Monday, December 17, 2007

Para has expired‏

Dear Friends,

We deeply regret to inform you that our great friend and comrade Para has passed away. He expired in Berlin yesterday night on the 16th of December around 11.30 p.m. on his 73rd Birthday.

For funeral arrangements and other related information kindly contact:
Sivarajan: + 49 711 441 17 69
Suseendran: + 49 178 938 18 11

Tuesday, December 11, 2007

இரண்டாவது தலித் மாநாடு - லண்டன்

லங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் 2007, ஒக்டோபர் 20-21 களில் பாரிஸில் நடாத்தப்பட்ட முதலாவது தலித் மாநாட்டின் தொடர்ச்சியாக இலங்கை தலித் மக்களின் எதிர்கால சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றம் கருதிய வேலைத்திட்டங்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் இரண்டாவது தலித் மாநாடு 2008, பெப்ரவரி 16 - 17 களில் லண்டனில் நடத்தப்படவுள்ளது.

விபரங்களுக்கு…..

Sunday, December 02, 2007

தலித் மாநாடு : கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்

ஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிந்தது.தமிழினம், தமிழ்த் தேசியம், தமிழன்... இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது? நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன்? தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ் படிக்க விட்டீர்களா? உங்கள் தமிழ்த் தேசியத்தில் எங்களுக்கான இடம் எங்கே இருக்கிறது? .... கட்டுரையை முழுமையாக http://www.satiyakadatasi.com/ ல் படியுங்கள்

Monday, October 29, 2007

தலித் மாநாடு: பின்குறிப்புகள்

-ஷோபாசக்தி

பிரான்ஸில் நடந்து முடிந்த தலித் மாநாட்டில், எழுபத்தெட்டுப் பேர்கள் கலந்துகொண்டார்கள் என்கிறது 'தூ' இணையத்தளம். எனக்கென்னவோ அதற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருப்பார்கள் என்றே மதிப்பிடத் தோன்றுகிறது. இந்தியா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து மட்டும் நாற்பது பேர்கள் வரையில் கலந்துகொண்டார்கள். இருநாள் நிகழ்வுகளில் தோழர்கள் வருவதும் போவதுமாக இருந்ததாலும் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியேயும் மாறி மாறித் தோழர்கள் குழுமி நின்று பேசிக்கொண்டிருந்ததாலும் 'தூ' இணையத்தால் தொகையைத் துல்லியமாகக் கணக்கிட முடியாமல் போயிருக்கலாம். வந்தவர்கள் 78 பேர்கள்தான் என்று வைத்துக்கொண்டாலும் பாரிஸில் நான்கு நாட்களாகத் தொடர்ந்து நிகழ்ந்த தொடருந்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தால் எற்பட்ட நெருக்கடி, 'தலித் மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் புலியெதிர்ப்பாளர்களாக அடையாளம் காணப்படுவீர்கள்' என்ற மிரட்டல்கள், ஆதிக்கசாதி எழுத்தாளர்களின் உள்குத்து வேலைகள் எல்லாவற்றையும் மீறி இவ்வளவு தொகைத் தோழர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது நிரம்பவே உற்சாகத்தையளிக்கிறது.

மாநாட்டில் கலந்து கொள்வதாயிருந்த சில பேராளர்கள் வந்திராத போதிலும் மாநாடு தொய்வின்றியும் எந்தவிதக் ‘கரைச்சலின்றியும்’ நடந்து முடிந்தது. இரண்டாம் நாள் அமர்வில் காலையிலிருந்து மதியம்வரை அனைவருக்கும் கருத்துரைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அநேகமாக மாநாட்டில் கலந்துகொண்ட குழந்தைகளைத் தவிர மற்றெல்லோருமே கருத்துரைக்க விரும்பியதால் மாநாட்டு ஏற்பாட்டாளர்களால் ஓரிரு நிமிடங்களையே கருத்துரையாளர்களிற்கு வழங்கமுடிந்தது.

மாநாடு நடத்துவதற்கு 'கார்ஜ் லே கோனேஸ்' நகரசபையின் இலவச மண்டபமே முதலில் ஒழுங்கு செய்யப்பட்டு விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டபோதிலும், கடைசி நேரத்தில் அந்த மண்டபத்தைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் தனியார் மண்டபம் ஒன்றில் மாநாடு நடந்தது. மண்டப வாடகை, சில பேராளர்களிற்கான பயணக்கட்டணம், மாநாட்டில் உணவு வழங்கல் மற்றும் சில்லறைச் செலவுகள் சேர்த்து மூவாயிரம் ஈரோக்கள் வரை செலவானதாகவும் அச்செலவை மாநாட்டு அரங்கில் சேகரிக்கப்பட்ட தொகையையும் பாரிஸில் சில தோழர்களிடம் சேகரிக்கப்பட்ட பணத்தையும் மற்றும் தலித் சமூக மேப்பாட்டு முன்னணித் தோழர்களது கைக்காசாலும் ஈடுசெய்ததாக மாநாட்டு அமைப்பாளர்களில் ஒருவரான தேவதாசன் என்னிடம் தெரிவித்தார். முழுமையான மாநாட்டு வரவு செலவுக் கணக்கு அடுத்த 'வடு' இதழிலும் தொடர்ந்து 'தூ', 'சத்தியக்கடதாசி' போன்ற இணையத்தளங்களிலும் வெளியிடப்படும்.

***
மாநாடு நடைபெறுவதற்குச் சில வாரங்களிற்கு முன்பிருந்தே சபேசன், சாத்திரி போன்றவர்கள் இணையத்தில் தங்களது எதிர்ப் பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டார்கள். அவர்கள் இந்த மாநாடு ஸ்ரீலங்கா அரசின் நிதியுதவியோடும் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டிலும் நடக்கவிருக்கிறது என்றெல்லாம் ஓயாமல் எழுதினார்கள். அவர்களின் துப்பறியும் ஜெர்னலிஸத்தில் மயங்கிய சில பெயரிலிப் பின்னூட்ட மன்னர்களும் "தலித் மாநாட்டை அம்பலப்படுத்திய சபேசனுக்கும் சாத்திரிக்கும் நன்றி" என்றார்கள்.

ஆனால் தலித் மாநாடு இலங்கை அரசிடமிருந்து நிதியுதவி பெற்றது என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவர்கள் எழுதினார்கள் என்று கேட்டால் சபேசனும் சாத்திரியும் எழுதியதுதான் ஆதாரம் என்கிறார்கள். அவதூறுகளைக் கணனியின் முன்னாலிருந்து உருவாக்குவது அறமற்ற யாவருக்கும் எளிதான செயல். தலித் மாநாடு இலங்கை அரசினதும் டக்ளஸ் தேவானாந்தாவினதும் ஏற்பாட்டிலேயே நடைபெற்றது என்பதற்கான ஆதாரங்களை சபேசனாலும் சாத்திரியாலும் வெளியிட முடியுமா என்று எழுத்து அறத்தின் பெயரால் கேட்கிறேன். அப்படி அவர்களால் ஆதாரங்களை வெளியிட முடியாத பட்சத்தில் அவர்கள் அவ்வாறு எழுதியது வெறும் ஊகம் அல்லது அவதூறு என்பதைத் தவிர வேறென்ன?

சபேசனுக்கும் சாத்திரிக்கும் நேர்மையிருந்தால் அவர்கள் தட்டிக்கழிக்க முயற்சிக்காமல் இந்தக் கேள்வியை எதிர்கொண்டு பதிலளிக்க வேண்டும். அவர்கள் தலித் மாநாடு, இலங்கை அரசிடமிருந்து நிதி பெற்றதை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் தலித் மாநாட்டிற்கும் 'தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினருக்கும்' எதிராகச் சத்தியக்கடதாசி முற்றுமுழுதான எதிர்நிலையை எடுக்கும் என்று உறுதி கூறுகிறேன். இப்போது பந்து சபேசனினதும் சாத்திரியினதும் கால்களிலிருக்கிறது. அவர்களின் நேர்மை அவர்கள் சொல்லப்போகும் பதிலில் தங்கியிருக்கிறது.

***

தலித் மாநாட்டில் கருத்துரைத்தவர்களின் கருத்துகளைத் தொகுத்து http://www.thesamnet.net/ வெளியிட்டிருந்தது. மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகளிலிருந்து சில துண்டுகளை மட்டும் தொகுக்கும்போது சில விடுபடல்கள் தவிர்க்க முடியாததே. பேச்சுக்களைச் சுருக்கும்போது சற்றுப் பிசகினாலும் ஒருவர் பேசியதற்கு தலைகீழான அர்த்தங்கள் தொனிப்பதற்கும் சாத்தியங்களுள்ளன. மறுபுறம் உரைகளை மாநாடு நடந்த மறுநாளே முழுமையாக வெளியிடுவது 'தேசம்' போன்ற ஓரிருவரின் உழைப்பில் மட்டுமே தங்கியிருக்கும் சிறியதொரு இணையத்தளத்தின் சக்திக்கு அப்பாற்பட்டதே. மாநாட்டில் பேசியவர்களின் உரைகள் தவறாகத் தேசத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதைத் தேசம் வேண்டுமென்றே செய்வதாக நம்ப நான் தயாரில்லை. இது பத்திரிகை, இணைய நடைமுறைச் சிக்கல்களால் உருவாவது என்பதுதான் எனது கருத்து.

தேசத்தில் தனது கருத்துக்கள் என வெளியிடப்பட்டவற்றில் தனக்கு உடன்பாடில்லை என மனோ எழுதிய பின்னூட்டத்தைத் தேசம் பிரசுரித்திருக்கிறது. அதில் தான் மாநாட்டில் பேசியது எதுவென்பதையும் மனோ விபரமாகவே எழுதியிருக்கிறார், தீர்ந்தது சிக்கல்! ரயாகரனும் தேசத்தில் வெளிவந்த பதிவோடு தனக்கு உடன்பாடில்லை எனத் தேசத்திற்கு எழுதியிருந்தார். தவறிருந்தால் திருத்திக்கொள்ளச் சம்மதம் என்றார் 'தேசம்' ஆசிரியர் ஜெயபாலன், முடிந்தது பிரச்சனை. ரயாகரனும் தான் மாநாட்டில் பேசிய கருத்துகளைத் தனது இணையத்திலேயே வெளியிட்டிருக்கிறார்.

ஆனால் தமிழச்சியின் பிரச்சினை சற்று வித்தியாசமானது. "காறித்துப்பாமல் என்ன செய்வார்கள். வெளிநாட்டுக்கும் வந்து கோவில், தேங்காய் உடைப்பது என்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். என்னைப் பற்றி விடுதலைப் புலிகள் தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள்" எனத் தமிழச்சி பேசினார் எனத் 'தேசம்' பதிவு செய்திருந்தது. ஆனால் தனது உரையைத் 'தேசம்' இருட்டிப்புச் செய்துவிட்டதால் தேசத்தைக் கண்டிப்பதாகத் தனது வலைப்பதிவில் தமிழச்சி அறிவித்திருக்கிறார். தமிழச்சியின் உரையை மட்டுமல்ல வேறெவரது உரையையும் முழுயாகப் பதிவிடுவது உடனடிச் சாத்தியமல்ல என்பதைத் தமிழச்சியும் புரிந்துகொள்வார் என்றே நம்புகிறேன். 'இருட்டடிப்பு' என்பதெல்லாம் பாரதூரமான வார்த்தைப் பிரயோகம், ஒரு ஊடகத்தின் நேர்மையையை ஆட்டங்காண வைக்கும் சொல்லாடல்.

தமிழச்சி சொன்னவற்றை முழுமையாகத் 'தேசம்' வெளியிடவில்லை. ஆனால் அவர் சொல்லாத எதையும் 'தேசம்' வெளியிடவில்லை என்றே தமிழச்சி பேசும்போது அரங்கில் அமர்ந்திருந்தவன் என்ற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். தமிழச்சி ‘இயக்கம்’ என்று குறிப்பிட்டு மாநாட்டில் பேசியதை நான் உட்படப் பலரும் அவர் விடுதலைப் புலிகளைக் குறித்துப் பேசியதாகவே விளங்கிக்கொண்டோம். தேசத்திலும் அவ்வாறே வெளியாகியுள்ளது. தான் பேசிய கருத்துகளைத் தேசம் 'திரித்து' வெளியிட்டிருக்கிறது எனத் தமிழச்சி கருதினால் மாநாட்டில் என்ன பேசினார் என்பதைத் தமிழச்சி தனது வலைப்பதிவில் வெளியிட்டால் தீர்ந்தது சிக்கல். தேசமும் ஒரு தேவையில்லாத இருட்டடிப்புப் பழியிலிருந்து தப்பிக்கும். தமிழச்சியின் வலைப்பதிவில் வந்து ‘அப்போதே சொன்னோம் கேட்டியா?’ எனப் பாடம் நடத்தும் பின்னூட்ட மன்னர்களின் வாயையும் எளிதாகவே அடக்கிவிட முடியும்.

***
தலித் மாநாட்டிற்கு வீ. ஆனந்தசங்கரி, EPRLF ( ப.நா) செயலாளர் சிறீதரன் போன்றவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்கள். வாழ்த்துகளை வரவேற்போம்.

ஆனால் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலே யாழ் ஆதிக்கசாதியினரின் அரசியல் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடவில்லை. இரண்டு வருடங்களிற்கு முன்பு நடந்த 'ஸ்ருட்காட்' இலக்கியச் சந்திப்பில் ‘யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினையே கிடையாது’ என ஆனந்தசங்கரி சொன்னது இப்போதும் எனது காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் எழுச்சிக் காலத்தில் ஒப்புக்குத் தாங்களும் சமபந்திப் போசனங்களை ஏற்பாடு செய்த தமிழரசுக் கட்சியின் சுத்துமாத்து அரசியலின் இன்றைய தொடர்ச்சிதான் சங்கரியாரின் தலித் மாநாட்டிற்கான வாழ்த்து.

சாதியப் பிரச்சினையில் கூட்டணி, LTTE, PLOTE, TELO போன்ற அமைப்புகளுடன் நாம் EPRLFவை ஒப்பிட்டுப் பேசக்கூடாது. ஒப்பீட்டளவில் EPRLF தலித் மக்களிடம் தமது வேர்களைப் பதித்திருந்தார்கள். ஆனால் கே. டானியல் சொன்னது போல இவர்கள் எசமானையும் அடிமைகளையும் இனப்பிரச்சினை சுலோகத்தின் கீழ் ஒன்றிணைத்து இறுதியில் தமிழருக்கென மட்டுமே ஒரு தமிழ்ச் சோசலிஸ ஈழத்தை உருவாக்கி விடலாமென்றே முடிவு கட்டினர்கள்.

உண்மையில் புலிகளோ கூட்டணியோ ஈபிஆர்எல்எவ்வோ இன்று சாதியொழிப்புப் போரைக் கையிலெடுத்தால் எதற்காகப் புதிதாகத் தலித் இயக்கம் தொடங்க வேண்டும். மேற்சொன்ன அணிகள் தமது அரசியல் நலன்களிற்காக ஈழத்தின் பெரும்பான்மையினரும் அனைத்துத் தளங்களிலும் செல்வாக்குப் பெற்றிருப்பவர்களுமான ஆதிக்க சாதியினரைப் பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். இவர்களில் எவருக்காவது உண்மையில் சாதியொழிப்பில் அக்கறையிருந்தாற் கூட இவர்களின் பிற்போக்குவாதத் தமிழ்த் தேசியவாத வேலைத்திட்டம் சாதியொழிப்பைச் செயலாக்க இவர்களை அனுமதிக்காது. எனவேதான் 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' போன்றதொரு தனித்துவமான தலித் விடுதலை இயக்கத்தின் தேவையொன்று இப்போது உணரப்படுகிறது.

அந்தத் தனித்துவமான 'தலித் இயக்கம்' புலிகளின் பாஸிச அரசியல் ஆதரவுப் போக்கிற்குள் சிக்காமலிருப்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே இனவாத அரசின் கொடுமைகளை நியாயப்படுத்திக்கொண்டே இந்திய அரசையும் இலங்கை அரசையும் மாறிமாறி நக்கிக்கொண்டிருக்கும் 'தனிப்' புலியெதிர்ப்புப் போக்கிற்குள் சிக்காமலிருப்பதும் முக்கியமானது. இந்த நிலைப்பாட்டைத் தலித் அரசிலாளர்கள் பகிரங்கமாகத் திரும்பத் திரும்ப அறிவித்துக்கொண்டேயிருப்பதும் அவசியமானது. மரம் பழுக்க வெளவால் வரும்! நாம் தான் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்.

***
'மாநாட்டை நடத்தியவர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள்' என்று சிலர் இணையத்தளங்களில் ஓயாமல் கூக்குரலிடுகிறார்கள். போததற்குச் சிலர் வெளியான மாநாட்டு உரைகளிலிருந்து அசைக்க முடியாத எடுத்துக்காட்டுகளைக் காட்டித் தலித் அரசியலாளர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள் என்றும் நிறுவியிருக்கிறார்கள். இதற்கு எதற்கு இவர்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதுதான் எனக்கு உண்ணாண விளங்கவில்லை. நாங்கள்தான் பல வருடங்களாகவே "நாங்கள் அரசியலில் புலிகளின் சற்றேனும் விட்டுக்கொடுக்காத எதிரிகள்" என்று தமிழில் மட்டுமல்லாது பிரஞ்சு, ஆங்கிலம், சிங்களம், மலையாளம் எனப் பல பாஷைகளிலும் எழுதிவருகிறோமே! ஒளிவுமறைவில்லாமல் சொல்லி வருகிறோமே! சபேசனும் சாத்திரியும் லக்கிலுக்கும் எங்களைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் என்று சொல்லத் தேவையில்லை. நாங்களே பிரகடனப்படுத்துகிறோம்! ஆம் நாங்கள் புலிகளின் பாஸிச அரசியலை சமரசத்துக்கிடமில்லாமல் எதிர்ப்பவர்கள்தான். இடதுசாரிகளையும் இஸ்லாமியர்களையும் சமூகவிரோதிகள் எனப் பட்டங்கட்டித் தலித் இளைஞர்களையும் அப்பாவிச் சிங்களச் சகோதரர்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் பாலியல் தொழிலாளர்களையும் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த விடுதலைப் புலிகளின் கால்களை நீங்கள் வேண்டுமானால் நக்கிக் கிடவுங்கள். ஆனால் எங்களையும் நக்கச் சொல்ல உங்களுக்கு எந்த உரிமையுமில்லை.

புலிகளின் பாஸிச அரசியலுக்கு எதிராக நாங்கள் நியாயமான எதிர்ப்புக் குரல்களை எழுப்பும்போது அதை நேர்வழியில் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் புலிகளை எதிர்ப்பவர்களெல்லாம் அரசின் கைக்கூலிகள் என்றொரு சுலபமான பொய்யால் இந்தப் புலிவாலுகள் தங்கள் அரசியலை ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறார்களே தவிர இவர்களிடம் சொந்தமாக அரசியல் சரக்குமில்லை, தூ! ஒருதுளி நேர்மையுமில்லை.

தலித் மாநாட்டில் புலி எதிர்ப்பு அரசியல் பேசப்பட்டது என்கிறீர்களே, அன்று மாநாட்டில் சிறிலங்கா அரசின் இனப் படுகொலைகளையோ தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையோ நியாயப்படுத்தி எவராவது பேசினோமா? புலிகளை எதிர்ப்பவர்களெல்லாம் அரசின் கைக்கூலிகள், ஒட்டுக்குழுக்கள் என்பதெல்லாம் எந்த அரசியல் தருக்கத்துக்குள் அடங்குகிறது என்று புரியவேயில்லை. பெரியார், சார்த்தர், தெரிதா, அம்பேத்கர், மனிதவுரிமை என்றெல்லாம் நுண் அரசியல் பேசிக்கொண்டிருக்கும் அறிவாளர்கள் கூட அப்பாவி மக்களைப் புலிகள் கொல்வதைப் பார்த்துக்கொண்டு, அட அச்சத்தில் மவுனமாயிருந்தாலும் பரவாயில்லை, மாறாகக் கொலைகாரர்களை ஆதரிக்கிறீர்களே... நீங்கள்தான் ஈழத் தமிழ் மக்களின் முதல் எதிரிகள். புலிகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் இரத்தப்பழி உங்கள் கைகளிலும் கறையாயிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

***
புலி எதிர்ப்பு அரசியலைச் செய்யத் தலித் அரசியலை லேபிளாக உபயோகிக்கிறார்கள் என்றும் தேசிய இனப்பிரச்சினை அரசியலில், சாதிய அரசியலை கிளப்புவது, தேசியப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில்தான் என்றும் வெள்ளாளத்தனமான குற்றச்சாட்டுகளும் தலித் அரசியலாளர்கள் மீது வைக்கப்படுகின்றன.

இவையொன்றும் புதிய குற்றச்சாட்டுகள் கிடையாது. அறுபது வருடங்களிற்கு முன்பு சிறுபான்மைத் தமிழர் மகாசபையும், நாற்பது ஆண்டுகளிற்கு முன்பு தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் சாதி ஒழிப்புப் போராட்டங்களை முன்னெடுத்தபோதும் இதே வெறுக்கத்தக்க குற்றச்சாட்டைத் தமிழ்த் தேசியவாதிகள் சாதியொழிப்புப் போராளிகளிற்கு எதிராகக் கிளப்பினார்கள். ஜீ.ஜீ. பொன்னம்பலமும், தளபதி அமிர்தலிங்கமும், அடங்காத்தமிழர் சுந்தரலிங்கமும் தமிழ்த் தேசியம், தமிழர் ஒற்றுமையென முழக்கமிட்டவாறே சாதியத்தைப் பாதுகாத்தார்கள் என்பதை வரலாறு குறித்துத்தான் வைத்திருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்றார் ஜீ.ஜீ.பொன்னம்பலம். சங்கானைப் போராட்டத்தின்போது ‘சங்கானை ஷங்காயாக மாறிவிட்டது’ எனப் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டார் அமிர்தலிங்கம். மாவட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டத்தின்போது தாழ்த்தப்பட்டவர்களை கோயிலினுள் விடமாட்டேனென்று கையில் துப்பாக்கியோடு ஆலய வாசலை மறித்து நின்றார் சுந்தரலிங்கம்.

நாங்கள் சாதிய அரசியலை முன்னிறுத்துவது கிடையாது. நாங்கள் சாதிகளை முற்றுமுழுதாக ஒழிக்கவேண்டுமென்று சாதியொழிப்பு அரசியலைத்தான் முன்னிறுத்தி வருகின்றோம். சாதியொழிப்புக் குரல்கள்தான் புதிதாகத் தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த வேண்டுமென்றில்லை. ஏனெனில் தமிழர்கள் ஏற்கனவே பல நூற்றாண்டுகளாகச் சாதியால் திட்டவட்டமாகப் பிளவுண்டுதான் கிடக்கிறார்கள். எனவே சாதியொழிப்புத்தான் தேசிய இன அய்க்கியத்திற்கு முன்நிபந்தனையாக அமையும். எனவே சாதியொழிப்புக் குரல்கள் தேசியப் போரட்டத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு ஆதிக்கசாதிச் சாதிப்பற்றை மறைப்பதற்கான தந்திரங்களே தவிர வேறல்ல.

