Thursday, April 27, 2006

வருகை - சுகன்




ஞானதீபன் வந்தவுடனேயே ஒருவனைக் கொன்று விடுகிறான் எந்த ஆண்டு வந்தான்? ஜோர்மனியா? பிரான்ஸா? எதுவும் தெரியவில்லை தெரிவதெல்லாம்

வந்தவுடனேயே ஒருவனைக் கொன்றுவிடுகிறான்.....

அவனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது
கொன்றுவிடுகிறான்
பின்னர்;
பின்னர் எதுவுமில்லை

கொல்லப்பட்டவன் தமிழனாயும்
வெள்ளைக்காரனாயும்
இரண்டு உருவங்களில் அவனுக்குத் தெரிகிறான்

இருவரையும் அழைத்துக் கொண்டு பொலிஸிற்க்குப் போகிறான்
அகதிக்காக விண்ணப்பிக்க.


"ஐயா! எனது காலத்துக்கால இடப் பெயர்வுகளையும் சித்திரவதைகளையும் உயிராபத்துகளையும் மற்றும் கஸ்ர-நஸ்ரங்களையும் எங்கிருந்து எப்படித் தொடங்குவதென்று தெரியவில்லை........."

-சுகன்-

Sunday, April 23, 2006

ஈழப்போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும் - ஷோபா சக்தி

ஈழப்போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும் - ஷோபா சக்தி
ஈழப்போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும்

“ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” பிரதியை முன் வைத்து ஒரு வரைவு

ஷோபா சக்தி

படுகொலைகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்
பெயர்களைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்
ஆவிகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்
தேதிகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்
வரலாற்றைக்கொண்டாடுவதைநிறுத்துங்கள்
- அஹமத் அஸெகாக்’

2005 மே தீராநதி இதழ் நேர்காணலில் சி. புஷ்பராஜா ‘ஈழப் போராட்டம் தோல்வியடைந்து விட்டது’ எனச் சொல்லிச் சென்றிருந்த கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் மிகுந்த சர்ச்சைகளைக் கிளப்பின. இந்தக் கூற்று தமிழ்த் தேசியவாதிகளையும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களையும் நிச்சயமாகவே சினமுறச்செய்திருக்கும். தமக்கென்று ஒரு ஆட்சிக் கட்டமைப்பை விடுதலைப்புலிகள் பெற்றிருப்பதோடு பலமான தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப் படை போதாதற்குச் சங்கிலியன் படை, எல்லாளன் படை, குளக்கோட்டன் படை, பண்டாரவன்னியன் படையென பல பத்துப்படைகளோடு புலிகள் வலுவான நிலையிலும் இராணுவச் சம நிலையிலும் இருக்கும்போது புஸ்பராஜா கூறிய கருத்து அரசியல் முதிர்ச்சியற்ற கருத்து அல்லது அதுவொரு விசமத்தனமான கருத்து மட்டுமே எனத் தமிழ்த் தேசியர்களும் புலிகளின் ஆதரவாளர்களும் நினைத்திருக்கலாம். ஆனால் ஒரு போராட்டத்தின் வெற்றி தோல்வியை போராடுபவர்களின் படைபலத்தை வைத்து அளவிடுவதைவிடப் போராட்டத்தின் தார்மீகப்பலத்தை வைத்து அளவிடுவதே சரியானதாக இருக்கும். ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு அரசியல் சாணக்கியத்தனங்களை விட அரசியல் அறங்களே முக்கியமானவைகளாக இருக்கும். ஒரு போராட்டம் சர்வதேச அரசுகளிடம் எவ்வளவுதான் ஆதரவு பெற்றிருந்தாலும் தனது சொந்த மக்களிடம் அது ஆதரவைப் பெறத் தவறினால் போராட்டத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாய் முகிழ்த்து விடுதலைப் போராளிகள் அமைப்புமயப் படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் (1976-1984 காலப்பகுதியை இவ்வாறான காலம் எனக் கொள்ளலாம்) அனைத்து விடுதலை இயக்கங்களும் சோசலிஸத் தமிழீழமே எமது இலட்சியம் என முழங்கின. 14-05-1976ல் வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழ அரசுப் பிரகடனம் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணி கூட ‘சோசலிஸத் தமிழீழ அரசு’ என்றுதான் தீர்மானம் நிறைவேற்றியது. விடுதலை இயக்கங்களின் கொள்கைப்பரப்புரைகளிலும் அறிக்கைகளிலும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கோ அமிர்தலிங்கத்துக்கோ இடமில்லை. இப்போது போல இராசராசசோழனுக்கும் எல்லாளனுக்கும் அப்போது அந்த அறிக்கையில் இடமிருக்கவில்லை. லெனினும் மாவோவும் தங்குதடையில்லாமல் இயக்கங்களின் அறிக்கைகளிலும், கொள்கை விளக்க நூல்களிலும் சுவரொட்டிகளிலும் நடமாடினார்கள். இந்தச் சித்தாந்த தத்துவார்த்தப் பிரச்சனைகளில் அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ளாத விடுதலைப்புலிகள் கூட இந்த அலையில் அள்ளுண்டு ‘சோசலிஸத் தமிழீழம் நோக்கி’ 'சோசலிஸ தத்துவமும் கொரில்லா யுத்தமும்' என இரு சிறு நூல்களை வெளியிட்டார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஒரு தொகை மாணவர்களையும் இளைஞர்களையும் விடுதலை இயக்கங்களை நோக்கி ஈர்ப்பதில் இந்த சோசலிஸ முழக்கங்கள் பெரும்பங்காற்றின. அறுபதுகளிலிருந்து இடதுசாரிக்கட்சிகளுக்குப் பின்னால் உறுதியாக அணிதிரண்டு நின்ற தலித் மக்களை விடுதலை இயக்கங்களை நோக்கி இழுத்ததிலும் இயக்கங்கள் பேசிய தீவிர இடதுசாரிக் கருத்துக்கள் பெரும் பங்கு வகித்தன. குறிப்பாகத் தன்னை உறுதியான இடதுசாரி இயக்கமாக அடையாளப்படுத்திக் கொண்ட EPRLF இயக்கத்தில் தான் அதிகளவிலான தலித் இளைஞர்கள் இணைந்து கொண்டார்கள். பள்ளன் பறையன் கட்சியென அதுவரை கொம்யூனிஸ்ட் கட்சியை அழைத்து வந்த யாழ்ப்பாணத்துச் சாதி வெறியர்கள் அப்போதிலிருந்து EPRLF இயக்கத்தைப் பள்ளன் பறையன் இயக்கமென அழைக்கத் தொடங்கினார்கள். இயக்கங்கள் அப்போது முழங்கிய சோசலிஸ முழக்கத்துக்கு 10.04.1985-ல் அவர்களால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை சாட்சியமாகிறது.

இந்த அறிக்கை அப்போது LTTE, TELO, EPRLF, EROS ஆகிய நான்கு இயக்கங்களும் சேர்ந்து அமைத்திருந்த ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் (ENLF) வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் கீழே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலதிபர் பத்மநாபா, ஈழப் புரட்சி அமைப்பின் புரட்சிகர நிறைவேற்றுக் குழுவைச் சேர்ந்த வே. பாலகுமார் மற்றும் சங்கர் ஆகிய அய்வரும் கூட்டாகக் கையெழுத்திட்டிருந்தனர். அந்த அறிக்கையின் நான்காவது, அய்ந்தாவது தீர்மானங்கள் இவ்வாறு வரையப்பட்டிருந்தன.

(4) தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிஸப் புரட்சியையும் முன்னெடுத்து சுதந்திரத்தாய்நாட்டில் சோசலிஸ சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.

(5) உலக ஏகாதிபத்திய நவகாலனித்துவப் பிடியிலிருந்து எமது தேசத்தைப் பூரணமாக விடுவித்து அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்.

நாம் இந்தப்புரட்சிகரத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருபது வருடங்கள் கழித்துப் பார்க்கிறோம்!இப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் தமது அரசியல் எதிரிகளைத்திட்டவே இந்த சோசலிஸம், கொம்யூனிஸம் எனும் பதங்களை உபயோகிக்கிறார்கள். 2004 லண்டன் மாவீரர் நிகழ்வு உரையில் புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம் ஜே.வி.பி.யினரை கொம்யூனிஸப்பூதங்கள் என்றார். அவர் புலிகளுடைய இன்னொரு அரசியல் எதிரிகளைப்பற்றி இப்படி எழுதினார். தமிழீழ மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மார்க்சிய அமைப்பான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை பேணி வளர்த்து முக்கியத்துவம் அளிப்பதென டில்லி ஆட்சியாளர் முடிவெடுத்தனர்”²

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பொருளாதாரக்கொள்கை திறந்த பொருளாதாரக்கொள்கையே என வன்னி ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகளின் தலைவர் அறிவித்தார். நாட்டைப் புனரமைக்க நிதி தருகிறோம் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லுங்கள்’ என்ற மேலை நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்து தான் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்குச் சம்மதித்தார்கள் எனக்கடந்த மாவீரர் நாள் உரையின் போது அன்ரன் பாலசிங்கம் ஒப்புக்கொண்டார். உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சிறிலங்காவுக்கு வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க் கடனுக்கும் ஒவ்வொரு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றன. ஊழியர்களின் பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வருகிறது. மரண தண்டனைச்சட்டம் மீண்டும் சிறிலங்காவில் அமுலுக்கு வந்திருக்கிறது. அமெரிக்க இராணுவம் சிறிலங்காப் படைகளோடு கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிறது. சுனாமி பேரழிவைத் தொடர்ந்து பதின்மூன்று நாடுகளின் இராணுவங்கள் சிறிலங்காவில் கால்களைப் பதித்தன. காரைதீவார் கடை வைக்காத இடத்தில் கூட N.G.O க்கள் கடை விரித்துள்ளார்கள். பல்தேசிய நிறுவனங்களுக்கும் அந்நிய மூலதனத்துக்கும் நாடு திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஆக ஒட்டு மொத்த நாடும் மறுகாலனியமயப்பட்டிருக்கும் நிலையில் நிலவும் இந்த சமூக அமைக்குள்ளும் நிலவும் உற்பத்தி முறைமைகளுக்குள்ளும் நிலவும் ஏகாதிபத்திய அடிபணிவுக் கொள்கைகளுக்குள்ளும் பேச்சுவார்த்தையின் மூலம் வடக்கு கிழக்கில் தமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கே புலிகள் முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

2003 ஆகஸ்ட் இறுதிப்பகுதியில் பாரிஸ் நகரில் கூடிய விடுதலைப்புலிகளின் அரசியலமைப்பு நிபுணர்கள் குழு ‘இடைக்காலத்தன்னாட்சி அதிகார சபை’க்கான ஓர் வரைவை வரைந்தது. இந்நிபுணர்கள் குழுவில் பேராசிரியர் சொர்ணராஜா, முன்னாள் சட்டவாளர் நாயகம் சிவா பசுபதி, உருத்திரகுமாரன், பேராசிரியர் மனுவல்பிள்ளை போல் டொமினிக், பேராசிரியர் ராமசாமி, சட்ட நிபுணர் விஸ்வேந்திரன், கலாநிதிமகேஸ்வரன் ஆகியோர் அடங்குவர்.3 இவர்கள் வரைந்த வரைவு ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொள்கிறது. இந்த வரைவின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு புலிகள் முயல்கிறார்கள். இந்த வரைவின் அடிப்படை சிறிலங்கா அரசிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட அதிகார அலகுகளை விடுதலைப் புலிகள் பெற்றுக்கொள்வதேயாகும். இந்த வரைவுக்கும் அந்த நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களுக்கும் எதுவித சம்மந்தமுமில்லை.

அந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருபது வருடங்கள் கழித்து ஈழத்துப்பண்பாட்டுப் புலத்தைப் பார்க்கிறோம். ஈழத் தமிழ்ச்சமூகத்தின் பிரதான உள் முரணான சாதியத்தை ஒழிப்பதற்கு எமது ஏகபிரதிநிதிகளிடம் எதுவித வேலைத்திட்டமும் கிடையாது. கிடையாது என்பதை விட புலிகள் உள்ளார்த்தமாக சாதியமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் தான் செயற்படுகிறார்கள். யாழ்ப்பாணப் பொது நூலகத்தை ஒரு தலித் மேயர் திறந்து வைக்கக் கூடாது என்று நூலகத்திறப்பு விழாவையே தடுத்து நிறுத்திய ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகள் எப்படிச் செயற்பட்டார்கள் என்பதை ‘ஒரு வரலாற்றுக் குற்றம்’ என்ற எமது சிறு பிரசுரத்தில் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். சாதியமைப்புக்கும் இந்து மதத்துக்கும் உள்ள தொடர்பு வரலாற்று பூர்வமானது. பண்பாட்டுப் புலத்தில் இந்து மதத்தை அழிக்காமல் சாதியை அழிக்க முடியாது. ஆனால் மாறாகப் புலிகள் இந்து மதத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சியால் தான் இறங்கியிருக்கிறார்கள். அய்ரோப்பிய நகரங்களில் அவர்கள் இந்துக்கோவில்களை நிறுவி நடத்தி வருகிறார்கள். சமஸ்கிருதம், பூணூல், தேர் என்று சநாதனம் புலிகளின் புண்ணியத்தில் அய்ரோப்பாவிலும் கொடிகட்டிப்பறக்கிறது. உலகிலேயே போராட்டத்திற்கு என்று பொது மக்களிடம் பணம் சேர்த்து அந்தப்பணத்தில் கோயில் கட்டிக்கும்பிடும் ஒரே விடுதலை இயக்கம் விடுதலைப் புலிகளின் இயக்கம் தான்.

இன்னொரு புறத்தில் விடுதலைப்புலிகளின் கொலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தின துரை அம்மனின் மீது துதிப் பாடல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். சாதியமைப்புக் குறித்தும் தலித் மக்களின் உரிமைகள் குறித்தும் கேள்விகள் எழும் போதெல்லாம் ‘முதலில் போராட்டம் முடியட்டும் எமது அக முரண்களைப் பின்பும் தீர்த்துக்கொள்ளலாம்’ என்கின்றனர் விடுதலைப் புலிகள் ஆதரவு அறிவுஜீவிகள். அதன் அர்த்தம் அதுவரை சாதியமைப்பு இப்படியே இருக்கட்டும் என்பதைத் தவிர வேறென்ன? இதற்கும் அந்த நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களுக்கும் எதுவித சம்பந்தமுமில்லை.

