின.

அனைத்து மக்களினதும் ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்த இந்தப் போராட்ட தினத்தை அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தினமாக பிரகடனப்படுத்துவதென்று சிறுபான்மைத்தமிழர் மகாசபை முன்வைத்த வேண்டுகோளை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

திருவாளர்கள்: கன்டி பேரின்பநாயகம், எஸ்.கே.வேலாயுதபிள்ளை, டாக்டர்.வி.ரி.பசுபதி, செனட்டர்.பி.நாகலிங்கம், அ.அமிர்தலிங்கம், வி.பொன்னம்பலம் முதலிய பிரமுகர்கள் இக்கொடுமைகளை நீக்குவது தொடர்பாகக் கூட்டப்பட்ட மாநாட்டில் பங்குபற்றி தமது கருத்துகளைத் தெரிவித்தது முக்கியமான ஒரு கட்டமாகும்.அன்று இலங்கை முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் கவனத்தை ஈர்த்தது இப்போராட்டம்.

இத்தகைய பரந்துபட்ட மக்களினது ஐக்கியத்திலும், போராட்டத்தின் மூலமே ஒடுக்கப்பட்ட மக்களினது விடுதலையையும் சுதந்திரத்தையும் அனைத்து மக்களினதும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்த முடியும் என்பது இந்த ஐம்பதாண்டுகால போராட்ட வரலாறு நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

போராட்டத்தின் பல்வேறு சிறப்பான முன்னுதாரணங்களிற்கான காலமும் கருத்துகளும் அழிக்கப்பட்டாலும் ஒடுக்குமுறைகளின் வடிவம் காலத்திற்கேற்றவாறு தம்மை மறு தகவமைப்புச் செய்து நவீன வடிவில் தமது கொடூர கரங்களை ஒடுக்கப்பட்ட மக்களின்மீது இறுக்கிவருகிறது.ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி சமூகத்தை மீள்கட்டுமானம் செய்தாலொழிய இதற்கு மாற்றுவழி ஏதுமில்லை.

அகில இலங்கை சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் 16 வது வருடமாநாட்டின் 1957-1959 ஆண்டிற்கான அறிக்கை இவ்வேண்டுகோளை விடுத்திருக்கிறது: " டிசம்பர் 13 ஐ மகாசபையின் வேண்டுகோளின்படி சகல ஒடுக்கப்பட்ட மக்களினதும் தினமாக கொண்டாடுவது அவசியமென்பதை ஒவ்வொருவரும் உணருவது நன்றாகும்"

50 ஆண்டுகளிற்கு முன்னான இவ் வேண்டுகோள் இன்றும் இனியும் விடுதலையை அவாவிநிற்கும் இனங்கள்,தேசியங்கள்,சமூகக்குழுக்களிற்கு முக்கியமானதும் தொடர்ச்சியாகப் பேணப்படவும் கொண்டாடப்படவுமான சிறப்பான முன்னுதாரணமாகும்.

Wednesday, November 12, 2008

ஓபாமா x ஓசாமா: தேசம், மதம், மானுடம்

மானுட வரலாற்று நிலையும், தமிழில் சமூக அறிதலும் குறித்த குறிப்புகள்

- ராஜன் குறை

பகுதி 1: அமெரிக்கா, நவம்பர் 2008.

வம்பர் 4 ஆம் தேதி, அமெரிக்காவில் வரலாறு தன் முகத்தை மீண்டும் காட்டியது. ஒருபுறம், கடவுளைக் கண்டது போல வரலாற்றுவாதிகள் மகிழ்ந்தனர். இன்னொரு புறம், நள்ளிரவில் நியூயார்க் நகர வீதிகளில் மக்கள் ஆடிப்பாடினார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மகிழ்ச்சி யாரையும் நெகிழச் செய்வதாய் இருந்தது. மனிதர்களாகவே நடத்தாத, ஓட்டுப் போடும் உரிமைக்காக போராட வைத்த அமெரிக்க நிறவெறி, ஒரு கறுப்புத் தோல் மனிதரை நாட்டின் அதிபராக அனுமதிக்க நேர்ந்ததை எப்படிக் கொண்டாடாமல், நெகிழாமல் இருக்க முடியும்? எங்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கண் கலங்குவதையும், அழுவதையும் பார்க்க முடிந்தது. அவர்களது நினைவுகளின் சுமை அத்தகையது. வரலாற்றுவாதிகளுக்கோ இரண்டுவிதமான மகிழ்ச்சி. ஒன்று, மானுட வரலாற்றை தலைமையேற்று வழிநடத்தும் அமெரிக்கா தனது அவமானகரமான கடந்த காலத்திற்கு பரிகாரம் செய்துவிட்டது. இரண்டு, மாற்றம் என்ற ஒற்றைச் சொல் கோஷத்தை முன்வைக்கும், தீர்க்கதரிசியின் தொனி கொண்ட மனிதர் அமெரிக்க அதிபராகியிருக்கிறார். ஆனால், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட எனக்கு வரலாற்றுவாதிகளின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள முடியவில்லை. பல சிந்தனையாளர்களின் நிலையும் இதுதான்.

முதலில் தேர்தலின் போக்கையும், முடிவுகளையும் பரிசீலிக்கும் போது கடும் பொருளாதார நெருக்கடி தோன்றியிராவிட்டால் ஓபாமா வெற்றி பெற்றிருப்பாரா என்பது சந்தேகம் என்றே தோன்றுகிறது. தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள் (Blue Collar Whites) - குறிப்பாக பென்சில்வேனியா மாநிலத்தில் - நாங்கள் எப்போதும் ஜனநாயகக் கட்சிக்கு (ஓபாமாவின் கட்சி) வாக்களித்தாலும் அதற்காக ஒரு கறுப்பருக்கு ஓட்டுப் போட முடியாது என வெளிப்படையாகக் கூறியதாகப் பத்திரிகைகள் தெரிவித்தன. பெரும்பாலான வெள்ளையர்க்கு கடைசி நொடியில் ஒரு கறுப்பருக்கு ஓட்டுப் போட முடியாமல் கை இழுத்துக் கொண்டுவிடும் என பல பத்திரிகையாளர்கள் நினைத்தனர். இது எப்படியானாலும் ஓபாமாவின் வெற்றியுடன் நிறவெறி முடிவுக்கு வந்துவிட்டது என்பது நுனிப்புல் பார்வை. கே.ஆர்.நாராயணனும், அப்துல் கலாமும் இந்திய அதிபர்களானதால் கைர்லாஞ்சியும், குஜராத்தும் நிகழாமல் போய்விடவில்லை. தவிரவும் என்னுடைய முதல் அரசியல் நடவடிக்கை, பள்ளியிறுதியாண்டில் (1977), கோவையில் ஜனதா கட்சி, CPI (M) கட்சித் தொண்டர்களுடன் “ஜெய் ஜெய் ஜனதா, ஜெயிச்சாச்சு ஜனதா” என்று கோஷமிட்டு ஊர்வலத்தில் சென்றதுதான். வரலாறு என்பது அபத்த நாடகம் என்று தோன்ற சில ஆண்டுகளே தேவைப்பட்டன.

இந்திய ஜனநாயகத்திற்கும் அமெரிக்க ஜனநாயகத்திற்கும் வேற்றுமைகள் பல இருந்தாலும், ஒற்றுமைகளும் அதிகரிக்கின்றன. இஸ்லாமிய வெறுப்பு, அறிவுஜீவி வெறுப்பு, இடதுசாரி வெறுப்பு ஆகிய மூன்றிலும் இந்திய வலதுசாரி தேசிய மன நிலையும், அமெரிக்க வலதுசாரி தேசிய மனநிலையும் இணைய முனைகின்றன. முக்கியமாக அமெரிக்க ஜனநாயகத்தை புரிந்துகொள்ள ஓபாமா மீது குடியரசுக் கட்சி (அவரை எதிர்த்து போட்டியிட்ட மெக்கெயினின், இகழ்பெற்ற தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் கட்சி) ஓயாமல் சுமத்திய மூன்று கடும் குற்றச்சாட்டுகளை கவனிக்கவேண்டும். இவை மக்களிடையே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின என்பதுடன் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையும்கூட.

1. ஓபாமா ஒரு சோஷலிஸ்ட். (அமெரிக்காவில் மோசமான கெட்ட வார்த்தை). செல்வத்தை பகிர்ந்தளிக்கவேண்டும் என்கிறார். பணக்காரர்களுக்கு வரி அதிகரிப்பு என்கிறார். (என்ன அநியாயம்?)

ஒபாமா எதிர்வினை: நான் சோஷலிஸ்ட் இல்லை. இது சத்தியம், இல்லாவிட்டால் கோடீஸ்வரர் Warren Buffet என்னை ஆதரிப்பாரா?

2. அவர் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார். புரட்சியாளர், ஆபத்தானவர். Too Radical, Too Risky.

(அ) வில்லியம் அயர்ஸ் என்கிற வியட்நாம் போர் காலத்தில் (1969) குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட நபருடன் நட்பாக இருந்தார்.

ஓபாமா எதிர்வினை: பொது இடத்தில்தான் அவரை பார்த்தேன். அவர் இப்போது ஒரு பேராசிரியர். இருவரும் சில நலத்திட்டங்களுக்கான நிர்வாகக் குழுவில் இருந்தோம். அவ்வளவுதான். அவர் குண்டு வைத்தபோது எனக்கு எட்டு வயது. அச்செயலை நான் கண்டித்து விட்டேன்.

(ஆ) ரஷித் காலிதி (Rashid Khalidi) என்ற பாலஸ்தீன ஆதரவு பேராசிரியருடன் நட்பாக இருந்தார். எனவே தீவிரவாத உணர்வு கொண்டவர். இஸ்ரேலுக்கு எதிரானவர்.

ஓபாமா எதிர்வினை: காலிதி ஒரு புகழ்பெற்ற அறிஞர். சிகாகோ, பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் ஆனாலும் அவருடன் கருத்துக்களை விவாதித்திருக்கிறேன். அவ்வளவுதான்.

3. அவர் ஒரு ரகசிய முஸ்லிம். இந்த திடுக்கிடும் "குற்றச்சாட்டு" பகிரங்கமாக வைக்கப்படவில்லை; வதந்தியாக பரப்பப்பட்டது. அவரது நடுப் பெயரான ஹுசைன் அழுத்தமாக உச்சரிக்கப்பட்டது.

ஓபாமா எதிர்வினை: என் தந்தை முஸ்லிம். தாய் கிருஸ்துவர். நான் கிருஸ்துவன். தயவுசெய்து என்னை நம்புங்கள்.

ஓபாமா பலமுறை 'ஓசாமா பின் லேடனை பாகிஸ்தானுக்குள் நுழைந்தாவது பிடிப்பேன்' என உறுதி கூறினார். ஓபாமாவின் வெற்றியை ஒளிபரப்பியபோது போது கென்யாவில் அவரது ஆப்பிரிக்க முஸ்லிம் பங்காளிகளை காட்டினர். எனவே இப்போது ஒரு சுவாரசியாமான, ஆனால் அபத்தமான சித்தரிப்பு சாத்தியமாகிறது. ஒரு ஆப்பிரிக்க முஸ்லிம் குடும்பத்திற்கு வம்சாவழி உறவுடைய ஓபாமா, உலக வரலாற்றுத் தலைமை கொண்ட தேசத்தின் அடையாளமாகிறார். அந்தத் தேசத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பதாக, பிற்போக்குத்தனமானதாக, மாற்றத்தை விரும்பாததாக கூறப்படும் அதே முஸ்லிம் மதத்தின் தீவிரவாத்திற்கு அடையாளமான ஓசாமா அவரது முதல் எதிரி ஆகிறார்.

ஓபாமா x ஓசாமா. மானுட வரலாற்றின் அடுத்த சுற்று. அதன் கேள்வி: தேசமா? மதமா? தேசமென்னும் மதமா, அதன் முன்னேற்றமா? அல்லது மதம் என்னும் தேசமா, அதன் தேக்கமா? முடிவை டி.வி. திரையில் காண்க. இந்தச் சித்தரிப்பு ஏன் அபத்தமானது? அப்படித்தானே ஊடகங்கள் கூறுகின்றன? சில காரணங்களைக் காண்போம்.

பகுதி 2: காகமோனா

சென்ற ஆண்டு, என் நண்பரின் 11 வயது மகளிடம் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டில் கம்ப்யூட்டரெல்லாம் கிடையாது என்றேன். அவளுக்கு ஆச்சர்யம். அப்போது எப்படி ஈ-மெயில் பார்ப்பீர்கள் என்று கேட்டாள். அப்போது ஈ-மெயிலே கிடையாது என்றுவிட்டு அடுத்த கேள்விக்கு முன்னால் இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன். தமிழ் சமூக அறிதலின் பிரச்சினை நாம் வாழும் காலத்தில் காண்பதெல்லாம் எல்லா காலங்களிலும் இருந்ததாக நம்புவதுதான். குகைச்சுவரில் கிறுக்கப்பட்டதும், புறாக்காலில் கட்டப்பட்ட ஓலைத்துணுக்கும், ஈமெயிலும் ஒன்றுதான் எனக் கூறும் சாராம்சவாதிகள் வித்தியாசத்தை மறுப்பவர்கள். தகவல் பரிமாற்றம் என்று ஒன்று இருந்தால் அது ஈமெயில் வரை வந்துதான் தீரும் என நம்பும் வரலாற்றுவாதிகள் தற்செயலை மறுப்பவர்கள். வித்தியாசம், தற்செயல் ஆகிய இரண்டு கருத்துக்களின்றி வரலாற்றுத் தடங்களிலிருந்து சமூக அறிதலை உருவாக்கிக் கொள்ள முடியாது. தேசம், மதம், மனிதன் ஆகிய மூன்றுமே பன்னெடுங்காலமாக ஒரே போல் தொடர்வதாக மேற்குலகிலும் இந்தியாவிலும் பலர் கருதுகின்றனர். Samuel Huntington போன்று ‘பண்பாடுகளின் மோதல்’ என்று ஓபாமா x ஓசாமா பிரச்சினையை வர்ணிக்கின்றனர். இவர்களுக்கு காகமோனா பற்றித் தெரிவதில்லை; அதன் முக்கியத்துவம் புரிவதில்லை.

சில வருடங்களை மறக்கக் கூடாது. 1439 - கூடன்பர்க் அச்சுக்கூடத்தை உருவாக்கினார். 1492 – கொலம்பஸ் இந்தியா போக நினைத்து புதிய நிலப்பகுதியை கண்டறிந்தார். 1498 – வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு கடல்வழியை கண்டுபிடித்து காலிகட்டில் வந்திறங்கினார். இவற்றால் நிகழத்துவங்கிய மாற்றங்கள் அடுத்த நூறாண்டுகளில் ஐரோப்பாவை மானுட வரலாற்று மாலுமியாக உருவகம் கொள்ள வைத்தன. இங்கு ஐரோப்பாவை நிலப்பகுதியாக பார்க்காமல், ஒரு கருத்தாக்க-உருவகமாக பார்க்கவேண்டும். (Concept-Metaphor; ஐரோப்பாவை இப்படி அணுகுவது தீபேஷ் சக்ரவர்த்தியின் பரிந்துரை. பார்க்க: Provincializing Europe) பதினேழாம் நூற்றாண்டில் ஹாப்ஸ், தேகார்த், கலிலியோ ஆகிய மூவரையும் குறிகளாகக் கொண்டால் காகமோனா காலம் துவங்கியது தெளிவாகும். காகமோனா என்றால் என்ன?

கா - CA – CAPITALISM – முதலீட்டியம்
க - CO – COLONIALISM – காலனீயம்
மோ – MO – MODERNITY – நவீனம்
னா – NA – NATIONALISM – தேசியம்

CA-CO-MO-NA = காகமோனா.

இது ஒரே நாளில் தோன்றியதில்லை. முன்னூறு ஆண்டுகளாக வலுப்பெற்று இன்று உலகளாவிய நிலையாக இருப்பது. காலனீயமும், தேசியமும் நுட்பமாக பிணைக்கப்பட்டவை. உதாரணமாக ஒரு தேசிய அரசினுள் இருக்க விரும்புவோருக்கு அந்த அரசு தேசிய அரசு. விரும்பாதோர்க்கு காலனீய அரசு. வட கிழக்கு மாநில, காஷ்மீர் மக்கள் இயக்கங்கள் இந்திய அரசை காலனீய அரசாகவே பார்க்கின்றன. தமிழ் புனைவெழுத்தாளர் ஜெயமோகன் தேசிய அரசாகப் பார்க்கிறார். கா, க, மோ, னா - இவை நான்கும் கலந்த அற்புதக் கலவையாக காகமோனாவை புரிந்து கொள்ளாவிட்டால் எந்த விஷயத்திலும் தெளிவு பிறக்காது. காகமோனா தான் தீண்டிய அனைத்தையும் மாற்றி அமைக்கும். சில இடங்களில் மாற்றம் கண்ணுக்குத் தெரியும், பல இடங்களில் தெரியாது. எல்லாமே எப்போதும் மாறும் தன்மையன என்பதால் காகமோனா மாற்றத்தின் தனிக் குணங்கள் புரிந்துகொள்ளப் படுவதில்லை.

இதில் பெரிய வேடிக்கை, தேசியவாதிகள் தங்கள் பழமையை காப்பாற்றிக் கொள்வதாக கூறுவது. அவர்கள் தேசியமே காகமோனா என்னும்போது எந்தப் பழமையை எதைக்கொண்டு காப்பாற்றப் போகிறார்கள்? அதேபோல முதலீட்டியமும், நவீனமும் நுட்பமாக பிணைக்கப்பட்டவை. நவீனத்தில் காலூன்றி முதலீட்டியத்தை மட்டும் எதிர்க்கும் இடதுசாரிகள் தேசியவாதிகள் போன்றே முரண்பாடான நிலைக்கு வருகிறார்கள். இடதுசாரி தேசியவாதிகளோ மிகப்பெரிய குழப்பத்திற்கு இட்டுச்செல்கிறார்கள். மாற்றத்தையே தேசத்தின் சாராம்சமாக்கிவிடலாம் என்ற மூன்றாமுலக நம்பிக்கை படிப்படியாக தகர்ந்துவிட்டது. அந்த தகர்ப்பின் ஒரு பகுதிதான் 1992 டிசம்பர் மற்றும் 2002 குஜராத்.

இப்படியெல்லாம் கூறும்போது காகமோனாவை விடுத்து பின்னோக்கி போகவேண்டும் என்பதல்ல. ஒரு வளைவில் திரும்பவேண்டும். முதலில் காகமோனாவை ஒரு வாழ்முறையென்றும், அதேசமயம் ஒரு அறிதல் முறையென்றும் புரிந்துகொள்ளவேண்டும். இரண்டையும் அதாவது அறிதல்முறையையும் வாழ்முறையையும் பிரிக்க முடியாது. ஒன்றை சுவீகரிக்கும்போது மற்றொன்றும் இணைந்தே வரும். ஆனால் இரண்டையும் பிரிக்கலாம் என்ற நம்பிக்கை காகமோனா அறிதல்முறையின் ஓரங்கம். இதை புரிந்துகொள்ள எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் One Step Outside Modernity என்ற கட்டுரையில் விவாதிக்கப்படும் யு. சிவசாமி அய்யரை உதாரணமாகப் பார்க்கலாம். விரிக்கில் பெருகும். ஆனால் காகமோனாவின் இயங்கியலில் விமர்சனப்பார்வையும் எழுந்தது. காலங்காலமாக இயங்கும் தத்துவம் என்ற சுயபரிசீலனையின் துணையுடன் அந்த விமர்சன மரபுகள் வளர்ந்தன. இதை நான் சமூக அறிதல் என குறிக்க விரும்புகிறேன். முக்கியமான வரையொன்றை முன்வைக்கிறேன்.

காகமோனா வாழ்முறையையும், காகமோனா அறிதல்முறையையும் கருத்தில் கொண்டு எந்த ஒரு நிகழ்பொருளின் காகமோனாவுக்கு முந்தைய பிந்தைய வடிவங்களையும் வம்சாவழித் தொடர்ச்சியாக அறிவதே சமூக அறிதல்.