ஈழத்தில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற ஆதிக்கசாதியினரின் பொய்களுக்குப் பின்னாலிருப்பது ஈழத்தில் சாதியத்திற்கு எதிரான போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது என்ற உண்மைதான். ஈழத்தில் தொடரும் சாதியக் கசடுகளை பல்வேறு அரசியல் சக்திகளும் எழுத்தாளர்களும் சமூக அக்கறையாளர்களும் ஒட்டுமொத்த தலித் சமூகமும் சாடிக்கொண்டுதானிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள சிவா சின்னப்பொடி போன்றவர்கள்கூட ஈழத்திலும் புகலிடத்திலும் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்துத் தீவிரமாகப் பேசிவருகிறார்கள். சாதியிருக்கிறதாம், ஆனால் அதை எதிர்த்துப் பேசக்கூடாதாம், சாதியொழிப்பு அரசியலை முன்நிறுத்தக்கூடாதாம் என்றால் இந்தப் பேச்சில் ஏதாவது யோக்கியமிருக்கிறதா?

தலித் அரசியல் இந்தியாவிலிருந்து இறக்குமதியானது அது ஈழத்திற்குப் பொருந்தாது என்கிறார்கள். அந்நிய நாட்டிலிருந்து வந்ததாலேயே ஒரு கோட்பாடு நிராகரிப்பிற்கு உரியதாகிவிடுமா? இவர்கள் இப்போது கோரும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை இவர்கள் என்ன வல்வெட்டித்துறையிலா கண்டுபிடித்தார்கள்?

ஈழத்தமிழர்களின் சனத்தொகையில் முப்பது விழுக்காடுகளுக்கும் அதிகமான தலித்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்த 2007வரை அறுபது வருடங்களில் முன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்தானே வரமுடிந்தது. ஆனால் விகிதாசாரப்படி இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தலித் எம்பிக்கள் அல்லவா பாராளுமன்றிற்குச் சென்றிருக்க வேண்டும். எத்தனை தலித்கள் துணைவேந்தர்களாகவும் நீதிபதிகளாகவும் கல்லூரி அதிபராகவுமிருக்கிறார்கள்? இருந்த ஒருவரையும் புலிகள் சுட்டுக்கொன்றுவிட்டார்களே! இன்றுவரை யாழ்ப்பாணத்தில் நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட கோயில்கள் தலித்களுக்குத் திறக்கப்படவில்லையென புதிய ஜனநாயகக் கட்சியின் ‘புதியபூமி’ பத்திரிகை ஆதாரத்துடன் கட்டுரை வெளியிடுகிறது. நான் இதைச் சுட்டிக்காட்டினால் “நூற்றைம்பது கோயில்கள் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறக்கப்டாமலிருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் யாழ் மக்களில் பெரும்பாலானோர் இராணுவத்தின் அனுமதியில்லாமல் ஆலயங்களிற்குள் போகமுடியாமலிருக்கிறார்கள்” என்று ‘தீராநதி’ இதழில் எனக்கு மறுத்தான் விடுகிறார் தோழர் யதீந்திரா. தமிழனைத் தமிழனே சாதியத்தின் பேரால் ஒடுக்குகிறான் என்று நான் சொன்னால் சிங்களவனும்தானே ஒடுக்குகிறான் என்று பேசுவது அறமாகுமா? அதையும் பேசுங்கள்! இதையும் பேசுங்கள்! என்கிறேன் நான்.அதைவிடுத்து தேசிய இனப்பிரச்சினையை முன்னிறுத்திச் சாதிய ஒடுக்கமுறையை கண்டுகொள்ளாமலிருப்பது என்ன நியாயம்!

இன்னும் சில ஆதிக்கசாதி அறிவுஜீவிகள் ஒரு ஆறுதல் திட்டத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக்கு முன்மொழிகிறார்கள். அதாவது தமிழீழம் பிடிக்கும் வரை அமைதிகாத்தால் அவர்கள் பிற்பாடு சாதியத்ததை ஒழிக்க வழி செய்வார்களாம். ஏதோ ஈழத்துச் சமூக அசைவியக்கமே இப்போது நின்று போயிருப்பது போலவும் தமிழீழம் கிடைத்த பின்புதான் அது மறுபடியும் அசையும் என்பது போலவுமிருக்கின்றன இவர்களின் சாட்டுகள். தமிழீழம் கிடைக்கும் வரை யாரும் கலியாணம் கட்டாமல் இருக்கிறீர்களா? பிள்ளை பெறாமல்தான் விட்டீர்களா? பள்ளிக்குப் படிக்கப் போகவில்லையா? பல்கலைக் கழகங்களில் பட்டம் பெறவிலையா? கோயில் திருவிழாக்கள் செய்யவில்லையா? தலைவரின் அய்ம்பதாவது பிறந்தநாளுக்கு அய்ம்பது கிலோ கேக் வெட்டவில்லையா? அய்ம்பத்தியரண்டாவது பிறந்தநாளுக்கு அய்ம்பத்தியிரண்டு பானைகளில் பொங்கவில்லையா? இவையெல்லாம் கோலாகலமாய் நடக்குமாம். ஆனால் தலித்துகள் மட்டும் சாதியிழிவைச் சுமந்துகொண்டு தமிழீழம் கிடைக்கும் வரைக்கும் காத்திருக்கவேண்டுமாம்.

தமிழ்த் தேசியத்தின் ஆயுதப் போராட்டத்திற்கு முப்பதுவருட வரலாறுதான். ஆனால் ஈழத்தில் சாதியொழிப்பு ஆயுதப் போராட்டத்திற்கு அறுபதுவருட வரலாறிருக்கிறது.

***
புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சாதிரீதியான குடிமைச் சேவகத்தை ஒழித்திருப்பதாயும் சாதியைச் சொல்லி இழிவு செய்தால் தண்டனைகளை வழங்குவதாகவும் கேள்விப்படுகிறேன். புலிகள் இந்தச் சீர்திருத்தங்களை செம்மையாக நடைமுறைப்படுத்துவது உண்மையானால் இந்த விடயத்தில் நான் முழுமனதோடு புலிகளை ஆதரிக்கிறேன். ஆனால் சாதியொழிப்பு என்பது வெறும் சீர்திருத்தங்களால் சாத்தியப்படுவதில்லை. அது இன்றைய தலித் அரசியலின் புரிதலின்படி இடஒதுக்கீடுகள், தனிவாக்காளர் தொகுதிகள் போன்ற பல்வேறு உரிமைகளை வெற்றிகொள்வதின் மூலம் நகர்ந்து சாதியத்தைக் காப்பாற்றும் இந்து மதத்தை வேரோடு கில்லியெறிவதின் முலம்தான் சாத்தியப்படும்.

சாதியத்தின் வேரையே கில்லிப்போடும் இந்த வேலைத்திட்டத்தை விடுதலைப்புலிகளோ அல்லது ஈபிஆர்எல்எவ்வோ அல்லது வேறெந்த அமைப்போ ஏற்றுக்கொண்டால் நடைமுறைப்படுத்தினால் நாங்கள் எதற்காகத் தனியாத் தலித் அரசியலைப் பேசவேண்டும்? வெறும் சீர்திருத்தங்களைக் காட்டித் தலித் மக்களை ஏமாற்றுவதைத் தலித் அரசியல் அனுமதிக்காது. ஈழத்தில் இருபதாம் நூற்றாண்டு சாதியச் சீர்திருத்தங்களின் காலமாயிருந்தது. ஆனால் இந்த நூற்றாண்டு சாதியொழிப்பு நூற்றாண்டாயிருக்கட்டும்.

இந்துமத ஒழிப்பு, தலித்துகளிற்கான சிறப்பு இடஒதுக்கீடுகள், தனி வாக்காளர் தொகுதிகள் ஆகிய இலக்குகளை நோக்கி நகராமல் சாதியை ஒழிக்கமுடியுமா சொல்லுங்கள்? இந்த வேலைத் திட்டத்திற்குப் புலிகள் சம்மதிக்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள்! இந்தச் சாதியொழிப்பு வேலைத்திட்டத்திற்கு சம்மதிக்காத எவரையும் எதிர்த்துக் குரலெழுப்ப நாங்கள் தயங்கமாட்டோம். இந்தப் பின்னணியில்தான், தலித் அரசியலாளர்கள் புலிகளையும் கூட்டணியையும் இடதுசாரிகளையும் விமர்சிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

புலிகள் சரியானதொன்றைச் செய்யும்போது ஆதரிக்க எனக்கு உரிமையிருக்கிறது. அதேபோன்று புலிகள் தவறொன்றைச் செய்யும்போது தட்டிக்கேட்கவும் எனக்கு உரிமையிருக்கிறது.

***
ஈழத்திலும் புகலிடத்திலும் திருமணத்தைத் தவிர வேறெதிலும் சாதியில்லை என்று கொஞ்சங்கூடக் குற்றவுணர்வில்லாமல் சிலர் எழுதுகிறார்கள். இப்படிச் சொல்வது 'ஒருவரின் உடலில் உயிரைத் தவிர மற்றவையனைத்தும் சீராயிருக்கின்றன, ஆகவே ஆள் சுகமாயிருக்கிறார்' என்று கூறும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானதல்லவா? திருமணத்தில் கலக்க மறுப்பது தீண்டாமையின்றி வேறென்ன? அகமணமுறையென்பதுதானே சாதியின் அடித்தளமே. அதில் ஒரு பொத்தலைக்கூட விழுத்தாமல் ஈழத்தில் சாதியில்லை எனச் சொல்வதற்கு உங்களிற்கு உறுத்தவில்லையா?

வெள்ளாள அன்பர்களே தயவு செய்து ஈழத்தில் சாதியொழிந்துவிட்டது என்று சொல்லாதீர்கள். ஈழத்தில் தலித்துகள் சாதியத்தால் ஒடுக்கப்படவில்லை என்று ‘சேர்டிபிகற்’ கொடுக்க நீங்கள் யார்? வாழ்க்கை முழுவதும் சாதியத்திற்கெதிராகப் போராடி இன்றும் ஈழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதியொழிப்புப் போராளிகளான தங்கவடிவேல் மாஸ்டரும், தெணியானும், டொமினிக் ஜீவாவும், சி.கா. செந்திவேலும் ஈழத்தில் சாதியொழிந்துவிட்டது எனச் சொல்லட்டும் நாங்கள் வாயையும் அதையும் பொத்திக்கொண்டு சும்மாயிருக்கிறோம். உங்களுக்கு எப்பனாவது நேர்மையிருந்தால் நான் மேலே குறிப்பிட்ட பெரியோர்களின் இன்றைய எழுத்துகளைப் படித்துவிட்டு, அவர்களின் உரைகளைக் கேட்டுவிட்டு அதன் பின்பு ஈழத்தில் சாதியில்லை என நெஞ்சிலே கையை வைத்துச் சொல்லுங்கள்!

***
கடந்த பத்து வருடங்களாகவே புகலிடச் சூழலில் சிறுபத்திரிகைகளிலும் இலக்கியச் சந்திப்புகளிலும் கருத்தரங்குகளிலும் தலித் அரசியல் விவாதிக்கப்பட்டு வந்தாலும் நடந்து முடிந்த தலித் மாநாடோடு தலித் அரசியல் இன்னொரு பரிணாமத்தை எட்டியிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஈழத்தில் சாதிய விடுதலையைச் சாதிக்க ஒரு தனித்துவமான தலித் அமைப்பு தேவையென்று முற்போக்கு சக்திகளை ஏற்றுக்கொள்ள வைப்பதில் இந்த மாநாடு பெரும் பங்காற்றியுள்ளது.

இதற்கு வெளியே ஊடகங்களில் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்த உரையாடலையும் இம் மாநாடு தூண்டிவிட்டுள்ளது. தலித் என்ற சொல் தேவையா? பஞ்சமர் என்று ஏன் அழைக்கக் கூடாது? ஈழத்தில் பிறப்புச் சான்றிதழ்களில் சாதி குறிப்பிடப்படுவதில்லையே? என்ற தொடக்க நிலைக் கேள்விகளை மட்டுமல்லாது தமிழ்த் தேசியமும் தலித்தியமும்/ புலிகளும் சாதியமும்/ இடதுசாரிகளும் தலித்தியமும்/ தலித் அரசியலை இலங்கை அரசுக்கு ஆதரவான தமிழ் இயக்கங்கள் தமது அரசியல் இலாபங்களிற்காக ஆதரிக்கிறார்களா? போன்ற முக்கியமான உரையாடல்களையும் இம்மாநாடு தொடக்கி வைத்துள்ளது. 'செயல் என்பதே சிறந்த சொல்' என்பார்கள். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முப்பத்தேழிற்கும் மேற்பட்ட ஆயுத இயக்கங்களில் செயலோ செயற்பட்டு இப்போது மொக்கயீனப்பட்டு நிற்கிறோம். எனவே அடுத்த செயலைத் தொடக்க முன்பு எங்களுக்குள்ளே வெளி வெளியான உரையாடல்களும் அதன் வழியே தெளிவான கோட்பாட்டு உருவாக்கங்களும் தேவை. அடுத்த தலித் மாநாட்டை லண்டனில் நடத்தப்போவதாக லண்டன் தோழர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அங்கேயும் விவாதிப்போம், உரையாடுவோம். வெற்றுப் பேச்சாளர்கள் என்று சில 'செயல் வீரர்கள்' எங்களை நக்கல் செய்யக் கூடும். பாவம் அவர்கள் அறியாமல் செய்கிறார்கள். தோழர்களே! ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் களப்போராளிக்கு இருக்கும் தேவை, முக்கியத்துவம், கடமை ஆகியவை சிந்தனையாளர்களிற்கும் எழுத்தாளர்களிற்கும் கருத்துப் போராளிகளிற்கும் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள்!

Wednesday, October 24, 2007

தமிழ்த் தேசியமும் தலித்தியமும்

- ராகவன்

“நீங்கள் உங்களை ஒரு தேசம் எனக் கருதுவது வெறும் பிரமை. பல்வேறு சாதிப் பிரிவினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என்று அழைக்க என்ன அருகதை இருக்கிறது? நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை. சாதியக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் எதனை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்துதான் போகும்”
-
அம்பேத்கர்

இந்தக் கட்டுரையின் நோக்கம் இன்று இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இன – தேசியவாதச் சிந்தனை முறைமையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தலித் பிரக்ஞைக்கும் தேசியவாதக் கருத்தியலுக்குமுள்ள தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்.

தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் யாழ்ப்பாணத்திலேயே அரும்பி வேர்விட்டு விருட்சமாகியதால் யாழ்ப்பாணச் சாதிய அமைப்பு முறையையும் ஒடுக்கும் சாதியினரின் ஆதிக்கத்தையும் அதன் அரசியல் அதிகார வேட்கையையும் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

தமிழத் தேசியவாதம் குறுகிய நோக்கம் கொண்டது. அது தமிழர் என்று தான் வரையறுக்கும் மனிதர் அல்லது மனித குழுவினர் அல்லாதவரை அந்நியராக, விரோதியாகக் கருதுகின்றது. தேசியவாதத்திற்கு உலகளாவிய பார்வை கிடையாது. அது தன்னைத் தான் கற்பனை பண்ணும் பிரதேசத்திற்குள் குறுக்கிக் கொள்கிறது. பிறப்பையும் பாரம்பரியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் தனது அடையாளத்திற்கான கருப்பொருட்களாகக் காண்கின்றது.

தமிழ்த் தேசியவாதம் சாதிய அடிப்படையிலான சமூக - கலாச்சாரக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஏனெனில் அதன் அடிப்படை பிறப்பு, இரத்த உறவு, பாரம்பரிய நிலம் போன்ற சாதியக் கருத்து நிலைகளே. பிறப்பு உனது முற்பிறப்பில் செய்த நன்மை தீமைகளால் நிச்சயிக்கப்படுகிறது என்ற சனாதன சைவக் கோட்பாட்டால் நியாயமாக்கப்படுகிறது. இதுவே சாதியின் அடிப்படை என வேதம் சொல்கிறது. இரத்தம் தூய்மையானது, அது மற்ற சாதிகளுடன் கலந்தால் அழுக்காக போய்விடும் - இங்கு இரத்தம் என்பது விந்தும் சேர்ந்தது - என்கிறது. சாதியவாதத்தின் இதே அடிப்படையைத் தமிழத் தேசியவாதமும் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவனுக்கு நிலம் சொந்தமில்லை. எனவே பாரம்பரிய நிலம் என்பது ஆதிக்கசாதியினரின் நிலங்களேயாகும்.

‘தலித்’ என்ற பதத்திற்கு நசுக்கப்பட்ட மக்கள் அல்லது நொருக்கப்பட்ட மக்கள் என்பது பொருளாகும். மக்களைப் பிறப்பின் அடிப்படையில் சாதிகளாக அடையாளப்படுத்தும் ஆதிக்கசாதிச் சனாதனிகளால் தங்கள்மீது திணிக்கப்பட்ட பஞ்சமர், அவர்ணர், இழிசனர், தீண்டத்தகாதோர், அரிசனர் போன்ற சொல்லாடல்களைத் தலித்தியம் உறுதியாக நிராகரிக்கிறது. இந்தச் சாதியச் சொல்லாடல்கள் தங்களை இழிவுசெய்ய ஆதிக்கசாதியினரால் உருவாக்கப்பட்டவையெனத் தலித்தியம் கருதுகிறது.

“1972ம் வருட தலித் பாந்தர்களின் (Dalit Panthers) அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:
“தாழ்த்தப்பட்டவன், நவீன புத்த மதத்தவன், தொழிலாளி, கூலி விவசாயி, பெண், அரசியலிலும் பொருளாதாரத்திலும் சுரண்டப்பட்டவர்கள் போன்றவர்கள் தலித்கள். தலித்கள் கடவுளை நம்புவதில்லை. மறுபிறவியையும் நம்புவதில்லை. ஏற்றத் தாழ்வுகளைக் போதிக்கும் புனித நூல்ளைத் தலித்கள் நிராகரிக்கிறார்கள். அவர்கள் விதியை நம்புவதில்லை. ஏனெனில் இந்த கருத்தாக்கங்கள் தான் அவர்களை அடிமையாக்கின.”

தலித்தியம் தமிழத் தேசியத்தின் அடிப்படைக் கருத்தியலை கேள்விக்குள்ளாக்குகிறது. ‘சாதி அடிப்படை பிறப்பாலானது’ என்ற சனாதன சைவ வேளாள ஆதிக்கசாதிக் கருத்தியலை மறுதலிப்பதன் மூலம் அது பிறப்பால் தமிழன் என்ற தேசிய அடித்தளத்தையே தகர்க்கிறது. தமிழ்மொழி சாதியக் கூறுகளை கொண்டிருப்பதை அம்பலப்படுத்தித் தமிழ் பேசுபவன், தமிழன் என்ற தேசிய அடையாளத்தையே நிர்மூலமாக்குகிறது. நிலம் மறுக்கபட்ட மனிதனின் பாரம்பரியப் பிரதேசம் எங்கே இருக்கின்றதெனக் கேள்வியெழுப்பித் தாய் நிலக் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத மக்களை, அடிமையிலும் இழிவாக நடத்தப்படும் மக்களைத் தமிழ் கலாச்சார ஒற்றை அடையாளத்திற்குள் திணிக்கப்பதைத் தலித்தியம் எதிர்க்கின்றது. மாறாக தலித்தியம் தன்னை ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அரசியல் - பொருளாதாரச் சுரண்டல்களிற்க்கு ஆட்பட்டவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களுடன் தன்னை அடையாளப்படுத்துகிறது. எனவே அதற்குகொரு உலகளாவிய தத்துவப் பார்வை இருக்கிறது.

அடையாளம் என்பது நித்தியமானது என்பதைத் தலித்தியம் மறுதலிக்கிறது. நிலப்பிரபுத்துவத்தின் அழிவோடு சாதி ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடும் என்ற படிமுறை வளர்ச்சி அடிப்படையிலான மரபு மார்க்ஸியவாதத்தையும் தலித்தியம் நிராகரிக்கின்றது.

தமிழத் தேசியவாதம் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட வரலாறுகளை இருட்டடிப்பு செய்து தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாறே இலங்கையின் வடக்குக் கிழக்கு வரலாறு எனத் திரிக்கிறது. ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்' போன்றவை இயங்கியதையும் தலித்கள் தமிழீழப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆலயப் பிரவேசப் போராட்டம், உணவகங்களில் சமவுரிமைப் போராட்டம், பாடசாலைகளில் அனுமதிக்கான போராட்டம் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பதையும் அவர்கள் யாழ்ப்பாண ஆதிக்கசாதி வெறியர்களின் வன்முறைகளிற்கும் கொலைகளிற்கும் ஆளானார்கள் என்பதையும் தமிழத் தேசியம் மறைக்கின்றது.

1958 - 1977- 1983 இன வன்முறைகளைத் தனது ஒடுக்கப்பட்ட வரலாற்றின் அத்தியாயங்களாகக் காட்டும் தமிழ் தேசியவாதம் 1944ல் ஒரு தலித் மூதாட்டியின் உடலை வில்லூன்றிச் சுடலையில் தகனம் செய்ய முயன்ற முதலி சின்னத்தம்பி என்ற ஒரு தலித்தை வெள்ளாளர்கள் சுட்டுக் கொன்றதையும் சங்கானைப் போராட்டத்தில் சின்னர் காத்திகேசுவைக் கொன்றதையும் இன்னும் பலபத்துச் சாதியப் படுகொலைகளையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மேல் நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் குறித்துக் கள்ள மௌனம் சாதிக்கிறன்றது. 1960களில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் நிகழ்ந்தப்பட்ட சாதிவெறி வன்முறைகள் பற்றியும் அது வாய் திறக்க மறுக்கிறது.

சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழத் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம். தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதிய கூறுகளிலேயே கட்டப்பட்டிருக்கிறது. சாதியத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் அதன் தேசிய இருப்புக்கு ஆபத்தாக வந்துவிடும் என்பதில் தமிழ்த் தேசியவாதம் கவனமாகவே இருக்கின்றது என்பதை அதன் நடவடிக்கைகளும் சாதியக் குணாம்சமும் நமக்குக் காட்டுகின்றன.

சாதி சமயமற்ற ‘சோசலிசத் தமிழீழம்' வெறும் காகித்ததில்தான். தாயகத்தை மீட்ட பின்பு ஈழத்தில் சாதியற்ற சமத்துவம் நிலவும் என்பதைத் தலித்தியம் அப்பட்டமான ஏமாற்று வித்தையாகவே கருதுகின்றது.
தமிழ்த் தேசியவாதம் இன அடிப்படையிலானது. அது மொழி, கலாச்சாரம் என்ற இரு முதன்மைக் கருதுகோள்களிற்குள் தன்னை வரையறுக்குகிறது. தமிழ் தேசியவாத கருத்தியல் தமிழினம் தனக்கென்று தனித்த இயல்புகளை கொண்டிருப்பதாலும் அவர்கள் மொழி, கலாச்சாரத்தால் ஒன்றுபட்டிருப்பதாலும் தமிழினம் என்பது கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து மாறாமல் நிரந்தரமாக இருக்கிறதென்றும் இந்த மாறாத இயல்பே அவர்களை அய்க்கியப்படுத்தி அவர்களுக்கான ஒரு கூட்டான உள்ளுணர்வை கொடுப்பதாகவும் தங்களை ஒருங்கிணைக்கும் உள்ளுணர்வே தங்களது இருப்பைத் தேசமாக உணர வைக்கிறது என்கிறது தமிழ் தேசியம். இந்தக் கருத்தியலை நிலை நாட்டுவதற்கு கதைகள், புராணங்கள் இலக்கியங்களைத் தமிழ் தேசியவாதம் ஆதாரமாக காட்டுகிறது. தமிழரின் அரசுகள் முன்னர் தனியாக இருந்ததாகவும் அபகரிக்கப்பட்ட தேசத்தின் இறைமையை மீளவும் நிலை நாட்டுவதே தமிழரின் கடமை என்று அது முழங்குகிறது.