அந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருபது வருடங்கள் கழித்து வடக்குக்கிழக்கில் வாழ்ந்த - வாழும் இன்னொரு தேசிய இனமான முஸ்லிம்களைப் பார்க்கிறோம். சோசலிஸ தமிழீழத்தை முழங்கிய புலிகள் எப்படியாக இனப்படுகொலைகளை நிகழ்த்தினார்கள் என்பதை அறிவிக்கிறார் புஸ்பராஜா:

1990 ஜூலை 12ம் நாள் குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.

1990 ஓகஸ்ட் 3ம் நாள் காத்தான்குடிப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1990 ஓகஸ்ட் 10ம் நாள் ஏறாவூரில் 130 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்.

1992 ஏப்ரல் 29ம் நாள் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.

1992 ஜூலை 15ம் நாள் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப் பட்டனர். (பக். 477)

வடபகுதியில் பத்து நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் 1990 ஒக்டோபர் 30ஆம் திகதி இரண்டு மணிநேர அவகாசத்துள் விடுதலைப் புலிகளால் கட்டிய துணியுடன் வடபகுதியை விட்டுத்துரத்தப்பட்டனர். அவர்களின் அசையும் அசையாச்சொத்துக்கள் யாவும் விடுதலைப் புலிகளால் கொள்ளையிடப்பட்டன. விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதற்கோ அவர்களிடம் கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளக் கையளிப்பதற்கோ இதுவரை விடுதலைப்புலிகள் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. கிழக்கில் தமிழ்ப் போராளிகளால் காலத்துக்குக் காலம் முஸ்லீம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களும் எதிர் வன்முறைகளில் இறங்கினர். இப்போது அங்கே தமிழ் - முஸ்லிம் உறவு சீர்கெட்டுக் கிடக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைமையையோ அல்லது இன்னொரு தமிழ்த்தலைமையையோ தங்களின் தலைமையாக ஏற்றுக் கொள்ள எந்தவொரு இஸ்லாமியரும் இன்று தயாரில்லை. முஸ்லிம் மக்களின் இறைமையை அங்கீகரிக்கப் புலிகளும் தயாரில்லை.

வர்க்க ஒடுக்குமுறையற்ற சாதியமற்ற இனவாதமற்ற சோஸலிசத் தமிழீழத்தை நோக்கித் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஈழப்போராட்டம், அந்த இலட்சியங்களின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்த ஈழப்போராட்டம் இன்று குறுந்தேசிய வெறியும் ஏகாதிபத்திய அடிபணிவும் சகோதரப் படு கொலையும் - பாஸிஸமுமாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது. இதைத்தான் ஈழப் போராட்டத்தின் தோல்வி என்கிறோம். இந்தத் தோல்வி ஒரு நாளில் நம்மை வந்தடைந்த தில்லை. ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் இந்தத் தோல்விக்கான காரணங்கள் விரவிக்கிடக்கின்றன. அந்த அத்தியாயங்களை கட்டவிழ்ப்பதன் மூலமாகவும் அதன் மூலமாக இதுவரை எழுதப்பட்ட ஈழப் போராட்டத்தின் வரலாற்றைச் சிதைக்கப் பெருமளவு முயல்வதாலும் சி.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ மிக முக்கியமானதொரு அரசியல் நூலாக - அதன் உள் முரண்களோடு சேர்த்துப் பார்த்தால் கூட - தன்னை நிறுத்திக் கொள்கிறது.

II

சி. புஷ்பராஜா தமிழ் இளைஞர் பேரவையின் முதலாவது தலைவர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (T.L.O) முன்னோடிகளில் ஒருவர். நீண்ட காலமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இயங்கியவர். முன்னணியின் பிரான்ஸ் கிளையின் பிரதிநிதியாகச் செயற்பட்டவர். ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவரின் அனுபவங்களும் போராட்டம் குறித்த அவரின் எண்ணங்களும் விமர்சனங்களும் எழுபத்தேழு அத்தியாயங்களாக 632 பக்கங்களில் விரிந்து செல்கின்றன. அவரின் கடுமையான உழைப்பு இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. (வெளியீடு: அடையாளம்,) 1944ம் ஆண்டில் அகில இலங்கைத் தமிழ் கொங்கிரஸ் கட்சி நிறுவப் பட்டதில் தொடங்கி இன்றைய காலகட்டம் வரைக்குமான ஈழத்து அரசியலின் ஒரு பகுதியைத் தெட்டத்தெளிவான உரை நடையில் புஸ்பராஜா விவரிக்கிறார்.

1948ல் சுதந்திர இலங்கையின் டி.எஸ். சேனநாயக்கா அரசு இந்தியா - பாகிஸ்தான் பிராசா உரிமைச் சட்டமென்று ஒரு கொடூரமான சட்டத்தை இயற்றி மலையகத்தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியது. இந்தச்சட்டத்தை தமிழ் கொங்கிரஸ் கட்சியின் தலைவர் G.G. பொன்னம்பலம் ஆதரித்ததைத் தொடர்ந்து தமிழ் கொங்கிரஸ் கட்சி பிளவுற்றது. அச்சட்டத்தை எதிர்த்து கொங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம், கு. வன்னியசிங்கம், நாகநாதன் போன்றவர்களால் 1949 டிசம்பர் 18ல் தமிழ் அரசுக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் அரசுக்கட்சியின் தோற்றத்தோடு இலங்கையின் நவீன அரசியலில் தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறது.

1956 ஜூன் 5ம் திகதி இலங்கையின் சிங்களப்பேரினவாத அரசு இயற்றிய தனிச்சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி என்ற சட்டத்தை எதிர்த்து தமிழரசுக்கட்சி பெரும் சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தியது. தொடர்ந்து தமிழரசுக் கட்சி திருகோணமலையில் நடத்திய மாநாட்டில் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம உரிமையையும் சமஸ்டி அரசியல் அமைப்பையும் கோருதல் எனத்தமிழரசுக் கட்சி நிறைவேற்றிய தீர்மானங்களும் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியினர் பரவலாக நடத்திய சட்டமீறல் போராட்டங்களும் எல்லாவற்றுக்கும் மேலாக 1958ல் பொலிஸாரும் சிங்கள இனவாதிகளும் தமிழர்கள் மேல் மேற்கொண்ட தாக்குதல்களும் கொலைகளும் தமிழ்த்தேசியத்தின் அடுத்த கட்ட நகர்வுக்குக் காரணங்களாயின. இந்தக் கட்டத்தில் தான், ‘தேசாபிமானம் என்பது அயோக்கியர்களின் பிழைப்புக்கான வழி’ என்ற ஈ. வெ.ரா. பெரியாரின் புகழ் பெற்ற கூற்றைத் தமிழரசுக்கட்சியினர் தெட்டத்தெளிவுற நிரூபணம் செய்யத் தொடங்கினார்கள்.

தமிழரசுக் கட்சி எவ்வளவுக்கு தீவிரத் தமிழ்த் தேசியம் பேசியதோ அதே தீவிரத்துடன் அது வலதுசாரித்தனத்தில் உழன்றது. தமிழரசுக்கட்சியின் தலைமை யாழ் மையவாதத் தலைமையாகவும் யாழ் ஆதிக்க சாதியினரின் தலைமையாகவுமே இருந்தது. உழைக்கும் மக்களின் உரிமைகள் குறித்தோ சாதிய ஒடுக்குமுறைகள் குறித்தோ அது எப்போதும் அக்கறை கொள்ளவில்லை. 1968ல் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்திய சாதியழிப்புப் போராட்டத்தின் போது களத்தில் நின்ற தலித் மக்கள் சங்கானை, நிச்சாமம் பகுதிகளில் சாதி வெறியர்களால் கொல்லப்பட்டனர். இக்கொலைகளைக் குறித்து பாராளுமன்றத்தில் சிங்கள இடதுசாரிகள் கேள்வி எழுப்பிய போது ‘அப்படி எதுவுமே நடக்கவில்லை’ என தமிழரசுக் கட்சியின் தளபதி அ. அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்தார். அதே வேளை கம்பஹா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிங்களவரான எஸ்.டி. பண்டாரநாயக்கா சங்கானையிலும் மற்றப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறியதும் நிகழ்ந்த சாதியப்படுகொலைகளையும் ஒடுக்கு முறைகளையும் பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறி தமிழரசுக் கட்சியை அம்பலப்படுத்தியதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.4

தமிழ்ப்பிரதேசங்களில் எப்போதெல்லாம் தொழிற்சங்கப் போராட்டங்கள் வெடிக்கின்றதோ அப்போதெல்லாம் தொழில் முதலாளிகளுக்கு ஆதரவாகவே தமிழரசுக் கட்சியினர் செயற்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய தொழிலாளர் போராட்டமான மில்க்வைற் தொழிற்சாலைப்போராட்டத்தில் தொழிற்சாலையின் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே தமிழரசுக் கட்சியினர் செயற்பட்டனர். மில்க்வைற் முதலாளியின் சார்பாக தமிழரசுக் கட்சி பிரமுகர் எம். ஆலாலசுந்தரமே நீதிமன்றத்தில் வழக்கை நடத்தினர்.5

இந்தக்காலகட்டத்தில் தான் தமிழரசுக் கட்சி சாதிய மனோபாவத்துடனும் முதலாளிய வர்க்க நலனோடும் யாழ் மையவாதத்திலும் வலதுசாரித்தனத்திலும் உழன்ற கால கட்டத்தில் தான் 1969ல் புஸ்பராஜா தமிழரசுக்கட்சியில் இணைந்து கொள்கிறார்.

புஸ்பராஜா அந்த வலதுசாரித் தமிழ்த்தேசியப் பாசறையில் உருவானவர். தமிழரசுக்கட்சி வகைத்தேசியத்தை விட்டுக் கருத்து ரீதியாக அவர் முன்னேயோ பின்னேயோ ஓரடி கூடச் செல்லாதவர். அவருடைய ஒரு தொகை மதிப்பீடுகள் வலது சாரித் தமிழ்த்தேசிய அளவுகோல்களாலேயே கட்டப்பட்டவை என்பதற்கு நூலின் பல பக்கங்களில் சான்றுகள் உண்டு. இலங்கை அரசியலில் கடந்த எழுபது வருடங்களாக நிகழ்ந்த அரசியல் போக்குகளை நூலில் அத்தியாயம் அத்தியாயமாக விபரித்துச்செல்பவர் ஈழத் தமிழ்ச் சாதியச் சமூகத்தில் பெரும் புரட்சிகர நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டிய தலித் மக்களின் அமைப்பான சிறுபான்மை தமிழர் மகாசபை குறித்தோ தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் குறித்தோ ஓரிரு வரிகளுக்கு மேல் நூலில் பேசவில்லை. அந்த வரிகளும் வெறும் தகவல் குறிப்புக்களாகவே அமைந்துள்ளன. இவ்வளவுக்கும் அந்த இரு அமைப்புகளும் எங்கோ ஒரு அடையாளம் தெரியாத மூலையில் இயங்கியவை அல்ல. அப்போது மிக வேகமாக வளர்ந்து வந்த தமிழ்த்தேசிய சக்தியான தமிழரசுக் கட்சியோடு நேருக்கு நேராகப் பொருதியவை அவை. 1972ல் புதிய அரசியல் யாப்பு விவாதத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் இருந்த எம்.சி. சுப்பிரமணியம் ‘தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழ்த்தேசிய இன வரையறைக்குள் அடங்கமாட்டார்கள்’ என்றார். தாழ்த்தப்பட்ட மக்களை தனித் தேசிய இனமாக வரையறுக்க வேண்டும் என எம்.சி. சுப்பிரமணியம் வலியுறுத்தினார். இந்தக் கருத்தைப் பிரச்சாரம் செய்வதற்காகவே அவர் உதயம் என்ற பத்திரிகையை தொடங்கினார்.6 தமிழ்த்தேசியம் என்ற கதையாடலுக்கு எதிராகத் தலித்தேசியம் என்ற குரல் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னேயே எழுந்துள்ளது நம்முடைய கவனத்துக்கு மட்டுமல்ல புஸ்பராஜாவின் கவனத்துக்கும் உரியது.

புஸ்பராஜாவின் வலதுசாரித் தமிழ்த் தேசியப்பார்வைக்கு நூலில் இன்னொரு உதாரணத்தையும் சுட்டலாம். ‘அமிர்த லிங்கத்தையும் கொன்றனர்’ (பக்: 482 - 492) என்ற அத்தியாயம் முழுவதும் அமிர்தலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமிர்தலிங்கத்தின் சாதிய முதலாளிய பாராளுமன்ற அரசியலின் மீது புஸ்பராஜாவுக்கு எதுவித விமர்சனங்களும் இல்லை. மாறாக அந்தப்பக்கங்களில் அமிர்தலிங்கத்தை ஒரு கர்மவீரனாகவே அவர் சித்தரிக்கிறார். தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட அமிர்தலிங்கத்தின் அரசியற்படுகொலை நிச்சயமாகவே கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதே போல் புலிகளால் கொல்லப்பட்ட யாழ் நகர பிதா அல்பிரட் துரையப்பாவின் கொலையிலிருந்து விடுதலை இயக்கங்களால் செய்யப்பட்ட அனைத்து அரசியற்படுகொலைகளும் கண்டனத்துக்கு உரியவையே. துரையப்பாவின் கொலையை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மகிழ்ந்து கொண்டிய வரலாறு ஒன்றும் இரகசியமானது அல்ல. புஸ்பராஜா அல்பிரட் துரையப்பாவின் கொலையைப்பற்றி எழுதும் போது அந்த அரசியல் படுகொலை குறித்துக்கண்டனங்கள் எதுவும் அவருக்கு இருப்பதில்லை. மாறாக ‘துரையப்பா கொலை செய்யப்பட்ட பின்பு நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் தெரிந்தது’ என்கிறார் புஸ்பராஜா. (பக். 159)

யாழ் நகர மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா யாழ் நகர மக்களிடையே குறிப்பாக விளிம்பு நிலை மக்களிடையே பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தவர். தன் மீது ஏழைப்பாங்காளன் என்ற படிமத்தை ஏற்படுத்திக் கொண்டதுடன் நின்று விடாது தன் மேயர் பதவியின் மூலம் குறிப்பாக நகரசுத்தித் தொழிலாளர்களுக்கு சில நலத்திட்டங்களை நிறைவேற்றியவர் துரையப்பா. அவர் யாழ் நகரின் நிரந்தர மேயராக இருந்தார். அறுபதுகளில் வீசிய தமிழரசு அலைக்கு மத்தியிலும் பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்று தமிழரசுக் கட்சியை இரு தடவைகள் தோற்கடித்தவர் துரையப்பா. துரையப்பாவைக் கொன்றவர்களில் இருவரான கலாபதியும் கிருபாகரனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்காக தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பாடுபட்டனர். கலாபதியும் கிருபாகரனும் விடுதலையானவுடன் அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர்களான அ. அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம் ஆகியோருடன் ஆலோசனை செய்யும் புகைப்படம் ஒன்றும் இந்நூலின் 597ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இத்தமிழரசுக் கட்சி தலைவர்கள் இருவரும் அடுத்த பத்து வருடங்களில் புலிகளால் சுடப்பட்டனர் என்பது பின் குறிப்பு.