இது காகமோனா அறிதல் முறையுடன் சுய விமர்சனத்தை இணைப்பது. வம்சாவழித் தொடர்ச்சி என்பது சுய மறு உருவாக்கமில்லை. பல விதமான மாற்றங்களையும், உடைப்புகளையும், முரணியக்கத்தையும் உள்ளடக்கியது.தமிழில் இச்சமூக அறிதலின்பாற்பட்டு ஒரு இயக்கமே உடனடியாகத் தோன்றவேண்டியிருக்கிறது. சமூக அறிதல் என்பது தகவல் சேகரிப்பல்ல. கோட்பாடுகளின் அணிவகுப்புமல்ல. அது காகமோனாவின் தடங்களை ஓயாது விசாரிப்பது. காகமோனா மனிதனைப்பார்த்து 'செய் அல்லது செத்துமடி' என்று சொல்லிவிட்டது. மனிதன் என்ற கருத்தையே காகமோனா அறிதல்முறை மாற்றிவிட்டதால் மானுடம் சந்திக்கும் சவால் மிகக் கடுமையானது. ஒவ்வொரு உள்ளூர் பிரச்சினையும் தனித்துவமானது. ஆனால் அந்த எந்தப் பிரச்சினையையும் காகமோனாவை விமர்சிக்கும் சமூக அறிதலன்றி எதிர்கொள்ள முடியாது. இந்தப் புரிதலே ஃபூக்கோவின் பரிசு.

பகுதி 3: தமிழில் சமூக அறிதலும் இலக்கிய முதன்மைவாதமும்

இலக்கியமும் சமூக அறிதலின் ஒரு பகுதிதான். ஆகச்சிறந்த இன்றியமையாத பகுதி என்று கூட சொல்ல்லாம். கோணங்கி, பிரேதா-பிரேதன், ஷோபாசக்தி, பா.வெங்கடேசன் உள்ளிட்ட பலரது எழுத்து சமூக அறிதலின் இன்றியமையாத அங்கம்தான். ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ கதை காகமோனாவின் பயணத்தை மிகச் சிறப்பாக சொல்கிறது. பிரச்சினை என்னவென்றால், ஜெயமோகன் போன்ற முக்கியமான எழுத்தாளர் சிறுபிள்ளைத்தனமாக ‘எனது இந்தியா’ என ஒரு உணர்ச்சிக் கட்டுரையெழுதிவிடுவார். அவரது குரலுக்கும் அமெரிக்க வலதுசாரிகளின் குரலுக்கும் உள்ள ஒப்புமைகளை கவனியுங்கள்.
தமிழின் பிரச்சினை, சமூக அறிதலின் பாற்பட்டு இயங்கும் அ.மார்க்ஸ் என்ற சிந்தனையாளர் ஜெயமோகனை கண்டித்து எழுதுவதில் நேரத்தை செலவிட வேண்டியிருப்பதுதான்.

இந்தியா என்ற கருத்தாக்கத்தையும், இஸ்லாம் என்ற கருத்தாக்கத்தையும் சமூக அறிதலின் பாற்பட்டு விமர்சிக்க கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த இருநூறு ஆண்டுகளில் மத்தியக் கிழக்கு எனப்படும் பகுதியில் ஐரோப்பா செலுத்திய வன்முறையின் பரிமாணங்களையறியாமல் ஜிஹாத் குறித்தும், இஸ்லாம் குறித்தும் பேசும் நண்பர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஏராமான ஆய்வுகள் இருக்கின்றன ஆங்கிலத்தில். ரஷித் காலிதி ஒரு உதாரணம். டிமோதி மிட்சலை படித்தேயாகவேண்டும். தலால் அசாதை தவிர்க்க முடியாது. எடவர்ட் சயித், ஜோசப் மசாத், ஃபைசல் தேவ்ஜி. அடேயப்பா, எத்தனை அறிஞர்கள், ஆய்வுகள், பார்வைகள். ஒரு அ.மார்க்ஸ் போதுமா? தமிழின் உடனடித் தேவை குறைந்தது நூறு அ.மார்கஸ்.

இஸ்லாமிய சமூகங்களை குறித்த காகமோனா வம்சாவழி சமூக அறிதலை தமிழில் ஏற்படுத்த மட்டும் நூறு பேர் வேண்டும். பிற சங்கதிகளுக்கு மேலும் ஆட்கள் தேவை. சமூக அறிதல் வலுப்பெறாவிட்டால் தொடர்ந்து விபரீதமான அடையாள அரசியல் மயமாதல் நடப்பதை தடுக்க முடியாது. இளைஞர்கள் மட்டுமின்றி, புனைவெழுத்தாளர்களும் கொச்சையான வன்முறை நிறைந்த அடையாள அரசியலே கதி என நினைக்கும் சூழல் உருவாகிறது. ஆங்கிலம் முதலீட்டியத்தின் மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ள ஒரு பெண் (ஒரு உருவகம்தான்.) அந்தப்பெண்ணால் சில உபகரணங்களை உருவாக்கி வெளியில் தூக்கி எறிய முடியும். பிற மொழிச் சமூகங்களில் அந்த உபகரணங்களால் ஆரோக்கியமான இயக்கங்கள் பிறக்க முடியும். ஏனென்றால் அச்சமூகங்களில் காகமோனா உறைநிலைக்கு வரவில்லை. தோரோவும், தால்ஸ்தாயும் அவர்கள் ஊரில் சாதிக்க முடியாததை அவர்களைப் படித்த காந்தியால் சாதிக்க முடிந்தது. வன்முறையற்ற மக்கள் இயக்கத்திற்கான மாதிரியை உருவாக்க முடிந்தது.

அ.மார்க்ஸ் என்ற பெயர் ஒரு உதாரணம்தான். தமிழில் சிந்தனைகளைப் பதித்த, பதிக்கும் அனைத்து நண்பர்கள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் அபிமானமும் உண்டு. தமிழ் சிறு பத்திரிகை குழுத்தன்மையை நாம் பொருட்படுத்தக்கூடாது. சமூக அறிதல் உத்வேகம் கொள்ளும்போது இவை மறைந்துவிடும். கருத்துவேற்றுமை இல்லாத நட்பும், கருத்தொப்புமை இல்லாத விலகலும் சாத்தியமில்லை. எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ரவிகுமார், சுந்தர் காளி ('சுயமுகமும், திருமுகமும்' என்ற அற்புதமான சிறு நூலை தமிழுக்கு அளித்துள்ளார்; அவசியம் படிக்கப்படவேண்டிய நூல்), தொ.பரமசிவம், ராஜ்கவுதமன், ‘அந்தக் காலத்தில் காபி இல்லை’ ஆ.இரா.வெங்கடாசலபதி, பொ.வேல்சாமி, இ.முத்தையா, ரவி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட பலர் சமூக அறிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கியுள்ளனர். ஞானி, தமிழவன், நாகார்ஜுனன், எம்.டி.முத்துக்குமாரசாமி, பிரேம் போன்ற முக்கியமான சிந்தனையாளர்கள் கோட்பாடு, தத்துவம், இலக்கியம் ஆகியவற்றை முக்கியப்படுத்தியவர்கள். இவர்களிடம் செயல்படுவது ஒருவகை இலக்கிய முதன்மைவாதம் என்று எனக்குத் தோன்றுகிறது. (எம்.டி.எம் இப்போது நானறிந்தவரை எழுதுவதில்லை) சமூக அறிதலின் களவயப்படுத்துதல் (localization) இவர்கள் இயக்கத்தில் படைப்பிலக்கியமாகவும் இலக்கிய விமர்சனமாகவும் கோட்பாட்டியலாகவும் பரிணமிக்கிறது. நிறுவனங்கள், இயக்கங்கள், சமூக நிகழ்வுகள் போன்றவற்றை ஆய்வதில்லை. மேற்கத்திய வகைப்பாட்டில் இவர்கள் Humanities எனப்படும் கலை,இலக்கிய சிந்தனைத்துறைகளில் நிற்கின்றனர். Social Sciences என்னும் சமூக அறிவியலை கருதுவதில்லை.

உதாரணமாக இந்திய சிந்தனையின் சமகால சாதனையாகிய அடித்தள ஆய்வுகளை (Subaltern Studies) அ.மார்க்ஸ்தான் தமிழில் கவனப்படுத்தினார். ரணஜித் குஹாவின் ‘சந்திராவின் மரணம்’, சாஹித் அமினின் ‘காந்தி மஹாத்மா’, பார்த்தா சாட்டர்ஜியின் ‘காந்தி: குடிமைச் சமூகத்தின் விமர்சகர்’ போன்ற கட்டுரைகளே தமிழில் சமூக அறிதல் தன் பயணத்தை துவங்க உதவும். சமீபத்தில் பார்த்தா சாட்டர்ஜி எழுதிய ‘ஆளப்படுவோரின் அரசியல்’ (The Politics of the Governed) உடனடியாக தமிழில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நூலாகும். களவயப்படுத்துதல் என்பதை விரிந்த பொருளில் கொள்ள வேண்டும். தெரிதா, ஃபூக்கோ, தெல்யூஸ், அகம்பென், பாதியூ எல்லாம் படித்தாலும் நாம் ஆராய்ந்து எழுதவேண்டியது வள்ளலார் குறித்தும், வைகுண்டசாமி குறித்தும், அயோத்திதாசர் குறித்தும்தான்; அதாவது உள்ளூர் களங்களைக் குறித்துதான். அத்தகைய எழுத்து மொழி, பிரதி, இலக்கியம், கதையாடல் என்று மட்டும் போகாமல், சொல்லாடல், செயல் வலைப்பின்னல், வம்சாவழி ஆய்வு என்றும் பரிணமிக்கவேண்டும். ஃபூக்கோவின் ஆய்வுகளை மறக்கக்கூடாது.

இலங்கை பிரச்சினை குறித்த கோட்பாட்டு நூல்கள், கட்டுரைகள்கூட ஏராளமாக ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. நானறிந்தவரை அவை தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. இலங்கை அறிஞர்கள் உலகப்புகழ் அல்லது ஆங்கிலக் கல்விப்புல புகழ் பெற்றவர்கள். ஆனால் அவர்கள் தமிழில் அறியப்பட்டவர்களில்லை. சிங்களத்தின் நிலை எனக்குத் தெரியாது. அங்கு ஒரு இடதுசாரி இயக்கம், அடையாள வெறிகொண்ட தேசிய வலதுசாரி இயக்கமாக மாறியதை அறியும்போது அச்சம் பெருகுகிறது. தமிழில் வந்த புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியமோ’, நேபாளத்துடன் ஒப்பிட்டு அ.மார்க்ஸ் முன்வைத்த சீரிய சிந்தனைகளோ ஆங்கிலத்தில் எழுதும் நானறிந்த சிலர் கவனத்திற்கு வரவில்லை. இருமொழிச் சூழலின் சிக்கலிது. இதையே தமிழ் சமூகம் உலக வரலாற்றின் இன்றைய கட்டத்தில் சந்திக்கும் மிகப் பெரிய சவாலாக நினைக்கிறேன். என்னால் முடிந்தவரை என்னுடைய எளிய சாத்தியங்களுக்கு எட்டியவரை இச்சவாலை எதிர்கொள்வேன். என் கடன் இருமொழிகளிலும் எழுத்துப்பணி செய்து கிடப்பதே.

Wednesday, October 08, 2008

பொருளா ஆதாரம்? வால் ஸ்டிரீட் என்னும் மருள் உலகம்

- ராஜன் குறை

அண்டம் கிடுகிடுக்கிறது; ஆகாசம் நடுநடுங்குகிறது. "மூவுலகையும் ஒரு குடை நிழலில்" ஆளும் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தொலைக்காட்சியில் தோன்றி தேச மக்களிடம் நெருக்கடி, நெருக்கடி என்று அரற்றுகின்றனர். ஐஸ்லாந்து நாடே திவாலாகிவிடும் போலிருக்கிறது. "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே" என்று திருவாளையாடல் படத்தில் பாடும் சிவனைப்போல, உலக பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதால், உலகில் யாரும் பாதிப்பிலிருந்து தப்பமுடியாது என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். உலக வங்கித் தலைவரும் முதலீடுகள் குறையுமென்பதால் உலக பொருளாதாரம் தேக்கமடையும் என்கிறார். அரை வயிற்றுக்கும், கால் வயிற்றுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என வாழும் உலகின் பெரும்பான்மை மக்களுக்கு இதெல்லாம் நகைச்சுவைதான் என்றாலும், அவர்களைக் குறித்தும், தங்களைக் குறித்தும் அக்கறைப்படும் சிந்தனையாளர்கள், வரலாற்றுவாதிகள் என்னதான் நடக்கிறது இங்கே என்று கேட்காமலிருக்க முடியாது.

பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மூன்று முக்கிய போக்குகள் கூர்மையைடந்தன. "மக்களாட்சி" எனப்படும் புதிய அரசியலமைப்பு, அறிவியல் - தொழில்நுட்ப அணுகுமுறை, முதலீட்டிய சந்தை பொருளாதாரம். இவை மூன்றும் சேர்ந்து செய்த அறிவிப்பு: "வளர்ச்சி, வளர்ச்சி, அனைவருக்கும் வளர்ச்சி, எல்லையற்ற வளர்ச்சி" என்பது. அதனடிப்படையில் பிறந்தது வரலாற்றுவாதம். "வேகம், வேகம், போவோம் தூரம் மாஜிக் ஜர்னி" என்பது இதன் பாடல். இதற்கு தத்துவப் பரிமாணமளிக்க ஒரு கூட்டமே இயங்கியது. சிறந்த தத்துவ அறிஞர்களிடம் விமர்சனங்கள் பரிமளித்தாலும், அவர்கள் தத்துவம் பயணத்தை சீரமைக்க எத்தனித்தாலும் அவர்கள் காலத்தின் கைதிகளாகவே சிந்தித்தனர்; அதற்கு நீட்சே மட்டுமே விதிவிலக்கு என்று தோன்றுகிறது. பொதுவாக நவீன சிந்தனையில் எதுவும் தேங்கவும் கூடாது, நிற்கவும் கூடாது. வரலாறு என்பது ஓயாமல் நேர்கோட்டில் பயணிப்பது. ஆன்மீக ரீதியாக விடுதலைக்கு பதில் சுதந்திரத்தை முன்னிறுத்துவது. இதன் மையத்தில் எழுந்த மர்ம அடையாளமே நவீன "மனிதன்." (இச்சிந்தனைகளின் ஆண்சார்பை முன்னிட்டு ஆண்பால் விகுதியை பயன்படுத்துகிறேன்.) இந்தப் பிண்ணனியை மனதில் கொள்ள வேண்டும் முதலில்.

இன்றைய "நெருக்கடிக்கு" வருவோம். அமெரிக்காவிற்கு ஏன் பொருளாதார நெருக்கடி? மாதம் மும்மாரி பொழியவில்லையா? வானம் பொய்த்துவிட்டதா? நோய்க்கிருமிகள் பரவி மக்களும், மாக்களும் மடிந்தனரா? இயற்கை சீற்றமா? அல்லது பத்தொன்பதாம்/இருபதாம் நூற்றாண்டு போல தொழிலாளர் வேலை நிறுத்தமா? மக்கள் புரட்சியா? பின் லாடன் போன்ற எதிரிகளின் தாக்குதலா? அதெல்லாம் ஒன்றுமில்லை தோழர்களே. அமெரிக்காவில் ஒரு வீதி. அதன் பெயர் வால் ஸ்டிரீட். அங்கு பங்கு சந்தை மற்றும் நிதி முதலீட்டியத்தை (Finance Capital) செயல்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அந்த வீதியின் பெயர் அத்தகு நிறுவனங்களுக்கான ஆகுபெயராக செயல்படுகிறது. வால் ஸ்டிரீட் நிதி நிறுவனங்கள் தோற்றுவித்த நெருக்கடிதான் இது. அவை எப்படி இந்த நெருக்கடியை தோற்றுவித்தன என்பதையும், பொதுவாக எப்படி இயங்குகின்றன என்பதையும் குறித்த சிறு குறிப்புகளை எனக்குப் புரிந்தவரையில் விவாத நோக்கில் கீழே தருகிறேன்.

முதலீட்டு வங்கிகளுக்கு தங்கள் செயல்பாடுகளின் பரிமாணத்தை தொடர்ந்து விரிவாக்க வேண்டிய நிர்ப்பந்தம். இந்த CEO என்ற ஒரு இனம் இருக்கிறது. கடவுள், அரசர் என்பதுபோல ஒன்று அது. தலைமை செயல் நிர்வாகி என்று பொருள். நாம் சீயீவோ என்று அழைக்கலாம். அந்த வங்கிகளுக்கும் சீயீவோ உண்டு. அவர்களிடம் "நீங்கள் எப்படியாவது இந்த வங்கியின் சொத்து மதிப்பை அதிகம் செய்யுங்கள். உங்களுக்கு அதில் நல்ல கமிஷன் உண்டு" என அந்த வங்கியின் பங்குதாரர்கள் சொல்கின்றனர். அவர் ஒரு முடிவெடுக்கிறார். நிறைய கடன் தர வேண்டும். ஏனென்றால் வசூல் ஆக வேண்டிய கடன்களென்றால் நிறைய வட்டி - இலாபம் என்று பொருள். இந்த கடன்களுக்கு மதிப்பு உண்டு. அவற்றை விற்கலாம்.

அதாவது நான் உங்களுக்கு ஐந்து வருடத்தில் ஐயாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று வையுங்கள். அதற்கு வட்டி மூவாயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் இன்று ஐந்து வருடம் கழித்து எட்டாயிரம் பெறக்கூடிய பத்திரம் இருக்கிறது. நீங்கள் அதை ஆறாயிரம் ருபாய்க்கு உடனே விற்கலாம். (வாங்குபவருக்கு மீத வட்டி இரண்டாயிரம் கிடைக்குமல்லவா) ஐயாயிரம் கொடுத்தீர்கள். உடனே ஆயிரம் ரூபாய் இலாபம். அடுத்த மனிதருக்கு ஆறாயிரம் ருபாய் கடன் கொடுக்கலாம். அந்த பத்திரத்தை 7,200 க்கு விற்கலாம். இப்படியாக தொடர்ந்து கடன் கொடுப்பதன் மூலம் சொத்தை அதிகரிக்கலாம். கடன் வாங்கியவர் திருப்பித்தராவிட்டால் நட்டமடையாமலிருக்க அக்கடன் பத்திரங்களை காப்பீடு (இன்ஷ்யூர்) செய்து கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல். ஒரு வங்கி கடன் தருவதற்கு, கடன் பெறும் நபருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி விதிமுறைகள் இருக்கின்றன. அவருக்கு திருப்பிக் கொடுக்குமளவு வருமானம் இருக்கிறதா போன்றவை. இதிலிருந்து தப்பிக்க சீயீவோ என்ன செய்தார்? அவர் ஒரு கடன் வழங்கு நிறுவனத்தை தனியாக தோற்றுவித்தார். அந்த நிறுவனத்திற்கும் சீயீவோ உண்டு. அவர் வேலையுமில்லாத, வருமானமுமில்லாத பீட்டரிடம் சென்றார். "பீட்டர், பீட்டர் உனக்கு ஐந்து இலட்சம் விலையுள்ள வீடு வேண்டுமா? நான் வாங்கித் தருகிறேன்" என்றார். பீட்டர் நான் எப்படி தவணை கட்டுவேன் என்று கேட்டார். அதற்கு சீயீவோ சொன்னார். "நாங்கள் நிறைய பேருக்கு கடன் தருவதால், வீடுகளின் விலைமதிப்பு அதிகரிக்கும். உன் வீடு ஒரு வருடத்தில் ஆறு இலட்சமாகி விடும். அப்போது நீ அதன் மீது கடன் வாங்கலாம். வாங்கி தவணையை கட்டலாம்." பீட்டருக்கு ஒரே சந்தோஷம். இருக்காதா பின்னே? கடன் நிறுவன சீயிவோ, அவரிடமிருந்த பத்திரத்தை வாங்கும் வங்கி சீயீவோ, காப்பீடு சீயீவோ எல்லோருக்கும் சந்தோஷம். எல்லோருக்கும் இலாபம், வியாபாரப் பெருக்கம், கமிஷன். உதாரணத்திற்கு, ஒர் கடன் நிறுவன சீயீவோவின் வருமானம், அதிகமில்லை, ஒரு மணி நேரத்திற்கு சுமார் எட்டு இலட்சம் இந்திய ரூபாய். நம்ப முடியவில்லையா? எனக்கும்தான்.
(பார்க்க: http://www.nytimes.com/2008/09/18/opinion/18kristof.html )

இப்படியாக தொடர்ந்து கடன் தர, தொடர்ந்து வீட்டின் மதிப்பு அதிகரிக்க ஒரே பொருளாதார வளர்ச்சி. திடீரென்று வீட்டின் விலை ஏற மறுக்கிறது. பீட்டர் தவணை கட்டவில்லை. கடன் பத்திரங்கள் மதிப்பிழக்கின்றன. கடன் நிறுவனம் மூழ்கிப்போகிறது. வங்கி, காப்பீடு நிறுவனம் எல்லாம் தவிக்கின்றன. இதுதான் நெருக்கடி.