“மாறாத் துயிலில் ஆழ்ந்த அழகியின் (Sleeping beauty) இளமையின் மாறாத்தன்மை போன்று உருவகிக்கப்படும் நித்தியமான கலாச்சாரம் ஆய்வுக்கு உள்ளாக்கப்படும் போது அடிபட்டுப் போகின்றது” என்பார் ஸ்டுவட் கால் (Stuard Hall) .

தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் இந்த அடிப்படையிலேயே தன்னை உருவகம் செய்கின்றது. தமிழின் இளமை, தொன்மை, தமிழ் கலாச்சாரத்தின் நித்தியம் ஆகிய சாராம்சவாதங்களையே தமிழ்த் தேசியவாதம் முன் வைக்கிறது. ஆனால் தேசியக் கருத்தியலானது நவீனகால உருவாக்கமென்பதையே ஆய்வுகள் நமக்குக் கூறுகின்றன. தேசியவாதக் கருத்தியல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், வர்க்கத்தின் அபிலாசைகளை அடைவதற்கான அரசியல் வடிவமே. இந்த அரசியல் அதிகாரத்தை அடைவதற்கான கருத்தியல் பரிமாணத்தைத் தமிழ் தேசியவாதம் மொழி, கலாச்சாரம் ஆகிய கருத்துருக்கள் மூலமாக வடிவமைக்கிறது. “சமுக ஏற்றத் தாழ்வுகளையும் சுரண்டலையும் மறைத்து அனைவரும் ஒன்று என்ற மாயையைத் தேசம் கொடுப்பதால் தேசியம் ஒரு கற்பிதம்” என்பார் அண்டர்சன்.

பண்டைய தமிழ் இலக்கியங்களிலோ புராணங்களிலோ ‘தமிழன்’ என்ற சொல்லாடல் இருப்பதை யாராவது கண்டு பிடித்தால் தமிழ்த் தேசியம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தது என்பதை நாம் ஒத்து கொள்ளத்தான் வேண்டும். ‘தமிழன்’, ‘தமிழச்சி’ அல்லது ‘தமிழர்’ என்ற சொல்லாடலகள் சங்க இலக்கியங்களிலோ பக்தி இலக்கியங்களிலோ தேவார திருவாசகங்களிலோ கிடையவே கிடையாது. ‘தமிழ்' என்ற சொல்லாடல் மொழியைக் குறிக்கச் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ‘தமிழர் 'என்ற இன அடையாளப்படுத்தல் சங்க இலக்கியங்களிலோ காலனித்துவத்துக்கு முன்வந்த பனுவல்களிலோ இல்லை. ஆனால் சாதி பற்றி பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. புறனானூறில் அந்தணர், குறவர், வேந்தர், குடிகள் போண்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இது மேலதிக ஆய்வுக்கு எடுக்கப்பட வேண்டியது.

‘தமிழர்' என்ற அடையாளப்படுத்தல் நவீனகால உருவாக்கம் என்பதே தெளிவு. தமிழ் இன அடையாளப்படுத்தலுக்கு முன் சாதியரீதியான அடையாளப்படுத்தல் இருந்தது என்பதும் இங்கு தெளிவாகின்றது. எனவே தமிழ்த் தேசியவாத கருத்தியலின் தொன்மைவாதம் ஆய்வுக்குள்ளாக்கப்படும் போது ஆட்டம் காண்கிறது.

வெள்ளையர்களின் காலனியாதிக்கக் காலத்திற்கு முன்னரே சாதி அமைப்பு இருந்தது என்பதற்கு ஆதாரங்களைத் திரட்டத் தேவையில்லை. எனவே இந்த கட்டுரையானது தமிழத் தேசியம் குறித்துப் பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களைப் பரிசீலிக்கின்றது.

(1) காலனிய காலகட்டத்தில் ஆதிக்க சாதியினர் -குறிப்பாக வேளாளர்கள்- எவ்வாறு தமது அரசியல் - சமூக- பொருளாதார நிலைமைகளை வலுப்படுத்தினார்கள்?

(2) சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து 1983 வரையான தமிழத் தலைமைகளின் கோரிக்கைகளும் அவற்றின் சாதிய பரிமாணமும்.

(3) 1983ற்குப் பின்னான ஆயுத அமைப்புகளின் தோற்றமும் சாதிய பரிமாணமும்

(4) 1986ற்குப் பின்னான விடுதலைப் புலிகளின் சர்வாதிகார அரசியலும் சாதியமும்.

காலனித்துவ காலகட்டம்:

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், காலகட்டத்தில் வரி விதிப்பதற்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்கனவேயிருந்த சாதியடிப்படையில் சனத்தொகையைப் பகுத்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகள் என்று டச்சுகாரர்கள் வகுத்தனர். இக்காலகட்டத்திலேயே தாழ்த்தப்பட்டவர்கள் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். ஆதிக்க சாதியினரின் அதிகாரம் மேலும் வலுவாக்கப்பட்டது.

காலனித்துவ காலத்திலும் அதன் பின்னும் யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் ‘உயர்’ சாதி அடிப்படையிலேயே தனது ஆதிக்கத்தை தக்கவைத்து கொண்டது. காலனித்துவத்திற்குப் பின்னான அரசியல் அதிகாரப் பகிர்வு போட்டியில் ஏற்கனவே தான் காலனித்துவ காலத்தில் அனுபவித்து வந்த சலுகைகளும் அதிகாரமும் பறிபோய்விடுமென்ற பயமே தமிழ்த் தேசியவாதக் கருத்தியலின் அடிப்படை.

“காலனித்துவ காலகட்டத்தில் புதிய சமூக அமைப்புக்கான கருத்தியல் தளமான கல்விமுறை அதன் ஆரம்பத்திலேயே ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த சமுகக் குழுக்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டது… இந்தச் சக்திகளுக்குத் தாங்கள் பரம்பரையாக ஆதிக்கத்திலிருக்கிறோம் என்ற பார்வையை மாற்ற வேண்டிய எவ்வித தேவையும் இருக்கவில்லை” என்கிறார் அம்பேத்கர். காலங் காலமாக ஆதிக்கத்திலிருந்த யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினர் ஆங்கிலக் கல்வியைப் பெற்றுத் தமது ஆதிக்கத்தைச் சமூக, பொருளாதார ரீதியில் மேலும் வலுவாக்கிக் கொண்டனர்.

ஏற்கனவே உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஜீவாதார உரிமைகள் காலனித்துவ ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் மேலும் நசுக்கப்பட்டன. பிரித்தானிய காலனித்துவம் ஆதிக்க சாதியினருடன் சமரசம் செய்துகொண்டு அவர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கியது பிரித்தானிய காலனித்துவம் மையப்படுத்தப்பட்ட நிர்வாக வசதிக்காக அரசியல் அமைப்பு முறையை அமுல்படுத்தியதும் இந்த நிர்வாக அலகுகளை இயக்குவதற்காக ‘கிளாக்கர்களை’ உள்ளுரிலிருந்து தேர்ந்தெடுத்ததும் வரலாறு. இன்று தேசியவாதத்தின் பீஷ்மரான கா.சிவத்தம்பி தனது முன்னைய ஆய்வொன்றில் “காலனித்துவம் ஏற்கனவே சாதியால் வரையறுக்கப்பட்டிருந்த சமுக ஒழுங்கைக் குலைக்க முயலவில்லை. மாறாக ஆதிக்க சாதியினரை முதன்மைப்படுத்துவதன் மூலம் தனது இருப்பை தக்கவைத்து கொண்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியாயிருந்த வெள்ளாளரை ஆங்கிலக் கல்வி கற்க வைத்துத் தனது கிளாக்கர் படையை நிறுவியது…யாழ்ப்பாணத்தில் கல்விக்கூடங்களின் தொகையும் அதனால் உருவாக்கப்பட்ட அரச அலுவலர்களது தொகையும் அதன் சனத்தொகை வீதாசாரத்துடன் ஒப்பிடும்போது அதீதமானது” என்கிறார்.

காலனித்துவப் பொருளாதார அமைப்பானது உற்பத்தியை மையமாகக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் ‘உயர்’ சாதியினர் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்பட்டுப் பெருவாரியாக அரச அலுவலகப் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். காலனிய அரசு நிறவாத அரசாக இருந்ததால் சாதிரீதியான பிரிவினைகளை மாற்றக்கூடிய அரசியல் தார்மீகப் பலம் அதற்கு இருக்கவில்லை. கிறிஸ்தவ மதம் யாழ்ப்பாணத்தில் சாதிப்பிரிவினைகளை உள்வாங்கி கொண்டது இதற்கு நல்ல உதாரணம். ஒருசில பாதிரிமாரும் நிறுவனங்களும் கல்விக் கூடங்களைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களிற்குத் திறந்து விட்ட போதும் சாதிய முரண்பாடுகளில் ஆதிக்க சாதியினரின் விருப்புகளிற்கு காலனித்துவ அரசு விட்டுக்கொடுத்தே வந்தது. சமுக மாற்றத்தைக் காலனிய அரசு விரும்பவில்லை. அது தனது இருப்புக்கு ஆபத்தாகலாம் எனக் காலனித்துவ அரசு கருதியிருக்க இடமுண்டு.

யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினரின் இருப்பிற்கு சைவ சித்தாந்தக் கருத்தியல் நியாயம் கற்பித்தது. வர்ணாசிரம தர்மத்தின்படி சூத்திரர்களாக வரையறுக்கப்படும் சாதி வெள்ளாளர்கள் யாழ்ப்பாணத்து சமூக அமைப்பில் ஆதிக்கம் செலுத்தியதோடு அதற்கான சித்தாந்தத்தையும் வகுத்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் திரளை குடிமை, அடிமை, சிறைக்குட்டிகள் என்ற வகைகளிற்குள் அடக்கினர். நிலங்கள், கோயில்கள் அனைத்தும் பெருமளவில் வெள்ளாளர்களின் சொத்தாகவே இருந்தன. புறநடையாகக் கரையார்கள் மட்டும் வெள்ளாளருக்குப் போட்டி சாதியாக இருந்து வந்தனர். இது பற்றிய ஆய்வு தனியாக மேற்கொள்ளப்பட வேண்டியது.

சாதிய இறுக்கம் காலனித்துவ காலத்தில் நெகிழ்ந்து வருவதையும் கிறிஸ்தவ மதமாற்றங்கள் சாதிய கட்டுமானத்தைச் சற்றுச் சலனப்படுத்துவதையும் கண்ட வெள்ளாளச் சமூகம் தனது சாதிய நலனை ஆறுமுக நாவலரிடம் அடையாளம் கண்டது. ஆறுமுக நாவலரின சைவ சித்தாந்தம் சாதிய வேறுபாட்டை நியாயப்படுத்தியது. இந்தியாவில் இந்து சமயத்திற்குள் சீர்சிருத்தம் செய்யப் புறப்பட்டுச் சாதியை ஒழிக்க முயன்ற வள்ளலார் போன்ற ஆன்மீகவாதிகளை நாவலர் எதிர்த்து வள்ளலாரின் பாட்டு ‘மருட் பா’ என வாதிட்டார். சாதியத்தை இறுக்கமாக பேணுவதற்கான வழிமுறைகளை நாவலர் சைவசித்தாந்தத்தின் மூலம் வழி மொழிந்தார். சைவ சித்தாந்தம் கூறுகிறது:

“எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியர் இடத்திலும் கள்ளுக் குடிப்பவர் இடத்திலும் மாமிசம் புசிப்பவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.”

நாவலர் கிறிஸ்தவ மதமாற்றத்தை எதிர்த்தது அந்த மதம் சம்பந்தமான வெறுப்பாலல்ல. அது சாதியக் கட்டுமானத்தைக் குலைத்துவிடும் என்ற பயத்தால்தான். தனது பாடசாலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுத்த நாவலர் ஏதாவது ஒரு பாடசாலையில் தாழ்த்தப்பட்ட மாணவன் ஒருவன் அனுமதிக்கபட்டால் அதற்கு எதிராகவும் கொக்கரித்தார். “பறை பஞ்சமர், பெண்கள் அடிப்பதற்காகவே பிறந்தார்கள்” என்றார் நாவலர். இந்த சைவ சித்தாந்தக் கருத்தியலின் அடிப்படைதான் இன்றைய தமிழத் தேசியவாதததின் தோற்றமும் வளர்ச்சியும்.

சாதி அமைப்புமுறை ஆதிக்க சாதிகளால் தொடர்ந்தும் இறுக்கமாகப் பேணப்பட்டு வரும் அதேவேளையில் தங்களது நலன்களைத் தொடர்ந்து பேணிக்காக்கவே யாழ்ப்பாண மேலாதிக்க சமூகம் தேசியவாதத்தை அரசியல் கருத்தியலாக விதைத்தது.

காலனித்துவ அரசுகள் படிப்படியாக சரிந்து வரும் காலத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசு காலனித்துவத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நிகழ்த்தாமலே சுதந்திரம் பெற்ற இலங்கையை ஒரு ‘மாதிரி’ நாடாக, ஒரு ‘சக்சஸ் ஸ்டோரி’யாகப் பார்த்தது. தாங்கள் வெளியேறுவதற்கு முன்பாகச் சில திட்டங்களையும் பரிந்துரைத்து சுதேசிகளுக்கு ஆட்சிக் ‘கலை’யைக் கற்றுக்கொடுத்தது.

இந்தக் காலகட்டம் காலனித்துவ அரசு பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த காலம். டொனமூர் கொமிஷன் சுதேசிகளின் அதிகாரத்தைப் பற்றிப் பேசிய காலம். ‘தமிழர்’ தமக்குப் போதிய அதிகாரம் வேண்டுமென்ற காலம். தமிழத் தேசியவாதிகளின் கருத்தின்படி தமிழர் தம்மை ஒரு தனித்துவமான இனமென்று கூறி அதிகாரப் பகிர்வு கேட்ட காலம். ஆனால் காலனித்துவத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அடக்கப்பட்டு வந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பற்றித் தமிழ்த் தலைமை மூச்சும் காட்டவில்லை.

1944ல் “நூற்றாண்டு காலமாக யாழ்ப்பாணச் சமூகம் மிசனரிகளாலும் அரச நடவடிக்கைகளாலும் பயன்பெற்றுக் கல்வியில் முதன்மையாக நிற்கின்றது’ என்று அறிக்கையிட்டது சோல்பரிக் கொமிஷன். ஆனால் அந்தக் கல்வியை பெறத் தடுக்கப்பட்டவர்களாகவே தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தார்கள். சோல்பரிக் கொமிஷனிடம் ‘இருக்கும் கல்விக் கூடங்கள் போதாது இன்னும் கல்விக்கூடங்கள் வேண்டும்' என்று கேட்ட யாழ்ப்பாணத் தலைமை மறுபுறத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்விகற்ற படித்த பாடசாலைகளை எரித்துச் சாம்பராக்கியது.

இந்த காலத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள்மீது சுமத்தப்பட்ட தமிழ்த் தேசியப் பெருங்கதையாடலை நிராகரித்தனர். ‘ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கமம்' 1927ல் உருவாக்கப்பட்டது. சங்கம் தாழ்த்தப்பட்ட மாணவர்களிற்கு பாடசாலை அனுமதியும் சமபந்தியும் கோரிப் போராட்டங்களை நிகழ்தியது. 1931 இல் சர்வசன வாக்குரிமைக்கு டொனமூர் கொமிசன் சிபார்சு செய்தபோது பொன். இராமநாதன் நடேசன் போன்ற தமிழ்த் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அரசியல் உரிமையொன்று கிடைப்பதைப் பொறுக்க முடியாமல் சர்வசன வாக்குரிமையை எதிர்த்தனர். அவர்களின் எதிர்ப்பு அவர்களின் ஆதிக்கசாதி நலனிலிருந்தே முகிழ்த்தது. ஆனால் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளோ ‘பெரும்பான்மைச் சிங்களவரகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற தூரப்பார்வை இத் தலைவர்களுக்கு இருந்ததனால் அவர்கள் அதனை எதிர்த்தார்கள்’ என வியாக்கியானம் கொடுக்கிறார்கள்.

நிலப்பிரபுகளுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கவேண்டும், கல்வியற்றவர்களுக்கும் பெண்களுக்கும் அந்த உரிமை இல்லை என்று வாதாடினார் இராமநாதன். ஆனால் சிங்கள நிலப்பிரபுக்கள் எண்ணிக்கையில் தமிழ் நிலப்பிரபுக்களை விட அதிகம். எனவே சர்வசன வாக்குரிமை இல்லாவிடினும் சிங்களப் பெரும்பான்மையே அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும். தவிரவும் இராமநாதன் சிங்கள மேல்தட்டு வர்க்கத்துடன் சுமூகமான உறவை வைத்திருந்ததுதான் வரலாறு. எனவே இங்கே இராமநாதனின் ‘தூரப்பார்வை’ என்ற வாதமே அடிபட்டுப்போகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைத் தமிழ்த் தேசிய இனமாக அடையாளம் காண மறுத்தனர். யாழ்ப்பாணத்து ‘உயர்’சாதிக்காரரின் அரசியல் அதிகாரப் போட்டிகளின் விளைவே தமிழ் தேசியவாதக் கருத்தியலின் உள்ளுறை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்தனர். அதிகாரப் பகிர்வு கேட்கும் அதே வர்க்கம் தாழ்த்தப்பட்டவர்களிற்கு அரசால் வழங்கப்பட்ட சிறிய சலுகைகளை கூட மூர்க்கமாக எதிர்த்து வந்ததைத் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்கறிவார்கள். தங்களுக்கு இவர்கள் கொடுத்த அடையாளம் சாதி அடையாளமே தவிர தமிழ் அடையாளமல்ல என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெரியும். 1943ல் வட இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை உருவாக்கப்பட்டதும் இதன் பின்னணியில்தான். அடுத்த வருடமே மகாசபை அகில இலங்கைச் சிறுபான்மை தமிழர் மகாசபையானது.

1944ல் சோல்பரி கொமிசனின் முன்னால் தனியான ஓர் அறிக்கையை மகாசபை சமர்ப்பித்தது. சிறுபான்மைத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் வேறானவை, அவர்கள் தமிழ்த் தேசியம் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடங்கமாட்டார்கள் என மகாசபை வலியுறுத்தியது. தங்களது உரிமைகளைச் சாசனரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் எனவும் மகாசபை வலியுறுத்தியது. அய்ம்பதிற்கு அய்ம்பது கேட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்திடம் “தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும், பாடசாலை அனுமதி தரப்படவேண்டும் போன்ற கோரிக்கைகள் தமிழ்க் காங்கிரஸ் சமர்பிக்கும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டால் தனி அறிக்கையொன்றைத் தாங்கள் சோல்பரிக் கொமிஷனிடம் சமர்ப்பிக்கவிருப்பதைக் கைவிடுவதாக” மகாசபை தெரிவித்தது. ஆனால் ஆதிக்க சாதியினரின் பிரதிநிதியான பொன்னம்பலம் தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்ததால் மகாசபை தனியாகவே கொமிஷனிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

தமிழ்த் தலைமையானது சாதி வெறியர்களுடன் கூட்டு சேர்ந்து மகாசபை அங்கத்தவர்களை மிரட்டியது. சோல்பரிக் கொமிஷன் அங்கத்தவர்களை இரகசியமாக தலித் மக்களின் குடியிருப்புகளிற்கு அழைத்துச் சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு இழிவாக நடத்தப்படுகிறார்கள் என்று மகாசபை உறுப்பினர்கள் காண்பித்தார்கள். ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகளின் சாதி அரசியலால் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகள் கிணற்றில் போட்ட கற்களாயின.

சுதந்திரம் பெற்ற காலகட்டத்திலிருந்து 1983 வரையான தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளும் அவற்றின் சாதியப் பரிமாணமும்:

பொருள் உற்பத்திமுறைமை, அதற்கான அரசியல் சமூகக் கட்டுமானம், அதனை வழி நடத்துவதற்கான நிர்வாக இயந்திரம் என்ற அடிப்படையிலேயே இலங்கையில் காலனித்துவ அரசு தனது சுவடுகளை விட்டு சென்றது. காலனியாதிக்க காலத்திலேயே அரச நிர்வாக சேவைகளில் தமது கால்களை ஆழ ஊன்றியிருந்த யாழ் மத்தியதர ஆதிக்கசாதி வர்க்கத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே இச்சூழலில் இருந்தன. தொழில் வளர்ச்சியற்ற இச்சூழலில் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளுக்கான போட்டி இனரீதியான சிந்தனைக்குத் தீனி போட்டது.

கல்வி மறுக்கப்பட்டு அரசு நிர்வாகப் பதவிகள் மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த போட்டியின் பங்குதாரரில்லையென்பதுதான் உள்ளங்கை நெல்லிகனி உண்மை. தனிச் சிங்கள மொழிச் சட்டம் 1956ல் நிறைவேற்றப்பட முன்பு ஆங்கிலக் கல்வியே சமூகப்படிகளில் ஏறுவதற்கான கருவியாக இருந்தது. ‘ஆங்கிலக் கல்வி வேண்டாம், தாய்மொழிக் கல்வி வேண்டும்’ என யாழ்ப்பாண அரசியல் தலைமை அதுவரையும் போராடவில்லை. தனிச் சிங்களச் சட்டம் அமுலுக்கு வந்து பின்னர் தமிழ் வடக்குக் கிழக்கில் நிர்வாக மொழியாக பயன்படுத்தப்படும் என மாற்றம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தாய்மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட மக்களிற்கான கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வந்தன. அவர்களுக்கு மேற்படிப்பு என்பதும் பல்கலைக்கழகம் செல்வதென்பதும் கனவாகவேயிருந்தன. ஆசிரியர்களிலிருந்து அதிகாரிகள் வரை திட்டமிட்ட வகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்கத் தடையாக இருந்தனர்.

தமிழர் தமது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்ததற்கான அடிப்படை காரணம் 1970களில் தரப்படுத்தலை அரசு நடைமுறைப்படுத்தியதே எனத் தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் முன்வைக்கிறது. கல்வியில் சிறந்த அறிவார்ந்த தமது இனம் தரப்படுத்தலை கண்டு சினந்து போராட்டத்தில் குதித்தது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இதுவெனத் தமிழ்த் தேசியவாதிகள் இன்றும் கூறுகிறார்கள்.
ஆனாலும் காலங்காலமாக ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களும் வரலாறுகளும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. இலவசக்கல்வி முறை இலங்கையில் இருந்தபோதும் 0.01 வீத சனத்தொகையே மேற்படிப்புக்கு செல்லக்கூடியதாக இருந்தது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்கலைகழகம் செல்லும் போட்டியிலும் அரச அதிகாரிகளாகும் போட்டியிலும் யாழ்ப்பாண மத்தியதரவர்க்கம் முக்கியமான பாத்திரத்தை வகுத்தது. ‘கோழி மேய்த்தாலும் கோர்ணமெந்தில் மேய்க்கவேண்டும்’ என்ற தேவவாக்கு யாழ்ப்பாண ஆதிக்கசாதி அமைப்பின் தாரக மந்திரமாயிருந்தது. தனது பங்குகள் குறைந்து போக அது ஆத்திரம் அடைந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுவொரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. இதனை ஆதிக்க சாதியினரின் பிரச்சனையாகவே அவர்கள் பார்த்தார்கள். ஏனெனில் இதே சமகாலத்தில்தான் அவர்கள் கோவில் பிரவேசம், தேனீர்கடை பிரவேசம் போன்ற பல்வேறு சமூக விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு ஆதிக்க சாதியினரால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.