தமிழ்த்தேசியமும் அது உருவாக்கும் பண்டைய வரலாற்றுப் பெருமிதம், தலைமை வழிபாடு, வீரம் போன்ற கதையாடல்களும் பிரித்துப் பார்க்க முடியாதவை. இந்த மயக்கங்களும் இந்த நூலில் இடையிடையே உண்டு. குறிப்பாக ‘விடுதலைப் புலிகளும் அவர்களின் தலைவரும்’ என்ற அத்தியாயம் ஒரு கெட்ட உதாரணம் (பக். 560 - 572). ‘தமிழ் மக்களின் விடுதலையைத் தன்னால் மட்டுமே பெற்றுத்தர முடியும், அதற்கான தியாகமும் பலமும் தன்னிடமே உள்ளது எனப் பிரபாகரன் உண்மையாகவே நம்புகிறார்’ போன்ற தரச்சான்றிதழ்களும் ‘ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவரதுமனதில் உள்ளதை அறிந்து கொள்ளும் திறமையே பிரபாகரனின் வெற்றியின் இரகசியமாகும்’ என்பன போன்ற அறிவுக்குப் பொருந்தாத குறிப்புகளும் அந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.


வலதுசாரித்தேசியம், இடதுசாரித் தேசியம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தேசியம் குறித்த புதிய கேள்விகளும் புதிய கருத்துருவாக்கங்களும் இப்போது அரசியல் அறிவுப்புலங்களில் எழுந்து வருகின்றன. மரபு மார்க்ஸியத்தின் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற கருத்துருவாக்கங்களுக்கும் வரையறைகளுக்கும் அப்பால் பண்பாட்டுத் தேசியம் குறித்த குரல்கள் ஒலிக்கத் தெடங்கியுள்ளன. (எ.டு. முசுலிம் தேசியம், தலித் தேசியம்) இன்னொரு புறத்தில் மூலதனத்தின் எல்லைகள் தாண்டிய பாய்ச்சலுக்கும் உலகமயமாக்குதலுக்கும் முன்பாகத் தேசியம் தனது அரசியல் பொருளியல் அர்த்தங்களை இழக்கத் தொடங்கியுள்ளது.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாளியம் ஏகாதிபத்தியமாய் உருக்கொண்டதற்குப் பின்னாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னாக உலகில் ஒரு தேசிய முதலாளிய அரசு கூடத்தோன்றியதில்லை. பின்னைய காலப்பகுதி ஒரு சில தரகு முதலாளிய அரசுகளையும் ஒரு சில உருக்குலைந்த தொழிலாளர் வர்க்க அரசுகளையும் மாத்திரமே தோற்றுவித்தது. இன்றைய உலகமயமாக்குதல் சூழலில் தேசங்கள் மூலதனத்துக்கும் பல்தேசியக் கூட்டுத்தாபனங்களுக்கும் முன்பாக இறைமைகளை இழந்துகொண்டிருக்கும் பலவீனமான கண்ணிகளாக மாறியுள்ளன. இந்தப் புறநிலைகள் பிரச்சனைப்பாடுகள் புஸ்பராஜாவின் அரசியல் பார்வையில் குறுக்கிடுவதில்லை. அவரின் பார்வைக் கோணம் - அவர் EPRLF ல் இருந்த காலத்தில் கூட தமிழரசுக் கட்சியின் நீட்சியாகவே இருக்கிறது. அவரது அரசியல் இயங்கு முறைமை 1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் முழங்கப்பட்ட ‘தமிழீழ அரசு’ என்ற முழக்கத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. நவீனத்துக்குப்பிந்திய நுண் அரசியல் சிந்தனைகள் அவரைக்கிட்டவும் நெருங்குவதில்லை. ஆனால் இத்தகைய தட்டைப்பார்வைகள் பலவீனங்களைக் கடந்தும் இந்த நூலுக்கு இன்னொரு பரிமாணம் இருக்கிறது. அப்பரிமாணம் இன்றைய காலத்துக்கும் இனிவரும் காலத்துக்கும் மிகமிக முக்கியமானது.

III

“மௌனம் என்பது சாவுக்குச்சமம். எதுவும் பேசா விட்டாலும் சாகப்போகிறீர்கள்; பேசினாலும் சாகத்தான் போகிறீர்கள் எனவே பேசிவிட்டுச் செத்துப் போங்கள்”
அல்ஜீரிய எழுத்தாளர் தஹார் ஜாவுத்7.

இன்றைக்கு ஈழத்தில் வாழ்ந்தாலென்ன புகலிடத்தில் வாழ்ந்தாலென்ன ஈழத் தமிழர்களுக்கு தமிழ் மொழி இரண்டாவது மொழிதான். அவர்களின் தாய்மொழி மௌனம் தான். பேசியதற்கும் எழுதியதற்குமாகவே கொல்லப்பட்டவர்களின் கொலைப்பட்டியல் மிக நீளமானது.

புலிகளாலும் அவர்களது அடிப்பொடி அறிவுஜீவிகளாலும் இதுவரை ஈழப்போராட்டத்துக்கு எழுதப்பட்ட ஒற்றை வரலாற்றை இந்நூல் மூலம் புஷ்பராஜா பெருமளவுக்குக் கலைத்துப் போட்டிருக்கிறார். புலிகள் எழுதும் வரலாறு ஈழப் போராட்டத்தின் வரலாறாக இருப்பதில்லை. அது புலிகளின் வரலாறாகவே இருக்கும். இன்னும் நுணுகிக்கவனித்தால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனின் வரலாறாகவே இருக்கும். மிஞ்சி மிஞ்சிப்போனால் கிட்டு, பொட்டு என்று சில இடைச் செருகல்கள் இருக்கும். ஈழப் போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட மற்றைய இயக்கத்தோழர்களையும் அமைப்புக்களையும் தனிநபர்களையும் பற்றி இதுவரை எழுதப்படாத வரலாற்றைத் தன் நூல் முழுவதும் புஸ்பராஜா எழுதிச் செல்கிறார். புலிகளின் வரலாற்றில் துரோகிகளாய்ப் புதைக்கப்பட்ட தோழர்கள் உயிர்த்து உறுதியும் அர்ப்பணிப்பும் மிக்க போராளிகளாய் இந்த நூலின் பக்கங்களில் அணிவகுத்து நடக்கிறார்கள்.

பொது மக்கள் மீதும் மற்றைய இயக்கங்கள் மீதும் மாற்றுக் கருத்தாளர்கள் மீதும் மிதவாதக் கட்சித்தலைவர்கள் மீதும் புலிகள் நிகழ்த்திய கொலைச்செயல்களை அத்தியாயம் அத்தியாயமாகத் துல்லியமாகப் பெருமளவு ஆதாரச் சான்றுகளுடன் புஸ்பராஜா எழுதிச் செல்கிறார்.

1. பொதுமக்கள் மீதான தாக்குதல், 2. சகோதர இயக்கங்களை அழித்தல் 3. இலங்கையில் முசுலிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் 4. அமிர்தலிங்கத்தையும் கொன்றனர். 5. கொன்று வீசப்பட்ட போராளிகள் ஆகிய அய்ந்து அத்தியாயங்களும் புலிகளின் பாஸிஸ நடவடிக்கைகளை ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டும் அத்தியாயங்கள். புலிகள் தமது சொந்த இயக்கத்துள் தமது சொந்தத் தோழர்களையே கொன்றொழித்த கதைகளையும் புஸ்பராஜா எழுதத்தவறவில்லை. மைக்கலின் கொலையைப்பற்றி எழுதுகிறார். (ப. 565) பற்குணத்தின் கொலை யைப்பற்றி எழுதுகிறார் (ப. 567) மாத்தையாவுக்குத் தனி அத்தியாயமே இருக்கிறது (பக். 493 - 495)

தமிழ் ஈழப் போராட்டத்தில் ஆயுதம் தரித்துக் களத்தில் நின்ற முசுலிம் தோழர்களின் பங்கு புலிகள் எழுதும் வரலாற்றில் இருட்டிக்கப்பட்டே வருகிறது. இதை எழுதும் போது யாழ் கோட்டையிலிருந்து வெளியேற முற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரைத் தடுத்து நிறுத்தி மோதிய இரு வெவ்வேறு சண்டைகளில் உயிர்களைத் துறந்த கிழங்கன் என்ற உஸ்மானும் அப்போதைய கோட்டைப்பகுதிப் புலிகளின் பொறுப்பாளர்
(f)பாருக்கும் என் ஞாபகத்தில் வருகிறார்கள். முசுலீம்கள் மீது புலிகள் நிகழ்த்திய படுகொலைகளையும் துரோகிகள் பட்டம் சுமத்தி முசுலீம்களை புலிகள் வடபகுதியில் இருந்து விரட்டியதையும் பக்கங்கள் 473 - 483ல் ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்து வெட்கப்படத்தக்கதாய் புஸ்பராஜா விபரிக்கிறார். புலிகளைக்கேட்டால் அவர்கள் ‘இது இன்னுமொரு துன்பியல் சம்பவம்’ என்று வர்ணிக்கக்கூடும். ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன்பு துரத்தப்பட்ட அந்த முசுலிம் மக்கள் இன்று வரை நாட்டின் மேற்குப்பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வேண்டாத அகதிகளாய்த் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நூலின் இன்னுஞ் சில பக்கங்கள் விடுதலைப் புலிகளின் கபட அரசியலையும் துரோக அரசியலையும் ஆராய்ந்து சொல்கின்றன. 1987ல் இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்பாக 1987 ஓகஸ்ட் 4ம் நாள் சுதுமலைப் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களின் முன் முதன் முறையாக உரையாற்றிய விடுதலைப்புலிகளின் தலைவர் ‘தங்கள் மீது பலவந்தமாக ஒப்பந்தத்தை இந்திய அரசு திணித்திருப்பதாகவும் இன்று முதல் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய அரசிடம் கையளிக்கிறோம்’ என்றும் கூறினார். இலங்கை இந்திய ஒப்பந்தம் நிகழ்வதற்கு முன்பாகவே இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தியும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் செய்து கொண்ட இன்னொரு திரைமறைவு ஒப்பந்தத்தைக் குறித்து புஸ்பராஜா ‘லண்டன் ஒப்சேவர்’ பத்திரிகையை ஆதாரம் காட்டி எழுதுகிறார்:

“இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட பின் - வடக்கு கிழக்கில் அமையவிருக்கும் இடைக்கால நிர்வாக சபையில் பெரும்பான்மை இடங்களைப் புலிகளுக்குத் தருவதற்கும் புலிகளின் செலவினங்களுக்கு மாதா மாதம் அய்ந்து மில்லியன் இந்திய ரூபாய்கள் கொடுப்பதற்கும் இந்தியப் பிரதமர் ஒப்புக் கொண்டார். புலிகளும் இந்தியப் பிரதமரும் செய்து கொண்ட இந்த உடன்பாடு மிகவும் இரகசியமான ஒரு விடயமாகும். ஆரம்ப மாதத்துக்கான அய்ந்து மில்லியன் ரூபாய்களும் புலிகளுக்குக் கொடுக்கப்பட்டது.” (ப. 423) 1989 ஏப்ரல் 30ம் நாள் ‘லண்டன் ஒப்சேவர்’ பத்திரிகையில் வெளியான இச்செய்தியை புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வரிக்குவரி ஒப்புக்கொள்கிறார். ‘லண்டன் ஒப்சேவரில் வெளியாகும் வரை இலங்கை - இந்திய மக்கள் அறியாமலேயே இருந்த இந்த இரகசிய உடன்படிக்கையை இந்தியப் பிரதமர் Gentlemen Agreement எனக்குறிப்பிட்டார் என்கிறார் பாலசிங்கம்.8

புலிகளின் திரைமறைவு உடன்படிக்கைகள் எதுவும் மக்கள் முன்வைக்கப்படுவதில்லை. அவர்கள் செய்யும் கொலைகளுக்கு காரணங்களையும் புலிகள் மக்கள் முன்வைப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க அவர்கள் தாங்கள் செய்யும் அநேக கொலைகளை ஒப்புக் கொள்வது கூட இல்லை. புலிகள் எடுக்கும் அரசியல் முடிவுகளில் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளில் அடிக்கும் குத்துக்கரணங்களில் செய்யும் துரோகங்களில் மக்களுக்கு எந்தப்பங்கும் இருப்பதில்லை. கொள்கைகளும் முடிவுகளும் மேலிருந்து கீழாகத்திணிக்கப்படுகின்றன. ஆனால் யுத்தத்தின் சுமையையும் தோல்வியின் அவமானத்தையும் மக்கள் தான் சுமக்கிறார்கள். யுத்தத்துக்கான செலவை மக்கள் தான் செலுத்துகிறார்கள். புலிகளின் அரசியல் தவறுகளுக்கு மக்கள் வட்டி செலுத்துகிறார்கள்.