கடந்த இரண்டாண்டுகளில் கடன் கட்ட முடியாமல் அமெரிக்காவில் பத்து இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர். அடுத்த ஆண்டு இன்னம் பத்து இலட்சம் பேர் வீடுகளை இழக்கப் போகின்றனர். கற்பிதமாக உருவாக்கப்பட்ட மதிப்பீட்டு மண்டலம் சரிவதால் பெரும் வர்த்தக நெருக்கடி உருவாகிறது. வங்கிகளின் மீதுள்ள நம்பிக்கையே முதலீட்டியத்தின் அடிப்படை. அதுவே எதிர்கால மதிப்பை இன்றைய மதிப்பாக்குகிறது. "இன்று கடன், நாளை ரொக்கம் (இடையில் வட்டி)" என்பதே முதலீட்டியத்தின் தாரக மந்திரம். உருண்டோடிடும் பணம் காசுகள் ஆங்காங்கே உறைந்து நிற்கின்றன. பங்குச் சந்தை பரிமாற்றங்கள் ஓய்கின்றன. கடன் வசதியின்றி உற்பத்தியும், வர்த்தகமும் சுருங்குவதால் வேலை வாய்ப்புகள் குறைந்து வறுமை எங்கும் அதிகரிக்கும் எனலாம். இதையே தேக்கம் (recession) அல்லது மந்தநிலை (depression) என்கின்றனர். இது எவ்வளவு முற்றும் எப்படி சரியாகும் என்பது குறித்து "பொருள்" ஆதார நிபுணர்கள் விவாதிக்கின்றனர்.

இந்த இடத்தில் நாம் இந்த பொருள்-ஆதாரம் எப்படி செயல்படுகிறது எனக் கவனிக்க வேண்டும். எதிர்காலத்தில் வரக்கூடிய இலாபத்தை கணக்கிட்டு அதை இன்றைய மதிப்பாக மாற்றி வர்த்தகம் செய்வது. பங்குகள் என்பதே அப்படித்தான் என்றால், பங்குகளின் மீது ஒப்பந்தங்கள் போடப்பட்டு அந்த ஒப்பந்தங்களை விற்பது அடுத்த கட்டம். கடன்களை விற்பது பற்றி பார்த்தோம். மிகச்சிக்கலான மதிப்பீடு வலைப்பின்னல் உருவாக்கப்படுகிறது. காலத்தில் முன்னோக்கிப் பாய்ந்து நாளைய தினத்தை இன்றே நுகர்வதான தோற்றம் வருகிறது. மாசக்கடைசியில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வருமென்றால் அதனடிப்படையில் இருபதாம் தேதியே ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்குபவர்களை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதை நிறுவனமயப்படுத்திதான் கிரெடிட் கார்டுகள் தோன்றின. உழைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு கடனே, நுகர்வே அடிப்படை மதிப்பாகிறது. இது எந்த அளவு என்றால் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்க ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுத்த அறைகூவல்: "சாமான்களை வாங்கிக் குவியுங்கள்" என்பது. தேவை நுகரும் உடல்கள்; உழைக்கும் கரங்களல்ல.

எதிர்கால மதிப்பை எப்படி கணக்கிடுவது? சந்தை நிலவரங்களை எப்படி கோட்பாடாக்குவது என்று பொருளாதாரம் என்ற சிந்தனைத்துறை யோசித்த போது அது இயற்பியலிலிருந்தே தன் மாதிரிகளைப் பெற்றது. அறிவியல் கணித்ததை பின்பற்ற, பொருளாதாரம் அறிவியலைப் பின்பற்றியது. கணிதம் என்பது மானுட சிந்தனையின் தர்க்கத்தின் வடிவம். அதை இயல்பெருவெளிக்கு பொருத்துவது இயற்பியல். அது பல நியதியாக்கங்களை கணித விதிகளின் அடிப்படையில் செய்கிறது. சந்தையில் மதிப்புகள் அடையும் மாற்றத்தை கணிக்க அந்த இயற்பியல் நியதியாக்கங்களை பின்பற்றுகிறது பொருளாதாரம். "ஈயத்தைக்கண்டு இளித்ததாம் பித்தளை" என்று ஒரு சொலவடை உண்டு. இந்த தொடர்புகளை பற்றி நுட்பமான விமர்சனங்களை எழுப்பி வருபவர் பிலிப் மிரோவ்ஸ்கி. அவரது நூலின் முன்னுரையொன்றை இந்த வலை விலாசத்தில் பார்க்கலாம்.
http://www.nd.edu/~pmirowsk/pdf/Effortless_Economy_Intro.pdf

புரூனோ லதூர், அவர் நண்பர்களின் சிந்தனைகளுடன், மிரோவ்ஸ்கியின் சிந்தனைகளை இணைத்துப் பார்த்தால் நம் சமகால உலகின் கற்பிதங்களின் வலைப்பின்னல் புரியும். நமது சாமிகளும், பூசாரிகளும், ஜோசியக்காரர்களும் வெகுளிகள் என்று தோன்றும்.

சூதாட்டத்தையே நிறுவனமாக்கி, தேசிய வாழ்வின், உலகளாவிய மானுட பயணத்தின் அடிப்படையாக மாற்றிவிட்ட இந்த சூனியக்காரர்களுக்கு முன்னால் பாவம் வேப்பிலை மந்திரவாதிகள் என்ன செய்யமுடியும்? அமெரிக்கா என்ற அவலம் மானுட தார்மீக வீழ்ச்சியை நிறுவனமாக்கியதில் முன்னின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இன்றையை நெருக்கடி எப்படியோ சரி செய்யப்படலாம். சொப்பன வாழ்வில் மகிழ்ந்து அற்பப் பணப் பேய் பிடித்து அறிவிழப்பதையே மனித நாகரிகம் என்று சாதிக்கும் அமெரிக்க அவலம் என்று மாறும் என்று சொல்ல முடியாது. அதற்கு கொடுக்க வேண்டிய விலை, ஜேம்ஸ் ஹான்சன் எச்சரிப்பதுபோல, ஒட்டுமொத்த மானுட அழிவாக இருக்கலாம். ( http://www.columbia.edu/~jeh1/ )

Monday, October 06, 2008

இன்றெமக்கு வேண்டியது சமாதானமே

தீராநதி: ஒக்டோபர் - 2008

விமர்சனமற்ற முறையில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது, அல்லது விடுதலைப் புலிகளை எதிர்ப்பது என்கிற வகையில் இலங்கை அரசையும்கூட ஆதரிக்கும் நிலையை எடுப்பது என்கிற இரு எதிரெதிர் நிலைப்பாடுகளுக்கிடையே ஈழப் பிரச்சினையில் நடுநிலையான ஒரு பார்வையைத் தொடர்ந்து பேணி வருபவர் எழுத்தாளர் ஷோபாசக்தி. சென்ற மாதத்தில் நான் பிரான்ஸ் சென்றிருந்தபோது ஈழப் போராட்டம் இன்றொரு தேக்கநிலையை எட்டியிருப்பது குறித்து அவரிடம் நானெடுத்த பேட்டி இது. இன்றைய தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகிய ஷோபாசக்தியின் இக்கருத்துக்களை வேறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கிறேன். பாரிசிலிருந்து சுமார் 800 கி.மி. தொலைவிலுள்ள Pau என்னும் நகரில் சென்ற ஆகஸ்ட் 3 அன்று பதிவு செய்யப்பட்டது இது.
-அ. மார்க்ஸ்

ஜூலை 83 இனப்படுகொலையின் 25-ம் நினைவு நாளை நீங்கள் எவ்விதமாக நினைவு கூர்கிறீர்கள்?

இன்றைக்கு மிகவும் துக்ககரமாகவும், வெட்கப்படக்கூடிய நிலையிலும் நமது முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களும், உதிரிகளாய் இருக்கும் முன்னாள் போராளிகளும் யூலைப் படுகொலைகள் இலங்கை அரசால் திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல என்றும், அங்கே நடந்தது இன அழிப்பு அல்லவென்றும் பிரச்சாரம் செய்யக்கூடிய நிலையை நாங்கள் பார்க்கிறோம். ஏதோ பாலும், தேனும் ஓடிக்கொண்டிருந்த ஒரு தேசத்தில் தமிழ் இளைஞர்கள், தமிழர்களின் உரிமைகளைக் கேட்டு ஆயுதம் தாங்கிய காரணத்தினாலேயே இலங்கை அரசு அப்படுகொலைகளை நிகழ்த்தியதென ஒரு சப்பைக் காரணம் சொல்லிக் கொண்டுள்ளனர். ஆனால், இலங்கை அரசால் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு, தெற்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களது வீடுகள், வியாபார நிறுவனங்கள் முதலானவை குறித்த தகவல்கள் துல்லியமாகத் தொகுக்கப்பட்டு, வெளிக்கடைச் சிறை ஆணையாளரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, மிக நிதானமாக, கட்டங்கட்டமாக இப்படுகொலைகளைச் செய்து முடித்தார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்ட அப்படுகொலை குறித்து இன்றுவரை ஒருவர் கூடச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டதில்லை.

இத்தனை தியாகங்கள், உயிரிழப்புகள், புலப்பெயர்வுகளுக்குப் பின் இன்று ஈழப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள தேக்கம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

ஏற்கெனவே ஈழத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், சாதி ஒழிப்புப் போராட்ட இயக்கங்கள் ஆகியவற்றால் உணர்வு பெற்றிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்தான் இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழர் தேசியப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்க வந்தனர்.

`சோஷலிசத் தமிழ் ஈழம்' என்பது அன்று அவர்களின் பிரதான முழக்கமாக இருந்தது. இதற்குப் புலிகளும்கூட விலக்கல்ல. முக்கியமாக இந்தப் பண்பு பல அறிவுஜீவிகளை, இளைஞர்களை ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகத் திருப்பியது. ஆனால் போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்திலே, ஒரு பக்கம் போராட்டம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இன்னொரு பக்கம் இந்திய அரசுக்கு இந்த இளைஞர்கள் முழுமையாக அடிபணிந்தார்கள். ஒட்டுமொத்த இயக்கங்களின் ஆயுத பலத்தை மட்டுமல்லாமல், அவர்களின் போராட்ட நெறிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக `ரோ' (Raw) அதிகாரிகளும், இந்திய ராஜதந்திரிகளும் விளங்கினர். ஆக போராட்டத்தைத் தொடங்கும்போதே இவர்கள் தாங்கள் வைத்திருந்த இடதுசாரி, சோஷலிசக் கருத்தாக்கங்களை ஒவ்வொன்றாகக் கைவிட்டுக்கொண்டே வந்தார்கள். எந்த முழக்கங்களால் பரவலாக இளைஞர்களிடமும், வெகு ஜனங்களிடமும் அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தார்களோ, அவை வெறும் வெற்று முழக்கங்களே என்பது எங்களுக்குப் புரியத் தொடங்கியது.

அனைத்துப் பெரிய இயக்கங்களுமே அப்பாவி மக்களைக் கொலை செய்தனர். எல்லோரும் எல்லோரையும் கொலை செய்தனர். சகோதர இயக்கங்களின் மீதும் படுகொலை நிகழ்த்தினார்கள். இந்தியாவின் கருணை, தங்கள் இயக்கத்தின் சொந்த வளர்ச்சி, இவற்றைத் தவிர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தோ, அங்கே நிலவிய சாதியச் சிக்கல்கள், தமிழ், முஸ்லிம் முரண்பாடு, வடகிழக்கு முரண்பாடு குறித்தோ இவர்கள் சிந்தித்தது கிடையாது. இடைவிடாது மாறிக்கொண்டுள்ள சர்வதேச அரசியலைக் கவனித்து அதற்கு ஏற்றவாறு அவர்களின் போராட்ட உத்திகளை வகுத்ததும் கிடையாது. குறிப்பாக புலிகள் இயக்கத்தினுடைய அதிஉச்சமான அராஜகங்களாலும், மாற்று அரசியல் சக்திகளை அவர்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கியதாலும், விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி, தமக்கான பாதுகாப்பைத் தேடி மற்றைய இயக்கங்கள் இலங்கை அரசுக்கு அடிபணிந்ததாலும், அமைதிப்படை காலகட்டத்தில் அதை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திடம் புலிகள் தஞ்சம் புகுந்ததாலும் போராட்டத்திலிருந்து மக்கள் அந்நியப்பட்டனர். தமிழ் மக்களைப் போராட்ட சக்திகளாகக் கருதாமல் வெறுமனே தங்களுக்குக் கப்பம் கட்டும் மந்தைகளாகவும் தமது இராணுவத்திற்குப் பிள்ளைகள் பெற்றுத் தருபவர்களாகவும் மட்டுமே புலிகள் ஆக்கி வைத்துள்ளனர்.

இன்றைய தமிழ் இளைஞர்களின் போராட்ட அரசியல் என்பது, சோஷலிசம், இடதுசாரித் தத்துவமல்ல. வேறெந்தத் தத்துவமும்கூட அவர்களுக்குக் கிடையாது. எல்லாவற்றிலுமே அரசியல் நீக்கம் செய்யப்பட்ட குட்டிக் குட்டி யுத்தப் பிரபுக்களின் வலிமைகளைப் பரிசோதிக்கும் களமாக இன்று அது மாற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் வெளிகளில், தமிழ் மக்களுக்கு நீதியுடனான சமாதானத்தை வழங்குவதற்கு அருகதையுள்ள, விசுவாசமுள்ள எந்த ஒரு அரசியல் சக்தியும் இன்று கிடையாது. நாங்கள் ஒரு போராட்டத்தைத் தோற்றுவிட்டு நிற்கிறோம்.

இதிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் தென்படுகின்றனவா?

யுத்தத்தின் மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதில் முன் எப்போதையும்விட இன்றைய அரசு உறுதியாக நிற்கிறது. அது அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்துக்கொண்டுள்ளது. கிழக்கு முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. வடக்கில் புலிகளிடம் எஞ்சியிருக்கும் சிறு நிலப் பகுதியும்கூட எந்த நேரமும் இலங்கை இராணுவத்தால் வெற்றி கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. தமிழீழம் நிராகரிக்கப்பட்டு `ஒற்றையாட்சி' என்பதை தமிழர்களின் பல்வேறு இயக்கங்கள், சக்திகள், அமைப்புகள் ஏற்றுக்கொள்கின்றன. கூர்ந்து அவதானித்தோமானால் விடுதலைப்புலிகள் உள்ளிட்டு எந்த இயக்கங்களும் நீண்டகாலமாகத் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை முன் நிறுத்தவில்லை. இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகம் என்பதே பேச்சுவார்த்தைகளில் புலிகளின் கோரிக்கையாக இருந்தபோதும் அதையுங்கூட இலங்கை அரசு ஏற்கவில்லை. புலிகள் தொடர்ந்து ஏகப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திக் கொண்டுள்ளனர். வேறு யாரையும் பேச அழைக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இலங்கை அரசும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாக இருந்த நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா முதலான நாடுகளும் அதை ஏற்றுக்கொண்டன. இத்தனைக்குப் பின்னுங்கூட யுத்தத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலம் குறித்தோ, இந்த அர்த்தமற்ற போரை நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தோ, நிரந்தரமான சமாதானத் தீர்வை நோக்கி நாம் போகவேண்டிய அவசியம் குறித்தோ எந்தக் கரிசனையும் இல்லாமல், தங்களது இயக்கத்திற்கு அதிகாரங்களைப் பெற்றெடுப்பதிலேயும், இந்தப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி மாற்று அரசியல் இயக்கங்களை ஒழித்துக்கட்டுவதிலேயும் மட்டுமே புலிகள் குறியாக இருந்தனர். போர் நிறுத்த காலத்தில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட மாற்று இயக்கங்களின் முக்கியஸ்தர்களைப் புலிகள் கொன்றொழித்துள்ளனர்.

அன்று நீங்கள் உரையில் குறிப்பிட்டதுபோல அரசாங்கம் இன்று யுத்தத்தை மட்டுமே நம்பியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டிற்கு புலிகள் தவிர்த்த மற்ற இயக்கங்கள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

பேச்சுவார்த்தைகளில் புலிகள் மற்ற இயக்கத்தவரையும் அனுமதித்திருந்தால் இந்நிலை தவிர்க்கப்பட்டிருக்குமா?

அனுமதித்திருந்தாலுங்கூட இலங்கை அரசு எந்த அளவிற்கு யோக்கியமாக நடந்துகொள்ளும் எனச் சொல்ல இயலாது.

இதர அம்சங்களைப் பொறுத்தமட்டிலாவது புலிகள் பேச்சுவார்த்தைகளில் நேர்மையாக நடந்துகொள்கிறார்களா?

பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் மட்டுமல்ல, புலிகளும் நேர்மையாகவும், உண்மையாகவும் இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன. இருவருமே யுத்தத்தை விரும்புகின்றனர். யுத்தத்தின் மூலமாகவே இருவரும் தமது அதிகாரத்தையும், செல்வாக்கையும் நிலைநிறுத்திக் கொள்கின்றனர். இடையில் புகுந்து குட்டையைக் குழப்பும் அந்நிய வல்லாதிக்க சக்திகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மட்டுமல்லாமல், யுத்தத்தைத் தீர்மானிப்பதிலும் இவர்களுக்கு ஒரு பங்குள்ளது.

அந்நிய வல்லாதிக்க சக்திகள் என நீங்கள் எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?

இந்தியாவிற்கு முக்கியப் பங்குள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் இந்திய முதலாளிகள் முதலீடுகளைச் செய்து கொண்டுள்ளனர். உலக மகா போலீஸான அமெரிக்காவும், தன் பங்கைச் செவ்வனே ஆற்றுகிறது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதார நலன்கள் முக்கியமாக உள்ளது. இலங்கையில் அனல் மின் நிலையம் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கையின் மிகப் பெரிய சீமெந்துத் தொழிற்சாலையை இன்று இந்திய முதலாளிகள் வாங்கியுள்ளனர். தவிரவும் நாடு முழுவதிலும் இந்திய முதலாளிகள் நிலங்களையும், சொத்துக்களையும் வாங்கிக் குவிக்கின்றனர். இதற்குச் சிறு எதிர்ப்பும்கூட இலங்கையில் கிடையாது.

இந்திய விஸ்தரிப்பு வாதத்தை மையமாக வைத்து இயங்கிய ஜே.வி.பி. இயக்கம் கூடவா எதிர்ப்புக் காட்டவில்லை?

இந்திய விஸ்தரிப்பை எதிர்த்துப் போராடிய ரோஹண விஜயவீரவின் ஜே.வி.பி.க்கும் இன்றைய ஜே.வி.பி.க்கும் நிறைய வேறுபாடு உண்டு. இன்று ஜே.வி.பி. அரசின் பங்காளியாக உள்ளது. இனவாதத்தைக் கக்குவதில் `ஹெல உருமைய' போன்ற இனவாதக் கட்சிகளுக்கு இணையாக இன்று அவர்கள் உள்ளனர். இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு என்கிற கருத்து இருந்தால்தானே இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றிய உணர்வு இருக்கும். ஆனால் இன்று ஜனாதிபதி உட்பட யாருக்கும் இலங்கை ஒரு இறையாண்மையுடைய நாடு என்கிற கருத்து கிடையாது. இந்தப் போரைச் சாக்காக வைத்து நாட்டில் பல பத்து வருடங்களாக நடைமுறையிலுள்ள அவசர நிலை தொடர்கிறது. இந்த அவசரகால நிலை உள்ளதாலேயே மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காகப் போராட இயலாத நிலையுள்ளது. இதன் விளைவாகவே எந்த எதிர்ப்புமின்றி இந்தியா தனது விஸ்தரிப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றி வருகிறது.

நான் இங்கு வந்துள்ள சில நாட்களில் பல தரப்பட்ட ஈழத் தமிழர்களையும் சந்தித்துப் பேசும்போது கிழக்கு மக்கள், முஸ்லிம்கள், தலித்துகள் எனப் பல்வேறு பிரிவினரும் தமது தனித்துவத்தை வலியுறுத்துவதும், `ஈழத் தமிழர்' என்கிற ஒற்றை அடையாளத்திற்குள் தம்மை நிறுத்திக்கொள்ள விரும்பாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதையும் உணர்கிறேன்...