அப்போதைய இலங்கை அரசு இந்தப் பிணக்கை ஓரளவு தீர்க்க முன்வந்தபோது தமிழப் பழமைவாதத் தலைமை எரிச்சலடைந்தது. சாதி முறைமைகள், கோவில் பிரவேசம் ஆகிய உள்வீட்டு பிரச்சனையில் அரசு தலையிட வேண்டிய அவசியமில்லையென அது வாதித்தது.
சாதியப் பிரச்சினையை எதிர்கொள்ளத் தமிழத் தலைமைகள் பயந்ததன் அடிப்படைக் காரணம் அவர்களது ஆதரவுத்தளம் மத்தியதர வர்க்கச் சாதிமான்களில் தங்கியிருந்ததாலேயேயாகும்.

சாதி எதிர்ப்புப் போராட்டங்களைத் தமிழ்த் தேசியத் தலைமை கொச்சைப்படுத்தியது அல்லது அது உள்வீட்டு பிரச்சனை என்றது. சண்முகதாசன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் சாதிக்கெதிரான போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை இணைத்து போராடியபோது தமிழத் தலைமை ‘சங்கானை ஷங்காயாக மாறுகிற’தென்று இனவாத அரசென்று தங்களால் சொல்லப்பட்ட இலங்கை அரசுக்கு முறையிட்டது.
இதே காலகட்டத்தில்தான் தமிழ்த் தேசியவாதிகளின் பத்திரிகையான ‘சுதந்திரன்’ கோவில் பிரவேசம் பற்றிப் பேசக் கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தகுதி இருக்கிறது, ஏனெனில் அவர்கள் நாத்திகர்கள் எனப் பக்கம் பக்கமாக எழுதியது.

தமிழரசுக் கட்சி சமபந்தி போசனம் போன்ற நிகழ்வுகளை நிகழ்த்தி சமரசப் போக்கை கொண்டுவர முயன்றபோதும் தாழ்த்தப்பட்ட மக்கள் இதனை வெறும் நாடகமாகவே கருதினார்கள். தமிழ் மக்கள் எல்லாம் ஒன்று என தென்னிலங்கை அரசுக்கு காட்டி தங்களது இனவாத அரசியலை நடத்துவதற்கான தந்திரோபாயத்தில் தாங்கள் பங்குதாரர் இல்லை என தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து கூறினார்கள். ‘சமபந்தி போசனம் செய்ய வருபவர்களே சம்பந்தம் பண்ணச் சம்மதமா’ என குரலெழுப்பிச் சாதிய தேசியவாதத்தை அம்மணமாக்கினார்கள

தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள் ஆதிக்கசாதி யினரின் பிரச்சனைகளாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களது பிரச்சனை ஆதிக்கக்கசாதியினரின் நேரடி ஒடுக்குமுறைக்கெதிரான தொடர்ந்த போராட்டமாகவே இருந்தது. 'புத்த மதம் ஆதிக்க மதம்' என்றது ஆதிக்கசாதி. தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த சமயத்திற்கு மாறுவது தமது சமூக விடுதலைக்கான ஒரு படிக்கல் என்றே கருதினார்கள்.

1970களில் தமிழத் தேசியச் சக்திகள் ஆயுத வன்முறையை ஆரம்பித்தபோதும் 1983வரை அது யாழ்ப்பாணத்துளளேயே முடங்கிப் போயிருந்தது. சிறு குழுக்கள் திடீரென்று ஒரு பொலிஸ்காரனையோ துரோகியென்று முத்திரை குத்தப்பட்டவரையோ கொல்வது அல்லது ஒரு வங்கியை கொள்ளையடிப்பது என்ற மட்டிலேயே அவர்களது நடவடிக்கைகள் 1983 வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த அலைக்குள் அகப்படவில்லை. ஏனெனில் தமக்கு கல்வியை மறுக்கும் அதே ஆதிக்கசாதியினர்தான் உயர்கல்வி கற்க 'தரப்படுத்தல்' தடையாக இருக்கின்றதென்று கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தது தலித்களிற்கு வேடிக்கையாக இருந்தது. 1971ல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் 1972ல் மாவட்டரீதியான கோட்டாவாக மாற்றப்பட்டுப் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் மட்டக்களப்பு, மன்னார், மலையகம், வன்னி போன்ற தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து முதன்முறையாக மாணவர்களிற்குப் பல்கலைகழகம் போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த விடயத்தை யாழ் மையவாதத் தமிழ்த் தேசியவாதிகள் முற்றாக மறைத்துவிடுகிறார்கள். தமிழ்த் தேசியவாதத்தின் உருவாக்கமே யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினரின் அபிலாசைகளை பிரதிபலிப்பதாக இருந்தது.

1976ல் வட்டுகோட்டைத் தீர்ர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய போது தமிழீழம் சாதி சமயமற்ற சமதர்ம குடியரசென்றும் தமிழீழத்தில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்படும் என்றும் கூறியது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் அடிப்படை உரிமைகள் சட்டரீதியாகக் காகிதங்களில் ஓரளவிற்கு உத்தரவாதப்படுத்தினாலும் கூட அந்தக் குறைந்த பட்ச உரிமைகளைக் கூட நடைமுறைப்படுத்த அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கக் கூட்டணி குறிப்பிடத் தகுந்த எந்தப் பங்களிப்பையும் இன்றுவரை கொடுத்ததில்லை. அரசியல் சாசனத்தில் தலித்களிற்குச் சில உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தும் அதனை நடைமுறைப்படுத்த யாழ்ப்பாண ஆதிக்க சாதியினர் பெரும் தடையாயிருந்தனர். தேசியவாதத் தலைமை இந்தச் சாதிய மேலாதிக்கதால் கட்டப்பட்டதால் நிலவிவரும் சாதிய அமைப்புமுறையை எதிர்ப்பதற்கான வீரியம் அதனிடமிருக்கவில்லை. மாறாகத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தேசியவாதத்திற்குள் உள்வாங்குவதற்கு அது முயற்சித்தது.

1981ம் ஆண்டில் யாழ்ப்பாண நூலகம் பொலிஸாரால் தீக்கிரையாக்கப்பட்ட போது கிளர்ந்தெழுந்த யாழ்ப்பாண ‘உயர் 'சாதிச் சமூகம் அதேகாலகட்டத்தில் எழுதுமட்டுவாளில் சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட சிறார்களைத் தாக்கி அவர்களது புத்தகங்களைப் பறித்து தீக்கிரையாக்கும் போது ஏன் பார்த்துக்கொண்டிருந்தது? எனக் கேள்வியெழுப்பினார் கே.டானியல்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு படிப்பு எதற்கு அது எங்களது ஏகபோகம் என்ற ஆதிக்கசாதிச் சிந்தனை முறையே இதற்குக் காரணம். இந்த ஆதிக்கசாதிச் சிந்தனை முறையை அரசியல், சமூக தளமாகக் கொண்ட தேசியவாதக் கருத்தியல் தாழ்த்தப்பட்ட மக்களின் அபிலாசைக்கு முரணாகவே அப்போதும் இப்போதும் செயல்படுகிறது

1960களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை ஆய்வு செய்து “மாவிட்டபுரக் கோவில் பிரவேசப் போராட்டமானது வெள்ளாள ஆதிக்கத்தை வைதீகத் ( Ritual) தளத்தில் எதிர்கொண்டது. இந்தப் போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கபட்டன. சாதி எதிர்ப்புப் போராட்டங்களைத் தணிப்பதற்காகத் தமிழ்த் தலைமை ஒரு ‘தற்காப்புத் தேசிய வாதமாக’ ( Defensive Nationalism) தமிழ்த் தேசியவாதத்தை முன்வைத்தது. இந்த உத்தியின் மூலம் இன உணர்வுகளிற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளீர்க்க தமிழ்த் தலைமை முயன்றது” என்கிறார் பாகன்பேகர் (1990).

சாதிய ஒடுக்குமுறைகளை ‘ஒற்றுமை’யின் பேரால் தமிழத் தேசியவாதம் மறைக்க பார்க்கிறது. தனது பல்லைக் குத்தி மாற்றானுக்கு மணக்கவிடக்கூடாது என்று வியாக்கியானம் வேறு.

1983ல் தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆயுதம் தூக்கும் வரையில் தாழ்த்தப்பட்ட மக்களிற்குச் சாதிய விடுதலைப் போராட்டத்தை நடத்தக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட சனநாயகச் சூழலிருந்தது. ஆயுத வன்முறை தமிழ்த் தேசியத்தின் வடிவமாக்கப்பட்ட பின்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராட்டங்களை நடத்துவதற்காக மட்டுப்படுத்தப்பட்டிருந்த சனநாயகமும் தமிழ்த் தேசியவாதத்தால் முற்றாகவே துடைத்தெறிப்பட்டது என்பதுதான் வரலாறும் நிதர்சனமும்.

1983க்குப் பின்பு ஆயுத அமைப்புகளின் தோற்றமும் சாதியப் பரிமாணமும்:
1983 யூலை வன்முறைகள் தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தன. ஆயுதப் போராட்த்திற்கான அடித்தளம் வலுவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள், ரெலோ, புளொட் ஆகிய அமைப்புகள் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் தொடர்ச்சியாகவேயிருந்தன. சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான எவ்விதச் சிந்தனைப் போக்கையும் இவை கொண்டிருக்கவில்லை. மாறாகச் சாதியச் சிந்தனைகளின் அடிப்படையிலேயே இவர்களது தமிழ்த் தேசியம் கட்டப்பட்டது. 1984ல் புத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கொழுத்தப்பட்டு அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கபட்டபோது இந்த ஆயுதத் தலைமைகள் இந்த நேரத்தில் ஒற்றுமை குலைந்துவிடக் கூடாதெனச் சாட்டுச்சொல்லி இப்பிரச்சனையைக் கையாள தயங்கினர். ‘உயர்’சாதியை பகைத்தால் ஒற்றுமை குலைந்துவிடும் என்பது அவர்களது வாதம். இதே போல் கல்லுவத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தை ரெலோ வன்முறை கொண்டு அடக்கியது. EPRLE, NLFT போன்ற அமைப்புகள் தேசியவாதக் கருத்தியலைக் கொண்டிருப்பினும் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகச் சமகாலத்திலேயே போராட்டம் நிகழ்த்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது முக்கிமானதுதான். ஆனாலும் இராமநாதன் பொன்னம்பலம் காலத்திலிருந்து வந்த தமிழர் ‘ஒற்றுமை’ குலைந்துவிடக்கூடாது என்ற ஆதிக்கசாதிச் சிந்தனை முறைமை தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களிடமும் நீடித்தது, நீடிக்கின்றது.

EPRLF தாழ்த்தப்பட்ட மக்களைப் பெருமளவில் தன்னுடன் இணைத்து கொண்டது. தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் ஆதிக்கம் செலுத்திய சூழலில் தங்களின் அடிப்படை உரிமைகளை இவ்வியக்கங்கள் மூலம் வென்றெடுக்கலாம் எனக் கருதித் தாழ்த்தப்பட்ட மக்கள் இயங்கங்களில் இணைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது மட்டுமல்லாமல் தமக்குக் காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவும் தாழ்த்தப்பட்டவர்கள் அமைப்புகளில் இணைந்திருக்க வாய்ப்புகள் உண்டு. தமது சாதிய மேலாதிக்கத்திற்கு இது ஆபத்து என கருதிய யாழ்ப்பாண உயர்சாதி வர்க்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் அமைப்புகளில் சேருவதையும் ஆதிக்கம் செலுத்துவதையும் எதிர்த்தார்கள். ‘முந்தி இயக்கம் நல்லாயிருந்தது. இப்போது கண்டதுகளும் சேர்ந்து அதை பழுதாக்கியெல்லோ போட்டுதுகள்’ எனப் புறணி பேசினர். ஈ பி ஆர் எல் எப் அமைப்பை ஈழத்துப் பள்ளர் என அடைமொழியிட்டு அழைத்தனர். சாதிய அமைப்பு முறைக்கு எதிரான போராட்டம் தேசியவாதக் கருத்தியலுடன் பொருந்தாது என்பதற்கு ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தோல்வி சரியான உதாரணம்.

சாதிய எதிர்ப்பானது சமூக ஏற்றத் தாழ்வுக்கெதிரான போராட்டம். அது சைவ சித்தாந்தக் கருத்தியலை நிராகரிக்கிறது. தமிழ்த் தேசியவாதம் யாழ்ப்பாண சாதிய மேலாதிக்கத்தை பேணிக்காப்பதற்கான போராட்டம். எனவே ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தோல்விக்கான ஒரு முக்கிய காரணம் தேசியவாதத்திற்கும் தலித்தியத்திற்கான அடிப்படையான தீர்க்கப்படாத முரண்பாடுகளை அடையாளம் கண்டுகொள்ள அது தவறியதேயாகும். தமிழ்த் தேசியம் சாதிய அடிப்படையிலான கருத்தியலென்பதால் அது சாதியத்திற்கெதிரான கருத்துக்களை முன்வைப்பது அதன் அரசியல் இருப்புக்கு ஆப்பு வைக்கும் வேலையே.

ஆயுத அமைப்புகள் தலையெடுத்த பின்பு தாழ்த்தப்பட்ட மக்களின் அபிலாசைகளை பிரதிபலித்த தாழ்த்தப்பட்ட மக்களிற்கு சாதிய விடுதலைக்கான அமைப்புகளை நடத்தும் உரிமைகள் மறுக்கப்பட்டன. தமிழத் தேசியத்தின் பேரால் தமிழர் ஒற்றுமையின் பேரால் அவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சனநாயக உரிமைகளும் பறிக்க பட்டன. தலித்தியத்தை பேசுபவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர். 1986ல் விடுதலை புலிகள் மற்றைய அமைப்புகளை அழித்துத் தமது தனி ஆதிக்கத்தை கொண்டுவந்த பின்பு ஒரு தலித் இயக்கத்திற்கான அனைத்து கதவுகளும் பலாத்காரமாக வடக்கில் மூடப்பட்டன.

1986ற்குப் பின்பு விடுதலைப் புலிகளின் சர்வாதிகார அரசியலும் சாதியமும்:
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மிகவும் பிற்போக்கானதும் பழமை வாதமானதும் மாற்று அரசியல் அமைப்புக்களை கருத்துக்களை சகிக்க முடியாததுமாகவே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. விடுதலை புலிகளின் தோற்றமும் அரசியல் பரிமாணமும் அதன் அமைப்பு முறையும் யாழ்ப்பாண ஆதிக்கசாதிக் கருத்தியலினதும் அதன் சர்வாதிகாரச் சாதி கட்டமைப்பினதும் வெளிப்பாடே.

ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் பெரும்பாலும் யாழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவேயிருந்தனர். தமது கல்வியில் அல்லது தமது சமூகத்தின் ( இங்கு நான் சமூகமெனக் குறிப்பிடுவது ஆதிக்க சாதியினரை) கல்வியில் இலங்கை அரசு பாரபட்சம் காட்டியது என்பதே அவர்களது அடிப்படையான பிரச்சனையாக இருந்தது. இராசராச சோழனின் ஆட்சியைக் கனவு கண்டது, சோழரின் இலச்சினையைத் தனது சின்னமாக்கித் தமிழீழத் தேசத்திற்கான கற்பிதத்தை உருவாக்கியது, சைவநெறிப் புனிதங்களையும் ஒழுக்கங்களையும் பேணிப் பாதுகாத்தது, காதல் - பாலுறவு போன்ற விசயங்களில் பச்சைப் பழமைவாதம் போன்ற பல்வேறு பிற்போக்குவாதக் கூறுகளால்தான் அந்த இயக்கம் கட்டியெழுப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் வெள்ளாளர், கரையார் ஆகிய இரு சாதிப்பிரிவினரே ஆதிக்கம் செலுத்தினர். சாதிய படிக்கட்டுமானத்தில் கரையார் வெள்ளாளருக்கு அடுத்தபடியாகக் கீழேயிருந்தபோதும் அவர்கள் வெள்ளாளரின் ‘குடிமை’களாக இருக்கவில்லை. அதனை விட முக்கியமானது சமயக் கருத்தியல் தளத்தில் ( Ideological base of saiva religious ritual ) அவர்கள் தீண்டதகாதவர்களாக வகுக்கப்படவில்லை. வெள்ளாளர் போன்று கரையாரும் கோவில்களுக்கு சொந்தகாரராக இருந்தனர். சன்னதி போன்ற கோவில்களில் தலித்களின் ஆலய பிரவேசத்தை தீவிரமாக எதிர்த்து நின்றவர்கள் கரையார்கள். மாவிட்டபுரம் கோயில் பிரவேச போராட்டத்தில் வெள்ளாளருடன் கூட்டு சேர்ந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான வன்முறையில் கரையார்களும் ஈடுபட்டார்கள். கரையாருக்கும் வெள்ளாளருக்குமிடையே ஆதிக்க போட்டி தொடர்ந்து இருந்து வந்தது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்முறையில் இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்தனர்.

சைவ ஆகம முறைப்படி கரையார் தீட்டுபட்டவர்களாக கருதப்படவில்லை என்றேன். இதன் அடிப்படையே இவர்களின் தமிழத் தேசியவாதக் கூட்டு. 'வல்வெட்டித்துறை' ஞானமூர்த்தி என்பவர் தமிழ்க் கொங்கிரஸ் - தமிழரசுக்கட்சி இணைப்புக்கு முன்னின்றவர் என்பதும் வல்வெட்டித்துறைப் பிரதேசம் கரையார் சமூகத்தின் முக்கிய தளம் என்பதும் அது தமிழத் தேசியவாதத்தின் ஒரு முக்கியமான பிறப்பிடம் என்பதும் அறியப்பட்ட உண்மைகள்.

புலிகள் தமது அமைப்பில் ‘ஒழுக்கமானவர்களை’ சேர்ப்பதில் ஆர்வம் காட்டினர். 1983ற்குப் பின்னர் ஈ பி ஆர் எல் எப் போன்ற அமைப்புகளில் பல்வேறு சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் இணையும்போது விடுதலைப்புலிகளோ தங்கள் தெரிவுகளை மிகவும் கவனமாகவே செய்தனர். ‘கண்டவர்களையும்' இயக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தனர். இதன் விளைவு உயர் சாதிகளைச் சேர்ந்த மத்தியதர வர்க்க இளைஞர்கள் புலிகள் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தினர்.

கரையார சமூகத்தைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணம் முடித்ததானது முக்கியமான குறியீடாக ( Symbolic significance) அமைந்தது. தலித் பெண்ணொருவரைப் பிரபாகரன் மணந்திருந்தால் வெள்ளாளரோ கரையாரோ தமது அரசியல் ஆதரவைப் புலிகளுக்கு கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. மன்னர்கள் முன்னைய காலத்தில் மற்றைய மன்னர்களின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக அம்மன்னர்களின் குமாரிகளை திருமணம் செய்வது ஒரு தந்திரோபாயமாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இதனை திட்டமிட்டுச் செய்யாவிடினும் இந் நடவடிக்கை இரு சாதிகளுக்கிடையே ஒரு குறைந்தபட்ச இணக்கப்பாட்டைக் கொண்டுவந்தது எனலாம்.

விடுதலை புலிகள் தாங்கள் சாதியத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டி கொண்டாலும் அவர்களது அமைப்பு முறையும் அரசியல் புலமும் நடைமுறையும் சாதியத்தின் தூண்களால் கட்டப்பட்டதென்றே கூறலாம். சாதியம் எவ்வாறு தன்னை ஒரு கூம்பு வடிவாக உருவமைத்திருக்கிறதோ அதேபோல் தான் விடுதலை புலிகளின் அமைப்பு முறையும் கட்டப்பட்டிருக்கிறது. சமூக நடைமுறையில் சாதியக் கருத்தாக்கம் எவ்வாறு தனது கருத்துருக்களை மனிதரிடம் பதிக்கிறது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம். யாழ்ப்பாணா சாதிய அபைப்பை ஒரு கூம்பு வடிவமான அதிகார கட்டமைப்பாக பார்க்கலாம். வெள்ளாள சமூகம் கூம்பின் உச்சியில் இருந்து கொண்டு அடியிலுள்ள சாதிகளை அடிமை குடிமைகளாக பிரித்துத் தனக்கு சேவகம் செய்யும் சாதிகளாக வைத்திருக்கிறது. இந்த அமைப்பு முறை ஜனநாயகம் அற்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகள் கேட்டு போராடும் போது அடக்குமுறையை ஏவி விடுகிறது. இது வெறும் அமைப்புமுறை மட்டுமல்ல இதற்குப் பின்னல் உள்ள கருத்தியலும் அது ஆதிக்க சமூகத்தினதும் அடக்கப்பட்ட சமூகத்தினதும் சிந்தனை முறையில் பாதிப்பு செலுத்துகின்றதென்பதும் கவனிக்கபட வேண்டிய விடயங்கள். சொல்வதை செய்ய வேண்டும், மாற்று கருத்து இருக்க கூடாது, அதிகாரத்திற்குக் கட்டுபட வேண்டும் போன்ற பல்வேறு கருத்துருக்கள் இந்த சிந்தனை முறைக்குள் ஒளிந்திருக்கின்றன. இந்த அமைப்பு முறையைப் புலிகளின் அமைப்பு முறையுடன் ஒப்பீடு செய்து பார்த்தால் இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசங்களைக் கண்டுபிடித்தல் அரிது.

விடுதலை புலிகளின் அரசியற் பலமானது யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் கையிலேயே இருக்கிறது. 1983ற்குப் பின்னர் ஏராளமான யாழ்ப்பாணத் தமிழர்கள் குறிப்பாக ‘உயர்’ சாதித் தமிழரகள் ஐரோப்பாவிற்கும் கனடாவிற்கும் குடிபெயர்ந்து தம்மை நிலை நிறுத்திக்கொண்டனர். தாழ்த்தப்பட்ட மக்களும் வறியவர்களும் அநேகமாக நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்களாகவோ இந்திய அகதி முகாம்களில் வாழ்ந்து துன்பம் அனுபவிப்பவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்களது சிறார்கள் வறுமை காரணமாக ஒரு புறமும் வலுக்கட்டாயமாக மறுபுறம் புலிகளின் இராணுவத்தில் இணைக்கப்படுகிறார்கள். இந்த வெளிநாட்டு ‘உயர்'சாதிச் சமூகமே புலிகளின் அரசியல், பொருளாதார அடித்தளமாகச் செயற்படுகிறது.
வெளிநாட்டு தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பார்வையும் விடுதலை புலிகளின் அரசியல் பார்வையும் ஒன்றுக்கொன்று முண்டு கொடுப்பதாகவும் இணைந்து செயல்படுவதாகவும் இருக்கின்றன

வெளி நாட்டில் வாழும் இந்த ஆதிக்கசாதித் தமிழரகள்; ஊர் சங்கங்கள், கோவில்கள், சடங்குகள், தமிழ் பாடசாலைகள் மூலமாகத் தமது சாதி அமைப்பையும் சைவ சித்தாந்த கருத்தியலையும் பேணிக் காப்பற்றி வருகிறார்கள். சாதிச் சங்கங்களை மறைமுகமாக ஊர் சங்கங்கள் என்ற பேரில் அமைப்பதும் ஆதிக்க சாதியினரின் கடவுளரை வைத்து வெளி நாடுகளில் கோவில் கட்டி இலங்கையில் கூட இல்லாத புதிய ஆகம விதிகளும் அனுட்டானமும் கடைப்பிடிப்பதும் தங்கள் குழந்தைகளுக்கு சாதிய, சமயக் கலாச்சாரங்களைத் தமிழ் என்ற பெயரில் ஓதுவதும் தொடர்கிறது. ஊர் அடையாளமென்பது சாதிய அடையாளத்தின் வெளிப்பாடே. ஊர் பெருமை என்பது சாதிய பெருமையின் வெளிப்பாடே. இந்த ஊர் சங்கங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்க படுவதுமில்லை. அவர்கள் சேருவதுமில்லை.