எந்த வரலாற்று நிகழ்வையும் தங்கள் நலன்களுக்கு ஏற்ற வகையில் புலிகள் திரிக்க வல்லவர்கள். ராஜினி திரணக மவையும் விமலேஸ்வரனையும் கோவிந்தனையும் தாங்கள் கொலை செய்யவில்லை என மீண்டும் மீண்டும் அவர்கள் மறுத்துக்கொண்டிருக்கிறார்கள். புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கன் 08-11-1995 அன்று ‘அவுட்லுக்’ இதழுக்கு அளித்த நேர்காணலை புஸ்பராஜா நூலின் 519ஆம் பக்கத்தில் சுட்டிக் காட்டுகிறார்:
“அவுட்லுக்: நீங்கள் ஏன் ராஜீவ் காந்தியைக் கொன்றீர்கள்?
பாலசிங்கம்: மறுபடியும் மறுபடியும் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என்னிடம் ஒரே பதில்தான் இருக்கிறது. ராஜீவ் காந்தியை நாங்க கொல்லவில்லை”

பாலசிங்கம் இப்படிக் கூறிய ஏழு வருடங்களுக்குப் பின்பு கிளிநொச்சி ஊடகவியலாளர் மாநாட்டில் மறுபடியும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்ட போது பாலசிங்கம் மௌனித்திருக்க பிரபாகரன் இரண்டே இரண்டு இலக்கிய நயம் மிக்க வார்த்தைகளில் பிரச்சனையை முடித்து வைத்தார். ராஜீவ் காந்தி கேசுக்கே இதுதான் நிலைமை. இப்படியிருக்க குப்பனையும் கோவிந்ததனையும் கொன்றதையா புலிகள் ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்?

மற்றைய இயக்கங்கள் சிறிலங்கா அரசோடு சேர்ந்து துரோகமிழைத்தன எனக்கூறும் புலிகளின் வரலாறு என்ன? ஈழத்தின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாக சிறிலங்கா பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளே. புலிகளின் வார்த்தைகளில் சொன்னால் இந்தத் ‘தந்திரோபாயச்’ செயலில் 1989 ஏப்ரல் 26ம் நாள் புலிகள் இறங்கினர். அவர்கள் சிறிலங்கா அரசோடு கொண்டிருந்த உறவுகளையும் செய்து கொண்ட இரகசிய உடன் படிக்கைகளையும் நூலின் ‘பிரேமதாஸாவும் புலிகளும்’ என்ற அத்தியாயம் எழுதிச் செல்கிறது. (பக். 467 - 472)

இலங்கை அரசுத் தலைவர் பிரேமதாஸவுக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்னாக இலங்கை அரசு விடுதலைப்புலிகளுக்கு பெருமளவு ஆயுதத் தளவாடங்களை வழங்கியது. முல்லைத்தீவு மாவட்ட மணலாறு பிரதேச எல்லையில் உள்ள சிங்கள இராணுவ முகாம் ஒன்றின் வழியாக இலங்கை இராணுவத்தளபதி ஆட்டிகல இந்த ஆயுதத் தளபாடங்களைப் புலிகளுக்கு வழங்கினார்.9 1990 ஜூனில் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான உறவுகள் முறிந்ததைத் தொடர்ந்து புலிகளால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த சில இயக்கங்கள் முதற்தடவையாக சிறிலங்கா அரசின் பக்கம் சாய்ந்தன. வடகிழக்குப் பகுதிகள் புலிகளின் ஆளுகைக்குள் வந்து விட்டதால் மற்றைய இயக்கங்கள் கொழும்பில் மையமிட்டனர். ஆக வரலாற்றில் தந்திரோபாயத்துக்கும் துரோகத்துக்கும் உள்ள இடைவெளி வெறும் ஒரு வருடம் தான். புஸ்பராஜா தமிழீழ விடுதலைப்புலிகளின் இத்தகைய அரசியல் குறித்து இவ்வாறு எழுதுகிறார்:

“விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் தலைவர் பிரபாகரன் பற்றியும் இன்று உலகம் விசாலமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு அந்த இயக்கம் எல்லாவிதமான காய்களையும் தனது வசதிக்கேற்ப நகர்த்திக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் பாறை போன்ற கட்டமைப்பும் மன்னிப்புக்கே இடமில்லாத அதன் கொள்கையும் ஈன இரக்கமற்ற அதன் நடவடிக்கைகளும் தாங்களும் தங்களுடன் சேர்ந்தவர்களுமே தியாகிகள் என்கிற அதன் போக்கும் வரலாற்றில் ஓர் அதிசயம் மிக்க பக்கம் தான். என்றாலும் அது தான் அந்த இயக்கத்தின் இருப்புக்கான காரணமும் கூட. அனைத்து ஈழப்போராளிகள் இயக்கங்களையும் அழித்து விட்டு ஈழ விடுதலைக்காக இன்று போராடும் ஒரே இயக்கம் நாங்கள்தான் என மக்களிடம் ஆதரவு கோரும் விடுதலைப்புலிகளின் தந்திரமே ஒரு மாயையை ஏற்படுத்தும் நடவடிக்கை தான். அவர்கள் யாருடனும் பேசுவர். ராஜீவ் காந்தியுடன் பேசுவர், ரணில் விக்கிரமசிங்க வுடன் பேசுவர், சந்திரிகாவுடன் பேசுவர், பிரேமதாஸாவுடன் பேசுவர், இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் பேசுவர், இந்திய இராணுவத்துடன் கை கொடுப்பர். இலங்கை இராணுவத்துடன் உறவாடுவர். ஆனால் மற்றைய இயக்கங்கள் இப்படி ஏதாவது ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் துரோகிகள் என்பர். தங்களைத்தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது என்னும் போக்கும் மற்றவர்கள் எல்லோரையும் சந்தேகிக்கும் சுய பயமுள்ள மனோநிலைமையுமே இதற்குக் காரணம். பயத்தின் அடிப்படையில் இருந்தே அராஜகம் பிறக்கிறது. (ப. 520)

IV

அந்த நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களை மொழிந்த மற்றைய இயக்கங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் இயக்க உள் படுகொலைகளையும் கூட புஸ்பராஜா எழுதத் தவறவில்லை. TELO, PLOT, TELA ஆகிய இயக்கங்கள் செய்த உள்படுகொலைகளையும் சகோதரப்படுகொலைகளையும் PLOT, TELO ஆகிய இயக்கத்தினர் தமிழகத்தில் நடத்தி வந்த வதை முகாம்களையும் அவர் பக்கங்கள் 494 - 504ல் எழுதியிருக்கிறார். தனது சொந்த இயக்கமான EPRLF இயக்கத்தையும் கடுமையாக விமர்சிக்க அவர் தவறுவதில்லை. EPRLF இயக்கத்தின் மாகாண சபை ஆட்சிக் காலத்தில் அவர்கள் நிகழ்த்திய கொலைகளையும் அட்டூழியங்களையும் அவர்களின் வதைமுகாமையும் “எனது தாய்மண்ணில்” என்ற அத்தியாயத்தில் அவர் விபரிக்கிறார். (பக்: 439 - 462)

சிறிலங்கா பேரினவாத அரசுகள் காலம் காலமாகத் தமிழ் மக்களுக்கு இழைத்து வரும் அரசியல் அநீதிகளையும் மனித உரிமை மீறல்களையும் பல்வேறு ஆதாரச்சான்றுகளுடன் புஸ்பராஜா தொகுத்திருக்கிறார். தமிழ் மக்களின் அரசியல் இறைமைகள் பேரினவாத அரசுகளால் பறிக்கப்பட்ட தருணங்கள், அரசால் நிகழ்த்தப்பட்ட ஏராளமான மக்கள் படுகொலைகள், நாஸி வதைமுகாம்களை ஒத்த சிறிலங்காவின் சிறைகள் நூலில் அத்தியாயம் அத்தியாயமாக விரிகின்றன. ‘1983 ஜூலைக் கலவரம்’ என்ற அத்தியாயத்தில் சிறிலங்கா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பையும் வெலிகடச்சிறையில் சிறை அதிகாரிகளும் சிங்களக் கைதிகளுமாகச் சேர்ந்து நடத்திய படுகொலைகளையும் துல்லியமாகச் சித்தரிக்கிறார். (பக். 345 - 351)

இன்று சிறிலங்காவில் சிங்கள இனவாதம் அதன் உச்சக் கட்டத்தில் இருக்கிறது. சிஹல உருமய, பூமி புத்ர போன்ற பச்சை இனவாதக் கட்சிகள் வெகு வேகமாகச் செல்வாக்குப் பெற்று வருகின்றன. ஆளும் பொதுஜன முன்னணி அரசு மொத்த நாட்டையும் கூட்டி அள்ளி ஏகாதிபத்தியங்களுக்கு அடவு வைத்துள்ளது. அரசு சாத்தியமான வழிகளில் எல்லாம் தமிழ் மக்களின் முசுலிம் மக்களின் மலையக மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்து வருவதோடு நில்லாது உழைக்கும் சிங்கள மக்களின் வாழ்வாதார உரிமைகளையும் பறித்து வருகிறது. பொது நிறுவனங்களை அந்நிய பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்றுத் தள்ளுவதில் அரசு ஒரு வேகச் சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தச் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பதற்கான தருணத்தை எதிர்நோக்கி ரணில் விக்கிரமசிங்க காத்திருக்கிறார்.

2003 ஜூன் 9 - 10 திகதிகளில் ஜப்பானில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் இலங்கைக்கு 4.5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு உறுதி தெரிவித்த சர்வதேச மாநாட்டுப் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். டோக்கியா மாநாட்டுப் பிரகடனத்தின் பதினெட்டாவது நிரல் இதனை விளக்கியது. இம்மாநாட்டுக்கு அமெரிக்கா, அய்ரோப்பிய யூனியன், ஜப்பான், நோர்வே ஆகிய நான்கு நாடுகளும் இணைத்தலைமை வகிக்க 51 நாடுகளையும் 22 சர்வதேச நிறுவனங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 2005 டிசம்பர் 19ம் நாள் ப்ரஸ்லெஸ்ஸில் கூடிய இணைத் தலைமை நாடுகள் மீண்டும் இத்தீர்மானத்தை வலியுறுத்தின.

வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மூன்றாம் உலக நாடுகளின் இனப்பிரச்சினைகளையும் உள்நாட்டுப்போர் களையும் முடித்துவைப்பதாகக்கூறி மேற்கு நாடுகளும் அவற்றின் பொது நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் ஆற்றிய பணிகள் வெகுபிரசித்தமானவை. அவர்களின் சமாதான முயற்சிகளுக்கும் தீர்வுகளுக்கும் கொங்கோ, சிலி, நிக்கிரகுவா, பாலஸ்தீனம், திமோர், பொஸ்னியா, ருவண்டா, சோமாலியா, லைபீரியா ஆகியவை அவலமான இரத்த சாட்சியங்கள். இந்த வரிசையில் இன்று ஏகாதிபத்தியங்களின் நேரடிக் கண்காணிப்புக்குள் ஈழத் தமிழ் மக்களின் தலைவிதியும் வந்து சேர்ந்துள்ளது. ஏகாதிபத்தியங்களின் பலங்களையும் உலக மயமாக்குதல் பொருளாதாரத்தையும் பூமியின் கேந்திரப் பிரதேசங்களில் தமது இராணுவ இருப்பை உறுதி செய்தலையும் சோதனை செய்து பார்க்கும் இன்னொரு களமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு வந்தது தான் வாழ்வு. நோர்வே வெள்ளைக்காரர்களில் பலர் சமாதானத்தின் பெயரால் இலங்கையின் இதமான தட்ப வெப்ப சூழலில் தங்களின் நிரந்தர விடுமுறைகளைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் ‘சமாதான’ காலத்தில் தான் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் புலிகளின் பிஸ்டல் குழுவினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா அணியின் பெரும்பகுதி இந்தச் சமாதான காலத்தில் தான் புலிகளால் அழிக்கப்பட்டது. இன்னொரு புறத்தில் கருணா அணியினரும் அரசபடைகளும் துணைப்படைகளும் யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபடுகிறார்கள். நடந்து முடிந்த சனாதிபதி தேர்தலின் பின்பாக விடுதலைப்புலிகளின் பாதாளப்படைகளான சீறும் மக்கள் படை, எல்லாளன் படை, வன்னியன் படை போன்ற இன்னோரன்ன படைகளும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளன. நடைபெறும் யுத்த நிறுத்த மீறல்களைக் குறித்து யுத்த நிறுத்தக்கண்காணிப்பு குழுவினர் எதுவித நடவடிக்கைகளும் எடுத்தாகத்தெரியவில்லை. இந்த அரசியல் சூதாடிகளின் இரும்புப்பிடிக்குள் ஈழத் தமிழ் முசுலிம் மக்களின் வாழ்வும் எதிர்காலமும் முடங்கிக் கிடக்கின்றன.