உண்மைதான். ஆனால் இந்த நிலைமை எப்போதிலிருந்து தொடங்குகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். 90களுக்குப் பின்புதான் இது உருவாகிறது. நான் தொடக்கத்தில் சொன்னதுபோல இந்தப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் 'சோஷலிசத் தமிழ் ஈழம்' என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இன்றுள்ள சூழலில் அது வேடிக்கையாகத் தோன்றினாலுங்கூட, அன்று அது சாத்தியம் என்கிற நம்பிக்கை நான் உள்ளிட்ட பலருக்கும் இருந்தது. அதை ஒட்டியே பல தலித் இளைஞர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், கிழக்கு மாகாணத்தினர் எல்லோரும் ஈழப் பேராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள நேர்ந்தது. நிகரகுவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இத்தகைய அணி சேர்க்கைக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. ஆனால் போகப் போக ஈழப் போராட்டம் இந்த சோசலிசம் முதலான எல்லாவித அரசியல், தத்துவப் பார்வைகளையும் விட்டுவிட்டு, ஜனநாயக நடைமுறைகளையெல்லாம் ஒழித்துவிட்டு, சக இயக்கங்களையெல்லாம் அழித்துவிட்டு, முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஒரு ஆதிக்க, அதிகாரப் போராட்டமாக மாறத் தொடங்கியது. இதன் விளைவுதான் இன்று தலித்களும், கிழக்கு மாகாணத்தினரும் தமது தனித்துவத்தை வலியுறுத்தி, தமிழ் ஈழக் கோரிக்கையிலிருந்து விலகி மட்டுமல்ல, அதற்கு எதிராகவும் நிற்க வைத்துவிட்டது. ஆனால் அதே நேரத்தில் உலக அளவில் பல விடுதலைப் போராட்டங்கள் இந்த வேறுபாடுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு செயல்பட்டதால் இன்று முன்னோக்கி நகர்ந்துள்ளன. நேபாளம் ஒரு நல்ல உதாரணம்.

`தலித் சமூக மேம்பாடு முன்னணி' என்னும் அமைப்பைத் தோழர்கள் தேவதாசன், நாதன் முதலியோர் முன் முயற்சி எடுத்து உருவாக்கியுள்ளனர். பாரிசிலும், லண்டனிலும் இரு மாநாடுகளும் நடைபெற்றுள்ளன. இதுகுறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள்.

சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு ஈழத்தில் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. குறிப்பாக 60களின் இறுதியிலும் 70களின் தொடக்கத்திலும் சாதி ஒழிப்புப் போராளிகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைச் சாதித்தார்கள். முன்னைவிட இப்போது ஈழத்தில் சாதிப் பிரச்சினை சற்றுத் தளர்வாக உள்ளதென்றால் அதை ஏற்படுத்திய பெருமை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தையும், உலகளாவிய மாற்றங்களையும்தான் சாருமேயொழிய தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இதில் எந்தப் பங்குமில்லை. டானியல் சொன்னது போல அடிமையும், எஜமானனும் ஒன்றிணைந்து, ஒரு சேரக் கலந்து தமிழ் ஈழத்தைக் கட்டுவது சாத்தியமில்லை. ஆனால் அதைத்தான் தேசிய இயக்கங்கள் முயன்றன. தமிழ்த் தேசியவாத அலையில் `தமிழர் ஒற்றுமை' என்கிற முழக்கமே சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் நீர்த்துப் போவதற்குக் காரணமாயின. சாதி ஒழிப்புப் போராட்ட அமைப்புகள், தமிழ் ஈழப் போராளிகளால் துப்பாக்கி முனையில் மௌனமாக்கப்பட்டன. முப்பது வருட காலமாகக் கவிந்த இந்த மௌனத்தை முதன்முதலாக இன்று `தலித் சமூக மேம்பாட்டு முன்னணி' கலைத்துள்ளது. 'புதிய ஜனநாயகக் கட்சி' போன்ற அமைப்புக்கள் சாதி ஒழிப்பைத் தொடர்ந்து பேசி வந்துங்கூட, சாதியம் குறித்த அவர்களது பார்வைகள் மரபு மார்க்சீயத்தைத் தாண்டமுடியாமல் இன்றுவரை தேங்கிப்போயுள்ளன. ஆனால் இன்று இந்தியாவிலும், தமிழகத்திலும் தலித்தியம் குறித்துப் பல சிந்தனைப் போக்குகள் உருவாகியுள்ளன. தீண்டாமை மற்றும் சாதியத்தை வெறுமனே நிலப்பிரபுத்துவத்தின் ஓரங்கமாகப் பார்க்காமல், அதை இந்து மதத்துடன் தொடர்ப்படுத்தியும், இந்து மதத்தை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பது போலவும் அங்கே பார்வைகள் உருவாகியுள்ளன. தலித்துகளின் தனித்துவம், அவர்களுக்குத் தனித்துவமான கட்சி ஆகியன பற்றியும் இன்று பேசவேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்ட வகையிலேயே த.ச.மே. முன்னணி, மற்றைய இதற்கு முந்திய சாதி ஒழிப்பு இயக்கங்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. இந்த அடிப்படையின்கீழ் இன்று த.ச.மே. முன்னணித் தோழர்கள் ஒரு உரையாடலை உருவாக்கியுள்ளனர். இது ஒரு முக்கியமான மாற்றம் என்பதில் ஐயமில்லை. ஈழ தேசியப் போராட்டத்தின் ஆரம்பத்தில் `ரவுடிகள்' என அடையாளங்காட்டப்பட்டுப் பல தலித் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் உண்மையில் தத்தம் பகுதிகளில் தலித் மக்களைத் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து பாதுகாத்தவர்களாகவுமிருந்தது குறிப்பிடத்தக்கது. யாழ் பொது நூலகத் திறப்பு விழா, தலித் மேயரான செல்லன் கந்தையனின் தலைமையில் நடக்கக்கூடாது என்பதற்காகவே பல்வேறு சாக்குப் போக்குகளையும் சொல்லி தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல வரலாற்றிலேயே முதன்முறையாக யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமிக்க யாழ் மத்திய கல்லூரிக்கு ராஜதுரை என்கிற தலித் ஒருவர் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து அவர் சாதி ரீதியாகப் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இறுதியில் 2005-ல் அவர் கொல்லவும்பட்டார். எல்லோரும் இந்தக் கொலையை ஒரு ஜனநாயக விரோதச் செயலாக மட்டுமே பார்த்து, இதற்குப் பின்னாலிருந்த சாதியக் காரணங்களைக் கண்டுகொள்ள மறுத்தனர். த.ச.மே. முன்னணி மட்டுமே நான் இப்போது குறிப்பிட்ட இந்தப் பிரச்சினைகளிலெல்லாம் பின்புலமாக இருந்த சாதியக் காரணங்களை அடையாளம் காட்டியது. இன்று புதிய ஜனநாயகக் கட்சியெல்லாம்கூட இந்த நோக்கிலிருந்து பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில்தான் த.ச.மே. முன்னணியின் முக்கியத்துவத்தை நாம் வரையறுக்கவேண்டி இருக்கிறது. ஐரோப்பாவிலிருந்துகொண்டு இதைச் செய்வதிலுள்ள எல்லைகள், வரம்புகள் ஒரு பக்கம் இருந்தபோதிலும் இன்று இதன்மூலம் உருவாகியுள்ள உரையாடல் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிலுள்ள தலித் இயக்கங்களிடமிருந்து போதிய ஆதரவு இம் முயற்சிக்குக் கிட்டியுள்ளதா?

த.ச.மே. முன்னணி ஒரு இளம் அமைப்பு. புதிதாக உருவாகியுள்ள ஒன்று. இன்றும் இப்படியொரு இயக்கம் உருவாகியுள்ள செய்தி உலக அளவில் பரவலாகவில்லை. எங்களாலும் விரிவாகத் தமிழகம் தழுவிய அளவில் கொண்டு செல்ல இயலவில்லை. இப்படி ஒரு அமைப்பு உருவாகியுள்ளதும், அது தலித் மாநாடுகளை நடத்தி வருவதும், தமிழ்ச் சிறு பத்திரிகை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ள நிலையுள்ளது. இது ஒரு காரணமென்றபோதிலும் இன்னொரு முக்கிய காரணத்தையும் நாம் மறந்துவிட இயலாது. இன்று தமிழக தலித்களின் முக்கிய பிரதிநிதியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுக்க முழுக்க விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. புலிகளை ஆதரிப்பது அவர்களது உரிமை அல்லது அரசியல் என நாம் ஏற்றுக்கொண்ட போதிலும், ஒரு தலித் கட்சி என்கிற வகையில் அது அங்குள்ள சாதி, தீண்டாமைப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாதிருப்பதும், ஈழத்தில் சாதிப் பிரச்சினை விடுதலைப்புலிகளுக்குப் பின் ஒழிந்துவிட்டது என்பது போன்ற கருத்துக்களைத் தமது மவுனத்தின் மூலம் ஆதரிப்பதும் விடுதலைச் சிறுத்தைகளுடனும், அவற்றின் தலைவர் திருமாவளவனிடமும் ஒரு உரையாடலை ஏற்படுத்துவதை இதுவரை சாத்தியமில்லாமற் செய்துவிட்டது. தேசிய விடுதலைப் போராட்டத்தினூடாக இன்று சாதிப் பிரச்சினை சற்றே குறைந்துள்ளது எனக் கருதுகிறவர்களுங்கூட, இன்று அங்கு சாதிப் பிரச்சினையே இல்லை எனச் சொல்வதில்லை.

ஆனால் விடுதலைச் சிறுத்தைகளோ அங்கே சாதிப் பிரச்சினையே இல்லை என்பது போல பேசுவது மற்றும் இணங்குவதன் மூலமும், முஸ்லிம் மக்களுக்கும், கிழக்கு மாகாணத்தினருக்கும் விடுதலைப் புலிகள் செய்துவிட்ட துரோகத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலமும் தலித் மக்களுக்குத் துரோகமிழைக்கின்றனர். இதுகுறித்து `தேனி' இணையதளத்தில், கிழக்கு மாகாணத்தினரின் தனித்துவத்தை வற்புறுத்தி இயங்குபவரும் `எக்ஸில்' இதழாசிரியருமான எம்.ஆர். ஸ்ராலின் திருமாவளவனுக்கு எழுதிய திறந்த மடல் குறிப்பிடத்தக்கது. எனினும் ஒரு முக்கிய தலித் கட்சி என்கிற வகையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புடன் ஒரு உரையாடலுக்கு த.ச.மே. முன்னணித் தோழர்கள் தயாராகவே உள்ளனர்.

இன்று கிழக்கிலுள்ள நிலைமை குறித்து சற்று விரிவாகச் சொல்லுங்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்த இரண்டு நாட்களில், இங்கே ஒரு வானொலி நிலையத்தில் அது குறித்த ஒரு உரையாடல் நடைபெற்றது. கோவை நந்தன், தேவதாஸன் கலந்துகொண்ட அந்த உரையாடலில் நான் தொலைபேசி மூலம் என் கருத்துக்களைச் சொன்னேன்.

"பிரிந்து வந்தவுடன், கிழக்கு மாகாணத்தினர் தொடர்ந்து புறக்கணிப்புச் செய்யப்படுவது, கிழக்கின் சுயாட்சி பற்றியெல்லாம் கருணா பேசியது வரவேற்கத்தக்கதுதான் என்ற போதிலும், இந்தப் பேச்சு ஒரு தவறான மனிதரின் வாயிலிருந்து வருகிறது'' என நான் அன்று சொன்னேன். பிரபாகரன் ஒரு 'ஹிட்லர்' என்றால் கருணா ஒரு 'முஸோலினி' என்றும் சொன்னேன். தொடர்ந்து அவரது செயற்பாடுகளும், பேச்சுக்களும் அதை நிரூபித்தன. கிழக்கின் சுயாட்சி பற்றியவை தவிர அவரது மற்ற பேச்சுக்கள் எல்லாம் கிட்டத்தட்ட புலிகளைப் போலவே இருந்தன. ஆள் கடத்தல், கொலை செய்தல் இவை எல்லாம் தொடர்ந்தன. இராணுவத்துடன் சேர்ந்து செயல்படும் நிலையும் இருந்தது. இந்நிலையில், சர்வதேச அழுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றையும் அரசு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் `தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' தவிர மற்றெல்லா அரசியல் கட்சிகளும் பங்குகொண்டன. தேர்தலும் பெரிய அராஜகங்களின்றி நடைபெற்றது. அரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முதலமைச்சரானார்.

தொடர்ந்து இன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. முதலில், பல ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக அங்கே போர் ஒழிந்து மக்கள் அமைதியாக உள்ளனர். கொலைகள், ஆட்கடத்தல்கள் எல்லாம் வெகுவாகக் குறைந்துள்ளன. குறிப்பாக ஏராளமான குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு, போர்முனையில் நிறுத்திக்கொல்லப்படும் அவலம் நின்றுவிட்டது.

தவிரவும் இன்று கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் பல நல்ல, முக்கியமான ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் ஏற்கெனவே நிறைய இழந்துவிட்டோம். போரில் களைத்துப் போய்விட்டோம். ஏராளமான விலையைக் கொடுத்துவிட்டோம். "பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை. ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, அனைவருமே ஜனநாயக அரசியல் நெறிகளுக்குத் திரும்பவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துகின்றோம். இலங்கை அரசியலிலே கிட்டிய ஒரு அண்மை உதாரணம் ஜே.வி.பி. கடுமையான ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட ஜே.வி.பி. இன்றுள்ள அரசியல் சூழலில் அதைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ளது. ஆயுதப் போராட்டத்தை நடத்தும்போது மக்களிடம் எந்த அளவு ஆதரவு பெற்றிருந்ததோ, அதைக் காட்டிலும் பலமடங்கு ஆதரவைப் பெற்றதோடு, இலங்கை அரசாங்கத்திலும் பங்கெடுத்துள்ளனர்.

நாளை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி, தேர்தலில் நின்றாரானால் அதைவிட மகிழ்ச்சிகரமான செய்தி தமிழ் மக்களுக்கு இருக்கமுடியாது. அதை நாங்கள் வரவேற்கிறோம். அந்த அடிப்படையிலேயே இன்று `தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்' (TMVP) தேர்தல் அரசியலுக்குத் திரும்பியதை நாங்கள் வரவேற்கிறோம். இதனுடைய அர்த்தம் சிவனேசதுரை சந்திகாந்தன் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளர் இல்லை என்பதோ, அவர் ஒரு நீதிதேவன் என்பதோ அல்ல. அவரது அரசியல் நெறிகள் மீது நமக்குக் கடும் விமர்சனம் எப்போதும் உண்டு.

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் முதலீடுகளை வரவேற்போம் எனக் கருணா இரண்டு நாட்களுக்கு முன் சொல்லியிருப்பது ரொம்பவும் ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. இந்த விமர்சனங்களுக்கப்பால் அவர்கள் ஒரு ஜனநாயக எல்லைக்குள் நின்று தம் அரசியலைச் செய்வது வரவேற்கத்தக்கதுதான்.

துக்ககரமான வேடிக்கை என்னவென்றால் ஈ.பி.ஆர்.எல்.எப், பிளாட், ஈ.பி.டி.பி., டெலோ முதலிய அமைப்புகளெல்லாம் தேர்தல் பாதைக்குத் திரும்பியபோது மகிழ்ந்து வரவேற்ற யாழ் அறிவுஜீவிகளும், ஜனநாயகத்தைப் பேசுபவர்களும் இன்று சந்திரகாந்தன் தேர்தல் பாதைக்குத் திரும்பியதை அங்கீகரிக்க மறுப்பதுதான். தமிழ் மக்களின் முக்கிய அறிவுஜீவிகளாகவும், சிந்தனைப் பிரதிகளாகவும் உள்ள இவர்களே இதை மறுப்பது ஒன்றே கிழக்கு மாகாணத்தின் சுயாட்சி உரிமைக்கு நிரூபணமாகிறது.

Thursday, October 02, 2008

இனவெறியின் இன்னொரு முகம்

- ராகவன்

வரலாறுகளிலிருந்து படிப்பினைகளை இலங்கை அரசோ, அதன் அதிகாரிகளோ இன்னமும் பெறவில்லை என்பதையே சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் கனேடிய தேசிய நாளிதளொன்றிற்கு வழங்கிய நேர்காணல் படம்பிடித்துக் காட்டுகிறது.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது நேர்காணலில் "இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்கள் அளவுக்கு மீறிய உரிமைகளைக் கோருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், இது சிங்கள மக்களது நாடு என நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் சிறுபான்மை சமூகங்கள் எமது நாட்டில் இருக்கின்றன. அவர்களை நாம் எமது மக்களாக நடத்துகிறோம். நாங்கள் இலங்கையில் எழுபத்தைந்து சதவீதமாக இருக்கிற காரணத்தால் இங்கு விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை. எமது நாட்டை பாதுகாக்க எங்களுக்கு உரிமை உண்டு. எமது நாடு பலம் வாய்ந்தது. அவர்கள் விரும்பினால் இங்கு இருந்து விட்டு போகலாம். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையின் கீழ் அளவுக்கு மீறி உரிமைகளை கோருவதை நிறுத்த வேண்டும்" என்றவாறாகவெல்லாம் துடுக்குத்தனமான கருத்துகளை உதிர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

இலங்கை அரசின் பெரும்பான்மையினத்துக்குச் சாதகமான பண்பு/ சிறுபான்மை இனங்களின் உரிமைகளை மதிக்கத் தவறி அவர்களை இரண்டாம் மூன்றாம் தரப் பிரசைகளாக்கியது போன்ற பல்வேறு இனவாதப் போக்குகளே இனப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்பதையும் இந்தப் போக்குகளிலிருந்தே இனமுரண்கள் கூர்மையுற்றன என்பதையும் 1994க்குப் பின்பு வந்த சிறிலங்கா அரசுத் தலைவர்கள் 'ஓரளவுக்கு' ஒத்துக்கொண்டுள்ளதாக ஒரு கருத்துண்டு.

ஜனாதிபதியிடமும் மத்தியிலும் குவிந்திருக்கும் அதிகாரங்களை பரவலாக்கல், பல்லின மக்கள் பல்வேறு கலாச்சார விழுமியங்களோடு வாழும் இலங்கையில் அந்தந்த இன - கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பது; அதேசமயம் இலங்கையர் எனத் தம்மைச் சிறுபான்மையினங்கள் உளப்பூர்வமாக கருதும் அரசியல் நிலையை தோற்றுவிப்பது முதலான முன்னெடுப்புகளாலேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியும் என்பன போன்ற கருத்து நிலைகள் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளாலும் அறிஞர்களாலும் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைக் உறுதி செய்யும் வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றத்தின் அவசியம் பற்றிய தேவையைப் பல்வேறு தரப்புகளும் உணர்ந்திருப்பதாகத் தெரியும் இக்காலகட்டத்தில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சரத் பொன்சேகாவின் இனவாதக் கருத்துச் சிதறல்கள் அமைந்துள்ளன.

'நாங்கள்' = சிங்களவர்கள்.
'அவர்கள்' = சிறுபான்மை இனங்கள்.

இந்த இரட்டைச் சூத்திரத்தின் பின் பெரும்பான்மைவாத கருத்தியலும் சிங்கள இனவாத கருத்தியலும் உறைந்து கிடக்கின்றன. 'நாங்கள்' என பொன்சேகா கூறும் போது எனது இனம், நாம் பெரும்பான்மையினர், இது எமது தேசம், எங்களுக்கே இங்கு முழு உரிமையும் உண்டு. அவர்கள் புறத்தியார்,'அவர்கள்' விரும்பினால் எம்முடன் சேர்ந்து இருக்கலாம். ஆனால் இருக்குமிடத்தில் இருக்கவேண்டும். எனவே 'நாங்களும்' 'அவர்களும் ' சமமானவர்களல்ல. 'அவர்கள்' அந்நியர்கள். 'நாங்கள்' மண்ணின் மைந்தர்கள் என்று இனஒதுக்கல் அரசியலையே பொன்சேகா பேசுகிறார். வேறுபாடுகளை அங்கீகரித்து பல்கலாச்சார, பல்லின மக்களின் நாடு இலங்கையென்பதை அவர் மறுக்கிறார்.