இந்த சங்கங்களையும் கோவில்களையும் தமிழ் பள்ளிக்கூடங்களையும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் பினாமிகளுமே பெருமளவு கட்டுப்படுத்துகிறார்கள். நல்லூர் கந்தனுக்கு, காயத்திரிக்கு, பிள்ளையாருக்கு கோவில் கட்டும் இவர்கள் வைரவருக்கு, அய்யனாருக்கு, முனிக்கு ஏன் கோவில் கட்டவில்லை என்பதைச் சொல்லி தெரிய த் தேவையில்லை.
ஒரு புறம் இறுக்கமான சாதி அனுட்டானங்களை மேற்கொள்ளும் இவர்கள் தங்களை சாதியடிப்படையில் இறுக்கமாக அடையாளப்படுத்தி வருபவர்கள். மறுபுறம் தேசியவாதக் கருத்தியலுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார்கள். இது ஒன்றும் முரண்பாடல்ல. இவர்களது தேசியவாதம் சாதிய அடிப்படையில் அமைந்ததென்றே இது அச்சொட்டாக நிறுவுகின்றது.

மறுபுறம் சாதிய கட்டுமானத்தின் அரசியல் வெளிப்பாடாக வந்த தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதி இருப்பது போலி என மறுக்கிறது. சாதிய அமைப்பு முறைமையை அழித்தொழிப்பதற்கான தலித்திய சிந்தனை முறைமையையும் போராட்டத்தையும் தமிழ்த் தேசியவாதம் எவ்வாறு கொச்சைபடுத்தி முற்றாக மறைக்கப் பார்க்கிறது என்பதற்கு விடுதலைப்புலிகளின் ஆசியுடன் அதன் அதிகாரபூர்வ வெளியீடாக வந்த அடேல் பாலசிங்கத்தின் ‘சுதந்திர வேட்கை’ எனும் புத்தகம் வசமான உதாரணம். சாதிய பிரச்சனைகளைப் பற்றி மேலோட்டமாக இரண்டு பக்கங்களில் அதில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
அடேல் சொல்கிறார்:
“குறித்த இந்த சமுக மக்கள் யாழ்ப்பாண சமூக அமைப்பில் கள்ளிறக்கும் சாதி. பரிதாபம் என்னவென்றால் ஆற்றலும் கடின உழைப்பும் தற்பெருமையும் கொண்ட இந்த மக்கள் யாழ்ப்பாண சமுக கட்டமைப்பில் அடிமட்டத்தில் நிறுத்தப்பட்டருந்தனர். பிறப்பினால் ஒரு மனிதனை ஒரு சாதிக்குள் தள்ளி விடும் சமுக அமைப்பு காட்டு மிராண்டிதனமானது. ... யாழ்ப்பாணத்து சமுக அமைப்பை நான் கணிப்பிட்ட அளவில் அங்கு உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என வகுத்திருப்பது ஒரு போலியான அடிப்படையிலேயெ என்பேன்.... தம்மை உயர் சாதி என அழைத்துக்கொள்ளும் வெள்ளாள ஆண்கள் தம் அருகிலுள்ள கள்ளிறக்கும் வீடுகளுக்கு மறைவாக செல்வதை நான் கண்டுபிடித்த போது அது வேடிக்கையாகவே இருந்தது . நான் எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன். பிளாவில் கள் அருந்தியபடியே தாழ்த்தப்பட்ட பெண்களின் கரங்களால் மீன் பொரியலையும் இறால் பொரியலையும் சுவைத்து மகிழ்வதில் பல மணி நேரம் செலவிடுகிறார்கள். நல்ல தண்ணி போட்டதும் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற சமுகப் படி முறை காணாமல் போகிறது என்பதை அறிந்த போது அது மனதுக்கு ஆறுதலாக இருந்தது”.

பழங்குடி மக்களை நிறவாத அடிப்படையில் அழித்து தமது ஆதிக்கத்தை உருவாக்கிய அவுஸ்திரேலிய மண்ணில் இருந்து வந்த அவருக்கு கொஞ்சமாவது சமுகப் பிரக்ஞை இருந்திருந்தால் நூற்றாண்டுகளாக நிலவி வரும் சாதி அமைப்பு முறை போலியானதென்றும் கள்ளுக்கொட்டிலில் காணாமல் போகிறதென்றும் அடேல் கதையாடியிருக்க மாட்ட்டார். வெள்ளையர்களும் கருப்பர்களும் மதுச்சாலையில் ஒன்றாகக் குடித்தால் நிறவாதம் போலியானதாக போய்விடும் என்று கூட நாளை இந்த அம்மையார் எழுதக்கூடும். இவர் ஈழத்தில் இருந்த தசாப்தங்களில் தான் அண்ணாசாமி என்ற தலித் ஈவினையில் கண்டதுண்டமாக வெட்டப்பட்டார். அண்ணாசாமியுடன் ஒன்றாக குடித்த ‘உயர்’சாதி நபர்கள் இக்கொலையில் சம்பந்தம் என்பதும் உண்மை.

மறு புறம் தமிழ்த் தேசியவாதிகளின் தலித்தியம் குறித்த Official position இதுதான் என்பதும் தெளிவு.

தொகுப்பாக:
மேற்குறிக்கப்பட்ட தரவுகளின்படி தமிழ்த் தேசியவாதம் ஆதிக்க சாதிகளின் அரசியல் கருத்தியலின் வெளிப்பாடு. அது சாதிய சிந்தனை முறையில் ஊறிப்போய்க் கிடக்கிறது.

அகிம்சை போராட்டத்திலிருந்து ஆயுதப்போராட்டம் வரை சாதிய கூறுகளின் அடித்தளத்திலேயே தமிழ்த் தேசியவாதம் கட்டப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பா, அமெரிக்காவரை சாதியமைப்பின் கரங்கள் நீண்டுகொண்டே போகின்றன. வெளிநாடுகளிலும் தனது சாதிய இருப்பை யாழ்ப்பாணத்து ஆதிக்கசாதி சமய - கலாச்சார - கல்வி அமைப்புகளை நிறுவித் தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறது. அதுவே தமிழ்த் தேசியவாதத்தின் கருத்தியல் வெளிப்பாடாக அலையாய்ப் பரவுகிறது.

தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் தலித்தியக் கருத்தியலுடன் அடிப்படியில் முரண்படுகிறது. தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் சாதியத்தை தனது கருத்தியல் அமைப்பியல் பரிமாணங்களாகக் கொண்டிருக்கிறது. தலித்தியம் சாதிய கட்டுமானத்தையும் அதன் கருத்தியல் தளத்தையும் அம்பலப்படுத்தும் போது தேசியவாதம் ஈடாடிப்போகிறது. சாதி இல்லை என்று மறுக்கிறது.

இதன் பின்னணியில் பல்வேறு வரலாறுகள் போராட்டங்கள் மறைக்கப்படுகின்றன அல்லது திரிக்கபடுகின்றன. தலித்திய சிந்தனை, அதன் வரலாறு, போராட்டங்கள் அனைத்தும் ஒற்றை பரிமாண வரலாற்றியலால் மறைக்கப்படுகின்றது.

தலித்தியம் ஒருபுறம் தேசியவாதக் கருத்தியலுக்கெதிராகப் போராட வேண்டியிருக்கிறது. மறு புறம் ‘உயர்’ சாதி ஆதிக்கத்திற்கும் சைவசித்தாந்த கருத்தியலுக்கும் எதிராகப் போராட வேண்டியிருக்கிறது. தமிழத் தேசியவாதம், ‘உயர்’ சாதி ஆதிக்கம், சைவ சித்தந்தம் அனைத்தும் பின்னி பிணைந்திருப்பினும் இவற்றை வெவ்வேறு தளங்களில் தலித்தியம் சந்திக்க வேண்டியிருப்பதே கள யதார்த்தம்.

தமிழ்த் தேசியவாதக் கருத்தியலின் வீச்சு இன்று தலித் இருப்புக்கான அற்ப சொற்ப சனநாயகத்தையும் மறுத்துத் தலித்திய போராட்டங்களை வடக்கில் அடக்கி ஒடுக்கி முடிவுக்கு கொண்டு வந்த இச்சூழலில் புலம் பெயர்ந்த நாடுகளில் தலித்தியம் தனது தடத்தைப் பதித்திருக்கிறது. தலித்தியமானது தன்னை ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கம், பால்நிலை ஆகியவற்றுடன் அடையாளம் காண்பதால் குறுந் தமிழ்த் தேசியப் பார்வையை நிராகரிக்கிறது. தலித்தியத்திற்கு ஒரு விசாலமான பார்வை இருக்கிறது. Dalit panthers அமெரிக்காவில் கருப்பின மக்களின் சமூக விடுதலைப் போராட்டத்துடன் தங்களை அடையாளப்படுத்திய பாரம்பரியத்தை கொண்டவர்கள். இலங்கையிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் சாதியால் நிறத்தால் பால்நிலையால் அரசியல் பொருளாதார அமைப்பால் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மாந்தர்களை ஒன்றிணைக்கும் விடியலிற்கான விடுதலைக் கோட்பாடு தலித்தியம்.

(இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் பிரான்ஸில் நடத்தப்பட்ட முதலாவது தலித் மாநாட்டில் (20.10.2007)வாசிக்கப்பட்ட கட்டுரை.)


பயன்பெறு பிரதிகள்:
1.Caste of the Tiger /Ravikumar/ http://www.himalmag.com/
2. Anderson / Immagined Communities
3. E Leach /Aspects of Caste / 1960
4. Gail Omvolt/ Dalit Vision
5. Murugkar /Dalit Panther Movement in Maharashtra/ 1990
6. அடேல் பாலசிங்கம்/ சுதந்திர வேட்கை/ Fir Max
7. S L Sharma et al / nation and national identity in South Aisa

Wednesday, June 06, 2007

நேர்காணல்: ஷோபாசக்தி

மே 2007, புதுவிசை இதழில் வெளியான நேர்காணல்.


உரையாடல்: நீலகண்டன், சிராஜுதீன்






Rogue படைப்பாளி எனத் தமிழ்ச் சூழலில் உங்களைப் பற்றிய விம்பம் குறித்து?





அப்படியா சொல்கிறார்கள்? சமூக ஒழுக்கங்கள் எனச் சொல்லப்படுபவற்றை நான் கடை பிடிக்காததினாலும் சொந்த வாழ்விலும் எழுத்திலும் காதல், சேர்ந்து வாழ்வது, குடும்பம், குழந்தைகள் போன்றவற்றை நான் மறுத்து வருவதாலும் வேலை, தொழில் போன்றவற்றில் அக்கறையற்றிருப்பதாலும் எனது போதைப் பழக்கத்தாலும் என் குறித்து இப்படியொரு விம்பம் ஏற்பட்டிருக்கலாம்.ஆனாலும் கட்டாய உழைப்பை வலியுறுத்தும், மனிதர்களைத் தொடர் கண்காணிப்பிற்குள் வைத்திருக்கும் அய்ரோப்பிய நவீன முதலாளிய சமூக அமைப்பில் முழுமையான Rogue மனநிலையில் வாழ்வது முடியாத காரியமாய்த்தானிருக்கிறது.





வீரத்தையும் தியாகத்தையும் தனிமனித ஒழுக்கத்தையும் ஆண்மையையும் தேசபக்தியையும் மொழிப்பற்றையும் உழைப்பையும் கொண்டாடும் நமது தமிழ்ச் சூழலிலோ இயக்கப் போராளியாகவோ கட்சி ஊழியனாகவோ இருப்பதைவிட Rogue மன நிலையில் வாழ்வது சவாலானது. வன்முறையும் ஒழுங்குகளும் நிறைந்த இந்தச் சமூக அமைப்பில் பித்துநிலை அல்லது Rogue மனநிலையைத் தக்க வைத்திருப்பதால் மட்டும்தான் ஒருவர் தன்னைச் சுதந்திர உயிரியாகத் தன்னளவில் உணர்ந்துகொள்ள முடியும் என்றே நான் கருதுகிறேன்.







போர்ச்சூழலும் நாடோடித்தன்மையும் கொண்ட உங்களது வாழ்வியற் பின்னணியிலிருந்து கொண்டு உங்களால் எப்படி இவ்வளவு நக்கலும் நையாண்டியுமாகக் கதை சொல்ல முடிகிறது?





நான் போரைப் பற்றியும் புகலிடத்தைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் தேசியவாதத்தைப் பற்றியும் சாதியைப் பற்றியும் காதலைப் பற்றியும்தானே கதைகளைச் சொல்கிறேன். இவைகள் அனைத்தும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவைகள்தானே! இந்த வலிமை பொருந்திய சாமான்களை எதிர்கொள்ள நையாண்டியைத் தவிர என்னிடம் வேறெந்த ஆயுதங்களும் தற்போது கைவசமில்லை.






இன்றைக்கு வரைக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகயிருந்தவர்டி எனத் தமிழ்த் தேசியர் களால் விதந்தோதப்படும் இந்திராகாந்தியின் மரணம் உங்கள் கொரில்லாவில் ‘ஒரு மாடு செத்துப்போனது மாதிரியான கவலைதான் ஈழத்திலிருந்தது’ என்பது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது?






நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். கொரில்லா நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ள என்னுடைய கிராமம் ஈழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமல்ல. எனது கிராமத்தில் மக்களுக்கு 1984களில் அன்றாட அரிசியையும் மீனையும் பெற்றுக்கொள்வதுதான் ஒரே அரசியல். அரசியல் கட்சிகளின் கிளைகளோ கொடிகளோ உறுப்பினர்களோ எங்கள் கிராமத்தில் கிடையாது. தீப்பெட்டியென்றால் யானை மார்க் தீப்பெட்டி, சவர்க்காரமென்றால் சன்லைட் சவர்க்காரம், சைக்கிளென்றால் ரலி சைக்கிள் வாக்குப் போடுவதென்றால் உதய சூரியனுக்குப் போடுவது என்பவைதான் கிராம மக்களின் வாழ்க்கையாயிருந்தது.அவர்களின் ஏழ்மையும் அறியா மையும் அவர்களைத் தமக்கான அரசியல் குறித்துச் சிந்திக்கவிடவில்லை. அவர்களில் பலர் ‘மகாத்மா’ காந்தியின் மகள்தான் இந்திராகாந்தி என்றுகூட நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம்தான் இந்திராவின் மரணம் ஒரு மாடு செத்தது போன்ற சலனத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்திராகாந்தியின் சாவு யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகளிடையேயும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களின் இளைஞர்களிடம் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்தது. அப்போது எங்களின் கைகளில் சீக்கியர்கள் யாராவது சிக்கியிருந்தால் யாழ்ப்பாணத்தில் அவர்களை உயிருடன் சமாதியாக்கியிருப்போம். அவ்வளவுக்கு எங்களுக்கு இந்திரா கிறுக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணம் முழுவதும் இந்திராகாந்தியின் சாவையொட்டிக் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.அப்போது ஆயிரக்கணக்கான ஈழப்போராளிகள் தமிழகத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் இந்திய இராணுவத்தினரால் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ‘1985 பொங்கலுக்குத் தமிழீழம்' என்று கட்டிவிடப்பட்டிருந்த கதையாடலின் மீது பெருத்த இடியாக இந்திராவின் சாவு இறங்கியது.





1977ல் இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியைக் கைப்பற்றியதுடன் அவரின் வெளிப்படையான அமெரிக்கவுடனும் சீனாவுடனுமான உறவுகள், சுதந்திர வர்த்தக வலையம் என்ற பெயரில் மேற்கு நாடுகளின் தொழிலாதிக்கம் இலங்கையில் நிலவ வழிசெய்தது, சிறிமாவோ பண்டாரநாயக்க அதுவரை கடைப்பிடித்து வந்த இந்தியாவுக்கு அடிபணியும் கொள்கையை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கைவிட்டது போன்ற காரணிகளால் இந்திய ஆளும் வர்க்கம் இலங்கையில் அரசியல் உறுதிப்பாடற்ற நிலைமைகளைத் தோற்றுவித்து இலங்கை அரசைத் தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே ஈழப்போராளிகளைக் கருவிகளாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. போதிய அளவுக்கு உள்நாட்டு யுத்தம் மூண்டதும் அதைச் சாக்காக வைத்து இந்தியா இலங்கையின் இறைமையில் நேரடியாகவே தலையிட்டது. 1985ல் திம்புவில் நடந்த பேச்சு வார்த்தைகளும் 1987ல் செய்யப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தமும் அதைத் தொடர்ந்த இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பும் முற்று முழுதாக இந்திய ஆளும் வர்க்கங்களின் பிராந்திய நலன் என்ற நிலையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. அதனால் தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் சிங்கள மக்களாலும் எதிர்க்கப்பட்டது, தமிழர்களாலும் எதிர்க்கப்பட்டது. ஆனால் தொண்ணூறுகளில் சோவியத் யூனியனின் உடைவால் உலக அரசியலில் அமெரிக்கா தனிப் பெரும் வல்லரசாக உருவாகியது, இலங்கையில் மேற்கு நாடுகளின் மூலதனமும் மேற்கு நாடுகளில் இலங்கை அகதிகளும் குவிந்து கிடப்பது போன்ற காரணிகளால் இந்தியாவால் இப்போது நேரடியாக இலங்கை அரசிய லில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இலங்கை இப்போது மேற்கு நாடுகளினதும் ஜப்பானினதும் இந்தியாவினதும் வலிமைகளைப் பரிசோதிக்கும் களமாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கை தனது அனைத்து அரசியல் பொருளியல் இறைமைகளையும் இழந்து முற்றுமுழுதாக மறுகாலனியாக்கப் பட்டுள்ளது. இலங்கை அரசின் கதியே இதுவென்றால் விடுதலைப்புலிகளின் கதியை யோசித்துப் பாருங்கள்! இல்லாத இறைமையை அவர்கள் எங்கே போய் இழப்பது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமான அமைதிப் பேச்சுவார்த்தையை மட்டுமல்ல யுத்தத்தையும் தீர்மானிக்கும் நெறிப்படுத்தும் தீர்மானகரமான சக்திகளாக இந்த அந்நிய வல்லாதிக்கவாதிகளே இருக்கிறார்கள். ஒருகாலத்தில் இலங்கையின் இறைமை வெளிகளில் இந்தியா மட்டுமே நுழைந்தது. ஆனால் இப்போது நடப்பது கூட்டுக் கொள்ளை. ஆனால் இன்னமும் இந்திரா காந்தியை மட்டுமல்ல எம்.ஜி.ஆரையும் ஈழத்தமிழர்களின் காவல் தெய்வங்களாகக் கொண்டாடும் தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் ஈழத்து அரசியலில் செல்வாக்குப் பெற்றவர்களாகவுமிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் நிலைப்பாடே அப்படித்தானேயிருக்கிறது!





உரிமைகளுக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேசத்தின் புரட்சிகரத் தோழமைகள் முக்கியமானவை. குறிப்பாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் எங்களது தோழமை கொம்யூனிஸ்டுகளுடனும் நக்ஸல்பாரிகளுடனும் தானிருக்க வேண்டும். ஆனால் ஈழப் போராட்டத்தை தலைமை தாங்கியவர்களின் தாங்குகிறவர்களின் குறுந்தேசியவாதமும் இஸ்லாமிய எதிர்ப்பும் கலாசார அடிப்படைவாதமும் அதிவலதுசாரித்தனமும் ஈழப் போராட் டத்தின் ஆதரவு சக்திகளாக வைகோவையும் நெடுமாறனையும் ராமதாஸையும் பால்தாக்கரேயையும் தான் திரட்டி வைத்திருக்கிறது. ‘குருட்டுப் பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும்’ என்பார்கள்.






உலகமயச் சூழலில் திரும்பத் திரும்ப இயக்கமாக வேண்டிய தேவைகள் இந்தியா இலங்கை போன்ற மூன்றாம் உலகநாடுகளின் தேவையாயுள்ளபோது நீங்கள் தொடர்ந்து இயக்கங்களைத் தாக்கியும் விமர்சித்தும் வருகிறீர்களே?





நான் ஒருபோதும் இயக்கங்களின் அமைப்புகளின் தேவையை மறுத்துப் பேசியதில்லை. எதிரி அமைப்பாகத்தான் இருக்கின்றான். அவன் அந்த அமைப்பைக் கட்டிக் காப்பதற்கு பொலிஸ், ஆயுதப்படைகள், நீதிமன்றம், சிறைச்சாலை என்று உபஅமைப்புகளையும் தன்னைக் காப்பாற்றும் சட்ட ஒழுங்குகளையும் தன்னை நியாயப்படுத்தும் தத்துவங்களையும் கட்டிவைத்திருக்கின்றான். பண்பாட்டுக்கூறுகளில் தன் நலனைப் பிரதிபலிக்கும் கருத்தாக்கங்களை மறைத்தும் வைத்திருக்கின்றான். இத்தனை தந்திரமாகவும் உறுதியாகவும் நிறுவப்பட்டிருக்கும் அமைப்புக்கு எதிராகப் போராடுவதெனில் எதிரி உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களைச் சிதைப்பதெனில் நாம் நிச்சயம் அமைப்பாக வேண்டும். புரட்சிகரக் கட்சியாக வேண்டும்.





ஆனால் வரலாறு முழுவதும் நமது புரட்சிகரக்கட்சிகளின் பண்புகளை மீள்மதிப்பீடு செய்து பாருங்கள். அவர்களின் இலட்சியங்கள் முதலாளியத்திற்கு அதிகாரத்திற்கு எதிராகவிருக்கும் வேளையில் அவர்களின் அமைப்பு கட்சி வடிவங்கள் முதலாளித்துவக் கட்சிகளின் மாதிரியிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சனநாயகத்துவ மத்தியகுழு, புரட்சிகர நிறைவேற்றுக்குழு என்ற ஏதோவொரு குழுதான் அமைப்பின் முழு வேலைத்திட்டத்தையும் நிர்ணயிக்கிறது. பரந்துபட்ட மக்கள்திரளின் வித்தியாசம் வித்தியாசமான பிரச்சினைகளை வர்க்கமென்றோ தேசிய இனமென்றோ இதுவரையான நமது அமைப்புக்கள் சாராம்சப்படுத்தி வந்திருக்கின்றன. வித்தியாசங்களைச் சாராம்சப்படுத்துவது, அதிகாரத்தை ஓரிடத்தில் குவிப்பது போன்ற பண்புகளின்றி அதிகாரம் பரவலாக்கப்பட்ட புரட்சிகர அமைப்புக்களைத்தான் நாம் கண்டடைய வேண்டும். அமைப்புகள் கட்சிகள் குறித்து விமர்சனங்களை அய்ரோப்பியச் சூழலிலும் சரி தமிழகச் சூழலிலும் சரி முன்வைத்த நவீனத்துக்குப் பிந்திய முக்கிய சிந்தனையாளர்கள் இடதுசாரிகளாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவும் தீவிர சமூக அக்கறையாளர்களாகவுமே இருந்தார்கள். ஆனால் இங்கே என்ன நடக்கிறதென்றால் என்.ஜி.ஓ க்களிடமும் வலதுசாரி அறிவுத்துறைக் கட்டமைப்புகளிலும் தஞ்சம் புகுந்திருக்கும் அறிவுத்துறையினர், அமைப்புகள் - கட்சிகள் குறித்த நவீனத்துக்குப் பிந்திய சிந்தனைகளை எளிமைப்படுத்தித் தமது குற்ற உணர்ச்சிகளைத் தணிப்பதற்கான ஒளடதமாகத் தடவிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவாதங்களுக்கு அப்பால் நமது சூழலைப் பொறுத்தவரை ஒருவகையான நக்ஸல்பாரி மனநிலை அறிவுஜீவிகளுக்குத் தேவை என்று சொல்லும் அ.மார்க்சுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.