மறுபுறத்தில் ஈழமக்கள் சனநாயகக் கட்சி (EPDP), அரசுக்கு தனது ஆதரவை வழங்கி வருகிறது. அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசின் ஊழல் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார். PLOT, EPRLF, TELO ஆகிய மூன்று இயக்கங்களும் பாராளுமன்ற அரசியலுக்கு நகர்ந்துவிட்டன. EROS இயக்கத்தை விடுதலைப்புலிகள் இயக்கம் தனக்குள் செரித்துக் கொண்டது. ரெலோவின் தலைமையும் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் பிரிவும் விடுதலைப்புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் தங்களைத் தமிழர்களுடையது மட்டு மல்லாமல் முசுலீம்களின் ஏக பிரதிநிதிகளாகவும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏகபிரதிநிதித்துவம் என்பதன் அர்த்தம் புலிகள் தங்களிடம் அடிபணியாத எந்த மாற்று அரசியலாளர்களையும் மாற்றுக்கருத்தாளர்களையும் மாற்று அரசியல் முன்னெடுப்புகளையும் ஈழப்புலத்தில் செயற்பட அனுமதிக்க மாட்டார்கள் என்பதைத் தவிர வேறென்ன? இன்றைய ஈழ அரசியற் களத்தில் சனநாயகத்தையும் மாற்றுக் கருத்துக்களையும் வித்தியாசங்களையும் அங்கீகரித்து ஒரு அரசியல் போக்கு உருவாவது மிக அவசியம். சிங்களப் பேரினவாதம், ஏகாதிபத்தியத் தலையீடுகளை மட்டுமல்லாமல் தமிழ்க் குறுந் தேசிய வெறியையும் தமிழ் முசுலிம் மக்கள் எதிர்கொண்டேயாக வேண்டும். ஆனால் மாற்றுக் குரல்களும் சனநாயகம் குறித்த கேள்விகளும் எழும் போதெல்லாம் அந்தக் குரல்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலைப் புலிகள் உடனடியாகவே வழங்கி விடுகிறார்கள். அவர்கள் அதைத் தமது பிஸ்டல் குழுவினரிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இதைத் தான் சனநாயகத்தின் தோல்வி என்கிறோம். மற்றவைகளின் இருப்பை வேரறுக்கும் புலிகளின் பண்பைத்தான் பாஸிஸம் என்கிறோம். அரசியல் புலத்திலும் சமூகப் புலத்திலும் எழும் மாற்றுப் போர்க்குரல்களையும் மாற்று அரசியல் முன்னெடுப்புக்களையும் புலிகள் வன்முறையின் மூலம் வரலாற்றிலிருந்து துடைத்தெறிகிறார்கள். பாஸிஸத்தினால் ஈழப் போராட்டத்தின் வரலாற்றைப் புலிகள் தோல்வி வரலாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது மீண்டும் ஒரு முறை அந்த மறக்கப்பட்ட நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களைப் படித்துப் பாருங்கள்!

சான்றுக் குறிப்புகள்

1. (f)பனான், டேவிட்மாசி, தமிழில்: எஸ். பாலச்சந்திரன், விடியல். பதிப்பகம்
2. போரும் சமாதானமும், அன்ரன் பாலசிங்கம், Fairmax.
3.மேலது.
4. சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், வெகுஜனன் _ இராவணா, புதியபூமி.
5. வடபுலத்து பொதுவுடைமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும், சி.கா. செந்தில்வேல், புதியபூமி.
6. வரலாற்றில் வாழ்தல், எஸ். பொ. மித்ர.
7. (f)பனான், டேவிட் மாசி, தமிழில் எஸ். பாலச்சந்திரன், விடியல். பதிப்பகம்
8. போரும் சமாதானமும், அன்ரன் பாலசிங்கம், Fairmax.9. சுதந்திர வேட்கை, அடேல், Fairmax.
நன்றி அநிச்ச மார்ச் 2006

Friday, April 21, 2006

சுகனின் கவிதை - 18.04.2006


Paris nord இலிருந்து Sarcelles இற்கு
ரயிலில் நண்பர்கள் மூவர் சென்று கொண்டிருந்தோம்.
நம்பாவிடில் செனறு கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.

அருகிலுள்ள கடையொன்றில்
நாங்கள் போகும் வீட்டிலுள்ள குழந்தைக்கு
ஒரு சொக்கிலேற் பக்கற் வாங்குகிறோம்.

வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம்
எங்கள் நண்பரில் ஒருவர் நடையை நிறுத்துகிறார்
நாங்கள் "என்ன" என்று கேட்கிறோம்.
"நான் வரயில்லை வீட்டை போகப் போகிறன்" என்கிறார் நண்பர்.
"ஏன்" என்கிறோம்
"இல்லை எனக்கு என்னவோ செய்யுது.. நான் வரயில்லை
வீட்டை போகப் போறன்" என்று திரும்பிப் போகிறார்.

வீட்டிலிருந்த அவரது நண்பர் கேட்கிறார்
"Sarcelles இற்குப் போறதெண்டு போனனீங்கள்..திரும்பி வந்து நிற்கிறீங்கள்.. போகயில்லையே ?"
"இல்லை எனக்கு என்னவோ செய்யுது நான் படுக்கப் போறன்"
என்று படுக்கையறைக்குச் செல்கிறார்.

வீட்டுக் கதவு தட்டப்படுகிறது
"உங்கள் வீட்டிலிருந்து ஒரு குழந்தையொன்று
மாடி யன்னலால் விழுந்து விட்டது..?!
நாங்கள் அவசர உதவிப்பிரிவிற்கு அறிவித்திருக்கிறோம்"
என்கிறார் கதவைத் தட்டிய நபர்
"இல்லையே எங்கள் வீட்டில் குழந்தைகள் இல்லையே"
என்று யன்னலாற் பார்க்கிறார் அவரது நண்பர்.

எங்கள் நண்பர் உள்ளாடையுடன் நிலத்தில்விழுந்து கிடக்கும் காட்சி தெரிகிறது
நம்பாவிடில் தெரிகிறதாக வைத்துக் கொள்ளுங்கள்.

-சுகன்- 18.04.2006

Wednesday, April 19, 2006

சுகனின் கவிதை - 03.03.2005


காலம் தேவையில்லை
எங்கே என்பதும் தேவையில்லை
யாரென்பதும் தேவையில்லை
எப்படியென்பதைக் கேளுங்கள்

வீட்டிற்கு வந்தார்கள்
"அவரிற்கு நாங்கள் மரணதண்டனை விதித்துள்ளோம்"
என் மனைவியிடம் சொன்னார்கள்

"எங்களிடம் தோட்டாக்கள் இல்லை
தோட்டாக்கள் வாங்குவதற்குப் பணம் அதிகம்
நாங்கள் அவரைத் துண்டு துண்டாக வெட்டிக்
கொல்லப் போகின்றோம்" என்றார்கள்; மேலும்.

ஊரவர்கள் ஒரு தோட்டாவுக்கு எண்பது ரூபாய் வீதம்
மூன்று தோட்டாவுக்காக இருநூற்றி நாற்பது ரூபாயைச்
சேர்த்து அவர்களிடம் கொடுத்தார்கள்.
சுகன்

நன்றி - காலம்

Monday, April 17, 2006

நேர்காணல் : ஷோபாசக்தி

மெளனம் என்பது சாவுக்குச் சமம்

('மாத்யமம்' மலையாள வார இதழில் 2005 மார்ச்25 ல் வெளியாகிய நேர்காணலின் தமிழ் வடிவம் )