"இனப் பிரச்சனையை நாம் தீர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்கிறோம், ஆனால் விடுதலை புலிகள் தான் இதற்கு தடையாக இருந்து வருகிறார்கள்" என இலங்கை அரசு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூறிக்கொண்டு மறுபக்கம் இலங்கையில் இருப்பது ' பயங்கரவாத' பிரச்சனை எனத் தனது இராணுவ நடவடிக்கைகளுக்குத் தார்மீக நியாயமும் கற்பித்து கொண்டு கொழுந்து விட்டெரியும் இன முரண்பாடுகளிற்கு எவ்வித அரசியல் தீர்வுகளையும் முன்மொழியாமல் அரசு இயந்திரம் யுத்தத்தை முடுக்கிவிட்டிருக்கும் இவ்வேளையில் தளபதி சரத் பொன்சேகாவின் பொறுப்பற்றதனமான இனவெறிப் பேச்சு இன முரண்பாடுகளை மேலும் உக்கிரப்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல் வரலாற்றுரீதியாகவே அனைத்து சிறுபான்மை மக்களும் இலங்கை அரசு தம்மை இரண்டாம்தர பிரசைகளாக நடத்துகின்றதென்று நம்பி வந்துள்ளனர். சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்துச் சிதறல்கள் இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாகவே இருக்கின்றது.

"ஐக்கிய இலங்கையில் அனைத்து மக்களும் தங்கள் அரசியல் - பொருளாதார - சிவில் உரிமைகளை சமமாக நிலை நாட்டும் வண்ணம் இலங்கை அரசியல் சாசனம் மாற்றப்பட வேண்டும் இதுவே இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வாக அமையும். இதுவே நீதியும் ஜனநாயக நெறிகளும் கொண்ட வருங்கால இலங்கையைக் கட்டமைக்கும்" என்றெல்லாம் குரல் கொடுக்கும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்களையும் பெரும்பான்மை இனத்துக்குள்ளேயேயிருக்கும் ஜனநாயகக் குரல்களையும் அவமதித்து இராணுவ வெற்றிகளின் மமதையில் பேசும் ஒரு கடைந்தெடுத்த இனவாதியின் குரலாகவே தளபதி சரத் பொன்சேகாவின் குரல் அமைந்திருக்கிறது.

தளபதியின் பொறுப்பற்ற பேச்சுக் குறித்து அரசு இன்னும் மவுனமாகவேயிருக்கிறது. இந்தப் பேச்சுக்கு அரசுத் தலைவரிடமிருந்து வாயளவிலான கண்டனம் கூட இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்தும் இந்த இனவாதப் போக்குகளுக்குள் இலங்கை அரசும் அதன் அதிகாரிகளும் தளபதிகளும் சிக்குண்டிருக்கும் வரைக்கும் இலங்கையில் அமைதி திரும்புவதற்கான சின்னவொரு அறிகுறியும் கூடத் தோன்றாது. மகிந்தவின் வெற்றி வன்னிப் போர்முனையிலில்லை. மாறாக அந்த வெற்றி, அரசியல் தீர்வொன்றை உருவாக்கி எழுதப்படும் இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தின் பக்கங்களுக்குள்தான் ஒளிந்திருக்கிறது.

Tuesday, September 30, 2008

குழந்தைப் போராளி: சில குறிப்புகள்

- வ.கீதா

ஆப்பிரிக்க இலக்கியம் என்றாலே காலனிய எதிர்ப்பு இலக்கியம்தான் என்ற பார்வை நம்மில் பலருக்கு உள்ளது. இதற்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. காலனியாட்சியின் போது ஆப்பிரிக்க மக்களுக்கு நேர்ந்த அவலங்கள், குறிப்பாக அவர்களது பண்பாட்டு அடையாளங்களும், வரலாறும் சந்தித்த சவால்கள், இவற்றை அம்மக்கள் எதிர் கொண்ட விதம், வெள்ளை இன ஆதிக்கத்துக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட பண்பாட்டு புரட்சிகள் - இவையே 1960கள் முதல் 1990கள் வரை ஆப்பிரிக்க முன்னணி எழுத்தாளர்களின் கற்பனையையும் கவனத்தையும் ஆட்கொண்டிருந்தன.

என்றாலும், ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் வேறு விஷயங்களைப் பற்றியும் சிந்தித்தனர். கென்யாவைச் சேர்ந்த கூகிவா தியாங்கோ உள்ளூர் முதலாளிகளையும் அவர்களது வெளியூர் கூட்டாளிகளையும் இணைக்கும் உறவுகள் குறித்து தனது நாவல்களில் எழுத வந்தார்.காலனியாட்சியின் கொடூரங்களை அறிவிக்கும் எழுத்து மட்டும் ஆப்பிரிக்க எழுத்தாகாது, மாறாக, காலனியாட்சிக்குப் பின் ஒவ்வொரு ஆப்பிரிக்க நாட்டிலும் வேரூன்றிய ஆட்சியையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பதிவு செய்வது அவசியம் என்ற கருத்தை நைஜீரியா நாட்டு எழுத்தாளர் வோலெ சோயின்கா வலிறுத்தினார். 1984இல் அவர் ஆப்பிரிக்காவில் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த நால்வரை மையமாக வைத்து ஒரு நாடகம் எழுதினார் (A Play of Giants). காலனியாட்சியை காரணம் காட்டி, தாம் செய்யும் வரையற்ற கொடுமைகளை ஆப்பிரிக்க தேசிய தலைவர்கள் நியாயப்படுத்தி வந்ததை இந்நாடகம் தயவுதாட்சண்ய மின்றி பகடி செய்தது. அந்நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் சின்ன வயசிலேயே அதிகாரத்தை எதிர்க்கத் துணியும் குழந்தைகளை கொன்றுவிட வேண்டியதன் தேவையை சுட்டிக் காட்டி விளக்கமும் அளிப்பான். சில குழந்தைகளை இன்றே கொல்வது மேலாகும். இதைச் செய்யாவிடில், எதிர்ப்பு என்ற நஞ்சு அவர்களது வளர்ச்சியை பாதிக்கும் என்பான். இதற்கு மற்றொருவன் ஆதரவு தெரிவித்து, மேலும் கூறுவான் - எல்லா பெரிய மனிதர்களுக்கும் குழந்தைகள் என்றால் ஆசைதான். இட்லரை எடுத்துக் கொள்ளுங்கள், குழந்தைகளிடம் எவ்வளவு பிரியமாக இருந்தான். ................................


குழந்தைப் போராளி: சைனா கெய்ரற்சி
தமிழில்: தேவா
பதிப்பாசிரியர்: ஷோபாசக்தி
வெளியீடு: கருப்புப் பிரதிகள்,பி-74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை-5. தொடர்புக்கு: 9444272500

நன்றி: புதுவிசை/ கீற்று

Sunday, September 28, 2008

எண்பத்தெட்டும் எழுபத்தாறும் எண்பதும்

-சுகன்
கடந்த ஞாயிறு சபாலிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தோழர் எம்.சி. ரவூப் ஆற்றிய உரை புகலிட அரசியல் இலக்கிய நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது.சொற்ப நேரத்திலேயே கனகச்சிதமாக தமிழ் அரசியலின் இரண்டக நிலையையையும் அது கட்டமைத்த வரலாற்றுப் புனைவையும் கட்டுடைத்த தோழர் ரவூப் இனவாரித் தரப்படுத்தலின் தோற்றுவாய் யாழ்ப்பாண வெள்ளாளப் பின்னணியே என காட்சிப்படுத்தினார்.

88 புள்ளிகள் எடுத்த முஸ்லிம் மாணவனுக்கு யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டு 76 புள்ளிகள் எடுத்த இந்து மாணவன் அனுமதி பெற்றதை ரவூப் சுவாரசியமாகச் சொன்னாலும் ஏமாற்றத்தினதும் வேதனையினதும் வெறுப்பினதும் உச்சக்கட்டப் பதிவாகவே இதனை நோக்குதல் தகும். வெள்ளாளர்கள் எப்போதும் நாசூக்கானவர்களும் அற்பத்தனமானவர்களும். யாழ் பல்கலைக்கழகமே சாதியின் அடித்தளத்தில் இயங்கும்போது மற்றவற்றின் கொடூரம் சொல்லிப்புரியவேண்டியதில்லை.

Saturday, September 13, 2008

அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல

மூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குகள், குழுக்கள் நிலவும்போது எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுக் கருத்துகள் கொண்ட ஒருதரப்பைக் கருத்துப் பலமற்ற மற்றொரு தரப்பு அவதூறுகளால், ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளால் எதிர்கொள்வது எப்போதும் நடக்கும் ஒன்றுதான்.

இன்னொருபுறம் பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தாகத்தோடு அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும் போக்கும் சில ஊடகங்களில் காணப்படுகிறது. நமது சூழலில் 'நிதர்சனம்.கொம்', 'தீப்பொறி.கொம்' போன்ற ஆயுத அரசியல் சார்ந்த சில ஊடகங்களும், வெறும் பச்சை வியாபார ஊடகங்களுமே இந்த அவதூறுக் கலாச்சாரத்தின் பிரநிதிகளாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் புலம் பெயர் சூழலில் 'மாற்றுக் கருத்தாளர்கள்' எனத் தம்மைப் பிரகடனப்படுத்தி வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் இணையத்தளங்கள் ஊடாகக் கருத்து சுதந்திரம் என்ற பதாகையின் கீழ் அப்பட்டமான புனைவுகளையும் பொய்க்கதைகளையும் தனிமனித சேறடிப்புகளையும் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். இந்த இணையத்தளங்களும் இவ்வாறான செயலுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கித் தமது இணையத்தளத்தைப் பரபரப்பாக வைத்துக் கொள்ளும் மலினமான உத்திகளைச் செய்து வருகின்றன. இவர்களுக்கு இலங்கை பிரச்சனை பற்றிய அக்கறையை விடச் செயலூக்கம் கொண்டியங்கும் தனி நபர்கள் மீதும், அமைப்புகள் மீதும் அவதூறு மேற்கொள்வதே தலையாய கடமையாகி வருகிறது.

வளர்ந்து வரும் இந்த ஜனநாயக விரோத போக்கு, பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தாகம், அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும் போக்கு, அவதூறான பின்னூட்டங்களை விட்டு மாற்றுக்கருத்தாளர்கள் மத்தியில் போட்டிகள் பூசல்களை உருவாக்கும் எத்தனம், தனிமனிதத் தாக்குதல்களை ஊக்குவித்தலில் அற்ப மகிழ்ச்சி, செயலூக்கம் கொண்ட மாற்றுக்கருத்தாளர்களின் மேல் அவதூறுகளை வீசி அவர்களின் பெயரைக்கெடுத்தல் போன்ற கேடுகெட்ட பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

'வெளிப்படைத் தன்மை', 'ஜனநாயகம்' என்ற போர்வையில் தமது கருத்துக்களுக்கு உடன்படாத தனிமனிதர்கள், மீதும் அமைப்புகள் மீதும் அவதூறுகளைச் செய்வதையே இவர்கள் தொடர்கின்றனர். ஆதாரமற்ற அவதூறுகளைப் பிரசுரித்து விட்டுப் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட தனி நபரோ, அமைப்போ அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்பது தான் இவர்களது வாதம்.

ஜனநாயகச் சூழலைப் பலப்படுத்துவதும் அதிகாரத்தை விமர்சிப்பதுமான காத்திரமான நிலையை ஒரு ஊடகம் முன்னெடுக்கும்போது அதன் ஆசிரியர்கள் மிகவும் பொறுப்புணர்வுடனும் அரசியல் அறத்துடனும் வெளிப்படையாகவும் இயங்குவது முன்நிபந்தனையாகிறது. ஆனால் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் எவ்வித ஆதாரங்களுமற்ற குற்றச்சாட்டுகளையும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெறும் கிசுகிசுக்களையும் யாரும் எழுதலாம் அதனைக் கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் இந்த ஊடகங்களும் பிரசுரிப்பார்கள் என்பது அறமற்ற நிலைப்பாடாகும். மறுபுறத்தில் ஆரோக்கியமான கருத்துருவாக்கத்துக்கும் நேர்மையான கருத்துப் பரிமாற்றத்துக்கும் இந்தப் போக்குத் தடையாகவுமுள்ளது. எனவே இந்தப் பொறுப்பற்ற இணையத்தளங்களின் போக்கை 'வெறுமனே பரபரப்பை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படும் மலிவான ஊடக உத்தி', என்று போகிற போக்கில் நாம் சாடிவிட்டு மட்டும் போய்விட முடியாது.

இலக்கியச் சந்திப்புப் போன்ற நிகழ்வுகளும் புலம்பெயர் சிறுபத்திரிகைக் கலாச்சாரமும் ஆயுதக் கலாச்சார எதிர்ப்பையும், மனித உரிமை மீறல்களுக்கெதிரான குரலையும், அதிகார அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் மாற்றுக் கலாச்சார மறுத்தோடி அரசியலையும், ஜனநாயக விழுமியங்களையும் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாகப் புலம் பெயர் நாடுகளில் கட்டமைத்துப் பேணி வந்துள்ளன. தலித்தியம் பெண்ணியம் புலம்பெயர் இலக்கியம் போன்ற பல்வேறு சிந்தனை போக்குகளும் செயல்பாடுகளும் இம்மாற்றுக் கருத்து அரசியலின் பன்முகத்தன்மையின், சகிப்புத் தன்மையின் பெறுபேறுகள்.

புகலிட அரசியல் பரப்பில் பல ஆண்டுகளாக அரசியல் செயல்பாட்டாளர்களால் அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்குமிடையில் தொடர்ந்து செயலூக்கத்துடன் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட மாற்றுக்கருத்து அரசியலின் பெறுபேறுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கே அவதூறுகளைப் பிரசுரிக்கும் இத்தகைய இணையத் தளங்களின் உள்நோக்கம் என நாம் கருதுகிறோம். திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வெளியாகும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் பல தனிமனிதர்களையும், அமைப்புகளையும், சக ஊடகங்களையும் சூழலிலிருந்து தனிமைப்படுத்தி ஒதுக்கும் நோக்கத்துடனும் உள்முரண்களைப் பகைமுரண்களாக்கும் தந்திரத்துடனும் மாற்றுக் கருத்தாளர்கள் இரத்தம் சிந்தி உருவாக்கிய சனநாயக் குரல்களின் தொகுப்பைச் சிதைக்கும் எத்தனத்துடனுமே எழுதப்படுகின்றன என்று நாம் கருதுகிறோம்.

இன்று ஆதிக்கத்திலிருக்கும் ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தின் கூறுகளே இந்த அவதூறுப் பிரச்சாரங்களின் கலாச்சார அடிப்படையாகும். சனநாயக வேடமிட்டு வன்முறைக் கலாச்சாரத்தை இத்தகைய ஊடகங்கள் ஊக்குவிக்கின்றன. பொய்கள் - புனைவுகளின் அடிப்படையில் தனிமனித தாக்குதல்களையும் ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும் அரசியல் செயல்பாட்டாளர்கள் குறித்துப் பிரசுரித்து அவர்களின் பெயர்களுக்கு ஊறு விளைவித்து அவர்களின் சமூக அரசியல் செயல்பாட்டை தடைசெய்யும் நடைமுறை, ஆயுதக் கலாச்சார அரசியலில் மாற்றுக் கருத்தாளர்கள் தடைசெய்யப்பட்டதற்கும் ஆதாரமின்றிக் குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்கும் ஒப்பானதே.

இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்கள் ஈடுபட்டிருந்தாலும் அண்மைக் காலங்களில் இத்தகைய போக்கினை முன்னெடுப்பதில் மிகுந்த தீவிரம் காட்டும் 'தேசம்' இணையத்தளத்தில் இதுவரை வெளியான நூற்றுக்கணக்கான அவதூறுப் பக்கங்களிலிருந்து ஒரு சில துளிகளை மட்டும் இங்கே எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறோம்:

* இலண்டன் தலித் மாநாட்டைக் குறித்து ஏராளமான அவதூறுகள் தேசம் நெற்றில் கட்டுரையாகவும் பின்னூட்டங்களாகவும் வெளியாயின. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி என்.ஜீ.ஓக்களின் வாலாகச் செயற்படுகிறது எனப் பொய்க் குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டன.

* கலைச்செல்வனின் மூன்றாமாண்டு நினைவுகூரலில் நடந்த கருத்து விவாதங்கள் கொச்சையாகத் திரிக்கப்பட்டு தேசத்தில் வெளியாகின. அந்த விவாதம் குறித்து முற்றிலும் பொய்யான செய்திகளே எழுதப்பட்டன.

*1983 ஜூலைப் படுகொலைகள் நினைவாகப் பிரான்ஸில் நடத்தப்பட்ட 'நெடுங்குருதி' நிகழ்வு குறித்துப் பொய்யான தகவல்கள் பிரசுரிக்கப்பட்டன.

* அண்மையில் நடந்த பெண்கள் சந்திப்புக் குறித்து விமர்சித்து எழுதப்பட்ட கேவலம் பிடித்த கட்டுரைகள் தேசத்தால் தேடிப் பிடித்து மறுபிரசுரம் செய்யப்பட்டன. பெண்கள் சந்திப்பில் உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டிருந்ததின் அரசியல் குறியீடு அர்த்தப்பாட்டையே கொச்சைப்படுத்தி அங்கே தொங்கவிடப்பட்டிருந்தவை உபயோகிக்கப்பட்டவையா எனக் கேட்டிருந்த வக்கிரமான பின்னூட்டமும் தேசத்தில் வெளியாகியது.

* TBC வானொலி நிலையத்தில் களவாடியவர்கள் SLDF உறுப்பினர்களே என்றொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு தேசத்தில் பிரசுரமாகியது.

தேசம் தனக்குக் கிடைக்கும் தகவல்களை அடிப்படை ஊடகவியலாளரின் விதிமுறைகளுக்கமைய சரி பிழை பார்ப்பது கிடையாது. எழுந்தமானமாகக் குற்றச்சாட்டுகளைத் தேசம் அள்ளியெறியலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களே பதிலளித்து தங்கள் நற்பெயரை நிறுவ வேண்டும் என்பது தேசத்தின் கருத்து. தேசம் இதுவரை வெளியிட்ட சரமாரியான குற்றச்சாட்டுகளுக்கும் பழிப்புகளுக்கும் இதுவரை எதுவித ஆதாரங்களையும் சமர்ப்பித்ததில்லை.

அரசியல் - கலை இலக்கியத் தளங்களில் தனியாகவும் அமைப்பாகவும் இயங்கும் நாம் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்தி இந்தக் கூட்டு அறிக்கையை வெளியிடுகிறோம்:

1. கடந்த காலங்களில் தேசம் இணையத்தளத்தில் ஆதாரங்களில்லாமல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைத் தேசம் ஆசிரியர் குழுவினர் வெளியிட வேண்டும். ஆதாரங்களை வெளியிட முடியாத பட்சத்தில் தேசம் இணையத்தளம் ஊடக நெறிகளின்படி வருத்தம் தெரிவித்தாக வேண்டும்.

2. செய்திகள், கட்டுரைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் (அவை தனிநபர்களையோ அமைப்புகளையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ அவதூறு செய்யும் நோக்கில் எழுதப்பட்டிருப்பின்) பிரசுரிப்பதை நிறுத்த வேண்டும்.