உலகமயமாக்கலை இந்தியாவும் இலங்கையும் முழுமையாக ஏற்றுக்கொண்டன. இந்தியாவில் பல்வேறு இயக்கங்களும் உலகமயமாக்கலை எதிர்க்கின்றன. இலங்கையில் LTTE யின் நிலை என்ன?






2002லேயே வன்னியில் புலிகள் கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் தமது இயக்கத்தின் பொருளாதாரக்கொள்கை திறந்த பொருளாதரக் கொள்கைதானென்று பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தினார். இலங்கையில் மின்சாரம், நீர் வழங்கல் போன்ற பொதுச்சேவைகள்கூட அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலே வீழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள சம்பூரில் ஒரு அனல்மின் நிலையத்தை அமைக்கவிருக்கிறது. 'வொய்ஸ் ஒப் அமெரிக்கா' இன்னும் இலங்கையில் இயங்கிக் கொண்டி ருக்கிறது. இது குறித்தெல்லாம் புலிகள் எப்போதுமே வாய் திறந்ததில்லை. நவீன உலக அரசியல் வரலாற்றிலேயே விடுதலைப் புலிகளைப்போல ஏகாதிபத்திய அடிவருடிகளான ஒரு தேசிய 'விடுதலை' அமைப்பை நீங்கள் கண்டிருக்க முடியாது. அண்மையில் ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் அமெரிக்காவால் தூக்கிலிடப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட நிகழ்வை எடுத்துக்கொள்ளுங்கள், இதுவரையில் புலிகள் சதாமின் கொலைக்கு வாயளவிலான ஒரு கண்டனத்தைத் தன்னும் தெரிவித்தார்களில்லை. புலிகள் முதலாளியத்தினதும் உலகமயமாக்கலின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல விசுவாசமான பாதுகாவலர்களும் கூட. வாரத்திற்கு ஒருமுறை வெளிநாட்டுத் தூதுவர்களையும் இராசதந்திரிகளையும் சந்திக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர், 1987 சுதுமலைப் பொதுக்கூட்டத்திற்குப் பின்பு கடந்த இருபது வருடங்களாகப் பொதுமக்களைச் சந்திக்கவேயில்லை என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.






சரி அங்குள்ள இடதுசாரிகளின் எதிர்ப்பு எப்படி உள்ளது?






சோஸலிச சமத்துவக் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி போன்ற மிகச்சிறிய அமைப்புகள் உலகமயமாக்கலைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி போன்ற பெரும் கட்சிகள் இடதுசாரிப் பாதையிலிருந்து இனவாதப் பாதைக்கு நகர்ந்து வெகுநாட்களாகின்றன.அவர்கள் அரசின் அமைச்சரவையில் இடம் பிடித்துக் கொண்டு உலகமயாக்கலுக்கு ‘கொள்கை’ விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று சிங்களக் கிராமப்புற மக்களிடமும் மாணவர்களிடமும் பெரும் செல்வாக்கைக் கொண்டிருக்கும் ஜேவிபி தனது கடந்த கால ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியத்தைக் கைவிட்டு வாக்குப் பொறுக்கிகளின் கூடாரமாகி விட்டது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பொறுத்தளவில் அங்கே எந்த இடதுசாரிக் கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இயங்குவதற்கு அனுமதியில்லை. மக்களின் கருத்துரிமை, பேச்சுரிமை அரசியல் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் உரிமைகள் அனைத்துமே பாஸிசப் புலிகளால் மறுக்கப்பட்டுள்ளன. மக்களுக்குச் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைகூடக் கிடையாது. உங்களுக்கு ஒரு பாப்பாப்பட்டி கீரிப்பட்டிதான். ஆனால் எங்கள் தேசம் முழுவதுமே பாப்பாப்பட்டி கீரிப்பட்டியாய்க் கிடக்கிறது.





உலக மார்க்ஸியர்களால் ஓடுகாலிப் பட்டம் சூட்டப்பட்ட டிராட்ஸ்கியை நீங்கள் ஆதரிப்பது?






இப்படி எடுத்தவீச்சுக்கு ஓடுகாலி, கந்தலாண்டி, திரிபுவாதி, திருத்தல்வாதி, கலைப்புவாதி, காட்சிவாதி, துரோகி என்று பட்டங்கள் கட்டித்தானே நாசமாய்ப்போய் நடுத்தெருவில் நிற்கிறோம். இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராகயிருந்த கொல்வின் ஆர்.டி. சில்வாவும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களும் ட்ராட்ஸ்கியவாதிகளே. 1939ல் கட்சி ஸ்டாலினின் தலைமையிலான மூன்றாவது அகிலத்தின் மீது நம்பிக்கையின்மைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. உலகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகளிலிருந்து ட்ராட்ஸ்கிஸ்டுகள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது இலங்கையின் முதலாவது இடதுசாரிக்கட்சி, கட்சியிலிருந்த ஸ்டாலினிஸ்டுகளை வெளியேற்றியது. ஆக இலங்கையைப் பொறுத்தளவில் ஓடுகாலிப்பட்டம் ஸ்டாலினிஸ்டுகளுக்கு என்பது வரலாற்றின் முரண்நகை.





மலையக மக்களின் பிரசாஉரிமையை சேனநாயக்க அரசு பறித்தபோது அதற்கெதிராக ல.ச.ச. கட்சி தீவிரமாகப் போராடியது. தனிச்சிங்களச் சட்டமசோதா விவாதத்தின்போது ட்ராட்ஸ்கிஸ்டுகளான என்.எம்.பெரேராவும் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் முக்கியமானவை, தீர்க்கதரிசனமானவை. "உங்களுக்கு அமைதியான அய்க்கியமான ஒரு இலங்கை வேண்டுமா அல்லது இரண்டாகத் துண்டாடப்பட்ட இரத்தப் பெருக்கெடுத்த ஏகாதிபத்தியப் பிசாசுகளால் விழுங்கப்படப்போகும் இரண்டு இலங்கைகள் வேண்டுமா? அதனால் இந்து சமுத்திரம் முழுவதும் ஏகாதிபத்தியப் பிசாசுகளுக்கு இரையாகும்", "இரண்டு மொழிகளென்றால் ஒருநாடு! ஒரு மொழியென்றால் இருநாடு!" என்றார் கொல்வின் ஆர்.டி. சில்வா. 1964ல் ல.ச.ச.கட்சி அரசோடு இணைந்துகொண்டதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் 1968ல் தோழர். கீர்த்தி பாலசூரியாவை செயலாளராகக் கொண்டு புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. கழகம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக்கான பிரிவாயிருந்தது. 1990களில் புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகம் ‘வடக்குக் கிழக்கிலிருந்து சிறிலங்கா இராணுவமே வெளியேறு! தமிழ் - முஸ்லீம் -சிங்களப் பாட்டாளிகளின் அய்க்கியம் ஓங்கட்டும்!!’ என்பதையே தனது முதல் முழக்கமாய்க் கொண்டு இயங்கியது. நான் 1993லிருந்து 1997வரை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்காகப் பிரான்ஸில் வேலை செய்தேன். இங்கிருந்து வருகிறது என் ட்ரொட்ஸ்கியப் பாரம்பரியம்.






இப்பொழுது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சோஸலிச சமத்துவக் கட்சியாகப் பெயரையும் பண்பையும் மாற்றிக் கொண்டுவிட்டது. எனக்கும் கட்சியின் மீது ஆயிரெத்தெட்டு விமர்சனங்கள் உள்ளன. ஸ்டாலினிசமா? ட்ராட்ஸ்கிஸமா? என்று புகலிடப் பத்திரிகைகளில் முரட்டுத்தனமான விவாதங்களில் ஈடுபட்ட காலத்தையும் நான் கடந்து வந்துவிட்டேன். ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கி என்ற ஆளுமைமீது எனக்குள்ள ஈடுபாடு இன்னமும் அப்படியேதானுள்ளது. மார்க்ஸிய இயக்கத்திற்குள் காரல் மார்க்சுக்கு அடுத்தபடியாகத் தோன்றிய இலக்கிய ஆளுமை ட்ரொட்ஸ்கியே என்பார்கள். பிரஞ்சு எழுத்தாளர் ஆந்ரே பிரட்டனும் மெக்ஸிகோ ஓவியர் ரிவேராவும் இணைந்து 1938ல் வெளியிட்ட புகழ்பெற்ற அறிக்கையான ‘சுதந்திரமான புரட்சிகரக் கலையை நோக்கி’ என்ற அறிக்கைக்குப் பின்னணியிலிருந்தவர் ட்ராட்ஸ்கியே. கலை இலக்கியத்தின் சுதந்திரம் குறித்த அவரின் கருத்துக்களே எனக்கு இப்போதும் வழிகாட்டி.






ஈழத்தில் சாதியில்லை எனத் திரும்பத் திரும்ப பத்மநாபா அய்யர் சொல்வதிருக்கட்டும், எஸ். பொவும் சொல்கிறாரே?






ஈழத்தில் சாதியில்லை என்றால் பத்மநாபன் தன் பெயருக்குப் பின்னால் இன்னமும் எதுவித குற்றவுணர்வுமில்லாமல் போட்டிருக்கும் ‘அய்யர்’ பட்டத்தையும் இயல் விருதோடு சேர்த்து இவருக்கு ரொரன்டோ பல்கலைக்கழகமா கொடுத்தது? இந்த மாபாவி வெறும் சாதி அபிமானி மட்டுமல்ல அய்ரோப்பிய புலம்பெயர் இலக்கியச்சூழலில் ஆட்காட்டியாக, தலையாட்டியாகவும் இருந்து வருகிறார். ‘மூன்றாவது மனிதன்’ என்றொரு சிற்றிதழ் இலங்கையிலிருந்து வெளியிடப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அந்த இதழ் சனநாயத்தையும் கருத்துரிமையையும் முக்கிய கோரிக்கைகளாக முன்னிறுத்தித் தோழர்.எம்.பௌஸரால் நீண்ட காலங்களாகவே வெளியிடப்படுகிறது. கடந்த வருடம் இலண்டனில் நடந்த இலக்கியச் சந்திப்புக்காகத் தோழர்களால் பௌஸரும் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த பத்மநாபன் பௌஸரின் வருகையைத் தடுத்து நிறுத்த முயன்றார். எனினும் மற்றைய சந்திப்பு ஏற்பாட்டுத் தோழர்கள் பௌஸரை அழைப்பதில் உறுதியாக நின்றார்கள். உடனே சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவிலிருந்து விலகிய இந்தத் துட்டப் பார்ப்பனர் பௌஸர் ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதி, அல்கைதாவின் கூலிப்படை என்றெல்லாம் வதந்திகளை உருவாக்கி உலவவிட்டார். இந்த வதந்தி புலி ஆதரவு இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டது. இதனால் பௌஸருக்கு பெருத்த சிரமங்கள் ஏற்பட்டன. இது குறித்து பௌஸர் வழங்கிய நேர்காணலைத் தோழர்கள் இப்போதும் thenee.com என்ற இணையத்தளத்தில் படிக்கலாம். ஆனால் பத்மநாபனைக் கேட்டால் ஈழத்தில் சாதிமட்டுமா இல்லை... முஸ்லீம்கள் மீதான புலிகளின் அடக்குமுறையும் தானில்லை என்றுதான் சொல்வார்.





எஸ். பொ. ஈழத்தில் சாதியில்லை என்று ஒருபோதும் சொல்லியிருக்கமாட்டார். அவர் அண்மையில் எழுதிய தன்வரலாற்று நூலான வரலாற்றில் வாழ்தலில் கூட ஈழத்தின் சாதிக்கொடுமைகளைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கொம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரான து.வைத்தியலிங்கம் கூடத் தன்னிடம் சாதி பாராட்டியதை அவர் அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் புலிகள் தலையெடுத்த பின்பு ஈழத்தில் சாதியொடுக்குமுறைகள் குறைந்திருக்கின்றன என எஸ்.பொ சொல்லியிருக்கக்கூடும். இன்று ஈழத்தில் தீண்டாமைக் கொடுமைகள் ஓரளவுக்கு குறைந்திருக்கிறதென்றால் அதைக் குறைத்த பெருமை எஸ்.ரி.என்.நாகரத்தினம், கே.டானியல் போன்றவர்கள் தலைமை தாங்கிய தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தையே சேரும். புலிகள் உட்பட எல்லாத் தேசிய விடுதலை இயக்கங்களுமே சாதிப்பிரச்சினைகளை கையிலெடுக்கத் தயங்குகிறார்கள். என்றைக்கு அவர்கள் சாதிய ஒழிப்பை முழுவதுமாக உண்மையாக முன்னெடுக்கிறார்களோ அன்று அவர்கள் ஈழத்து வெள்ளாளர்களால் முற்று முழுவதுமாகக் கைவிடப்படுவார்கள் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். சாதியத்தின் வேர்கள் அதன் வரலாற்றுரீதியான இயங்குமுறைமைகள், இந்துப் பண்பாட்டுத்தளத்தில் அதன் அசைக்க முடியாத வலிமை, ஈழத்து ஆதிக்க சாதிகளின் சாதியக் கூட்டுமனம், அரசியல்- பொருளியல்- பண்பாடு - இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் நிறைந்திருக்கும் அதன் ஆதிக்கம் என்பவற்றைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தொடர்ச்சியால்தான் நாம் எதிர்கொள்ள முடியும். சாதிய விடுதலையை மையச் சிந்தனையாக இலட்சியமாக வரித்துக் கொண்ட தலித்துகளின் தலைமையில் அமைந்த ஓர் அமைப்பால்தான் ஈழப்புலத்திலிருந்து சாதியை ஒழிக்கும் திசையில் நேர்மையுடனும் உறுதியுடனும் செயற்பட முடியும். அதை விடுத்து சாதியத்தை ஒரு பேசுபொருளாகவே கொள்ளாத தமிழ்த் தேசியம் சாதியத்தை வெற்றிகொள்ளுமென்பது மடமைத்தனம். புத்தராலும் மார்க்ஸியத்தாலும் சாதிக்க முடியாததைக் கேவலம் பாஸிசம் சாதித்துவிடுமென்றா எஸ்.பொ நம்புகிறார்!





தமிழகத்தில் தலித் இலக்கியத்திற்கு முக்கிய இடமொன்று உருவாகியுள்ளது. ஆனால் உங்களால் டானியலை பருமனாக்கிய அளவுக்கு அரசியலாக்க முடியவில்லையே ஏன்?





பதில் மிகவும் எளிமையானது. உங்களுக்கு ஒரு ஜோதிபா பூலேயும் அயோத்திதாஸரும் அம்பேத்கரும் பெரியாரும் இருந்தார்கள். எங்களுக்கென்று யாருமில்லையே. நாங்கள் கே.டானியலை தலித் இலக்கிய முன்னோடி என்று நிறுவுவதை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ டானியல் இப்போது உயிருடன் இருந்தால் அவர் நிச்சயமாக ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். டானியல் தனது இறுதிக்காலம் வரை கொம்யூனிஸ்டாகவே வாழ்ந்தவர். அவர் சாதிய ஒழிப்பிற்காகத் தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்துப் போராடிய போதிலும் அவர் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டே இயங்கவேண்டியிருந்தது. அவர் அங்கம் வகித்த சீனச் சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சி ஈழத்துச் சமூக அமைப்பின் பிரதான முரணாகச் சாதியத்தை அடையாளம் காணவில்லை. தவிரவும் இந்துமத ஒழிப்பையோ தலித்துகள் பவுத்த மதத்தில் இணைவதையோ அவர்கள் ஆதரிக்கவுமில்லை. கட்சியின் தலைமை வெள்ளாளர்களிடமே இருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். டானியல் கட்சியில் நிம்மதியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. அவர் நான்கு தடவைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்த நீக்கங்களை டானியலின் சாதிய விடுதலை முன்னோக்கும் கட்சியின் வர்க்க விடுதலை முன்னோக்கும் இடைவெட்டிக் கொண்ட புள்ளிகளாகத்தான் நாம் கருத வேண்டியிருக்கிறது.





டானியலின் எழுத்துக்களிலிருந்து அவரும் மரபு மார்க்ஸியர்களைப் போலவே சாதியத்தை நிலமானிய சமூக அமைப்பின் விளைவாகவும் சாதி வர்க்கப் புரட்சியுடன்தான் முடிவுக்கு வரும் என்றும் கருதிக் கொண்டிருந்தார் என்றுதான் உணர முடிகிறது. இது சாதியம் புலிகளால்தான் முடிவுக்கு வரும் என்ற கருத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு மேலானது என்றாலும் இன்றைய தலித் அரசியலுக்குப் பொருந்தாத பார்வை. இதைத்தான் எங்களிடம் பெரியாரும் அம்பேத்கரும் இருந்திருக்கவில்லை என்று சொன்னேன்.இங்கேதான் டானியலை அரசியலாக்க முடியாத பிரச்சினையிருக்கிறது. டானியலும் அவரது தோழர்களும் விட்ட இடத்திலிருந்து நாங்கள் தொடங்கலாமேயொழிய அவர்களின் அரசியலை அடியொற்றிச் செல்வது முடியாத காரியம். இதில் காலக் குழப்பம் எதுவுமில்லை. புத்தரும் அம்பேத்கரும் பெரியாரும் டானியல் காலத்திலும் தலித் விடுதலை அரசியலுக்கு வழிகாட்டிகளாக ஆசான்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய தலித் விடுதலை அரசியலுக்கும் வழிகாட்டிகளாக யிருக்கிறார்கள்.





பின்நவீனத்துவம் அய்ரோப்பியச் சூழலுக்கு பொருந்தும் நமது சூழலுக்குப் பொருந்தாது என இங்குள்ளவர்கள் சொல்கிறார்களே?





பின்நவீனத்துவநிலை என்பது ஒரு தத்துவமோ அரசியல் இயக்கத்தின் வேலைத்திட்டமோ இலக்கியக் கோட்பாடோ கிடையாது. அது அறிதல் முறைகளின் தொகுப்பு. பின்நவீன அறிதல்முறைகள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது மேற்கிலேயே காலாவதியான போக்கு என்று டெர்ரி ஈகிள்டன் போன்றவர்களைச் சான்றாதாரங்களாக நிறுத்தி இங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று மேற்கத்திய அறிவுத்துறையை பின் நவீனத்துவப் பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டுதானிருக்கிறது. இலக்கிய, அரசியல், மொழியியல் துறைகளில் ஆரம்பித்த பின்நவீனத்துவ ஆய்வுமுறைகளின் வீச்சு இன்று பல்கலைக்கழக பாடவிதானங்களிலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. எனவே இப்போது என்னயிருந்தாலும் பின்நவீனத்தவம் நமது சூழலுக்குப் பொருந்தாது என முனக ஆரம்பித்திருக்கிறார்கள். நவீனத்துவத்தின் ஒற்றைப்படைத்தன்மைக்கும் பன்மைகளின் நிராகரிப்புக்கும் எதிராகக் கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும் ஓர் அறிதல் முறைமை நமது சூழலுக்குத் தேவையில்லை என்று சொல்வதில் ஏதாவது அறிவுநாணயம் இருக்க முடியுமா? பின்நவீனத்துவம் அறிதல் முறைகளின் தொகுப்பு என்பதை மீறி பின்நவீனத்துவம் ஒரு விடுதலை மார்க்கம், விடுதலை அரசியல் வேலைத்திட்டம், எல்லா ஒடுக்குமுறைகளுக்கு மான தீர்வென்றெல்லாம் யாரும் சொல்லவில்லையே.





பின்நவீனத்துவம் கடவுளுமல்ல அபினுமல்ல.





சமீபகாலமாய் பெண் எழுத்துக்கள் குறித்து ஆபாசம் விளம்பரம் தேடுகின்ற உத்தி என்றெல்லாம் பேசப்படுகின்றதே சக படைப்பாளியாய் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?





இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எத்தனை நேர் காணல்களில் எத்தனை பத்திரிகைகளில்தான் இந்தத் தேய்ந்து போன கேள்வியையே கேட்டுக்கொண்டி ருக்கப்போகிறீர்கள்? நானே பத்திரிகைகளில் மூன்றாவதோ நான்காவதோ தடவையாக இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். ஆபாசம், விளம்பரம் தேடும் உத்தியென்றெல்லாம் எவன் சொன்னான்? அப்துல் ரகுமான், சிநேகிதன், பழனிபாரதி, பொன்னீலன் போன்றவர்களின் உளறல்களுக்கெல்லாம் இன்றைய நவீன இலக்கிய விமர்சனப் பரப்பில் ஏதாவது மதிப்பிருக்கிறதா? சில வருடங்களுக்கு முன்பு பெண்ணிய எழுத்துகள் குறித்து எனக்கு ஒரு விமர்சனமிருந்தது. அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் உடலரசியல், காதல், குடும்ப மதிப்பீடுகளைத் தாண்டிச் செல்ல மறுக்கிறார்கள் என்ற கருத்தை ஒரு நேர்காணலில் கூட நான் சொல்லியிருந்தேன். ஆனால் இன்று அணங்கு, பனிக்குடம் போன்ற இதழ்களையும் livingsmile.blogspot.com போன்ற இணையங்களையும் படித்துப்பாருங்கள். பெண்ணிய அரசியல், உடல் அரசியல் என்பவற்றோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் பரந்துபட்ட அரசியல், இலக்கிய கருத்துகளையும் விவாதங்களையும் முன்னெடுக்கிறார்கள். புனைவு, அ-புனைவு நாடகம், ஆவணப் படங்கள், நேரடி அரசியல் என அவர்கள் ஆர்த்தெழுந்திருக்கும் இந்தக் காலகட்டம் தமிழில் பெண்ணிய வெளிப்பாடுகளின் திருப்புமுனைக் காலகட்டம் என்றே நான் கருதுகிறேன். குறிப்பாக இவர்களுக்குப் பார்ப்பன சாதிப் பின்புலம் கிடையாது. உண்மையில் இவர்கள் தங்கள் தலைமுறையைச் சார்ந்த ஆண் எழுத்தாளர்களை விடத் தீவிரமாக இயங்குகிறார்கள். விவாதங்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள்.





சுகிர்தராணியும் மாலதி மைத்ரியும் பேசுகின்ற அரசியல் முக்கியமானது என்பதில் கருத்து வேறு பாடில்லை. ஆனால் காலச்சுவட்டோடு அவர்கள் நின்று பேசுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?





நான் இந்தத் தடவை தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து பார்க்கிறேன், என்ன யாரைப் பார்த்தாலும் காலச்சுவடு பூச்சாண்டியே காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் எல்லோரும் கூண்டோடு அச்சப்படுமளவிற்கு அது என்ன சிறப்பு அதிரடிப்படையின் ஆயுத முகாமா? அது மாதத்திற்கு அய்யாயிரமோ பத்தாயிரமோ விற்கும் ஓர் பத்திரிகை! காலச்சுவடு பெரியாரைக் கொச்சைப்படுத்தியது, தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பும் களமாய் இருக்கிறது, அது சுந்தர ராமசாமியின் காலந்தொட்டே இடதுசாரி எதிர்ப்பைக் கடைப்பிடிக்கிறது, பார்ப்பன சங்கத்தின் விளம்பரங்களை வெளியிடுகிறது, சமயத்தில் ஒரு மது விலக்குப் பிரச்சாரப் பத்திரிகை போல எழுதுகிறது என்றெல்லாம் எனக்கு நீண்டகாலமாகவே காலச்சுவட்டின் மீது கடும் விமர்சனங்களிருக்கின்றனவே தவிர இதில் பதற்றப்படுவதிற்கு எதுவுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காட்டில் துட்ட மிருகங்கள் ஆயிரமிருந்தாலும் பூனைக்கு எலிதான் எதிரி என்பது மாதிரி யிருக்கிறது உங்களின் காலச்சுவடு மீதான அணுமுறை.