நேர்கண்டவர் - T.T.ராமகிருஷ்ணன்
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழ் இலக்கியத்தின் இடம் என்ன?
ஆம்! அப்படியொரு காலம் இருந்தது. தமிழ் உரை நடையில் ஆறுமுகநாவலர் தொடக்கம் இலக்கிய விமர்சனத்தில் பேராசிரியர்கள் கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களும் புனைகதையில் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் போன்றவர்களும் தலித் இலக்கியத்தில் கே.டானியலும் கவிதையில் பிரேமிளும் குறிப்பிடத் தகுந்த ஆளுமைகளாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இவர்கள் தமது துறைகளில் புதிய போக்குகளை வடிவமைத்தார்கள். யுத்தம் ஆரம்பித்ததோடு எல்லாம் முடிந்து போயிற்று. ஈழத்தில் எழுத்தாளர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தும் ஆயுதம் தாங்கியவர்களால் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது. எழுதியதற்க்காக மட்டுமே கொல்லப்பட்டவர்கள் என்று ரஜனி திரணகம, செல்வி போன்று ஒரு பட்டியலே உள்ளது. ஒரே ஒரு இயக்கம்! ஒரே ஒரு கருத்து! ஒரே ஒரு தலைவன் என்று விடுதலைப் புலிகள் தமது ஏகபிரதிநிதித்துவத்தை நிறுவுவதற்காக எதைச் செய்யவும் எவரைக் கொல்லவும் ஆயத்தமாயிருக்கிறார்கள். இப்போது விடுதலைப் புலிகளுக்கு வணங்கிய எழுத்தாளர்கள் 'தலைவன்' புகழ் பாடும் கவிதைகளையும் பாஸிஸச் சாய்வுச் சயனைட் இலக்கியங்களையும் எழுத இதை ஒப்பாத மாற்றுக் கருத்துள்ள எழுத்தாளர்கள் பெரும்பாலும் துப்பாக்கிகளின் முன் மெளனமாக இருக்கிறார்கள். அல்லது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளை எழுதுகிறார்கள். புலிகள் மட்டுமல்லாது அரச படைகள்,E.P.D.P போன்றவர்களும் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் மீது கொலைச் செயல்களையும் அச்சுறுத்தல்களையும் நிகழ்த்துகிறார்கள். பத்திரிகையாளர்களான நிமலராஜன், நடேசன் போன்றவர்களை அவர்களே கொன்றார்கள்.புலம் பெயர்ந்து வாழக் கூடிய ஈழத்து எழுத்தாளர்கள் ஓரளவு இந்த நச்சு வளையத்திலிருந்து தப்பியவர்கள். புகலிடச் சிறுபத்திரிகைகள் அனைத்து அதிகாரங்களையும் கேள்விக்குள்ளாக்கின.எண்ணம், சிந்தனை, அறுவை, தூண்டில், மனிதம், சுவடுகள், சுமைகள், அஆஇ, உயிர்நிழல், எக்ஸில், அம்மா, தேடல், பள்ளம், தாயகம், கண், சக்தி, மரபு, அசை, புன்னகை, பனிமலர், ஊதா, சமர், ஓசை,நமதுகுரல், மார்க்ஸிய முன்னோக்கு, நான்காவது பரிமாணம், தேசம், அக்னி உள்ளிட்ட புலம்பெயர் சிறுபத்திரிகை இயக்கம் மட்டுமே ஒரு அவலமான காலகட்டத்தில் எந்தவித அதிகார சக்திகளிடமும் அடிபணிந்து போகாமல் எதிர்த்து நின்றது, மனித விழுமியங்களை எழுதிக் காட்டியது என்று வரலாறு பதிவு செய்து கொள்ளும்.
எழுத்தில் முதல் முறையாக எப்படி சம்மந்தப்பட்டீர்கள் ?
நான் எனது பள்ளிப்பருவத்தில் இருந்தே இயக்க அரசியலில் ஈடுபட்டு வந்தவன். இலங்கையில் என்னால் வாழ முடியாத சூழலில் நான் அகதியாக அய்ரோப்பாவுக்கு வந்தேன். இங்கே இன்று வரை எனக்கு எந்த அரசியல் உரிமையும் கிடையாது. வாக்குரிமை, பிரஜாவுரிமை ஏதும் கிடையாது. நான்கு வருடங்கள் சர்வதேச ட்ரொஸ்கிய முகாமில் "புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில்" இயங்கினேன். 1997 ல் அவர்களிடமிருந்து தொடர்பை நான் முறித்துக் கொண்ட போது என் முன்னே சூனியம் இருந்தது. இங்கே இருக்கக் கூடிய எல்லாவித இடதுசாரி இயக்கங்களும் வெறும் தொழிற் சங்கங்களாகக் குறுகியுள்ள நிலையில் அனார்கிஸ்டுடகள் தமது எல்லாவித கலகக் குரல்களையும் நிறுத்திக்கொண்டு பசுமைப் புரட்சி, எய்ட்ஸ் ஒழிப்பு எனறு தடம்புரண்ட போது என் முன்னே இருந்தது அரசியல் இருள்வெளி. தனியனாக எழுத ஆரம்பித்தேன். எனக்கு முறையான கல்வியறிவோ இலக்கியப் பரிச்சயமோ கிடையாது என்றாலும், எனக்குத் தெரிந்த நான் பார்த்த அனுபவித்த கதைகளைச் சொல்ல ஆரம்பித்தேன்.
நவீன தமிழ் இலக்கியத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழில் வரும் இலக்கியங்களைப் பொத்தாம் பொதுவாக நவீன தமிழ் இலக்கியம் என்னும் ஒரே வரையறைக்குள் நிறுத்திவிட முடியாது. இங்கே ஆதிக்க சாதியினரும் எழுதுகிறார்கள், தலித்துக்களும் எழுதுகிறார்கள். ஆண்கள் எழுதுகிறார்கள், பெண்களும் எழுதுகிறார்கள். பெரிய பொலிஸ் அதிகாரியும் எழுதுகிறான், பொடா அரசியல் கைதியும் எழுதுகிறான். ஆகவே ஓவ்வொரு தனி எழுத்துக்குப் பின்னும் அவர்கள் சார்ந்த அரசியல், சாதி, அதிகாரங்கள் இன்னபிற விரவிக் கிடக்கின்றன. எனினும் தற்போது நீண்ட காலமாகத் தமிழ் இலக்கியத்துக்குள் ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனார்களின் ஆதிக்கம் ஒழிந்து விட்டது என்றே நான் கருதுகிறேன். என் தலைமுறையில் குறிப்பிட்டுப் பெயர் சொல்ல ஒரு பார்ப்பன எழுத்தாளன் தமிழில் கிடையாது. தலித் எழுத்துக்கள் ராஜ்கெளதமன், ம.மதிவண்ணன், அழகியபெரியவன் என்று பலரிடமிருந்து உத்வேகத்தோடு வெளிப்படுகின்றன. இன்னொரு புறத்தில் பிரேம்-ரமேஷ், சாருநிவேதிதா, மாலதி மைத்ரி, ஜே.பி. சாணக்யா போன்றவர்கள் தமிழ் இலக்கியத்தை இன்னொரு வெளிக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அந்த வெளி அனைத்து அதிகாரங்களையும் ஒழுங்குகளையும் விசாரணை செய்கிறது. வாழ்வையும் உடலையும் கொண்டாடுகிறது. விடியல் சிவா, அடையாளம் சாதிக், போன்றவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களைப் பதிப்பித்து வெளியிடுகிறார்கள். பிரம்மராஜன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ஒரு வெறியோடு உலக இலக்கியங்களைத் தமிழில் அறிமுகப்படுத்துகிறார்கள். ஒரே ஒரு நாவல் சாதியச் சாய்வுடனோ இந்துத்துவச் சாய்வுடனோ வெளியானால் உடனே நமது தோழர்கள் இறங்கி அடிக்கிறார்கள். உடனுக்குடன் எதிர்வினை புரிகிறார்கள். இந்த மத்திய தரவர்க்க கூப்பாடு இலக்கியங்கள் உள்ளொளி, தரிசன இலக்கியப் பம்மாத்துக்கள் எல்லாம் - அது சுந்தரராமசாமி அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதினால் கூட- இனி நிராகரிக்கப்படும் என்றே நம்புகிறேன்.
நவீன தமிழ் எழுத்துக்கும் பின் நவீனத்துவ உலக இலக்கியத்துக்கம் என்ன சம்மந்தம் ?
தெரியாது ..!
கொரில்லா என்ற நாவல் பற்றிச் சொல்லலாமா ?
கொரில்லா என்னுடைய முதலாவது நாவல். அது தன்வரலாறும் புனைவும் கலந்த முறையில் எழுதப்பட்டது. நான் விடுதலை இயக்கத்தில் இயங்கிய நாட்களையும் எனது அகதி வாழ்வையும் மட்டும் அல்ல, என் போன்ற மற்றும் சிலருடைய அனுபவங்களையும் தொகுத்து அந்த நாவலை எழுதினேன். அது மிக நேரடியான ஒரு அரசியற் பிரதிதான். எனினும் நிலவும் ஈழ அரசியல் நிலைமைகளைக் கருதி பல இடங்களில் நாவலில் சுய தணிக்கைகள் செய்திருந்தேன், என்பதையும் நான் வெட்கத்தை விட்டு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். வேறு என்ன சொல்ல? என் நாவல் பற்றி நாவலில் சொல்லாத எதை நான் நாவலுக்கு வெளியே சொல்லிவிட முடியும் ?...
உங்கள் எழுத்தின் அரசியல் என்ன ?
நான் இப்போது எந்தவொரு அரசியல் அமைப்பையும் சார்ந்தவனல்ல. அதற்காகக் கவிஞர் சேரன் சொல்வது போல "அமைப்புக்களுக்குள் கட்சிகளுக்குள் கட்டுப்படாமல் விட்டு விடுதலையாகிக் கலைஞனாக நிற்கிறேன்" என்று சொல்லக் கூடியவனும் அல்ல. நான் "விடுதலை" இயக்கத்திலும் கொம்யூனிஸ்ட் இயக்கத்திலும் நீண்ட காலங்களை முழுமையாகச் செலவு செய்திருக்கிறேன், மக்களுக்கு விடுதலையை அளிப்பார்கள் என நான் விசுவாசித்த அந்த அமைப்புகள் மக்களுக்கு அதிகாரங்களையும் ஒடுக்குமுறைகளையுமே பரிசளித்தன. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான, அதிகாரங்களை மேலிருந்து திணிக்காமல் கீழிருந்து எளிய மனிதர்கள் அதிகாரங்களைச் செலுத்தும், மக்கள் விடுதலையை நேசிக்கும், ஓர் இயக்கத்தையோ ஒரு கட்சியையோ நான் கண்டடையும் போது கண்டிப்பாக, நான் ஒரு உறுதியான இயக்கக்காரனாகவோ கட்சிக்காரனாகவோ ஆகிவிடுவேன். அதுவரைக்கும் நான் தனியனாக அதிகாரங்களுக்கு எதிராக எனது பலவீனமான குரலைத் தன்னும் ஒலித்துக் கொண்டேயிருப்பேன். மெளனம் என்பது சாவுக்குச் சமம்!
உங்களுக்கும் விடுதலை இயக்கத்துக்கும் தொடர்பு வந்தது எப்படி ?
நான் என் நினைவு தெரிந்த பருவத்தில் இருந்தே தமிழ்த் தேசியப் பிரச்சாரங்களுக்கு இடையில் வாழ்ந்தேன். தமிழர் விடுதலைக் கூட்டணியும் பின்பு விடுதலை இயக்கங்களும் ஈழப் புலத்திலே மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்தார்கள். 1977 மற்றும் 1981, 1983 ல் தமிழர்கள் மீது இலங்கை இனவாத அரசு பெரும் இனப்படுகொலைகளை நிகழ்த்திய காலத்தில் நான் வாழ்ந்தேன். ஆயுதந் தாங்கிய தமிழ் இயக்கங்களின் எழுச்சிக்கு பின்பாக அதுவரை கணிசமான மக்கள் ஆதரவோடு இயங்கி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும சாதியொழிப்பு இயக்கங்களும் துப்பாக்கிகளால் மெளனமாக்கப்பட்டன. தமிழ்க் குறுந்தேசியத்துக்கு எதிரான எந்தவொரு கருத்தும் போராளிகளால் அனுமதிக்கப்படவில்லை. இன, பண்பாட்டு, சாதிய, வர்க்க ஒடுக்குமுறைக்கான தீர்வும், விடுதலையும் தனித் தமிழீழத்திலேயே சாத்தியம் என்று நாங்கள் நம்ப வைக்கப்பட்டோம். வெலிகடச் சிறையில் 53 அரசியல் கைதிகள் அரசின் சதியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் தெற்கு, மேற்குப் பிரதேசங்களிலிருந்து வடக்குக்கு தமிழர்கள் கப்பல்களில் அகதிகளாய் வந்து சேர்ந்த தருணங்களும் என்னை இயக்கின. இயக்கத்தில் இணைந்து கொண்டேன். அப்போது எனக்குப் பதினைந்து வயது -குழந்தைப் போராளி- எனினும் இயக்கத்தின் சுத்த ஆயுதக் கண்ணோட்டத்தினுள்ளும் அவர்களின் அப்பட்டமான வலது சாரித்தனத்தினுள்ளும் ஒரு பாஸிஸ இயக்கத்தை ஒத்த அவர்களின் இயக்க ஒழுங்கு முறைகளுக்குள்ளும் என்னால் மூன்று வருடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இயக்கத்தை விட்டு வெளியே வந்த பின்பு என்ன செய்தீர்கள் ?
எதுவுமே செய்ய முடியாமல் பைத்தியம் பிடித்தவன் போல இருந்தேன்.அப்போது எனக்குப் பதினெட்டு வயது. என் முன்னே எந்த வழிகளும் இருக்கவில்லை. அடுத்த வருடம் இந்திய அமைதிப்படை அங்கு வந்து சேர்ந்தது. இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்கும் யுத்தம் மூண்ட உடனேயே தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் கூட அனுபவித்திராத அடக்குமுறைகளை இந்திய இராணுவம் தமிழர்கள் மீது ஏவியது. அதுவரையில் இலங்கை இராணுவம் செய்திருந்த கொடுமைகளை இந்திய இராணுவம் ஒரே வருடத்தில் செய்து முடித்தது. இந்திய இராணுவத்தால் இரண்டாயிரத்துக்கும் அதிகமான அப்பாவிகளும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவம் கணக்கற்ற பாலியல் வல்லுறவுகளை சிறுமிகள் மீதும் பெண்களின் மீதும் நிகழ்த்தியது.பொதுமக்களின் குடியிருப்புகள் மீது விமானங்களில் இருந்து குண்டு பொழிந்தது. காரணங்களே இல்லாமல் மக்கள் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். அவமானப் படுத்தப்பட்டார்கள். உண்மையில் இலங்கை இராணுவத்தாலோ புலிகளாலோ செய்யப்பட முடியாத ஒன்றை என் விடயத்தில் இந்திய இராணுவத்தினர் நிகழ்த்தினார்கள். இந்திய இராணுவத்தாலேயே அப்போது நான் நாட்டை விட்டு வெளியேறினேன். அவர்களின் காட்டாட்சியின் கீழ் எங்கள் கிராமங்கள் இருந்த காலங்களில் தான் நான் என் நாட்டிலிருந்து துரத்தப்பட்டேன்.
பிரான்சுக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் ?
அப்போது பிரான்சுக்கு வருமளவுக்கு என்னிடம் பணம் இருக்கவில்லை. இலங்கையிலிருந்து முதலில் தாய்லாந்துக்குத் தான் போனேன். அய்க்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் பராமரிப்பின் கீழ் அரசியல் அகதியாகச் சில வருடங்கள் பாங்கொக்கின் புறநகர் ஒன்றில் வாழ்ந்தேன். அப்போது ஆசியாவில் இருந்து அய்ரோப்பா அமெரிக்காவுக்கு புலம்பெயரும் அகதிகளின் -வெள்ளையர்களின் மொழியில் சொன்னால்- சட்ட விரோத குடியேற்றவாசிகளின் ஒரு சந்திப்பு சந்திப்பு மையமாக, இடைவழியாக பாங்கொக் இருந்தது. அங்கிருந்து 1993 ல் பிரான்சுக்கு வந்தேன்.
இப்போது L.T.T.E அமைப்பு குறித்தும் விடுதலைப் போராட்டம் குறித்தும் உங்கள் கருத்து என்ன ?
சிங்களப் பேரினவாத அரசின் தொடர்ச்சியான ஒடுக்கு முறைகள் தான் விடுதலைப் புலிகளின் இருப்புக்கு காரணம் என்பதில் எனக்கு எதுவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அரச ஒடுக்கு முறைகள் தோற்றுவித்த ஒரு விடுதலை இயக்கத்தின் இன்றைய நிலை எவ்வாறு இருக்கிறது? இன்று விடுதலைப்புலிகள் முற்றுமுழுதான வலதுசாரிகளாக உருவெடுத்து இருக்கிறார்கள். அமெரிக்காவினதும் அய்ரோப்பிய யூனியனதும் ஒவ்வொரு உத்தரவுக்கும் அவர்கள் அடிபணிகிறார்கள். தங்களுடைய பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கை தான் என்று புலிகளின் தலைவர் அறிவித்திருக்கிறார். வெட்கம்! பிரபாகரனின் இடம் இப்போது ஒரு விடுதலை இயக்கத் தலைவனின் இடம் அல்ல. அவர் ஒரு யுத்தப் பிரபு ( war lord) மட்டுமே. ஏனெனில் ஒரு மக்கள் விடுதலை இயக்கத்துக்குரிய எந்தப் பண்புகளும் L.T.T.E இயக்கத்திடம் அறவே கிடையாது. என் சமூகத்தில் நிலவும் கொடூரமான சாதியத்தை ஒழிக்கப் புலிகள் எந்தத் திட்டத்தையும் முன் வைக்கவுமில்லை நடைமுறைப்படுத்தவுமில்லை. இது தவிர காலம் காலமாக ஈழத்து தமிழர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மீது அவர்கள் நடத்திய வன்முறையை மன்னிக்கவே முடியாது. வடபகுதியில் வாழ்ந்த அத்தனை முஸ்லீம்களையும் புலிகள் ஒரே இரவில் வடபகுதியை விட்டு வெளியேற்றினார்கள். அதுவும் எப்படி? முற்று முழுதாக முசுலீம்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்ட பின்பே விரட்டினார்கள். பரம்பரை பரம்பரையாய் அந்த மண்ணில் வாழ்ந்த இஸ்லாமிய மக்கள் தம்மோடு 500 ரூபாய்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.கடந்த மூன்று வருடங்களாக இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு இது சமாதான காலமாக இரு தரப்பினராலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமாதான காலத்தில் மட்டும் மாற்று இயக்க உறுப்பினர்களில் 300 பேர் வரையில் புலிகள் கொன்றிருக்கிறார்கள்.
நடந்த பேச்சு வார்த்தைகளில் வடக்கு கிழக்குக்கான அதிகாரத்தை தமது இயக்கத்திற்க்கு பெற்றுக் கொள்வதே புலிகளின் நோக்கமாக இருந்தது. அதாவது இன்று நிலவும் சமூக ஒழுங்குகளுக்குள் தமக்கான அதிகாரம். இன்று இலங்கை மீதான அமெரிக்காவின் வல்லாண்மை சந்தேகத்திற்க்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது. அமெரிக்க இராணுவத்துடன் இலங்கை இராணுவம் கூட்டுப்பயிற்சிகளில் - இந்தியா கூட - ஈடுபடுகிறது. தாய்லாந்தில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சு நடந்த போது இரு தரப்புக்கும் அமெரிக்கப் படையினர் தான் பாதுகாப்பு வழங்கினார்கள், அல்லது கண்காணித்தார்கள். ஏகாதிபத்தியத்தினதும் புலிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் மேட்டுக்குடியினரதும் வர்க்க நலன்கள் ஒன்றானவை. இந்த இடத்தில் புலிகளைச் சில மேற்கு நாடுகள் தடை செய்துள்ளனவே? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதே மேற்கு நாடுகள் தான் புலிகளை ஈழத் தமிழ்-முசுலீம்களின் ஏகப்பிரதிநிதிகளாக அங்கீகரித்துப் பேச்சுவார்த்தை மேசைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள், பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளர்களாக இருக்கிறார்கள்
என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் மேற்கு நாடுகளினதும் இலங்கை ஆட்சியாளர்களினதும் விடுதலைப் புலிகளினதும் வர்க்க நலன்கள் பொதுவானவை.எந்த நேரத்திலும் புலிகள், அவர்களைத் தடைசெய்த அதே நாடுகளின் செல்லப் பிள்ளைகளாக எடுபிடிகளாக ஆகச் சாத்தியங்கள் உருவாகாது எனறு கூறி விடுவதற்கான அரசியல் தருக்கங்கள் ஏதாவது நம்மிடம் உள்ளனவா? அதற்கான தடயத்தைத் தன்னும் புலிகள் நமக்கு விட்டு வைக்கவில்லையே! தமது கடந்த கால அரசியல் நடவடிக்கைகளின் மூலம் தம்மையொரு ஏகாதிபத்தியச் சாய்வுள்ள சிறு முதலாளிய இயக்கமாகவே விடுதலைப் புலிகள் அடையாளம் காட்டியுள்ளார்கள். மாற்று இயக்கங்களின் மீதும், மாற்றுக் கருத்தாளர்கள், எழுத்தாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மீதும் முஸ்லீம், சிங்களக் குடியானவர்கள் மீதும் நிகழ்த்திய ஒடுக்குமுறைகள், கொலைகள் மூலம் தம்மைப் பாஸிஸ்டுகளாக நிறுவியிருக்கிறார்கள்.ஆகவே நாம் விடுதலைப் புலிகள் மீது அபிமானம் கொள்ள எந்தவொரு காரணமும் கிடையாது.
மாறாக இலங்கை அரசோ தமிழர்கள் மீதான தனது ஒடுக்குமுறையை மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிங்கள மக்கள் மத்தியில் J.V.P, ஹெல உருமய போன்ற இனவாதக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டு போகிறது. தனியார் மயமாக்குதல் அதி வேகத்தோடு நடக்கிறது. உண்மையில் இலங்கையில் தமிழ் மக்களும் சரி சிங்கள மக்களும் சரி முஸ்லீம்களும் சரி ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கரிசனம் கொண்ட ஒரு அரசியல் தலைமை இல்லாமல் தான் இருக்கிறார்கள். தமிழர் மத்தியில் அவ்வாறான ஒரு புரட்சிகர அரசியற் தலைமை தோன்ற தமிழ்த் தேசிய வாதமும் புலிகளும் பெரும் தடைகள்.
உங்கள் புதிய நாவல் பற்றிச் சொல்லுங்கள் ?
'ம்' என்னுடைய இரண்டாவது நாவல். 1983 ஜீலை 25 -27 ம் திகதிகளில் இலங்கை அரசாங்கம் வெலிகட சிறையில் நடத்திய கொலை வெறியாட்டத்தை ஆவணமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந் நாவலை எழுதினேன். இன்னொரு புறத்தில் தமிழ்ப் போராளிகள் பற்றி வீரம், தியாகம், இலட்சியம் போன்ற ஹீரோயிஸப் படிமங்கள் எழுந்துள்ளதையும் விசாரணை செய்ய முயன்றேன்.
நவீன இலக்கியச் சூழலில் உங்கள் மாதிரியான ஆட்க்களுக்கு இடம் இல்லை என்று நினைக்கிறீர்களா?
அது தான் சொன்னேனே! தமிழ் எழுத்தாளர்களில் மட்டுமல்லாமல் வாசகப் பரப்புகளிலும் தமிழ் விமர்சனத் துறையிலும் இதழியலிலும் விளிம்பு நிலைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இது எங்களுக்கான காலம் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தலித்துக்களுக்கும் பெண்களுக்குமான காலம்.
நாவல்கள் தவிர்த்து வேறு என்னென்ன எழுதியிருக்கிறீர்கள் ?
அரசியல் சிறு பிரசுரங்களையும் துண்டறிக்கைகளையும் சுவரொட்டிகளையும் அய்ரோப்பாவிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். தவிர மூன்று நாடகங்களும் சிறுகதைகளும் எழுதியுள்ளேன். சிறுகதைகள் 'தேசத்துரோகி' என்ற பெயரில் தொகுப்பாக வெளியாகியுள்ளன.
ஓர் எழுத்தாளர் ஆகாமல் இருந்தால் என்னவாக இருந்திருப்பீர்கள்?
முன்பெல்லாம் சினிமா நடிகைகளிடம் தான் இப்படியான கேள்விகளைக் கேட்பீர்கள், இப்போது எழுத்தாளர்களிடமும் கேட்க ஆரம்பித்து விட்டீர்களா? ஒரு நாடற்றவன், அகதி, மாற்றுக் கருத்தாளனாக அல்லது துரோகியாகச் சொல்லப்படுபவனின் வாழ்க்கையை அவன் மட்டுமே தீர்மானிப்பதில்லை.
தமிழில் பெண்ணிய இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
"இப்போது பெண்களின் படைப்பு மொழியில் ஆபாசம் பொதிந்துள்ளது... யோனி, முலை, மயிர் என்றெல்லாம் எழுதிப் பண்பாட்டைக் கலாச்சாரத்தைக் கெடுக்கிறார்கள்" என்று சொல்பவர்களை நிபந்தனையில்லாமல் செருப்பால் அடிக்க வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக வைத்துக் கொண்டு ஒன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
ஆண்களின் உடல் மேலாண்மை அதிகார மேலாண்மை எல்லாவற்றிற்க்கும் குடும்பம், காதல் போன்ற கருத்தாக்கங்களே இடமளிக்கின்றன. ஆக குடும்பத்தையும் காதலையும் நாம் கொண்டாடும் வரை அடுத்த கட்டத்துக்குப் பெண்ணியம் நகர முடியாது என்றே நான் நம்புகிறேன். கணவனையோ காதலனையோ திட்டி ஒரு கவிதை எழுதுவதை விட விவாகரத்துச் செய்வதும் காதலை முறிப்பதும் இலகுவானது, வசதியானது, உண்மையானது என்றே நான் நினைக்கிறேன்.
குடும்பம், கலாச்சாரம் ஒழுக்கம் குறித்தெல்லாம் உங்கள் கருத்தென்ன ?
இந்த விசயங்களில் நான் முற்று முழுதான பெரியாரிஸ்ட். "திருமணம் செய்வதைக் கிரிமினல் குற்றமாக்க வேண்டும்" என்றார் தந்தை பெரியார். இந்த முதலாளிய சமூக ஒழுங்குகளின் அடிப்படைக் கண்ணி ஆலைகள் அல்ல. குடும்பங்களே அடிப்படைக் கண்ணிகள். குடும்பப் பொறுப்பும் பற்றுமே தொழிலாளர்களை ஓய்வெடுக்க விடுவதில்லை. உலகத் தொழிலாளர்கள் ஓய்வெடுத்தால் முதலாளியப் பொறியமைவு சரிய ஆரம்பிக்கும். இம் முதலாளியக் கலாச்சாரம் ஒழுங்குகள் எல்லாம் தகர்ந்து விழும். பேராசான் கார்ல் மார்க்ஸ் சொன்னது போல குடும்பம் என்பது ஒரு குட்டி அரசுதானே. அங்கு கணவன் அதிகார மையம் தானே! ஒழிந்து போகட்டும் குடும்பங்கள். அது ஒழியும் போது இந்த நிலவும் நாற்றெமெடுத்த கலாச்சாரங்களும் ஒழுக்கங்களும் கூடவே ஒழிந்து போகும்.
உங்கள் காதல், குடும்பம் பற்றிச் சொல்லலாமா?
காதல் என்பது பொறாமையின் இன்னொரு வடிவம் என்பார்கள். காதல் என்பது வெறும் "சென்டிமென்ட் பிளாக் மெயில்" என்றே நான் கருதுகிறேன். இரு உடல்கள் சேருவதற்க்கு நமக்கு ஒரு கலாச்சார காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் காதல் என்று பெயரிட்டுள்ளோம். பிறகு இந்த அன்பு என்ற ஏமாற்றும் இங்கே உள்ளது. எவரொருவர் எமது ஆளுமையை ஏற்றுக் கொள்கிறாரோ அவரை நாங்கள் அன்பு செலுத்துகிறோம். எமது ஆளுமையை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் எமது அன்பு வளையத்துக்குள் சிக்குவதில்லை. இந்தக் காதல் அன்பு போன்ற கற்பிதங்களை விட்டுத் தொலைத்து ஜி.நாகராஐன் சொன்னது போல ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக் கொள்வோம். ஒருவரையொருவர் காதலின் பெயராலும் குடும்பத்தின் பெயராலும் அதிகாரம் செய்வதை விடுத்து ஒருவரை ஒருவர் மரியாதை செய்வோம். செக்ஸ் உறவுக்கு காதல், அன்பு, குடும்பம்,மறு உற்பத்தி, போன்ற காரணங்களைத் தவிர வேறு பல இன்பமூட்டக் கூடிய காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்களை நோக்கி இயங்குவோம், கண்டடைவோம்!