-11 செப்ரம்பர் 2008
தொடர்புகளுக்கு: opposecalumny@googlemail.com

1. கற்சுறா - மற்றது - கனடா
2. பௌஸர் - மூன்றாவது மனிதன் - இங்கிலாந்து
3. ரஞ்சி - ஊடறு- சுவிஸ்
4. செழியன் - கருமையம்- கனடா
5. நிர்மலா ராஜசிங்கம் - SLDF- இங்கிலாந்து
6. அ. தேவதாசன் - தலித் சமூக மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
7. அருந்ததி - தலித் சமூக மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
8. அசுரா - தலித் சமூக மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
9. யோகரட்ணம் - தலித் சமூக மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
10. சுந்தரலிங்கம் -தலித் சமூக மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
11. ஷோபாசக்தி - சத்தியக்கடதாசி -பிரான்ஸ்
12. சுகன் - சத்தியக்கடதாசி - பிரான்ஸ்
13 தியோ ரூபன் - சத்தியக்கடதாசி - பிரான்ஸ்
14. விஜி - பிரான்ஸ்
15. எம். ஆர். ஸ்டாலின் - ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி - பிரான்ஸ்
16. ராகவன் - SLDF- இங்கிலாந்து
17. எஸ் பஷீர் - SLMIC- இங்கிலாந்து
18. சந்துஷ் - SLDF - இங்கிலாந்து
19. நமோ பொன்னம்பலம் - SLDF- கனடா
20. அகிலன் கதிர்காமர் - SLDF- அமெரிக்கா
21. டாக்டர் நீதிராஜா - BUDS - இங்கிலாந்து
22. ரவி பொன்னுத்துரை - வைகறை - கனடா
23. சாந்தன் - விம்பம் - இங்கிலாந்து
24. ஜெபா - மற்றது- கனடா
25. ரவி - மனிதம் -சுவிஸ்
26. ரகு கதிரவேலு - 'ஈழநாசம்' இணையத்தளம் - கனடா
27. நஜா மொகமட் SLIF - இங்கிலாந்து
28. கே. கிருஷ்ணராஜா விம்பம் - இங்கிலாந்து
29. DR. ரயீஸ் முஸ்தபா SLIF - இங்கிலாந்து
30. எஸ்.எம்.மார்சூக் இஸ்லாம்- ISAM- இங்கிலாந்து
31. வில்பிரெட் வில்சன் -வைகறை - கனடா
32. ஏ.குமாரதுரை - விழிப்பு இணையத்தளம் - டென்மார்க்
33. கீரன் - இங்கிலாந்து
34. செல்வராஜா ஆதவன் - கனடா
35. வாசுகி பரமசாமி - கனடா
36. விஜயகுமாரி முருகையா - கனடா
37. தர்சனா தர்மலிங்கம் - இங்கிலாந்து
38. எஸ். சுந்திரகுமார் - இங்கிலாந்து
39. எஸ். தவராஜா - இங்கிலாந்து
40. ஷாரிகா திராணகம - நெதர்லாந்து
41. DR. நிக்கலஸ்பிள்ளை - இங்கிலாந்து
42. ரஜிதா. S. வேலு- இங்கிலாந்து
43. உமா - ஜெர்மனி
44. மல்லிகா - ஜெர்மனி
45. எஸ்.பாலன் - இங்கிலாந்து
46. எஸ். வேலு - இங்கிலாந்து
47. மு. நித்தியானந்தன் - இங்கிலாந்து
48. அபி இராசரட்ணம் - இங்கிலாந்து
49. காண்டீபன் - இங்கிலாந்து
50. த.ஜெயகுமார் - இங்கிலாந்து
51. போல் பெர்னான்டோ - இங்கிலாந்து
52. அகிலன் வர்ணகுலசிங்கம் - இங்கிலாந்து
53. சிவசாமி சிவராஜன் - ஜெர்மனி
54. மங்கை சிவராஜன் - ஜெர்மனி
55. தர்மினி - பிரான்ஸ்
56. தேவா - சுவிஸ்
57. சங்கீதா ஜெயகுமார் - இங்கிலாந்து
58 சுமதி ரூபன் - கனடா
59. இன்பா - ஜெர்மனி
60. ந. சுசீந்திரன் - ஜெர்மனி
61. மனோரஞ்சன் - கனடா
62. ஏ. எம். ரஷ்மி - இங்கிலாந்து
63. போல்(நரேஷ்) - இங்கிலாந்து
64. ஜெமினி - ஜெர்மனி
65. நந்தன் - ஜெர்மனி
66. நிமோ - ஜெர்மனி
67. சங்கர் - ஜெர்மனி
68. நா.சபேசன் - இங்கிலாந்து
69. நா. சிறி கெங்காதரன் - இங்கிலாந்து
70. ஈசன் சோமசுந்தரம் - இங்கிலாந்து
71. எம்.வை.எம் சித்தீக் - இங்கிலாந்து
72. பாலசூரியன் - நெதர்லாந்து
73. 'சரிநிகர்' சிவகுமார் - இங்கிலாந்து.
74. சோலையூரான் - பிரான்ஸ்

இந்தக் கூட்டறிக்கையைப் பிரசுரம் செய்யுமாறு கோரி கீழ்வரும் இணையத்தளங்களிற்கு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளோம்:

1. தேனீ, 2. ஊடறு, 3. தூ, 4. உயிர்நிழல், 5. சத்தியக்கடதாசி, 6. இனியொரு, 7. பதிவுகள், 8. கரித்துண்டு, 9. விழிப்பு, 10. தாயகம், 11. ஈழநாசம், 12. கீற்று, 13.தேசம் 14. நெருப்பு, 15. அதிரடி, 16. உதயம்-நெற் 17. ஈரஅனல்.

Wednesday, September 10, 2008

நாயி வாயிச்சீல

-மு.ஹரி கிருஷ்ணன்

அகாலமாக மரணத்தைத் தழுவிய அபிராமிக்கு இந்தக் கதை சமர்ப்பணம்

தெரட்டி* முடிஞ்சதும் பொறப்படலாம்னா எங்க முடியிது? சொணையான* இன்னுமே வரிக்கல*. மணி பதனொன்னாவுதோ ! பன்னண்டாவுதோ தெரில. ஆட்டத்துக்கும் போயிக்கிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா? கயிட்டத்தப்பாத்தா காச கண்ல காங்கிறத்தெப்பிடி? நாமக் கைத்தொட்ட காரியமாறதெப்பிடி?எரநூறு வருதோ முன்னூறு வருதோ நாயனக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ம தொந்தரவுக்கு போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத * கீதப்போட்டுக்கிட்டு வந்திட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ திலுப்பி வாங்க முடியாது.

பொட்டைங்கன்னு* அவனுக்கு மட்டுமில்ல, இந்த வையகச்சனம் முச்சூட்டுமே எளக்காரந்தான்.பெறத்தியார ஏஞ்சொல்லனும்? பெத்தவெளே நம்ம தலமேல கொலாய வச்சித்தேக்கிறா. அபிராமி புள்ள இருந்தவரிக்கும் ஓரேடத்துக்குப் போவ வர பேசப்புடிக்க பக்கத்தொணையாயிருந்தா அவளத்தான் அனாமுத்தா மண்ணுக்கு வாரிக்கொடுத்திட்டமே.பொம்பளயா பொறக்க வேண்டியவ ஆம்பிளயா பொறந்த அவ அடைஞ்ச சிறும கொஞ்சமா? நஞ்சமா?பொன்ன உருக்கி பூமில வாத்தாப்பிடி , தங்கத்தை உருக்கி தரையில வாத்தாப்பிடி! தகதகன்னு ஆளும் அவ அழவும் பிள்ளய பாத்தா கண்லு பசியாறும். பாதியில போறதுக்குதாம் பாவிமுண்ட அப்பிடியிருந்தாளோ என்னம்மோ!

சாவுற வயசா சண்டாளிக்கி?ஆடிக்காத்துல பூளப்பூவு பறக்குமே அப்பிடி ஓடி ஓடிச் சம்பாரிச்ச சொத்தும் அவளக் காப்பாத்துல , பிருசனே இவந்தான்னு நம்பி பூசப்போட்டு கும்பிட்டுக்கிட்டிருந்தாளே தேவூரு கவுண்டம் மவன்! அவனும் அவளக் காப்பாத்தல. ஒக்கிலிப்பட்டி சாமியாருக்கிட்டதான்* நானும் அவளும் கூத்துப் படிச்சம். கூத்துப்படிச்சமில்ல அதுக்கு மிந்தியே அபிராமி தாயம்மாளிண்ட* கைப்போட்டு* பச்சச்சீலக்கட்டி போத்திராசி* மாதாளுக்குப் பாலுக்கொடம் எடுத்துப்பிட்டு வந்திட்டா.பாலுக்கொடம் எடுத்தாளில்ல, அந்த ஒரு மண்டலமும் நாப்பத்தியெட்டு நாளும் அவப்பட்ட வாதயச் சொன்னா கல்லுங்கரையும் , மண்ணும் உருகும்.அப்பன் , ஆயா, பெத்து,பொறப்பு அத்தனப் பேத்துக்கும் விரோதமாகி, அடிப்பட்டு, துணிப்பொறுக்கி, அனாதியாட்டம் ஊட்டவுட்டு பம்பாயிக்கி ஓடி, பூக்கார ஆயா சாமாத்துல * சேந்து, பைட்டேண்டுக்கு பைட்டேண்டு, வீதிக்கு வீதி , சந்துக்கு சந்து,அல்லெடுத்து அங்கேயிருக்கிற பொட்டைங்களுக்கு அல்லாம் ஒரு வருசம், ஆறு மாசம் ராத்திரிப் பகலா ஊழியஞ் செஞ்சா.

ஊழியஞ்செஞ்சவளுக்கு கைப்போட்டுத் துப்பரவு பண்டறமின்னுச் சொன்னவிங்க பேச்சு சுத்தமா இருக்கனுமா வேண்டாமா?இன்னைக்கி, நாளக்கின்னு சாக்குப்போக்கு சொல்றாங்களே தவிர ஒவ்வொரு தாயம்மாக்கூட இவளுக்கு கைபோடற மாதரயில்ல. வாக்கியங்கெட்ட கழுதைங்களப் போக்குல வுட்டுப் புடிக்கிலாமுன்னு இவளிருக்க, மறுபடியொமொரு மூணுமாசம் இழுத்தடிச்சி, அதும் பொறவு வடக்க வேண்டாந் தெக்க போலாமின்னு கூட்டிக்கிட்டு வந்தவிங்க ஒரு மாசஞ் சும்மாவே குந்த வெச்சிருந்தாங்க.

குந்த வெச்சிருக்கும்பிடி இவ பொறுக்க மாண்டாம, கோத்தியாவே* திரிய இன்னும்மேயெனக்கு விதியா? முடியுமின்னா முடியுமின்னுச் சொல்லுங்க. இல்ல முடியிலியா பம்பாயிக்கு தாட்டி விடுங்க வழுது சாமத்த அண்டி எனக்கானத நானேப் பாத்திக்கறேன்னு கேக்க, கேட்டவளுக்கு "ஊக்கியில குத்தி இடுக்கியில முள்ளு எடுக்கிற சங்கதியா இது? கைப்போட்டு பொம்பளயாறதுன்னு உனக்கு அவ்ள ரேசா? அதுக்கெல்லாஞ் செட்யானப்படிக்கி தெகிரியம் வேணும் , நீ செத்த பொறுமையா இருடி தாயி"ன்னு தேறுதல சொல்லி ஆத்தூருக்கு கூட்டிப்போயி அங்கியுமொரு அஞ்சாறு நாளாட்டம் வெச்சிருந்தாங்க. ஆறாம் நாளு நெறஞ்ச வெள்ளிக்கிழம அன்னக்கி அந்தியோட ஆயாமாருங்க* சேலாமாருங்க* எல்லாரும் ஒரேத்துருவா கடவீதிக்குப் போனாங்க.

போனவிங்க இன்னதுதானில்ல இஷ்டப்பட்ட திம்பண்டத்த நீயி திங்கிறமுட்டும் தின்னுடின்னு அபிராமிக்கு வாங்கி கொடுத்துத் திங்கடிச்சாங்க.திங்கடிச்சிப்புட்டு அன்ன ராவு மொதாட்டஞ் சினிமாவுக்கும் கூப்பிட்டுப் போனாங்க. போயிட்டு வந்து , கண்ணாறத் தூங்கு மவளே ! இன்னைக்கு விடியறதுக்குள்ள உனுக்கு உறுதியா கைப்பொடறமின்னுச் சொன்னாங்க.சொன்னவங்க சொன்ன மாதிரி ரெண்டு மணி சுமாருக்கு இவளையெழுப்பிச் சுத்தப்பத்தம் பண்டி, சுனிக்கு சரட்லச்சுருக்கு வெச்சி, அதைச்சுத்தியும் வெள்ளத்துணி சுத்தி சுத்திவுட்டாங்க.

சுத்திவுட்டவுங்க அதும்பொற வொரோ அரச்சணங்க் கூட தூங்கவேப்படாதுன்னு இவுளுக்குக் காவலிருந்தாங்க.விடிகாலம் நாலு மணிக்கெல்லாம் பாத்துக்க, ச்சும்மா தட புடலா மாதாளுக்கு முப்பூசயாவுது. பூச ஆவதுக்குள்ளேயே சாமிக்கு மின்ன நெறம்மணம்மா இவள நிக்க வச்சாங்க. நிக்க வெச்சதும் அந்தல்ல யிந்தல்ல திமறதுக்கில்லாம கையிரண்டையும் பிந்தாயம்மா* இறுக்கிப் புடிச்சிக்கிட்டா. அவ இறுக்கிப்புடிச்சதும் தலமசுத்த சுருட்டி வாயில துருத்தி, மனசார மாதாவ வருந்தடியம்மான்னுப்புட்டு , 'மாதா, மாதான்னு இவ வருந்த, வருந்த , கண்ணமூடி முழிக்கிறதுக்குள்ள மானியப்புடிச்சி பறக்குன்னு அறுத்துப்புட்டா இன்னொரு தாயம்மா.

அப்பிடி அறுத்ததும் அடேயேங் கொண்டாலா! காலடியில உதிரம்போவுது தானா காவேரி ஆறாட்டம்.செவுத்தச் சாத்தி ஒக்காரவெச்சி உதரத்த வழிச்சி, வழிச்சி இவ உச்சந்தல மொதக்கொண்டு உள்ளங்காலு ஒருக்கோடியா சொதம்பப் பூசிவுட்டா தாயம்மா.தாயம்மா பூசப்பூச தம்பட ரத்தத்த தானே காங்கும் பிடி அபிராமி அடி அம்மான்னு மயக்கம் போட்டுட்டா. மயக்கம் போட்டவள கன்னங்கன்னமா அப்பி , அம்மான்னு சொல்லாதடி மாதான்னு சொல்லுடின்னா, அவ எருப்பு தாழமாண்டாம எரியிதே! எரியுதேன்னு தன்னப்பால பெணாத்தறா. தன்னப்பால பெணாத்தும்பிடி அந்த தாயம்மா நல்லெண்ணய கொதிக்கக் கொதிக்கக் காய வச்சி கைப்பொறுக்க கொண்டாந்து அந்த பச்சப்புண்ணு வாப்பாட்டச்சுத்தியும் பலாசனா ஊத்தியுட்டா.

ஊத்த ஊத்த வாட்டமா காட்டிக்கிட்டிருந்தவ ஒருச்சித்தய கழிச்சி ச்சுறு ச்சுறுன்னு நோவு திலும்பும்படி அந்நேரம் அய்யய்யோ எங்கடவுளேயேன்னு அந்த பிள்ள ஒரு கத்துதாங் கத்தினாப்பாரு ! கடகால் மட்டத்துலேயிருந்து அந்த கட்டடமே கிடுகிடுன்னு நடுங்குது!அருவாளோ, கொடுவாளோ தப்பத்தவற நம்ப மேலுலப்பட்டு அதாலவொரு காயமாயிப் போச்சின்னா அதுக்கு எத்தன ஊசிப்போடறம்? எவ்ள மாத்தரத் திங்கறம்? கப்புப்போட்டு* சோக்கேத்தி* ஆத்துக்குப்போயி, தீர்த்தம் எடுத்தாந்து ஆலாத்திச்சுத்தி, மாதா மொகம் பாத்த பிற்பாடும் , ஆறாத ரணத்துக்கொரு மருந்துமில்ல மாயமுமில்ல. வலின்னு வாயத்தொறந்துப் புட்டா, மோரியிலக்* குந்த வெச்சி ஒலத்தண்ணிய மூட்டு மூட்டு காவு* மேல அடிச்சி வுடறதோடச்சேரி! அத மீறனா வெத்தலயில நல்லெண்ணயத் தடவிப்பத்து போடறதோடச் சேரி!ஓடம்போக்காக் கூடப்போயி பக்கதிலேயிருந்து இந்த பாதரவு எல்லாத்தையும் பாத்திக்கிட்டிருந்த எனக்கு, கைப்போட்டா , தாயம்மாக்கிட்டதான் கைப்போட்டுக்கினுமின்னுருந்த வைராக்கியம் எங்கப்போச்சின்னே தெரில.

அத இன்னக்கி நெனச்சாலும் கை காலு தொவண்டு, கிறுகிறுப்பு பதபதன்னு வந்திரும், காலோட தொறத் தொறன்னு மல்லும் முட்டிக்கும். அந்த பயத்திலியே நாங்கையும் போட்டுக்கல, கிய்யும் போட்டுக்கல. சொல்லப்புடிக்காம அபிராமிக்கு மின்ன திருட்டு வண்டியேறி ஊருக்கு வந்திட்டன். உதரக்கட்டு நிக்காம , காஞ்சப்புண்ணு பாதி , காயாத புண்ணு பாதின்னு அப்பிடியே கோமணத்து மேல கோமணங்கட்டி, கட கடயாப் பிச்சையெடுத்து, குருவுக்குப் பட்ட கடங்கட்டிப்புட்டு தாயிப்புள்ளயோட வந்து அவளும் எடஞ்சேந்தா. மரத்த வெட்டி ஆராச்சிம் மாருமேல சாச்சிப்பாங்களா? எதுக்குயிந்த சித்ரவத? எதனாலிந்த கந்தர கோலம்னு கேக்கிற சனத்துக்கு வதிலுஞ்சொல்ல முடில.

ஆதியில பகவாம் படச்சபண்டம் அப்பிடியே இருந்து தொலையட்டுமின்னு இருந்தாலும் மூக்கு மேல பீயப்பினாப்போல இந்த அருகருப்ப வெச்சிக்கிட்டு திரிய முடியல. பவானி குட்டமுனியப்பங் கோயிலுதான் நாம் பொறந்த ஊரு. யெங்கப்பம் பழனிச் சக்கிலிக்கிம், ங்காயா பச்சாயா சக்கிலிக்கிச்சிக்கும் நாம் பொறந்தது ஒரேப்பையன். எனக்கொரு பொறந்தவ, அவ பேரு அழிஞ்சிகண்ணி. பொறக்கும்போது உருப்படியாதாம் பொறந்தன், பத்து வயசாச்சோ இல்லியோ இந்தப்பித்து பிடிச்சிட்டிது.கண்ணுக்கு மையெழுதி , மண்டயில பூவ சொருவி, கவுனு மாட்டி, கண்ணாடி மின்ன ஆட்டம் போட்டு, ஊட்ல பொம்பளச்சட்டியின்னு பேரடுத்து ஊருல பேரெடுத்து, கூலிநாலிக்கு போற எடத்திலேயும் பேரெடுத்து, கரும்பு வெட்டப்போனத்தாவுல காட்டுக்காரன் கையக்கால கட்டிப்போட்டு , கடவாயிக்கி கல்லையும் , நடுவாயிக்கி புழுலுயும் வெக்க, பத்துபேரு அதப்பாத்து சிரிச்சாங்களே அன்னிக்கி ங்கெக்கா பாவடயோட ஓடி பூதப்பாடி கல்பனா ஆயா* காலடியில விழுந்தவதான், திலும்பி வூட்டுக்குப்போகவேயில்ல.

வவுத்துக்கு திங்கிற சோத்துக்கும், இடுப்புக்கு கட்ற துணிக்கும் வஞ்சன வெக்காம வளத்தனா ங்காயதான் எனக்கு பேரு வச்சா! மூக்கு குத்தியுட்டு 'தொளசி' ன்னு அவதான் பேரு வச்சா. தந்தாவும் * வேண்டாண்டி ஒரு கிந்தாவும் வேண்டாண்டி! அலேய் ஆதமுத்து முண்டைங்களா உருவா சம்பாரிக்கலாமின்னு பத்துப்பேரோட படுத்து நோவு கீவு வாங்கிட்டம்னா அந்த வெனய எங்கக்கொண்டுப் போயி தீக்கிறது? ஆடுமாடுகளுக்குக்கூட ஆசுபத்திரி இருக்கிது, நாயிம் தம்புண்ணத்தானே நக்கி ஆத்திக்கிது.அதோட கேவலண்டி நம்ப பொழப்பு. கண்ணக்கெடுத்தாலுங்கோல குடுத்தாங்கிறப்பிடி மாதா நம்புளுக்கு ஒழச்சிப்பொழைக்க மாளாத தெம்பு குடுத்துக்கிறா. வாங்கடி கைய ஊனி கரணம் போடலாமின்னு அம்பது , நூறு பொட்டைங்கள ஒண்ணாச்சேத்திக்கிட்டுப் போயி கலைக்கிட்டருக்கிட்ட"சாரு, சாரு இந்த மாதர , இந்த மாதர நாங்க சொந்தமா பாடுப்பட்டு தின்னுக்கிறம், எங்களுக்கு எதுனா ரோனு* கீனு ஏப்பாடு பண்டி விடுங்கன்னு" பிட்டிசனு எழுதிக்குடுத்தா, அவிங்க என்னங்கறாங்க.., ஊடு வாச இருக்குதா? உங்க பேருல சொத்துப் பத்து இருக்குதா? சர்க்காரு வேங்குல ரொக்கம் ரோஜனம், கணக்கு வழக்கு இருக்குதாங்கறாங்க.