பெரியாரிய, இஸ்லாமிய, இடதுசாரி எதிர்ப்பு என்பதெல்லாம் குட்டி பிஜேபி நிலைப்பாடுதான். இப்படியான அதிவலதுசாரிப் பத்திரிகையோடு கலகப் பிரதிகளையும் இந்துத்துவ எதிர்ப்புப் பிரதிகளையும் எழுதுவதாகச் சொல்பவர்களால் எப்படி இணைந்திருக்க முடியும்?





உங்கள் கொள்கைப்பற்று வரவேற்கத்தக்கது என்றாலும் கூட நீங்கள் தமிழ் இதழியல் பதிப்புச் சூழல்களையும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே மிகச்சில மூத்த எழுத்தாளர்களையும் மு.க.கனிமொழியையும் தவிர்த்து மற்றவர்களுக்கான பிரசுர வாய்ப்புக்கள் இன்னமும் சிக்க லாகத்தானிருக்கின்றன. நமது தோழமைக்குரிய எல்லா எழுத்தாளர்களும் நானும்கூட குமுதம், விகடன் குழும இதழ்களில் எழுதிக்கொண்டுதானிருக்கிறோம். எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி நமது கருத்துக்களைச் சமரசமில்லாமல் சொல்வதென்பது வேறு வாய்ப்புகளுக்காகவே சமரசம் செய்துகொண்டு வாய்ப்பளிப்பவர்களின் அல்லக்கைககளாகச் செயற்படுவதென்பது வேறு. அல்லக்கைகளை விட்டுவிடுவோம். காலச்சுவட்டில் எழுதிக்கொண்டிருக்கும் மாலதியும் சுகிர்தராணியும் பேசுகின்ற அரசியல் முக்கியமானது என்பதில் நீங்களும் உடன்படுகிறீர்கள். காலச்சுவட்டுக்காக அவர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து இறங்கி வரவில்லை. இலக்கியத்தைப் பொருட்படுத்தாத தமிழ்க் கூட்டு மனநிலையைக் கருத்தில் வைத்துத்தான் நாம் தனி எழுத்தாளர்களை மதிப்பீடு செய்ய முடியும். இந்த இலக்கிய மறுப்புச் சமூகப் படுகுழியிலிருந்து அரவத்தையோ அல்லது கயிற்றரவையோ பிடித்துத்தான் ஏற வேண்டியிருக்கிறது.





புலம்பெயர்ச் சூழலில் பெண் படைப்பாளிகள் பெரிதாக உருவாகாத காரணங்கள் என்ன?





அப்படிச் சொல்லிவிட முடியாது. அய்ந்தரைக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பெண் படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள்? மாமிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் கவனிக்கத்தக்க பெண் எழுத்தாளர்களாக ஒரு இருபது பேர்கள் இருப்பார்களா? அப்படிப் பார்த்தால் அய்ந்து இலட்சத்திற்கும் குறைவாகயிருக்கும் புலம் பெயர்ந்த எங்களிடையேயிருந்தும் ஆழியாள், பிரதிபா தில்லைநாதன், நிரூபா, றஞ்சினியென்று நான்கு பேர் உருவாகித்தானேயிருக்கிறார்கள். பெண் படைப்பாளிகளென்றில்லை புகலிடத்தில் ஆண் படைப்பாளிகளை எடுத்துக் கொண்டாலும் அவர்களிலும் கவனிக்கத்தக்க எழுத்தாளர்களாக நான்குபேர்தானேயிருக்கிறார்கள். இதற்கு மேலும் குறிப்பிடக்கூடிய படைப்பாளிகள் உருவாகாததற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன.





புகலிடச் சூழலில் தமிழர்கள் செறிவற்று வாழ்வதால் தொடர்ச்சியான இலக்கிய உரையாடல்களை நடத்துவதற்கும் படைப்பு மனநிலையைத் தக்க வைத்திருப்பதற்குமான வாய்ப்புகள் குறைவு. புகலிடப் படைப்பாளிகளில் யாருமே கல்வித்துறை சார்ந்தவர்களல்ல. சீவியத்திற்காக இரவுபகலாக வேறு துறைகளில் உழைத்துக்கொண்டு இலக்கிய வாசிப்புக்கும் இலக்கியப் பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குவதும் கடினம். இதைத் தவிர நேரடியான அரசியல் வேலைகளிலும் புனர் வாழ்வுப் பணிகளிலும் அவர்கள் தங்களது நேரத்தில் பெரும்பகுதியைச் செலவழிக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக புகலிட எழுத்தாளர்கள் தொடர்ச்சியான கண்காணிப்புக்குள் இருக்கிறார்கள். எழுதுவதாலும் பத்திரிகைகள் வெளியிட்டதாலும் புகலிட எழுத்தாளர்கள் பலதடவைகள் புலிகளால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 'தொழிலாளர் பாதை' பத்திரிகையை விற்ற தோழர்கள் பாரிஸ் வீதிகளில் வைத்துப் புலிகளால் இரண்டு தடவைகள் தாக்கப்பட்டார்கள். 'மனிதம்', 'தாயகம்' போன்ற பல பத்திரிகைகள் புலிக் குண்டர்களால் மிரட்டப்பட்டிருக்கின்றன. இவ்வளவு பிரத்தியேகமான சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் புகலிடத்திலிருந்து எழுத வேண்டியிருக்கிறது.





கருணையால் உலகு தழுவிய பவுத்தம் இலங்கையில் இனவாதத்திற்குப் பலியாகி விட்டது தானே?





ஒருபோதுமில்லை. இன்று இத்தனை வருட யுத்தத்திற்குப் பின்னும் சிங்களவர்களின் பகுதியான கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் தமிழர்கள் ஆபத்தில்லாமல் வாழ்கிறார்கள், தொழில் செய்கிறார்கள், கல்வி கற்கிறார்களென்றால் பெரும்பாலான பவுத்தர்கள் இனவாதிகள் இல்லையென்றுதானே அர்த்தம். ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நுழையும் ஒரு சிங்களவர் உயிரோடு திரும்பிச் செல்ல முடியாதே.





அரசும் அரசியலதிகாரத்தைச் சுவைக்கத் துடிக்கும் மதத்தலைவர்களும் சிங்கள மக்களைப் பவுத்தத்தின் பெயரால் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக அணி திரட்டப் பல வருடங்களாகவே முயன்றுவருவது உண்மைதான். ஆனால் எப்படிப் பரந்துபட்ட தமிழ் மக்கள் இந்த யுத்தத்தை விரும்பவில்லையோ அது போலவே சிங்கள மக்களும் இந்த யுத்தத்தை வெறுக்கிறார்கள். தமிழ்த் தேசிய - சிங்கள இனவாத சக்திகளின் தடுப்பரண்களையும் மீறி சுனாமி அனர்த்தத்தின் போது அந்த மக்கள் ஒருவர் மீதான மற்றவரின் வாஞ்சையை மறுபடியும் நிரூபித்துக் காட்டினார்கள். சுனாமி நிவாரண நிதியாகக் கிடைத்த வெளிநாட்டுப் பணத்தை எப்படிக் கொள்ளையடிப்பது என்று அரசும் புலிகளும் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது சத்தமேயில்லாமல் பாதிக்கப்பட்ட தமிழ் - முஸ்லீம் மக்களுக்குச் சிங்கள மக்கள் உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.





சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கின்ற கருத்தாக்கத்தை உலகுக்கு வழங்கிய பிரான்ஸிலிருந்து பேசுகிறீர்கள். பிரான்ஸ் ஈழத் தமிழர்களை கருப்பர்களை இஸ்லாமியர்களை எப்படி நடத்துகின்றது?





பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே நமது கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார். நமக்குப் பிரஞ்சுக்காரர்கள் கேளிர்தான். ஆனால் நாம் பிரஞ்சுக்காரர்களுக்குக்கு நாம் கேளிரா? என்பதுதான் பிரச்சினையே! மூன்றாம் உலகநாடுகளில் வெள்ளையர்கள் கொலனி பிடித்துக் கொள்ளையடிக்கும்வரை கொள்ளையடித்து, ஒட்ட உறிஞ்சிவிட்டு வெளியேறியபோது உருவாக்கி வைத்துவிட்டுவந்த தேசிய இனச்சிக்கல்களாலும், இனக்குழு மோதல்களாலும், வெள்ளையர்கள் தங்கள் ஆயுத வணிகத்திற்காக மூன்றாம் உலகநாடுகளில் War lordகளை உருவாக்கிவிட்டதாலும் போர்களால் நாடிழந்து வீடிழந்து ஏதிலிகளாகத் தஞ்சம்கோரி ஓடிவரும் மூன்றாம் உலக மக்களை வரவேற்பதற்காக அய்ரோப்பிய அரசுகள் தமது எல்லைகளில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று வரவேற்பு வளைவுகளை வைத்திருப்பதில்லை.அவர்கள் எல்லைகளில் கொழுத்த வேட்டை நாய்களையும் இனவெறி பிடித்த பொலிஸ் குண்டர்களையும்தான் வைத்திருக்கிறார்கள். அய்ரோப்பாவின் எல்லைகளுக்குள் நுழைய முற்படும் ஈழ, இஸ்லாமிய, கறுப்பு, சீன அகதிகள் நாள்தோறுமே கிழக்கு அய்ரோப்பாவின் பனிப்பாலைகளில் நடந்து வருகையில் விறைத்தும் போலந்தின் ஆறுகளில் மூழ்கியும் இறக்கிறார்கள். அத்திலாந்து சமுத்திரத்தில் படகுகளோடு ஜலசமாதி அடைகிறார்கள். மீறியும் மேற்கு அய்ரோப்பிய எல்லைகளைத் தொடுபவர்களில் கணிசமானோர் உடனடியாகவே அவர்களின் சொந்த நாடுகளுக்குக் கொலைக்களங்களுக்கு கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.





அய்ரோப்பாவில் அகதிகளை வரவேற்பதற்கான சட்டமான 'Geneva 25 July 1952 'அகதிச் சட்டம் நிறைவேற்றப்படும்போது அய்ரோப்பாவின் சமூக பொருளியல் நிலைமைகள் வேறுமாதிரியிருந்தன. அது அய்ரோப்பிய முதலாளியத்தின் செழுமைக் காலமாயி ருந்தது. அய்ரோப்பிய மூலதனத்துக்குப் பெருமளவிலான கூலிகள் தேவைப்பட்ட காலமது. தவிரவும் நடந்து முடிந்திருந்த இரண்டாம் உலகப்போரின் வடுவும், அப்போதைய சோவியத் யூனியனிலிருந்தும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும் வெளியேறிய முதலாளியச் சாய்வுச் சிந்தனையாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஸ்டாலினிஸ எதிர்ப்பாளர்களுக்கும் புகலிடம் கொடுத்து அவர்கள் மூலம் கொம்யூனிஸ எதிர்ப்பைப் பரப்புரை செய்வதும் ஜெனிவா அகதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான மற்றைய காரணங்கள். இந்த மூன்று காரணிகளும் இன்றைய அய்ரோப்பியச் சமூக, பொருளியல் சூழல்களில் பெருமளவு அர்த்தமற்றுப் போய்விட்டன. 1980களில் தொழிற்துறையில் நிகழந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சியுடன் அய்ரோப்பிய முதலாளியம் அபரிமித உற்பத்தி நெருக்கடிக்குள் மறுபடியும் ஒருமுறை சிக்கிக்கொண்டது. பல்கிப் பெருகிய உற்பத்தி சக்திகளால் முதலாளிய சந்தையில் கடும் போட்டிகள் உருவானதால் மலிவு விலையில் உற்பத்திப் பொருட்களை வழங்கும் நிறுவனங்களே சந்தைப்போட்டியில் வெற்றியடையும் நிலையுருவாகியது. இந்தச் சிக்கலிலிருந்து தப்பிப்பதற்காக மலிவான கூலித்தொழிலாளர்கள் நிறைந்திருக்கும், தொழிற்சங்க உரிமைகள் வலுவற்றிருக்கும் மூன்றாம் உலக நாடுகளை நோக்கி உலக முதலாளியம் மூலதனங்களையும் தொழிற் சாலைகளையும் நகர்த்தியது. இப்போது Nike இந்தோனேசியாவிலும் Coke இந்தியாவிலும் கொடி கட்டிப் பறக்கின்றன.மேற்குநாடுகளில் தொழிற்சாலைகள் பெருமளவு மூடப்பட்டதாலும் ஆட்குறைப்பாலும் அய்ரோப்பியத் தொழிலாளர்களுக்கு வேலை பறந்தது. இன்று பிரான்ஸில் வேலையில்லாதோரின் தொகை 12 விழுக் காடாயிருக்க, அய்ரோப்பிய யூனியனில் வேலையில்லாத இளைஞர்கள் தொகையின் சராசரி 15 விழுக்காடாயிருக்க அய்ரோப்பிய அரசுகள் தமது கதவுகளை அகதிகளுக்கு இறுக மூடிக்கொள்கின்றன. இப்போது அய்ரோப்பிய முதலாளியத்திற்கு மூன்றாம் உலகநாடுகளிலிலிருந்து மூன்றாம் உலக மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று முடித்த விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கணனி நிபுணர்களும்தான் தேவையேயொழிய அகதிகள் என்ற சிறப்புப் பெயரில் அழைக்கப் படும் கூலித் தொழிலாளர்கள் தேவையில்லை.இன்று பிரான்ஸில் மட்டும் 300000 நிராகரிக்கப்பட்ட அகதிகள் 'Sans Papiers 'என்ற பரிதாபத்துக்குரிய அடையாளத்தோடு வதிவிட உரிமை, மருத்துவ உதவி, வேலை செய்வதற்கான உரிமை, சமூகநல உதவிகள் எதுவுமற்றுத் திருடர்கள்போல வாழ்ந்து துன்பத்தில் உழன்று கொண்டி ருக்கிறார்கள். அரசியல் அகதிகளைப் புதிதாக ஏற்றுக் கொள்ள பிரான்ஸ் மறுப்பதற்கு இன்னொரு புனிதக் காரணமும் உள்ளது. பிரான்சுக்கு அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்களே. இவர்கள் ஆப்கானிஸ்தான்,, ஈரான், ஈராக், சூடான், நைஜீரியா, செனகல், மாலி, அல்ஜீரியா, துனிசியா, மெராக்கோ, துருக்கி, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்து வருகிறார்கள்.ஏற்கனவே கூலித்தொழிலாளர்களாக வட ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டு இரண்டு மூன்று தலைமுறைகளாக பிரான்ஸிலேயே தங்கிவிட்ட முசுலீம்களோடு கடந்த இருபது ஆண்டுகளில் அகதிகளாகப் பிரான்சுக்கு வந்து சேர்ந்த முசுலீம் மக்களும் சேர்ந்தபோது பிரான்ஸின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் மாறிவிட்டது. பிரான்ஸில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் சக்திகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். பொறுக்குமா சிலுவைப் போராளிகளின் வாரிசுகளுக்கு? அவர்கள் அகதிகளுக்கு மூடிய கதவுகளில் முசுலீம்களின் பெயரால் ஒருபெரிய பூட்டையும் இப்போது தொங்க விட்டிருக்கிறார்கள்.எதிர்வரும் அதிபர் தேர்தலில் இன்றைய ஆளும் கட்சியான UMPயின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் நிக்கொலா சார்க்கோஸியின் குரல் ஒரு நியோ நாஸியின் குரல் போலவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் பிரான்ஸின் முதன்மையானதும் உடனடியானதுமான பிரச்சினையாக குடியேற்றவாசிகளையும் அகதிகளையும்தான் குறிப்பிடுகிறார். சென்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லியனல் ஜோஸ்பனை முந்திக்கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பச்சை இனவாதியான லூ பென். லூ பென்னின் பெருகிவரும் செல்வாக்கும் சார்க்கோஸி போன்றவர்கள் நாட்டின் அதிஉயரடி பீடத்தில் அமருவதும் நம்மை நெருங்கிவரும் அபாயங்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. "Liberté, Égalité, Fraternité" என்று முழங்கியபடியேதான் இவர்கள் வியட்நாமிலும் அல்ஜீரியாவிலும் வகைதொகையில்லாத கூட்டுப் படுகொலைகளை நடத்தி முடித்தார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சொல்லியபடியேதான் கடல் கடந்த மாகாணங்கள் என்ற பெயரில் நான்கு நாடுகளையும் பதினொரு தீவுகளையும் இன்றுவரை பிரஞ்சுக் கொலனிகளாக வைத்து சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேசும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் அய்ரோப்பியர்களுக்கு மட்டும்தான். “ஓர் அய்ரோப்பியனைக் கொல்வது ஒரே கல்லில் இரு பறவைகளைக் கொல்வதாகும். அது ஒடுக்குபவனையும் அவனால் ஒடுக்கப்படுபவனையும் ஒரே சமயத்தில் ஒழித்துக்கட்டுவதாகும்: அங்கே கிடப்பது ஒரு பிணம்; அங்கே இருப்பது ஒரு சுதந்திர மனிதன்” என்று சார்த் சும்மாவா சொன்னார்?





பார்ப்பனர்களே இல்லாத ஈழம் - புலம்பெயர் சூழலிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்துப் பேசுவதற்கான முகாந்திரங்கள் என்ன?





சிங்களவர்களையே கண்ணால் பார்த்திராத நீங்களெல்லோரும் சிங்கள எதிர்ப்புப் பேசுகிறீர்களே அதுபோல் நான் நிச்சயமாகப் பேசவில்லை. ஈழத்துச் சூழல் பார்ப்பனர்களே இல்லாத சூழல் என்று சொல்வது சரியாகாது. அவர்கள் அற்பசொற்ப தொகையிலிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைமுறை பார்ப்பனிய வாழ்க்கை முறையாகவேயிருக்கிறது. அவர்கள் பார்ப்பனர்களாகத்தான் வாழ்கிறார்கள். இன்றும் பார்ப்பனர்கள் ஈழத்தில் முற்று முழுவதுமாகத் தீண்டாமையைக் கடைபிடிக்கிறார்கள். அவர்கள் அரசியலிலும் பொருளியலிலும் நேரடி ஆதிக்கசக்திகள் இல்லைதான். ஆனால் இந்துப் பண்பாட்டுத்தளத்தில் அவர்கள்தான் உச்சத்திலிருக்கிறார்கள். பார்ப்பனியம் என்பது வெறுமனே சாதியடுக்கில் உச்சத்திலிருப்பது மட்டுமல்ல சாதியத்தை வடிவமைத்துக் காத்து வருவதும் அதுதான் என்ற புரிதல் எனக்கிருக்கிறது.





இன்னொரு முக்கியமான விசயமுமிருக்கிறது. இந்திய ஆளும்வர்க்கம் ஈழத்தமிழர்களின் பிரச்சனையையை தனது நலன்களது நோக்கிலேயே ஆரம்பம் முதலே அணுகிவருகிறது. அது அதற்காக அமைதிப்படையின் காலத்திலே எங்கள் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்தது. சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் சித்திரவதைகள் செய்து புதைத்தது. ஆயிரக் கணக்கான இளைஞர்களை அங்கயீனம் செய்தது. இந்திய ஆளும் வர்க்கம் என்பது யார்? இந்திய அரசின் பெரும்பாலான உயரதிகாரிகளும் படைத்தளபதிகளும் இந்திய அரசின் கொடுமைகளை இன்றுவரை நியாயப்படுத்திக்கொண்டிருக்கும் ஊடகச் செல்வாக்குமிக்கவர்களான 'இந்து' ராம் போன்றவர்களும் யார்? அவர்கள் பார்ப்பன- பனியா நலன்களை மட்டும் கருத்திலே கொண்ட சாதிப்பற்றாளர்கள், சனநாயக விரோதிகள். இந்தியப் பார்ப்பனர்களின் அதிகார விருப்புகளும் ஆதிக்க எல்லைகளும் இந்தியாவுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அது ஈழம் வரைக்கும் தனது விஷ நாவை எறிந்துதான் வைத்திருக்கிறது. அது அரசியலில் என்றாலும் சரி! பண்பாட்டில் என்றாலும் சரி! இலக்கியத்தில் என்றாலும் சரி!





சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்து விட்டதென அசோகமித்திரன் சொல்கின்றாரே?





அவர் அதை மட்டுமா சொன்னார்? 'சங்கராச்சாரியார் மீது விசாரணை தொடங்க முன்னமே பத்திரிகைகள் சங்காரிச்சாரியரைக் கொச்சைப்படுத்திவிட்டன' என்றார். 'தமிழகத்தில் பார்ப்பனர்களின் நிலைமை நாஸிகளின் கைகளில் அகப்பட்ட யூதர்களைப் போலாகிவிட்டது' எனச் சொன்னார். சிறுபத்திரிகையொன்று நடத்துவதற்காக அவரின் வீடேறிக் கதை கேட்கப்போன தோழர்களை 'பார்ப்பனர்களைத் திட்டத்தானே பத்திரிகை தொடங்குகிறீர்கள்?' எனத் திட்டித் துரத்திவிட்டார். இப்போது சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்து விட்டதெனச் சாபமிட்டிருக்கின்றார். அசோகமித்திரனுக்கு மட்டுமல்ல தமிழக, ஈழத்து ஆதிக்கசாதி எழுத்தாளர்கள் பலருக்கும் எண்பதுகளிற்குப் பிந்திய சிறுபத்திரிகைகளின் போக்குகள் உவப்பில்லாமல்தான் போய்விட்டன.அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற புதிய சிந்தனை முறைமைகளும் அவை சார்ந்த கலை, இலக்கிய வெளிப்பாடுகளும் விமர்சன மரபுகளும் ஒரு பேரலையெனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் நுழைந்து அதுவரையிருந்த இலக்கிய பீடங்களையும் ரசிகமணி விமர்சகர்களையும் கவிழ்த்துப் போட்டதை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ‘கண்டதையும் தின்றுவிட்ட வாலைத் தூக்கிக் கழிக்கும் மிருகங்கள்’ என்றார் சுந்தர ராமசாமி. ‘சமூக விரோத எழுத்துக்கள்’ என்றார் யமுனா ராஜேந்திரன். கொஞ்சம் புத்திசாலிகளான ஆதிக்கசாதி விமர்சகர்கள் ‘இவர்களுடைய எழுத்துக்கள் புரிவதேயில்லை’ என்றார்கள். இப்படி இவர்களால் அழுக்காறு கொள்ள முடிந்ததே தவிர இவர்களால் இந்தப் புதிய சிந்தனைகளைக் கோட்பாட்டுத் தளத்திலோ புனைவுத் தளத்திலோ எதிர்கொள்ள முடியவில்லை. முக்கியமாக இந்தப் புதிய சிந்தனைமுறைமைகள் குறித்த அறிமுகங்களும் ஆக்கபூர்வமான உரையாடல்களும் பார்ப்பனர்கள் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட சிறு பத்திரிகைகளில்தான் முழுவதுமாக முன்னெடுக்கப்பட்டன. இந்தப் புதிய சிந்தனைமுறைகளும் கோட்பாடுகளும் இலக்கியத்தளத்தில் தலித், பெண்ணிய, விளிம்பு நிலை மனிதர்களின் பிரதிகளை முன்னிறுத்த தலித், பெண்ணிய, விளிம்புநிலைப் பிரதிகள் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பேசுபொருட்களாயின. புதிய புதிய எழுத்தாளர்கள் பல்வேறு நிலப்பகுதிகளிலிருந்தும் சிறப்பான இலக்கியப் பிரதிகளை எழுதத் தொடங்கினார்கள். பார்ப்பன எழுத்தாளர்களின் பீடங்கள் ஆட்டங்காணத் தொடங்கின. எண்பதுகளுக்குப் பிந்திய சிறுபத்திரிகை இயக்கத்தில் அவர்களுக்கு இடமேதுமில்லை. இந்த வயிற்றெரிச்சலோடுதான் அசோகமித்திரன் சிறு பத்திரிகைகளின் காலம் முடிந்து விட்டது என்கிறார். பொறுத்திருந்து பாருங்கள் அசோகமித்திரன் போன்றவர்கள் தமிழ் இலக்கியத்தின் காலம் முடிந்துவிட்டது என்றும் விரைவில் சாபமிடுவார்கள்.