Thursday, April 13, 2006

விலங்குப் பண்ணை - ஷோபா சக்தி



ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்திரெண்டாம் ஆண்டு நான் ஏழாவது வகுப்பில் பாஸாகி எட்டாம் வகுப்புக்குச் சென்றேன். சென்ற ஆண்டு இறுதிப் பரீட்சையில் சித்தியடையாத பழைய எட்டாவது வகுப்பு மாணவன் ஒருவன் இப்பொழுது எங்களுடன் மறுபடியும் எட்டாம் வகுப்பில் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் அதிக தலைமுடியுடன் காணப்பட்டோம். இருவரும் சீத்தைத் துணியில் தைக்கப்பட்ட பூப்போட்ட சட்டைகளும் ப்ளுரில் துணியில் காற்சட்டைகளும் அணிந்திருந்தோம். இருவருமே வேதக்காரர்கள். அதாவது A B C D எனப் பிரிக்கப்படடிருந்த எட்டாவது வகுப்பில் நான்கு பரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள். எல்லாவற்றையும்விட எங்கள் இருவரது பெயர்களும் ஒன்றாகவிருந்தன. நான் ஜெ.அன்ரனி, அவன் ம.அன்ரனி.

ம.அன்ரனியை நான் முன்பே பாடசாலை வளவுக்குள்ளும் தெருவிலும் சந்தித்திருந்த போதிலும் அவனுடன் பேசியதில்லை. அவன் ஒரு நெடு நெடுவென வளர்ந்தவன். ஆனால் மிகவும் ஒல்லியானவன். எப்போதுமே நோயாளி போலவே காணப்படுவான். அவன் இப்போது வகுப்பறையின் கடைசி வாங்கினை என்னுடன் பகிர்ந்து கொண்டான். நான் படிப்பிலே மத்திமமான மாணவன் என்ற போதிலும் உயரம் அதிகமாகையால் கடைசி வாங்கிலே தான் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

வகுப்புகள் தொடங்கிய அன்று முதலாவது பாடம் சமயம். இந்து சமய ஆசிரியர் ஜெகசோதி வகுப்புக்குள் வந்துவிட்டார். வந்தவரத்தில் பாடத்தையும் ஆரம்பித்துவிட்டார். எங்கள் வகுப்பில் மிக அழகாகப் பாடக்கூடிய பெண்ணொருத்தியிருந்தாள். அவளுக்கு நாங்கள் கே.பி.சுந்தராம்பாள் என்று பட்டம் கூட வைத்திருந்தோம். அவளை அழைத்து வாத்தியார் ஒரு தேவாரம் பாடச் சொன்னவுடன் அவள் பாட ஆரம்பித்தாள். ம.அன்ரனியின் பெயரில் இருந்து அவனும் கிறிஸ்தவன்தான் என்பது எனக்குத் தெரியும். அவனைப் பார்த்தேன். அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். முன்னைய வருடங்களின் அனுபவங்களின் போது முதல்நாள் சமய வகுப்பில் இந்து சமய வாத்தியார் "வகுப்பில் யாராவது வேதக்காரர்கள் இருக்கிறார்களா?" எனக் கேட்பார். நான் எழுந்து நிற்பேன். "போய் அசெம்பளி ஹோலில் இரு கிறிஸ்தவ சமயத்தைக் கற்பிக்க ஆசிரியர் வருவார்" என்பார். நானும் மூன்று வருடங்களாக தட்டத் தனிய அசெம்பிளி ஹோலில் காத்திருக்கிறேன். வேதக்கார வாத்தியார் வந்தபாடில்லை. இவ்வளவுக்கும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஒரு வாத்தியார் எங்கள் பாடசாலையில் இருந்தார். அவர் சமூகக் கல்வியும் ஆங்கிலமும் கற்றுக் கொடுத்துவந்தார். மற்றைய நேரங்களில் புகைப்படம் பிடிப்பது தபால் தலைகள் விற்பது போன்ற உபதொழில்களையும் மேற்கொண்டு வந்தார். நான் எழுந்து ஜெகசோதி வாத்தியாரிடம் "சேர் நான் கிறிஸ்தவ சமயம்" என்று அறிவித்தேன். "வேறு யாராவது கிறிஸ்தவர்கள் வகுப்பில் இருக்கிறார்களா?" என வாத்தியார் கேட்டார். ம.அன்ரனியும் எழுந்து நின்றான். வாத்தியார் எங்கள் இருவரையும் அசெம்பிளி ஹோலுக்கு அனுப்பினார்.

நாங்கள் இருவரும் அசெம்பிளி ஹோலில் போய் ஒரு மூலையில் இருந்தோம். சற்று நேரத்தில் அவ்வழியால் சென்ற அதிபர் 'ஏன் இங்கு இருக்கிறீர்கள்?" எனக் கேட்டார். "கிறிஸ்தவ சமயப் பாடம்" என்றேன். "இருங்கள் மாஸ்டர் வருவார்" என்று கூறிவிட்டுச் சென்றார். நான் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து விலகும் வரை கிறிஸ்தவ சமய ஆசிரியர் வரவேயில்லை. ம.அன்ரனியிடம் நான் பேசிய முதல் வார்த்தை "என்ன உடம்பு சுகமில்லையா?" என்பதாய் இருந்தது. அவன் எனக்கு கூறிய முதல் மறுமொழி "பசிக்குது" என்பதாய் இருந்தது. அதிர்ந்து போய்விட்டேன்.

பசியைப் பார்த்து நான் அதிர்ந்து போகவில்லை. எனக்குப் பசி நினைவு தெரிந்த நாளில் இருந்தே மிகவும் பழக்கமானது. அது என் வயிற்றிலேயே குடியிருக்கும் மிருகம். அந்தக் கொடிய மிருகம் என் வயிற்றை எப்போதும் விறாண்டிக்கொண்டேயிருந்தது. பசி எனது கற்பனையில் தேவாங்குக்கும் நரிக்கும் நடுவிலான உடலெல்லாம் புசுபுசுவென ரோமங்கள் கொண்ட ஓர் வெண்ணிற மிருகமாய் இருந்தது. ஆனால் பசிக்கிறது என்பதை வீட்டை விட்டு வெளியே வந்தால் மற்றவர்களிடம் சொல்ல முடியுமா?. ம.அந்தோனி என்னிடம் சொல்கிறான்.! அதுதான் என் அதிர்வுக்கு காரணம். முதலாம் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது புவனம் ரீச்சர் மாணவர்களிடம் "இன்று என்ன சாப்பிட்டீர்கள்?" என வகுப்பில் கேட்பார். அப்போதெல்லாம் இந்தக் கேள்வியளவுக்கு இன்னொரு கேள்வி என்னைப் பயமுறுத்தியதில்லை. அநேகமாகக் காலையில் வீட்டில் சாப்பாடு இருக்காது. சில நாட்களில் கிடைக்கும். அது திறிபோசா மாவுருண்டையாக இருக்கும். எனினும் நான் "இன்று இடியப்பமும் சம்பலும், மீனும் சாப்பிட்டேன்." என்று வகுப்பில் பொய் சொல்வேன். அநேகமாக இந்தச் சமூகத்தில் நான் சொன்ன முதல் பொய் அதுவாகத்தான் இருக்கக்கூடும்.