உங்க சோறு இல்ல, ஒதுங்கவொரு நெவுலடி பாத்தியம் இல்ல, எங்ககிட்ட எதுவுமேயில்ல அத்தாந்தரமா* நிக்கறம். எதோ நீங்க பாத்துவொரு ஒத்தாசப் பண்டுங்கன்னு கெஞ்சினா, அட்ரசீ இல்லாதவங்களுக்கு ரோனு குடுக்க சட்டத்துல எடமில்லங்கறானுங்கவொரு தலயெடுப்பா.., போங்கடா எம்பட்டைங்களான்னு * திலும்பி வந்திட்டோம்.ஆளாளுக்கு ஒரு தொழுவாடு கத்துக்கடிங்கன்னு ஆயா சாமியாருக்கிட்ட கூத்துப்படிக்க கைகாட்டியுட்டா.

சும்மா எப்பிடி சொல்றது சாமியாரப்பன் வெட்டு வெடுக்குன்னு ஒரு வார்த்தப்பேசினதில்ல. பெத்தப்புள்ளங்களுக்கு மேல ஆச அம்பா வெச்சிருந்து அக்குசா தொழில கத்துக்குடுத்தாரு.அபிராமி கண்ணாலந்தான்* மொதல்ல படிச்சம். அப்பதான் இவளுக்கு அபிராமின்னு பேரு வெளங்கனது.செரியான வுனுப்புக்காரி , எதச்சொன்னாலும் புடிச்சாலும் கப்பூரமாட்டும், ஆட்டம் அப்பிடித்தான். பாட்டும் அப்பிடித்தான். என்னாவொண்ணு சாரீரம் மட்லுங்கொஞ்சங் கட்ட சாரீரம். நெட்டையோ , குட்டையோ சாமியாரு செட்டுக்கு, மொகாம , மெயினு வேசக்காரி இவதாங்கிறாப்பிடி ஆயிட்டா.சரி சரீங்கறாப்பல தொழிலுஞ் செஞ்சா. நாத்து வெளஞ்சி பயிராவறதுக்குள்ள மத்தளக்காரம் பூமுடியூர் ராசி அவள குத்துவதோட்டம் ஓட்டறதுக்கு ஆரம்பிச்சிக்கிட்டான். வூடு வாச அண்டாம, செலவுக்கு அஞ்சிப்பத்து வரும்பிடிய குடுக்காம ஓராம்பள கண்டயெடம் மேஞ்சிக்கிட்டிருந்தா பொட்டப்பொம்பள பிள்ளைங்க குட்டிகள வெச்சிக்கிட்டு என்னாப் பண்டுவா? ஒண்டி ஒரியா அவளால சம்சாரத்த சுதாரிக்க முடியுமா?

செட்டாளுங்க ஆளாளுக்கு கூடி கூடி நாயம்பேசி குசலஞ்சொல்லி அவளுக்கு உடுக்கயடிக்க."உன்னையொரு பெரிய மனுசன் , வாத்தியாருன்னு நம்பி செட்டு மத்தாளத்துக்கு வுட்டா, எம்பிருசனுக்கும் அந்தப்பொட்டையனுக்கும் வெளக்கு புடிச்சி, என்ற வேரப்பறிச்சி,வெந்தண்ணி வாக்கிற , பரவால்லடா மாப்ளே உன்ற பண்ணாட்டுன்னு" ராசுப்பொண்டாட்டி வந்து பேயாடிப்புட்டு போனா. அல்லாருக்கும் எட்டெழுத்து, நம்புளுக்கு பத்தெழுத்துலே அலே பறமுண்ட! என்னா பாவம் பண்டினமோ ஆணுக்காவாம், பொண்ணுக்கும் ஆவாம, இந்த மானங்கெட்ட பொறப்பெடுத்து, போற வாரப்பக்கமெல்லாஞ் சின்னப்பட்டு சீரழியுறோம். ஒருக்குத்தமும் பண்டாதமின்னியே நம்பள தேவியாப்பட்டங்கட்டி பல்லுமேல நாக்குப்போட்டு மந்தைங்க பலவெதமாப் பேசுதுங்க.

எச்செலைக்கி வீங்கறப் பொழப்ப இன்னையோட தல முழுவிடி ஆயான்னு உள்ள நாயத்த நானு எடுத்துச் சொல்ல , வாத்தியாரும் ரெண்டு நல்ல பித்தி சொன்னாரு. சரீன்னு அபிராமியும் கம்மின்னிருந்தா ராசு வழிக்கிப் போகாம , ஆடி நோம்பிக்கிக் கூத்தாட தேவுரு செட்டிப்பட்டிக்கி போனாம்பாரு அங்கவொரு எத்துக்காரவன் வந்துச் சேந்தான் அவளுக்கு எமனா. களரிக்கூட்டுமிந்தியே வந்தவம்பா! விடிய விடிய சுத்தி விடிஞ்சும் அபிராமிய வுட்டு அந்தல்ல நவுரல. இவ என்றான்ன அவஞ்சொல்ற பாட்ட பாடுறா, அந்த பாட்டுக்கு பதினஞ்சி சீல மாத்றா ச்சும்மா பறந்து பறந்து ஆடுறாப்பா. அந்த திருவாத்தான் ஆளுமேல ஆளவுட்டு இவளுக்கு நோட்டு நோட்டு பின்னுக்குத்தறாஞ் சலிக்காம, எப்பிடியும் அன்னைக்கி அனாமுத்தா சேந்தது உரூவா ஏழ்நூத்தம்பதுக்கு மேலியே இருக்கும். அலங்காரம் முடிஞ்சிதும் எங்கடா பிள்ளயின்னு தொழாவுனா ரெண்டுபேரும் எவத்தயிருக்காங்கன்னு ஒன்னுந்துப்பே இல்ல. அப்பறம் பாத்துக்க எந்த பிருசம் பொண்டாட்டி அந்த மாதர ஒத்துமையா இருப்பாங்க ! அவிங்க திங்கிறதும் ஒரே வட்டிலு , படுக்கிறதும் ஒரே கட்டிலு.., ஒண்ணும் மண்ணா பொழங்கிட்டிருந்தாங்க!

நாளாவ ஆவ இந்தப்பிள்ளக்கி சுத்தமா நெப்புக்கெட்டுக்கிடுச்சி. மாப்ள பெரும கண்ண மூடிக்கிம்பிடி அஞ்சாறு அலங்காரத்துக்கு ஆளு வரல, கூத்து படு பாணி*சாமியாரு கூப்புட்டு கண்டாற,கழுத,ங்கோயா, ங்கொம்மான்னு ரவுசுப்பண்டும் பிடி மாப்ளக்காரனுக்கு ச்செட்யான ரோசம் வந்துட்டது.அவனப்பத்தி அனாவசியம்! அவனென்ன உன்ன அடிப்புடிங்கிறது? நானாச்சி வா உனக்கு தனியா செட்டுக் கட்டித்தாரமின்னு. ஒரே ரெண்டு நாளயில ஆளுங்களுக்கு மூவாயிரம் நாலாயிரம் மிம்பணங்கொடுத்து சாமியாரு செட்டக்கலச்சி தனிச்செட்டு கட்டிக்குடுத்துட்டான். இந்த ஆடுகாலிப் போனவ, குருவுக்கிட்டவொரு வார்த்தச் சொல்லிப்புட்டு நல்ல வாக்குசம் வாங்கிட்டுப் போவப்புடாதா? போடா பிலாக்கப்பையான்னு போவக்குள்ள சாமியாரு குடுத்து வச்சிருந்த பொதுப்பணம் நாப்பதாயிரத்தையும் வாயிலப் போட்டுக்கிட்டுப் போயிட்டா.

ஒரு கூத்தன்னைக்கி இந்த மனுசன் தண்ணிதாசனூர் அம்மங்கோயிலண்ட நின்னு," அடியே குருத்துரோகி ! எண்ணி வொரேவொரு வருசத்துக்குள்ள என்ற கும்பி பத்தறாப்பல பத்தியெரிஞ்சி போயிருவடின்னு" மண்ணவாரி வாரி தூத்தவாச்சொல்லுப் பலிச்சிட்டுது. அந்த ஆளிட்ட சாபனையோ! அடி நாளு தீவனையோ கவுண்டம்மவங்க கூட சோடிப் போட்டுக்கிட்டு அங்கயிங்க சுத்தி ஆட்டம் போட்டது பத்தாதுன்னு இந்த கடகெட்ட மூளி அவனக் கூட்டிக்கிட்டு வூட்டுக்கேப் போயி கும்மாளம் போடறதா?அவிங்கம்மாக்காரி பாக்கிறவரிக்கும் பாத்துட்டு, 'எங்கித்தி பாமனையோ என்னு வவுத்துல வந்து பொறந்து இப்பிடி ஈனப்பானமில்லாம திரியற! நீதாம் புளுத்துச் சாவற!

எங்கியாச்சும் கண்ணுக்கு மறப்பாப்போயி சாவு! இங்கேண்டி வூட்ட கந்தறப் பண்டற? கூடப்பொறந்த பொறப்பு ஒரு வயசிப்பிள்ள இருக்கற வூட்ல இந்த மாதர அக்குறும்புல அழியறீங்களே நல்லாயிருப்பீங்களா?நாசமுத்து வேசமாரி போவிங்களான்னு ச்சும்மா வுட்டு வணக்கு வணக்குன்னு வணக்கி , கடதாம்பு கட்டும்பிடி கவுண்டம் மவன் போக்குவரத்து அறுதியா நிறுத்திக்கிட்டான். இவ மாப்ள வந்து பாக்கறதல்லையின்னு அலைமோதி கெட்டலைஞ்சி சோறுதண்ணி கூட குடிக்காம கூத்துக்கு போறது, வந்து கூதப்போட்டுக்கிட்டு படுத்துக்கறது.

பங்கினி மாசம் ச்செட்யானப்படிக்கி சீசனு! வருசக் கூத்தா வருது! வர்ற கூத்த வாண்டாங்கலாங்கமா? போற இடத்திலேயெ தங்குமடம், போட்டுக் கூத்தாடிக்கிட்டு தப்படியா வூட்டுக்கு வந்து போயிக்கிட்டிருந்தா. அந்தப் பிரகாரம் பூலாம்பட்டி சித்தூருல நோம்பிக்கூத்து வொண்ணு தானாவதி* மழைக்கி நிக்கிம்படி வூட்டுக்கு போகவலாம்னு வந்தவ நட்ட நடு தாவாரத்திலியே மாப்ளக்காரனும் அவ அம்மாக்காரியுங் கொண்டி மாட்டிக்கிட்டு கெடக்கறதப் பாத்துருக்கறா.அப்பிடியே அங்கம் பதற, அடி வவுறுக்காந்த ச்சட்டங்குன்ன , ச்சரிகலம் பதற நடுநடுங்க நின்னவ , " அடியே உத்தமபத்தினி எனக்கு பித்திச் சொன்னியே இப்ப நீயேண்டி அவுசேரிப் போன" ன்னு ஒரேயொரு வார்த்தயின்னாலும் நாண்டுக்கிட்டுச் சாவும்பிடி கேட்டுப்புட்டு, கடகடன்னு கண்ணுத்தண்ணிய வுட்டுப்புட்டு அந்தாண்ட வந்துட்டா.

அவ்வளதான் மக்யாவது வாரமெல்லாம் பன்னிக்கறிய வறுத்து அதல பாசானத்த கலந்துக் குடுத்து அபிராமிய கொன்னுப்புட்டா அவிங்கம்மாக்காரி.நெருப்பூரு நாவமரைக்கி சீருக்குப் போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க, எளம்பிள்ளி கூடுகாட்ல மவ மூஞ்சியப்பாக்க கூட ரொணமில்ல . ஆவுசந் தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம்.

நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்? தாயப் பழிச்சமா? தண்ணியத் தடுத்தமா? ஏழய அடிச்சமா? எளஞ்சாதம் உண்டமா? எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்? கூனுக்குருடு , மொண்டி , மொடம், இப்பிடி ஒடம்புலவொரு ஒச்சமின்னாக்கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறுபண்டி வேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக்கண்ணு சாமி !அபிராமிபுள்ளய நெனச்சிட்டம்னா அன்ன பொழுதுக்கும் அன்னந்தண்ணி ஆகாரம் எதுவுமே உள்ற எறங்காது. நாம்ப அழுதகண்ணுஞ் சிந்தன மூக்குமாயிருந்தா மாண்டவிங்க பொழைக்கப் போறாங்களா? மறிச்சி மண்ணவுட்டு மேல வரப்போறாங்களா ? இல்ல அன்னைகியெழுதன எழுத்த பிரம்மன் அழிச்சி எழுதப்போறானா?

உச்சியத்தாண்டி ஒருமாறுப் பொழுதாச்சி சம்பளம் பிரிக்க. செங்கமா முனியப்பங் கோயில்ல எறங்கி பொடு பொடுன்னு வூட்டுக்கு போயி, துணிமணிய அலசிப்போட்டுட்டு ஒருவாச்சோத்த குடிச்சதும் களப்பாயிருக்குதேன்னு செத்த படுத்தம்பாரு , எந்திரிக்கும் போது மணி ஏழு!எஸ்.டூ.எ பஸ்சு சங்கிரி வந்துட்டு திலும்பி பவானி போயிரிச்சு. அதும்பொறவு ஆதியா பாதியா கெளம்பி அம்மாபேட்ட வாரதுக்குள்ள மணி ஒம்போதர, அலங்கார கறவதானுங்க* ஒருத்தங்கூட வூட்ல இல்ல. எட்டு மணி முட்டும் பாத்துட்டு மினி வண்டி பேசி எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாம். வூடு வூடா அவிங்களத் தொழாவிப் புட்டு வரதுக்குள்ள பத்துமணி கடைசி பஸ்சும் போயிட்டுது.பக்கமாயிருந்தாலுந் தேவல. நாகனூரு வாத்தியாரூட்டு கூத்து. மெயினு ரோட்லேயிருந்து பழையூரு. முழியனூரு மேல நடந்துப்போனா ஏழு மைலுக்கும் மேல சேரும். எந்நேரம் போறது? நேரங்காலமா வந்திருந்தா எதாவொரு வண்டி கிண்டி புடிச்சிப்போயிருக்கலாம். அத்துவானத்துல* வந்து மாட்டிக்கிட்டமே என்னாப் பண்டறது?

செட்ல சாரி வேசமே* இல்ல. அந்த சிறுத்த கண்ணஞ் சேவுருப்பையன் இப்பதான் புதுப்பழக்கம், சந்து அடைக்கத் தானாவும் , பெருங்கொண்ட ஆக்கிட்டு கட்டிச்செலுத்த மாண்டான்.மிந்தியாச்சும் சுப்ரமணி இருந்தாப்ல,பொண்ணு வேசத்துக்கு பஞ்சமில்ல. போனப்பூட்டிலேயே ஆளு அலங்காரத்துக்கு வரல. அவரென்ணாப் பண்டுவாரு? பத்திருவது வருசமா செட்டுக்கு அவரு பட்ட பாடு அந்த பஞ்சும் பட்டிருக்காது. அப்பிடி ஒழைச்ச ஒழப்புக்கு கைமேல கண்ட பலனா இன்னிக்கி ஒவித்திரியப்பட்டிக்கிட்டுக் கெடக்கறாரு.குஞ்சாண்டியூருக்கு அந்தாண்ட ஆண்டிக்கர காக்காயந்தெருவுக்கு ஓராட்டத்துப் போயிருந்தம். மூணாம் வருசம் கூம்புக்கு* கூத்துவிட்டவங்க வக்ரகேது பலிதான் ஆடனுமின்னுப்புட்டாங்க. எந்த அலங்காரமாயிருந்தாலுஞ் செரி சுப்ரமணி எத்து வரிசையாதான் தொழிலுப்பண்டுவாரு. அன்னைக்கிம் அவரு விலோச்சனா வேசம் போட்டுருந்தாரு. அம்மாபேட்ட கணேசண்ணன் எரிகண்டங்கட்டியிருந்தாரு. வேகாத திரேகமும், போவாத உசுரும், நீங்காத சேம்பரமும் வேணுமின்னு வரம் வாங்க எரிகண்டன் வக்ரகேதுவ ரணகாளிக்கி பலி குடுக்க கூட்டிப்போறான், மவன் உசுர மாய்க்க வேண்டாமின்னு விலோச்சனா அழுது பொலம்பறா. மின்ன வச்ச கால பின்ன வெக்க மாண்டேன்னு சூரனொருபக்கம் இழுக்க, வுடமாட்டேன்னு பொண்டாட்டி குறுக்க விழுந்து தடுக்க, ஓரியாட்டத்தில சூர வேசக்காரன் அவள எட்டி ஒதச்சி தள்ளி அந்தாண்ட தாட்டி போவனில்ல, அந்த கட்டத்தல கணேசன் ஒதச்ச ஒதயில ஏமாந்தாப்பிடி அழுதுக்கிட்டிருந்த சுப்ரமணி முதுவுல ஈடுதாங்கி போச்சி. சும்மா ரெண்டு நாளு மூச்சுத்தப்பு உழுந்ததுதான் காரணம், பொறவு மனுசன் வாயத்தொறந்து பாட முடியல. எங்கியங்கியோ போயி அளவத்த பணம் செலவு பண்டியும் நோவு நல்லாவல. பொறிக்கித் திங்கிற கோழிக்கி மூக்கத் தறிச்சாப்ல . நல்ல தொழிலாளிக்கு நேந்த கதியப்பாரு. வவுத்துப் பாட்டுக்கு இப்ப ஊரு வூரா ஈயம் பூசிக்கிட்டு திரியறாரு.

அவருமில்ல, நானும் போவலைன்ன கனகராசி வாத்தியாரு கொஞ்சத்தப் பேச்சா பேசுவாரு. கெடயில காலு தங்காம அங்கயும் இங்கயும் ஏண்டா காலந்திரியா திரியற? செட்டுக்கே வந்துர்றா! ஆத்தர அவரசத்துக்கு வேணுமின்னா பணங் கிணம் வாங்கிக்குவியாம்னு அவருதாம் பொணையாயிருந்து ஆபரேசம் பண்ட செட்டு பணத்திலியிருந்து எட்டாயிரம் தாரமின்னு சொல்லி மிம்பணம் மூவாயிரத்த கையோட குடுத்தாரு.ஆச்சி , ஆச்சி இந்த எட்டு பூர்த்தியா ஆடனா வேணுங்கற பணந்தெரண்டுக்கும், ராய வேலூருலியே டாக்கிட்ருமாருங்க கைபோடராங்களாம். நோவு இல்லாம போயி செஞ்சிக்கிட்டு வந்துர்லாம் நிம்மிதியா!கல்பனா ஆயா கூட முடிஞ்சத தாரமின்னிருக்குது. எப்பிடி பாத்தாலும் போவ வர மேஞ்செலவு ஆயாப்பாத்துக்குவா.

ஆசுபத்திரி சமாச்சாரம் செலவு இவ்ளவுதான் ஆவுமின்னு ஆரு கண்டது ? முன்ன பின்னக்கூட ஆவும். எதுக்கும் உண்டுன்னா காசிருந்தா ஒதாரணைக்கி ஆவுமின்னுதான் நானு கரவாட்டத்துக்கும் கூத்துக்குங் கைகுடுத்துட்டு இப்படி பட்டழியறன். கனகராசிச் சமாவையுஞ் சும்மாச் சொல்லக்கூடாது. மனசர காங்காம ஏவிடியம் பேசுவாங்களோ என்னமோ தெரியாது. கண்டவொரு நாளும் எச்சி எடுப்பு பேசனதில்ல. நாலுப்பேத்து தொழிலு நம்பளப் பத்தி வாதிக்கக்கூடாது. ரோட்டுக்கால்ல நின்னு பால மாதர பொந்தியப்போட்டு ஒழப்பிக்கிட்டு போறவர ஒண்ணுரெண்டு வண்டிங்கள நாங்குறுக்காட்ட ஒருத்தங்கூட நிக்கல.

நேரம் எந்நேரமோ அம்மாபேட்ட ஊரே அடங்கிப்போச்சி. வவுநேரங்கழிச்சி தொலையா ஆரோவொரு ஆளு வாட்டச்சாட்டமா நடமாடற மாதர தெம்பட்டது. ஆராயிருந்தா நமக்கென்னா? கூத்துக்கு போவ முடியாத வெசனத்துல எம்பாட்ல நானிருக்க, கிட்ட வரச்சொல்லி அவங்கைச்சாட பண்றானே! இதென்றா தும்பமின்னு பக்கம் போயிப்பாத்தா அவனெங்கியோவொரு போலிசு ஏட்டு.