ஒரு இலக்கியவாதியாகவும் செயல்பாட்டாளராகவும் இருக்கும் நீங்கள் பிரான்சின் மீதான விமர்சனங்களை எழுதியோ பேசியோ வெளிப்படுத்திவிடுகிறீர்கள். புலம்பெயர்ந்து பிரான்சில் அடைக்கலம் கண்டுள்ள மற்றவர்கள் இவ்விமர்சனங்களை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்? அப்படி வெளிப்படுத்திக் கொள்வதற்கான சுதந்திரம் அங்கிருக்கிறதா?





முதலாளிய அமைப்புமுறையை நடத்திச் செல்வதற்கு அவசியமான அளவிற்குப் பிரான்ஸின் ஆட்சியாளர்கள் முதலாளிய சனநாயகத்தை அனுமதித்திருக்கிறார்கள். அகதிகளுக்கான அமைப்புகளும் வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டவர்களுக்கான சங்கங்களும் போர் எதிர்ப்பு இயக்கங்களும் G நாடுகளுக்கான எதிர்ப்பு இயக்கங்களும் பிரான்ஸில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் போராட்டங்களை இந்தியப் பொதுவுடமைக் கட்சிகளின் தொழிற்சங்கங்களின் போராட்ட வடிவங்களோடு நாம் ஒப்பிட்டுச் சொல்லலாம். அந்த ரேஞ்சுக்கு மேல் எதுவுமில்லை. சொல்லப்போனால் இந்தியாவில் பொதுவுடமை இயக்கங்களாவது அற்ப சொற்ப வெற்றிகளைச் சாதிக்கின்றன. பிரான்ஸிலோ ஒரு மாலைநேர ஒன்றுகூடல், மத்தியதர வர்க்க இளைஞர்களின் சாகசம் என்பவற்றை மீறிப் போராட்டங்கள் வெகுசனங்களின் கவனயீர்ப்பையோ குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையோ அண்மைக்காலங்களில் பெறுவ தில்லை. ஈராக்கின் மீதான அமெரிக்காவின் யுத்தம் குறித்தோ சதாம் உசேனின் படுகொலை குறித்தோ 'ப்ச்' என்ற இதழ் வெடிப்பைத் தாண்டி இன்னொரு சத்தம் பிரான்ஸிலிருந்து எழவில்லை. எங்காவது அறிவுத்துறையினர் மத்தியிலிருந்தோ பல்கலைக் கழகங்களின் மண்ட பங்களிலிருந்தோ ஏதாவது ஈனசுரம் எழுந்திருக்கலாம். ஆனால் அது என் காதுகளிலோ அல்லது பாரிஸ் தெருக்களிலோ சதுக்கங்களிலோ விழவில்லை. 2005 ஒக்ரோபரில் இரண்டு வடஆபிரிக்க இளைஞர்கள் பொலிஸாரால் துரத்தப்படும்போது மின்மாற்றியில் சிக்கி உயிரிழந்தபோது கறுப்பின இளைஞர்களாலும் அரபு இளைஞர்களாலும் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சியான அரச எதிர்ப்புப் போராட்டத்தின்போது அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. போராட்டக்காரர்கள் ஒளிந்திருப்பதாகக் கூறிக் காவற்துறை ஒரு பள்ளிவாசலுக்குள் புகுந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியது. மூவாயிரத்துìகும் மேலான இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். குற்றவாளிகள் எனக் கருதப்பட்டவர்களை நாடு கடத்துவதற்குச் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அய்ம்பது வருடங்களிற்குப் பின் குறிப்பிட்ட நகரங்களில் அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் அமுலுக்கு வந்தன. சுருக்கமாகச் சொன்னால் சட்டங்களை மீறாமல் சட்டங்களை எதிர்த்துப் போராடலாம் என்பதுதான் பிரான்ஸின் கண்கட்டி சனநாயகம். இந்த பெயரளவிலான சனநாயகத்திற்குக் கூட ஆபத்து வருவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. சீனா போன்ற நாடுகளில் சனநாயக அமைப்பே இல்லாத போதும் அங்கே முதலாளியம் வேகமாக வளர்ந்து வருவதால் முதலாளிய வளர்ச்சிக்குச் சனநாயக அமைப்பு இன்றியமையாததுதானா என்ற திசைகளில் முதலாளித்துவ அறிவுஜீவிகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.





சிங்கள பேரினவாதத்தை அரச வன்முறை மூலம் நிலைநிறுத்துகிற இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு புறம். சாதிய மேலாதிக்கத்திலும் முஸ்லிம் வெறுப்பிலும் ஏகாதிபத்திய ஆதரவிலும், மாற்றுக் கருத்துக்களை,அமைப்புகளை சகித்துக்கொள்ளாத அ-ஜனநாயகப் போக்கிலும் சிக்குண்டிருக்கும் விடுதலைப் புலிகள் மறுபுறம். இவ்விரு கருத்தோட்டங்களுமே நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை மிக வலிமையாக தங்களது கொரில்லா, ம், வேலைக் காரிகளின் புத்தகம் ஆகியவை தெரிவிக்கின்றன. எனில் இலங்கைக்கு எத்தகைய சமூகத்தை மாற்றாக முன்மொழிகிறீர்கள்?





இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தமது சொந்த அரசியல் நலன்களை முன்னிறுத்தியே காய்களை நகர்த்தி வருகின்றனர். இருதரப்புகளுக்கும் முட்டுக்கொடுத்து நிற்கும் சிங்களப் பேரினவாத மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகள் சிங்கமும் புலியும் தின்றதுபோக எஞ்சும் மிச்சம் மீதிக்காக அடித்துக்கொண்டு கிடக்கிறார்கள். இந்த யுத்தம் மக்களின் யுத்தமல்ல. இந்த யுத்தத்திற்கும் வெகுசனங்களின் நலன்களுக்கும் எதுவித நேர்மறையான தொடர்புகளுமில்லை.அரசு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகப் பயங்கரவாதத்தோடு யுத்தம் செய்வதாகச் சொல்கிறது. புலிகளோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யுத்தம் செய்வதாகச் சொல்கிறார்கள். இவர்களின் இந்த யுத்த சன்னதத்திற்குள் கொல்லப்படுபவர்களும் காணமற் போனவர்களும் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களும் யார்? ஏழைச் சிங்களக் கிராமப்புற இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். புலிகளோ மும்முரமாகப் பிள்ளை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்கள் குடும்பத்திற்கு ஒரு பிள்ளையைக் கொலைகாரப் புலிகளுக்கு தாரைவார்த்தே ஆகவேண்டும் என்பது கட்டாயம். இளைஞர்களும் யுவதிகளும் இராணுவத்திற்கு ஒளிந்து திரிந்த காலம் போய் இப்போது புலிகளுக்கு ஒளிந்து திரிகிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இளையவர்கள் வெளியேறுவதற்கும் மணம் முடிப்பதிற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த அர்த்தமற்ற யுத்தம் முப்பது வருடங்களாகத் தமிழ் முஸ்லீம் மக்களுக்குச் சாதித்த நன்மைகள் என்ன? தமிழர்களாலேயே பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் முஸ்லீம்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கானோர் புலிகளால் நாட்டிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். இருபது வருடங்களாக அரசும் புலிகளும் விட்டுவிட்டுத் தொடரும் பேச்சுவார்த்தைகளால் விளைந்த நன்மைகள் என்ன? அரசின் சிறைகளில் காலவரையற்ற தடுப்புக் காவல்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். போதாதற்கு 1980ளில் சித்திரவதைகளுக்கும் கொலைகளுக்கும் பெயர்பெற்ற ஸ்தலமாயிருந்த பூசா தடுப்புமுகாமை மீண்டும் திறக்கப்போவதாக மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். வடபகுதியிலிருந்து புலிகளால் கொள்ளையிடப்பட்டு விரட்டப்பட்ட முஸ்லீம்களால் இன்னும் வடபுலத்தில் மீளக் குடியேற முடியவில்லை.இன்று நமக்குத் தேவையாயிருப்பது தமிழ்- சிங்கள- முஸ்லீம் மக்களின் அய்க்கியம்தான். ஆனால் இந்த அய்க்கியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் சிங்கள, தமிழ் இனவாதிகள் மட்டுமல்லாது ஈழப்பிரச்சினையில் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கும் அந்நிய சக்திகளும் கவனமாயிருக்கிறார்கள். இலங்கை உழைக்கும் மக்களின் அரசியல் அய்க்கியம் மட்டும்தான் பேரினவாத அரசையும் பாஸிஸப் புலிகளையும் தோற்கடிக்கும். அந்த அய்க்கியம்தான் இலங்கையின் இறைமைவெளிகளில் அத்துமீறி நுழையும் சர்வதேச வல்லாக்க சக்திகளையும் மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து நிற்கும். அந்த அய்க்கியம்தான் தீவின் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அரசியல் உரிமைகளையும் தீர்வையும் வழங்கும். இனவாதமும் யுத்தமும் தமிழ், சிங்கள முதலாளிய அரசியலாளர்களின் நலன்களிலிருந்தே உயிர் வாழுகின்றன என்ற புரிதலோடு இடதுசாரி அரசியல் இயக்கங்களின் வழியேதான் நாம் இந்தத் திசைவழியை நோக்கி நகரமுடியும். உண்மையில் இந்த அரசியல் வழியில் முன்கை எடுக்க வேண்டியவர்கள் சிங்கள இடதுசாரிகளே. அவர்களின் செயற்திறன்தான் பெரும்பான்மை இனத்தின் மீது சிறுபான்மை இனங்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். தமிழ்ச்சூழலைப் பொறுத்தளவில் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளின் துரோகங்களாலும் பேரினவாத்தின் அடக்குமுறைகளாலும் நம்பிக்கையிழந்து சில தசாப்தங்களாகவே இனவாத அரசியல் பரப்புரைகளுக்குள் மூழ்கியும் யுத்தத்தின் வடுக்களை அனுபவித்தும் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தை இனங்களின் அய்க்கியத்தையும் இடதுசாரி அரசியலையும் நோக்கித் திருப்புவதைக் கற்பனை செய்வதுகூட சிரமாமாய்த்தானிருக்கிறது. என்னுடைய இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் இன்னொரு தமிழரைக் கண்டுபிடிப்பது அதைவிடச் சிரமம். ஆனால் ஒரு கருத்து எவ்வளவு தூரத்திற்கு அதன் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்ததல்ல அந்தக் கருத்தின் நியாயமும் தார்மீகமும்.





சாதிய ஒடுக்குமுறையின் பிரிக்கவியலாத பகுதியே பெண்ணிய ஒடுக்குமுறையும். எனில், போராளிக்குழுக்களில் பங்கேற்றுள்ள பெண்கள் குறித்து இயக்கங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள மதிப்பீடு எவ்வாறுள்ளது? அவர்களால் இயக்கங்களின் அதிகாரம் பொருந்திய முக்கியப் பொறுப்புகளுக்கு வர முடிந்திருக்கிறதா?





ஆயுதந்தாங்கிய இயக்கங்களில் மட்டுமல்லாது அரச படைகளிலும் கூடத்தான் பெண்கள் உலகம் முழுவதும் இயங்கிவருகிறார்கள். ஆயுதம் தாங்கிக் களத்தில் நிற்பதென்பது வேறு பெண்ணிய விடுதலையென்பது வேறு என்பதை முன்நிபந்தனையாக வைத்துக்கொண்டு ஈழப் போராட்ட இயக்கங்களில் பெண்களின் நிலையைக் குறித்துப் பேசுவோம்.





ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களிலிருந்து எழுபதுகளில் தொடக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்க காலங்களிலிருந்தே பெண்களுக்கு ஈழப் போராட்டத்தில் பங்கிருக்கிறது. ஊர்மிளா, சி. புஸ்பராணி, கனகராணி, அங்கயற்கண்ணி, திலகவதி, கல்யாணி, சங்கானையம்மா, யோகராணி போன்ற பலர் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார்கள். சிறை சென்றார்கள், வதைபட்டார்கள். ஆனால் அமைப்புகளின் தலைமைகளிலோ முடிவெடுக்கும் அதிகாரங்களிலோ இவர்களுக்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை. இரண்டாம் கட்டமாக 1983 எழுச்சியுடன் இன்னொரு தொகைப் பெண்கள் ஆயுதப் போராட்டத்தோடு இணைந்தார்கள். குறிப்பாக அப்போது ஈபிஆர்எல்எப், புளொட் ஆகிய அமைப்புகள்தான் பெண்களைப் பெருமளவில் அமைப்புகளாகத் திரட்டின. புளொட் அமைப்பின் மத்திய குழுவில் உஷா இடம் பெற்றிருந்ததைத் தவிர்த்துப் பார்த்தால் பெண்களுக்கு முக்கியத்துவத்தை எந்த இயக்கமுமே கொடுத்திருக்கவில்லை. 'அப்போது இயக்கங்களுக்கு வந்திருந்த பெண்களில் சிலர் இயக்கத்தின் தலைமைப்பீட உறுப்பினர்களுக்கு மனைவிகளானதுதான் மிச்சம்' என்று கசப்புடன் புஷ்பராஜா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். 1986களில்தான் விடுதலைப்புலிகள் அமைப்பு பரவலாகப் பெண்போராளிகளை உள்ளீர்க்க ஆரம்பித்தது. கிடுகிவேலிக் கலாசாரத்துக்குள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்கள் இன்று விடுதலைப் புலிகளின் அமைப்பில் முக்கியப் படையணிகளாகத் திகழ்கிறார்கள். அவர்கள் கிடுகுவேலிக் கலாசாரத்திலிருந்து பாஸிச கலாசாரத்துக்குள் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். புரட்சிகர இயக்கங்களில் மட்டுமல்ல எதிர்ப்புரட்சி அமைப்புகளிலும் பெண்களும் சிறுமிகளும் திரட்டப்படுவது உலகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. யோவேறி முசோலினியின் NRAகூடத்தான் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் திரட்டப்பட்டனர். உலகம் முழுவதும் பல War Lordகளின் படையணிகளில் பெண்கள் திரட்டப்பட்டுத் தானிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பு கலாச்சார அடிப்படைவாத அமைப்பு என்பதை நான் பல்வேறு தருணங்களில் விளக்கியிருக்கிறேன். தமிழ்க் கலாசாரப் பெருமிதமும், சங்ககாலப் பெருமிதமும் கொண்டவர்களவர்கள். யாழ்ப்பாணச் சமூக ஒழுக்கங்கள் எனச் சொல்லப்படும் கசடுகளை மயிரளவும் தவறாமல் தாங்கள் கடைபிடிப்பதாக அவர்கள் பெருமையடிப்பவர்கள். அவர்கள் பாலியல் தொழிலாளர்களைக் வீதிகளிலே கொலை செய்யும் காட்டுமிராண்டித்தனங்களைப் பார்டித்தாலே அவர்களது கலாச்சார அடிப்படைவாத வெறி தெட்டத்தெளிவாகத் தெரியும். ஏறக்குறைய இருபதாயிரம் சிவப்பு ரோஜாக்கள் கமல்ஹாஸன்கள் எங்கள் நாட்டில் கைகளில் துப்பாக்கிகளுடன் திரிகிறார்கள். இந்தக் கலாச்சார அடிப்படைவாதமும் ஆண் முதன்மைவாதமும் பண்பாட்டு மீட்புவாதமும் அமைப்பிற்குள் இருக்கும்வரை நவீன பெண்ணிய சிந்தனைகளும் அமைப்பிற்குள் வரப்போவதில்லை. அவை வராமல் பெண் ஆளுமைகள் அமைப்புக்குள் தீரடிமானகரமான சக்திகளாக வரப்போவதுமில்லை. உண்மையில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் களங்களில் பல்வேறு ஆயுதங்களுடன் கலாச்சாரத்தையும் சுமந்து கொண்டுதான் நகரவேண்டியிருக்கிறது.





ஈழத்தில் நிலவும் போர்ச்சூழல், வாழ்வாதரங்களை இழந்து நிராதரவாகுõ அவலம், உயிரின் நிலையற்றதன்மை போன்ற காரணிகளால்தான் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் பெரும்பாலோர் தங்களது சமகால அரசியல் பிரச்னைகளை மையப்படுத்தி தாம் வாழும் காலத்தை பிரதிபலிக்கிற படைப்புகளை காத்திரமாக முன்வைக்கின்றனர் என்றொரு கருத்து இங்குள்ளது. இங்கும் கலாச்சார நடவடிக்கைகள் மதவெறியர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு சுதந்திரமடைந்த நாட்டின் குடிமக்களுடைய சகல ஜனநாயக உரிமைகளும் பெயரளவிலேயே உள்ளன. ஊடகங்களின் அரசியல் அவற்றை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. உலகமயமாக்கல் பின்னணியில் மக்களின் காலடி மண்ணிலிருந்து வாழ்வாதாரங்கள் யாவும் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்படுகின்றன. தொடரும் விவசாயிகளின் தற்கொலை... போலிசோ ராணுவமோ தனது பதக்கங்களுக்காக என்கவுண்டரில் போட்டுத் தள்ளாத வரைதான் மக்களின் உயிர் வாழும் உரிமை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதை பேசிக்கொண் டிருக்கும் இந்த கணத்திலும் இந்த நாட்டின் பல பாகங்களிலும் சாதிய/ பாலின ஆதிக்கத்தின் பெயரால் படுகொலைக்கும் வன்தாக்குதலுக்கும் ஆளாகி துன்புற்று மாயும் உயிர்களை இனி மேல்தான் கணக்கெடுக்க வேண்டும். இந்த நுட்பமான வன்முறைகளால் பின்னப்பட்டிருக்கும் சூழலை புறக்கணித்து, வாழும் சமூகம் குறித்த பிரக்ஞையற்று தன்மீதான கழிவிரக்கம் சுய புலம்பல் உள்மனக் கிளர்ச்சிகளையே விதந்தோதி கொண்டாடவேண்டிய உன்னதப் படைப்புகளென்றும், அதற்கிசைவான இஸங்களையே துதிபாடி துய்ப்பவர்களாகவும் வாசிப்பு இன்பம், படைப்பு இன்பம் என்று பிதற்றியபடியும் திரியும் அனேகத் தமிழ் படைப்பாளிகளின் பொதுப்புத்தியை எவ்வாறு ஊடறுப்பது?





அதிகாரங்களையும் அடக்குமுறைகளையும் கண்டு மவுனமாயிருப்பதைவிட, அல்லது நீங்கள் சொல்வது போல சூடு சுரணையேயில்லாமல் இருப்பதைவிட அதிகாரங்களையும் அடக்குமுறைகளையும் நியாயப்படுத்தி எழுதுபவர்கள்தான் பெரும் ஆபத்தானவர்கள். எங்களது சூழலில் அ.இரவி, கி.பி. அரவிந்தன், வாசுதேவன், யேசுராஜா, ஐங்கரநேசன் என ஒரு பெரும் கும்பலே பப்ளிக்காகப் பாஸிசத்தை ஆதரித்து எழுதி வருகிறார்கள். அ.முத்துலிங்கம் போன்று சமகால அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளை எழுதுபவர்களுமிருக்கிறார்கள். “சுத்த” இலக்கியத்திற்காக நடத்தப் படும் 'காலம்' போன்ற பத்திரிகைகளும் வெளிவருகின்றன. எனவே ஈழ எழுத்தாளர்களைக்கூடப் பொதுமைப்படுத்தி சுரணையான அதிகாரங்களுக்கு எதிரான எழுத்தாளர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால் அதேவேளையில் எந்த அதிகாரங்களிற்கும் பணிந்துவிடாமல் “சாகிறேன் பந்தயம் பிடி” என்று சொல்லிக்கொண்டே அதிகார மையங்களை விடாப்பிடியாக எதிர்த்துவரும் எழுத்து மரபும் இல்லாமலில்லை. ஆனால் இந்த மறுத்தோடிகள் மிகவும் சொற்பமானவர்கள்.





போருக்கு முந்திய சூழலும்கூட ஈழத்து இலக்கியச் சூழலில் மஹாகவி, மு.தளையசிங்கம், ஏ.ஜே. கனகரட்ணா போன்ற மேட்டுக்குடியினரின் இலக்கியச் செல்நெறிக்கும் கே. டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன்,தெணியான்,சுபத்திரன் போன்று ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து தோன்றியவர்களின் இலக்கிய செல்நெறிக்குமிடையில் துல்லியமான வேறுபாடுகளிருந்தன. டானியலிடமோ சுபத்திரனிடமோ வழு வழுத்த ஒரு சொற்கூடயிருக்காது. நான் குறிப்பிட்ட மேட்டுக்குடியினர் அரசியலில் நெளிவுசுழிவாக வாழ்ந்த வர்கள். ஆனால் டானியலும் மற்றவர்களும் தங்கள் வாழ்வையும் எழுத்தையும் மக்கள் விடுதலைக்காக அர்ப்பணித்தவர்கள். எல்லாம் தெரிந்த ஏ.ஜே. கனகரத்னா எந்த அரசியல் கட்சியிலும் இருக்காதது அவர்களுக்குப் பெருமைக்குரிய விடயமென்றால் நான்கு தடவைகள் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட பின்பும் கே.டானியல் மறுபடியும் மறுபடியும் கட்சியில் போய்த் தன்னை இணைத்துக்கொண்டதுதான் எங்களுக்குப் பெருமைக்குரியது. இந்த மரபுதான் இன்னும் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சூழல்களிலும் தொடருகிறது. ஜோன் ஹப்கின்ஸ் பல்கலைக்கழகமும் கொலம்பியா பல்கலைக்கழகமும் ஆண்டுக்குச் சிலபல ஈழத்துத் தமிழர்களை புலமையாளர்களாக வெளித்தள்ளுகிறது. இவர்களில் ஒருவரின் குரலையாவது தமிழ்ச் சூழலில் நீங்கள் கேட்டதுண்டா? முனைவர் பட்டம் பெற்ற கையோடு அவர்கள் மேற்கத்திய நிறுவனங்களிடமும் என்ஜிஓக்களிடமும் தங்களை ஒப்புக்கொடுத்துவிடுகிறார்கள். ஈழப் போராட்டத்தின் அவலங்கள் அவர்களைப் பொறுத்தவரையில் பட்டங்கள் பெறுவதற்கான ஆய்வுப் பொருட்கள் மட்டுமே. அதிகார மையங்களுக்கு எதிரான நெற்றியடியான நேரடியான பிரதிகளை விளிம்புகளின் குழந்தைகள் மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக எழுத்தாளர்களிடமும் இந்த விதிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்றுதான் நான் நினைக்கிறேன்.