சிப்பமோ* சீமச்சரக்கோ என்னான்னுந் தெரில. ஆளுக்குப் பதமான போத. சீப்பு வண்டிமேல அட்னகாலுப் போட்டு படுத்திக்கிட்டிருந்தாஞ் சிவரெட்டுப் பத்தவெச்சிக்கிட்டுஎன்னாங்க கூப்ட்டதுன்னு நாங்கேக்க எடுத்த எடுப்பில " வர்றீயா" ங்கறானே ஒரு துடியா.தடி எடுக்கறப்பவே அடி எங்க வுழுமின்னு எனக்கா தெரியாது. இருந்தாலும் நம்மள வெச்சி தெரிஞ்சி கூப்டறானா? தெரியாம கூப்டறானான்னு அறிக்கொழப்பம்! எப்பிடியோ இருந்து சாட்டாவுது, இதுக்கு மேல்பட்டு நாங்கூத்துக்குப் போறது நெசமில்ல. வளச்சிக்கிட்ட்டு வூட்டுக்குப் போவலாமின்னாலும் பவானி வரிக்கும் காரு இருக்கும். அந்தாண்ட வண்டியில்ல. பைபாஸ்ல போயி பொழுது விடியந்தின்னியும் குந்தியிருக்கனும். அவுத்தப்போயி ஏப்பா அவுதிப்பட்டுக்கிட்டு கெடக்கனும்? இப்பிடிப்போயி சித்தங் கூறியும் இவங்கிட்ட தடுமாறிப்புட்டு வந்தா என்னாக் கெட்டுப்போச்சி? இருந்தாப்பிடியிருந்து எனக்கு தெங்கற* நெனப்பெடுத்துக்கிச்சு.

ஆம்பிள தெரண்டு ஆளாளா ஒடனே கண்ணாலங் கார்த்தி , அவனுக்குண்டான குடும்பங்குட்டி உற்பத்தி ஆகுது. அப்பிடியதுக்கு வசிதிப்பத்தலைன்ன அததுக்குபொண்டுங்க இருக்கறாங்க அங்க போயி அம்பதுன்னும் நூறுன்னுங் கடஞ்சொல்லிக்கூட அறுப்பத் தீத்துக்கறாங்க. பொம்பள சமைஞ்சா பெத்தவிங்க கடம்பட்டு , ஒடம்பட்டு ஒருத்தங் கையில புடிச்சிக் குடுக்கறாங்க. அதுச் சுத்தப்படலியா , அவப்பாத்து துணிஞ்சா அவ பொச்சி பொறன ஆணாகப்பட்ட அத்தன சீவனுங்களும் காரோடத்து நாயி மாதர காசுங்கையுமா சுத்தறாங்க. இந்த திக்கத்த ஆத்துமாவுக்கு ஊத்த ஒடம்புல பிப்பு எடுத்தா அதக்கண்டு ஆத்த மருந்துண்டா? நம்பள அரிசின்னு அள்ளி பாப்பாருமில்ல , உமின்னு ஊதிப்பாப்பாருமில்ல்ல. பிரியப்பட்டு வலியினா வர்றங்கறவன ஏம்பா வாண்டானுச் சொல்லனுமின்னு நானு அவன அப்பிடிவுட்டுட்டு , இப்பிடி இந்தாண்ட வந்து ரோசனப்பண்டிக்கிருக்கவே, அவஞ்சீப்பு வண்டி ஆள ஓரங்கட்டி நிக்குது.

வந்து ஏறுன்னு அவஞ்சொல்லுமிந்தி நானு மின்னித்தி சீட்டேறிக் குந்திக்கிட்டன்.ஒரே அழுத்துல வண்டி எட்டிப் புடிச்சாப்பல கொடம்பையூரு கரட்டுக்கு வந்துட்டது. அடிக்கரட்ல வட்டப்பாறையும் பாழியுமா இருக்கும் பாரு ! அவுத்த வண்டிய நிப்பாட்டினான், பாற மேல மழக்காயித்த விரிச்சுட்டுட்டு வண்டியிலந்து நாலஞ்சி பொட்ணத்த எடுத்துப் பிரிச்சி வெச்சாம்பாரு ! எந்த சோத்துக்கடயில வாங்கனதோ! கறிச்சோத்துப் பொட்ணமாயிட்டயிருக்குது வட்ட வாகறயே நெய்யி மணக்குது. மூக்குல பருக்க வர தின்னுப்புட்டு எந்திரிச்சன். அன்னந்தினியும் வாயே பேசாமயிருந்தவன் " சரக்கு சாப்டுறியா" ன்னு ரெண்டு வெராந்தி பாட்லயும் எடுத்து மின்ன வெச்சான் ஏட்டு. அதயுஞ் சைசா மண்டயத்திருவி வாயில ஊத்திக்கிட்டன், வீக்கங்கண்ட வவுறு தூக்கங்கேட்டுது. அதோட அளவான போத, ஆடியாடி அலண்ட ஒடம்புக்கு தோதாயிருந்தது. குளுங்காத்துச் சிலுச்சிலுங்க, மேலுப்பசபசங்க எனக்கு ஏனா தொப்ளச்சுத்தி புரு புருங்குதே! அப்பிடியே கட்டயக் கீழச்சாச்சி கண்ண மூடனம்பாரு ஏட்டும் எம்மேல சாஞ்சான்.

சாவலு நல்ல பெருஞ்சாதி சாவலு. அணைய அணைய ஒணக்கையா இருந்திச்சி. இப்பிடியே கதய ஒப்பேத்தி ஓட்டி, கூத்த கொண்டயத்துக்கு கொண்டு போயி மங்களம் பாடிப்புடலாமின்னு நாங்கெனாக் கண்ட மாயத்துல , மின்னாம மொழங்காம எண்ணத்துல இடி எறங்குதே!ஏப்பா உரியேறன சாத்ரீகப் பூன தயிரிருக்க சட்டிய எத்தன நேரம் நக்கும்? வெறியெடுத்து ஆவு ஆவுன்னு என்ற அடிமடிய தொழனவனுக்கு ஆட்டு ஒதப்பையாட்டம் எம்புடுக்குச் சிக்கும்பிடி அவம் மொவற நறவல்ல கையுட்டாப்ல சுண்டிப்போச்சி. "த்தூ"ன்னு காறித்துப்புனவங் காது காதா அப்பறாஞ் சடையாம. ஓரடியா? ரெண்டடியா ? " அய்யோ சாமி நானு அறியாத பித்தியில தெரியாம தப்பு பண்டிப்புட்டன். வுட்று சாமி நானு ஓடிப்பொழச்சிக்கிறன்னு அழுது பரிதவிங்கறன். அவங்காலப் புடிச்சிக் கெஞ்சறன். அவங்காய காதறந்த மேல ஓக்க ! அதயெதயுங்காதுல போட்டுக்கவேயில்ல. " மி யெம்மா பூக்குல தெங்கோ! ஓரி திக்கர நீ பணியின காமிச்சேவு"ன்னு மயித்த வளச்சிப்போட்டு சும்மா குப்பு குப்புன்னு குப்பி , என்னய மிங்கட்டு பிங்கட்டு கட்டி சீப்பு வண்டியீல தூக்கிப்போட்டு கண்ணாடியச் சாத்தி , கதவுசந்துல எங்காலு ரெண்டையும் வெளியே இழுத்து , ஓரட்டாங்கையில புடுச்சிக்கிட்டான்.

சோத்தாங்கையில அடிப்போன பூணோட அத்தச் சோட்டு குண்டாந்தடிய புடிச்சி, எல்லப்பன்னிய குத்தறாப்போல என்ற உசுரு நெலயில ஒரேக்குத்து! ஆண்டவங்குடுத்த அந்த ஆதார பொருளு கொழண்டு கலங்கிப்போச்சு. இன்னும் நாலீடுப் போட்டு அப்பையே அடிச்சிக்கொன்னிருந்தா ஆயிருக்கும் வத வதயான வதப்பண்டி , வாய்க்கா கரையில வாரிச் சூறையிட்டுப்புட்டு போயிட்டான்.

ராவெல்லாம் எங்க கெடந்தன் ? எப்பிடி பூதப்பாடி வந்தன் ? ஆருக்கொண்டாந்து ஆயாவூட்ல போட்டது ஒரு பிருவுந்தெரில. நாம் பொழச்சது மாதா புண்ணியம் ! மறுசென்மம். " பொறப்படு ஆயா வேலூருக்கு, போயி டாக்டரிண்ட கைப்போட்டுக்கிட்ட்டு வந்தரலாமின்னு" கண்ணு முழிச்சதும் மொதக்காரியமா ஆயாளக்கூப்பிட்டு சொன்னேன்.

அருஞ் சொற்பொருள்கள்:
தெரட்டி = பூப்புனித நீராட்டு விழா
சொணையான் = சம்பளம்
வரிக்கல = வாங்கல
ஆட்டத்துக்கு = கரக்காட்டத்துக்கு
அலங்காரம் =தெருக்கூத்து
கூத =போதை
பொட்டைங்க = திருநங்கைகள்
தாயம்மா = திருநங்கைகளுக்கான உறுப்பு நீக்கும் சடங்கு செய்பவர்.
கைபோடுதல் = உறுப்பு நீக்கும் நிகழ்வு
கோத்தி = ஆண் உறுப்பு நீக்காமலே பெண் உணர்வுடன் வாழ்பவர்
ஆயாமாருங்க = திருநங்கைகளிடையே வழங்கும் உறவுமுறை
சேலாமாருங்க= மகள் உறவுமுறையினர்
பிந்தாயம்மா= திருநங்கைகளுக்கான உறுப்பு நீக்கும் சடங்கின் போது சம்பந்தப்பட்ட திருநங்கையை பிடித்துக்கொள்பவர்
மானி/சுனி/புடுக்கு/குஞ்சி = ஆண்குறி
கப்பு போடுதல் = முகத்தில் உள்ள முடிகளை அகற்றுதல்
ஜோக்கேத்தி = பாவடை,சேலை முதலான பெண்கள் தரிக்கும் உடைகளையும் தோடு, மூக்குத்தி, கொலுசு, மெட்டி முதலான ஆபரணங்களையும் அணிவித்தல்
மோரி = குளிக்கும் அறை
காவு = புண்
ரோனு = லோன் ( வங்கிக்கடன்)
பாணி = நிகழ்ச்சி தோல்வி
தானவதி மழை = பங்குனி மாதத்தில் பொழியும் உத்திரட்டாதி மழைக்கும் ரேவதி மழைக்கும் இடையே எதிர்பாரது பெய்யும் மழை
சாரி வேசம் = பெண்வேடம்
வக்ரகேது பலி = ஒரு சிவபுராணக்கிளைக்கதை
சிப்பம் = பாக்கெட் சாராயம்
தெங்கிற = புணர்கிற

Sunday, September 07, 2008

எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது

கடவுளைக் காண விரும்பும் அறிவியலும், காணாமல் போகக் கூடிய பிரபஞ்சமும்

-ராஜன் குறை

திர்வரும் செப்டம்பர் 10ம் தேதி ஓர் புதிய அறிவியல் பரிசோதனை தொடங்கவிருக்கிறது. அறிவியல் என்றால் மனிதன் எதையும் அறிந்துகொள்ளாமல் விடக்கூடாதுதானே. இந்த பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது! எல்லையில்லாமல்!அது எப்படி துவங்கியிருக்கும் என யோசிக்க வேண்டாமா? கடவுள் படைத்தார் என்றோ, அது தான்தோன்றி என்றோ சொல்லிவிட்டு போக முடியுமா? எண்பது ஆண்டுகளாக ஆற்றலைப் பற்றிய புரிதல் வளர்ந்ததையொட்டி, Big Bang Theory என்ற ஆதி வெடிப்பை பற்றிய கோட்பாடுகள் உருவாயின. இதை முழுதும் புரிந்துகொள்ள அணு ஆற்றல் பருப்பொருளாக மாறுவதன் மர்மத்தை அறிய வேண்டும். அப்போதுதான் அனைத்தையும் பற்றிய கோட்பாட்டை (Theory of Everything) உருவாக்கமுடியும்.

ஜெனிவாவிற்கு அருகே, பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு 300 அடி ஆழத்தில் 27 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கத்தில் LHC (Large Hydron Collider) என்ற பிரம்மாண்டமான ஆய்வுக்கூடத்தில் அறிவியலின் அறியப்பட்ட எல்லைகளைக் கடக்கும் பரிசோதனை ஒன்று இன்னும் சில நாட்களில் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கவிருக்கிறது. இரு திசைகளிலிருந்து அணுக்கதிர்கள் அச்சுரங்கத்தினுள்ளே செலுத்தப்படப்போகின்றன. அவை சந்திக்கும்போது...?













(ரோபோ படத்திற்கான செட் இல்லை: இதுதான் LHC )








(1290 டன் எடையுள்ள 'அணுத்துகள்மானி'-சும்மா நான் வைக்கும் பெயர்- இத்துளையின் வழியாக 100 மீட்டர் இறக்கப்பட்டது. (இதுபோன்ற பிரம்மாண்ட தகவல்களை வலைத்தளங்களில் தவறாமல் படித்து மகிழுங்கள். Google இல் போய் Large Hydron Collider என்று போட்டால் போதும். CERN என்று போட்டால் இந்த அமைப்பு பற்றி மேலும் தகவல்கள் கிடைக்கும்) ஒருமுறை அல்ல, ஆயிரக்கணக்கான முறை அணுத்துகள்களை (particles) பல விதமான வேகங்களில், சூழல்களில் மோதவிடுவதுதான் இந்த ஆராய்ச்சி என புரிந்து கொள்கிறேன்.)

ஒரு ஆராய்ச்சி அல்ல; ஆறு பெயர்களில் பல ஆய்வுகள் அணுத்துகள் மோதல்களின் மூலம் நடத்தப்படப் போகின்றன. இதன் பலன்களுள் ஒன்று என்னவென்றால் ஆற்றலிலிருந்து பருப்பொருள் உருவாகக் காரணமாக இருக்கலாம் என கருத்தளவில் ஊகிக்கப்பட்டுள்ள ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்ற சமாச்சாரத்தைக் காட்டித்தரலாம் எனக் கூறப்படுகிறது. இதை கடவுள் துகள் (God Particle) எனக் குறிப்பிடுகின்றனர். ஹிக்ஸ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றாலும், அறிவியலாளர்களில் பலர் இறைவனை அணுக விழைபவர்கள். இத்திட்டத்தின் அறிவியலாளர் ஒருவர், Jos Engelen, “கடவுளுக்கு மிக அருகே மனிதன் செல்லப்போகும் தருணமிது” எனக்குறிப்பிட்டுள்ளார்.















(கடவுள் துகள் உருவாகும் சாத்தியத்தை குறிக்கும் போலி நிகழ்வு “simulated event”)

இப்பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்பதை அணுகிச்சென்று புரிந்துகொள்வதே இப்பரிசோதனையின் நோக்கம். எதிலிருந்து என்றோ, எதனால் என்றோ அறிவியலால் கேட்க முடியுமா? எனவே கடவுளை நெருங்குவதாக நினைக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அணுத்துகள் மோதும் பரிசோதனை புதியது அல்ல. அதன் பரிமாணங்கள் இம்முறை பிரம்மாண்டமாயிருக்கின்றன. Anti-matter எனப்படும் எதிர்பொருள் எப்படி இயங்குகிறது என்ற முக்கிய கேள்விக்கு பதில் தேடுகிறார்கள்.இந்த பரிசோதனைகள் எதைக்குறித்து என்று விளக்கும் விதமாக LHC அறிவியலாளர் ஒருவர் ஒரு ராப் பாடல் படம் எடுத்திருக்கிறார். விஞ்ஞானிகள் ஆடிப்பாடி விளக்கும் இந்த அற்புதமான பாடலை அவசியம் கேளுங்கள். நாளும் கோடிக்கணக்கானவர்கள் youtube இல் கேட்டு மகிழும் இதை நாமனைவரும் உடனே கேட்க வேண்டிய தேவையும் உரிமையும் கடமையும் இருக்கிறது. ஒருமுறை கேட்டுவிட்டு மேலே படியுங்கள். http://link.brightcove.com/services/link/bcpid1488655367/bclid1453516501/bctid1753815421

ஆனால் இந்த அறிவியலாளர்கள்களும் மற்ற துறையினர் போலத்தான். ஒருவர் செய்வதை மற்றவர் எதிர்ப்பது. LHC-ஐ எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? LHC அணுத்துகள் மோதல்களில் கருந்துளைகள் உருவாகும் என்கிறார்கள். இந்த கருந்துளைகளுக்கு ஒரு கெட்ட பழக்கம். அது சில சமயம் உலகத்தையே அல்லது உலகங்கள் அடங்கிய பிரபஞ்சத்தையே விழுங்கிவிடும். (அதாவது பூமியின் சுற்று வட்டாரம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.) இப்பரிசோதனையை நிறுத்தக்கோரி வழக்கு தொடர்ந்த ஒட்டோ ரோஸ்லர் என்ற ஜெர்மானிய பேராசிரியர் "ஒரு ஓடுகாலி கருந்துளை நான்கு ஆண்டுகளில் வளர்ந்து உலகை விழுங்கிவிடும்" என்கிறார்.

இதற்கு LHC நடத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்? சிறிய கருந்துளைகள் நிறைய உருவாகும்; ஆனால் அவை உடனே அழிந்துவிடும் என்கிறார்கள். இயற்கையில் நடக்காதது எதையும் நாங்கள் செய்யவில்லை. ஆகவே உலகத்திற்கும் அதன் “உடனடி பிரபஞ்சத்திற்கும்” எதுவும் ஆபத்தில்லை என்கிறார்கள். (உடனடி பிரபஞ்சம் - இச்சொற்றொடர் என்னுடையது; கருந்துளை எவ்வளவு பெரிதாகும் எனத்தெளிவாகத் தெரியாததால்) வழக்குகளினடிப்படையில் தடையுத்திரவு எதுவும் பிறப்பிக்கிப்படவில்லை என்றாலும் மனிதயுரிமை அடிப்படையில் போடப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கு எழுப்பும் பிரச்சினை சுவாரசியமானது.

இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட அரசாங்கங்கள் CERN அமைப்பில் பார்வையாளர் தகுதி வகிக்கின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் இதன் உறுப்பினராக உள்ளன. இப்பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் உலக விஞ்ஞானிகள் பகிர்ந்துகொள்ள பிரம்மாண்டமான தகவல் பகிரும் ஆற்றல் கொண்ட GRID என்ற கணனி மற்றும் optical fibre தொடர்பமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பரிசோதனை அறிவியலின் விளிம்பில் நிகழ்வதால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை முற்றிலும் கணிக்க முடியாது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஏதுமறியா மக்களின் உயிரை பணயம் வைத்து இப்பரிசோதனையை செய்ய இந்த அரசாங்கங்களுக்கும், அறிவியல் நிறுவனத்திற்கும் உரிமை இருக்கிறதா என இந்த வழக்கு கேட்கிறது.

உலகில் வெகுஜன இயக்கங்கள் எதுவும் இந்த பரிசோதனைக்கு இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை (குறைந்த பட்சம் வலைத்தளங்களில் இன்னும் நான் பார்க்கவில்லை) பெரும்பான்மையோருக்கு இன்னும் தகவலே தெரிந்திருக்காது. இந்நிலையில் மக்களின் ஒப்புதலை பெறாமல் இத்தகையை பரிசோதனைகளில் ஈடுபடுவது மனிதர்களின் அடிப்படை உயிர்வாழும் உரிமை மீறல் என்கிறது ஹவாயில் போடப்பட்டுள்ள வழக்கு.

மக்களின் ஒப்புதலை பெறலாம் என்று வைத்துக்கொண்டால்கூட, கூடவே அழியக்கூடிய விலங்கினங்கள், தாவரங்கள் இவற்றின் ஒப்புதலை எப்படிப் பெறுவது என்று ஒருவர் கேட்கலாம். எந்த அறத்தின் அடிப்படையில் இதுபோன்ற துணிகர செயல்களில் அனைத்துயிர்களும் ஈடுபடுத்தப்படுகின்றன? இதை ஹவாய் நீதிமன்றம் தீர்மானிக்க முடியுமா? இதுபோன்ற வழக்குகள் முடிவுக்கு வர பல்லாண்டுகள் ஆகும். இன்னும் சில நாட்களில் தொடங்கும் இப்பரிசோதனையும் பல்லாண்டுகள் நடக்கலாம். திடீரென்று ஒருநாள் பிரபஞ்சத்தைக் காணவில்லையென்றால் தேடாதீர்கள் என்று மட்டும் சொல்லத்தோன்றுகிறது. “இந்த எரியும் பிரபஞ்சம் என் தலையில் சுழல்கிறது; அதை எங்கே வைப்பது எனக்குப் புரியவில்லை” என்ற பிரக்ஞை பத்திரிகையில் படித்த சதிகுமார் என்ற பஞ்சாபிக் கவிஞரின் வரி நினைவுக்கு வருகிறது.