இப்பொழுது எனது மூத்த சகோதரன் ஊரில் ஒரு தேநீர்க் கடையில் வேலை செய்ததால் காலையில் ஒரு றாத்தல் பாண் பெறக் கூடியதாக இருந்தது. நாங்கள் நான்கு பிள்ளைகளும் பகிர்ந்து சாப்பிடுவோம். கடைசித் தம்பிக்கும் தங்கச்சிக்கும் அச்சுப்பாணில் இருக்கும் கருகிய ஓரப்பகுதி பிடிக்காது. அதை அம்மாவுக்குக் கொடுப்பார்கள். ஆனால் எனக்கு பண்டிகை நாட்களின் மறுநாட்களைத் தவிர அல்லது பப்பா கொழும்பில் இருந்து வந்து ஊரில் நிற்கும் ஆரம்ப நாட்களைத் தவிர மற்றைய நாட்களில் பாடசாலைக்கு கட்டிக்கொண்ட போகச் சாப்பாடு கிடைக்காது. சில நேரங்களில் எப்படியாவது ஒரு இருபத்தைந்து சதம் கிடைத்துவிடும். அதற்கு கார்த்திகேசு கடையில் ஒரு ஐஸ்பழம் வாங்கிச் சூப்பலாம். பசி அடங்கிய மாதிரித் தோன்றும். பகல் ஒருமணிக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கும்போது காத்திருந்த மிருகம் வயிற்றுக்குள் கடித்துக் குதறத் தொடங்கும். எனினும் நான் எப்போதும் என் பசியை வீட்டுக்கு வெளியே யாரிடமும் சொன்னதில்லை. எனது வகுப்புத் தோழர்களுக்கு எனது கொட்டில் வீட்டை கல் வீடு எனவும், எங்களிடம் வரதலிங்கம் மாஸ்டரிடம் உள்ளதை விடத் திறமான வி.எஸ்.ஏ மோட்டார் சைக்கிள் இருக்கிறது எனவும், கொழும்பில் யாழ்தேவி புகையிரதத்தில் லேஞ்சி போட்டு சீட் பிடித்து அதை ஒரு ரூபாவுக்கும் இரண்டு ரூபாவுக்கும் விற்கும் என் பப்பாவை அரசாங்க அதிகாரி என்றும் புளுகி வந்தேன். இதில் பப்பாவின் உத்தியோகத்தை அடிக்கடி மாற்றிக் கூறிவந்ததற்கு எனது மறதி ஒரு காரணம். என் பப்பா கஸ்டம்ஸ், பொலிஸ், மாஸ்டர் என்று பல்வேறு பதவிகளை என் புண்ணியத்தில் வகித்து வந்தார்.


முக்கியமாக நான் மதிய இடைவேளையில் பட்டினியாய் இருப்பதை யாருக்கும் காட்டிக்கொள்வதில்லை. மதிய உணவு மணி அடித்ததும் வகுப்பறையில் இருந்து வெளியே வந்து மைதானத்திலோ வீதியிலோ சுற்றுவேன். என்னைத் தவிர என் வகுப்பில் இருந்த மற்றவர்கள் எல்லோரும் மதியச் சாப்பாடு கட்டிக்கொண்டு வருபவர்களே. அதிலும் சிலருக்கு பத்து மணிக்கு விடும் "சோர்ட் இன்ரெவலில்" கூட கன்ரினில் வடையும் வாய்ப்பனும் சாப்பிடும் அளவுக்கு வசதி இருந்தது. வகுப்பில் பாடங்களைக் கவனிப்பதைவிட என் வயிற்றில் வாழும் விலங்கை அடக்குவதிலும் எனது "பவரை"க் காட்டுவதற்கு என்னென்ன பொய் சொல்லலாம் என்று சிந்திப்பதிலுமே எனது பள்ளிக் காலம் கழிந்தது.

ம.அன்ரனியிடம் இந்தப் பேச்சுக்கே இடமில்லை. அவன் பசியைக் கண்டு ஒழியவில்லை. அதை நேருக்கு நேரே சந்தித்தான். தன் வறுமையைக் கண்டு அவன் வெட்கப்படவில்லை. அதை எனக்குத் தெட்டத் தெளிவாய் அறிவித்தான்.இப்பொழுதெல்லாம் மதிய உணவு மணி அடித்ததும் நானும் ம.அன்ரனியும் தெருவுக்கு வருவோம். அவன் பசியை தணிப்பதற்கு சில உத்திகள் வைத்திருந்தான். பாடசாலையிலிருந்து வங்களாவடிக்கு போகும் வீதியின் இருமருங்கிலும் கிளுவை மரங்கள் நிறைந்திருக்கும். நாங்கள் கிளுவங்காய்களைப் பறித்துத் தின்போம். மயிலப்புலம், சோளாவத்தைப் பகுதிகளில் புல்லாந்திச் செடிகள் காணக்கிடைக்கும். அவற்றின் சின்னஞ் சிறிய பழங்களைப் பிடுங்கித் தின்போம். நாகதாளிப் செடிகளில் பழங்கள் பிடுங்கி நட்சத்திர முள்ளைக் கவனமாக அகற்றி ம.அன்ரனி எனக்குச் சாப்பிடத் தருவான். புல்லாந்திப் பழத்தையும் கிளுவம் பழத்தையும் சாப்பிட்டுவிட்டு என்னத்தைப் படிப்பது? மனம் முழுவதும் சுவையான உணவுகளைப் பற்றிய கற்பனையிலேயே மிதந்து கொண்டிருக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்வரை பாடசாலையில் பிஸ்கட் தருவார்கள், இப்போது இந்தப் பெரிய பாடசாலைக்கு வந்த பின்பு அதுவுமில்லை. யோசித்து பார்க்கும்போது பெயில் விட்டு பெயில் விட்டு ஐந்தாம் வகுப்பிலேயே இருந்திருக்கலாம் என்றிருக்கும்.

எங்களுக்கு கணிதம் படிப்பித்த வாத்தியாருக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அவருக்கு பொடியள் எட்டுஸ்ரீ என்று பட்டம் வைத்திருந்தார்கள். அதாவது எங்கள் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருக்கு எட்டாயிரம் ரூபாய்கள் லஞ்சம் கொடுத்து அவர் இந்த வாத்தியார் வேலையைப் பெற்றுக்கொண்டாராம். எங்கள் பாடசாலையில் மூன்று ஸ்ரீயிலிருந்து இருபது ஸ்ரீ வரை பல ஆசிரியர்கள் இருந்தார்கள். எட்டு ஸ்ரீக்கு கணித மாஸ்டர் வேலையைவிட கராட்டி மாஸ்டர் வேலைதான் மிகப் பொருத்தமாய் இருந்திருக்கும். ஆள் நுள்ளான். ஆனால் எங்களுக்கு அடிக்கும்போது எதிரிக்கு அடிப்பதுபோல்தான் அடிப்பார். ஆனால் அவர் எங்கள் வகுப்பிலேயே மிகவும் அமைதியாகவும் சிவப்பு நிறமாயும் காணப்படும் மணிமேகலைக்கு என்றுமே அடித்ததில்லை. பின்பு பத்தாவது படிக்கும்போது எட்டுஸ்ரீ மணிமேகலையைக் கூட்டிக்கொண்டு ஒடிவிட்டார். பொலிசுக்காரர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்து போனார்கள். ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் ம.அன்ரனி மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் இராசையா பிடித்து அவனை உலுக்கி "ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?" என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். "போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?" என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்த எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார்.

கொடுமை, கொடுமையென்று கோயிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை அவிழ்த்துப் போட்டு ஆடிய கதையாய் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் "வைட் அண்ட் வைட்" போட்டுக்கொண்டு வரவேண்டும் என்றொரு அவசர சட்டம் பாடசாலையில் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முதற் சற்பிரசாதத்துக்காகத் தைக்கப்பட்ட எனது வெள்ளைச் சட்டை எனக்கு இப்போது அளவாக இராது. அதை என் தம்பி போட்டிருக்கிறான். அவனிடம் கெஞ்சி மன்றாடி வெள்ளிக்கிழமைகளில் அச்சட்டையைப் போட்டுக்கொண்டேன். அந்த வெள்ளைச் சட்டை தொப்புள் வரைதான் வரும். அடிக்கடி கீழே இழுத்துவிட்டு சமாளிக்க வேண்டியிருந்தது. வெள்ளைக் காற்சட்டை கிடைக்கவில்லை. அதற்குப் பப்பா கொழும்பிலிருந்து வரும் வரை பொறுத்திருக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை காலைகளில் ஒரு வெறிநாயின் மூர்க்கத்துடன் அதிபர் பாடசாலையின் முன்வாசலில் நின்றிருப்பார். "வைட் அண்ட் வைட்" போட்டு வராத மாணவர்களின் குண்டிகள் அவரின் பிரம்பால் பழுத்தன. நான் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு மட்டம் போடத் தொடங்கினேன். என் வீட்டு நிலைமை தெரியாத மாணவர்கள் திங்கட்கிழமை காலையில் "பள்ளிக்குக் கள்ளம் பழஞ்சோத்துக்குக் காவல்" என்று பொருத்தமில்லாமல் என்னைப் பழிக்கத் தொடங்கினர். ஆனால் ம.அன்ரனி வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைக்கு போனான். அவனிடமும் "வைட் அண்ட் வைட்" கிடையாது. ஆனால் அவன் அதிபரின் அடியை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு எதையும் நேருக்கு நேர் சந்தித்துத்தான் பழக்கம். இப்படியான சில விறுமத்தடியன்களை அடித்தும் உதைத்தும் பார்த்துத் தோல்வி கண்ட அதிபர் இறுதியில் அவர்களை "வைட் அண்ட் வைட்" போடும்வரை வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு வரக்கூடாது எனத் தீர்ப்பிட்டார்.

ஒருமுறை பெரிய வியாழன் அன்று நானும் ம.அன்ரனியும் சின்னமடு தேவாலயத்திற்கு ஒரு திட்டத்துடன் சென்றிருந்தோம். அவன் சின்னமடு ஆலயப்பங்கைச் சேர்ந்தவன். இயேசுக்கிறிஸ்து சீடர்களுடன் அருந்திய கடைசி இராப்போசன விருந்தைப் பெரிய வியாழன் அன்று கொண்டாடுவார்கள். அன்று பன்னிரண்டு சீடர்களின் கால்களையும் வாசனைத் திரவியங்களாலும் பன்னீராலும் இயேசு கழுவி அவர்களுக்கு விருந்தளித்தாராம். அதை நினைவு கூரும் முகமாக பாதிரி பன்னிரெண்டு சிறுவர்களது கால்களைப் பச்சைத் தண்ணீரால் கழுவிவிட்டு ஆளுக்கு ஒரு றாத்தல் பாண் கொடுப்பான். நாங்கள் இருவரும் சின்னமடு மாதாவுக்கு வைத்த நேர்த்தி வீண்போகவில்லை. அன்றிரவு என் வயிற்றினுள் கிடந்த மிருகம் உறங்கிற்று.

சுகாதாரப் பாடத்தில் உணவு - சமிபாடு - பெருங்குடல் - சிறுகுடல் - குதம் என்று ஆசிரியர் படம் போட்டுக் காட்டி விளக்குகையில் நான் அந்தப் படத்தில் பசியைத் தேடிக்கொண்டிருந்தேன். நமது தொண்டையில் இருந்து குதம் வரையான ஒரு பௌதிகச் செயற்பாடு எப்படி மண்டை, காது, உள்ளங்கால்கள், விதைகள், ஆணுறுப்பு, பற்கள் என எல்லாவற்றிலும் சுண்டி இழுத்து வதைக்கின்றது என்பது எனக்குப் புரியவே இல்லை.

நான் ம.அன்ரனி எல்லோருமே எங்கள் ஆண்டிறுதிப் பரீட்சையில் வெற்றி பெற்றோம் என அறிவிக்கப்பட்டது. நாங்கள் ஒன்பதாம் வகுப்புக்குச் சென்றோம். ஆனால் ம.அன்ரனி ஒன்பதாம் வகுப்புக்கு வரவில்லை. அவன் பாடசாலைக்கு வராமல் நின்று கொண்டான்; நான் சின்னமடுவுக்குச் சென்று தேடினேன். யாழ்ப்பாணத்தில் வேலை செய்யப் போய்விட்டான் என்ற தகவல் கிடைத்தது. சில மாதங்களுக்குப் பின் நான் பனங்கிழங்கை விற்பதற்காக யாழ் நகரச் சந்தைக்குச் சென்றிருந்தேன். அம்மா நூறு பனங்கிழங்குகளை ஒரு உரப்பையில் போட்டுக் கட்டித் தந்திருந்தார். அப்போது நுறு பனங்கிழங்குகள் ஐந்து ரூபாய். எனக்கு அம்மாவிடமிருந்து ஐம்பது சதம் கொமிசன் போடப்பட்டிருந்தது. மணல் ஏற்றிப் போகும் ட்ரக்டரில் கிழங்குகளோடு ஏறிப் போய்விட்டேன். வழியெல்லாம் என் கொமிசன் ஐம்பது சதத்தை எப்படியெல்லாம் செலவழிப்பது என்று திட்டம் போட்டுக்கொண்டே சென்றேன். கடைசியில் கொஞ்சம் திராட்சைப் பழங்கள் வாங்கி சாப்பிடலாமென முடிவு செய்தேன்.யாழ் பஸ் நிலையத்தின் முன்பாக வரிசையாகத் தேநீர்க் கடைகள் இருந்தன. அவற்றில் குலைகுலையாக திராட்சைப் பழங்கள் தொங்கின. ஐம்பது சதத்திற்கு தருவார்களா என்பது தெரியவில்லை. கேட்கவும் பயமாக இருந்தது. கடைகளைப் பார்த்துக் கொண்டே தயங்கித் தயங்கி நடக்கும் போதுதான் ம.அன்ரனியைக் கண்டேன். ம.அன்ரனி "ரஜினி கூல் பாரில்" மேசை துடைக்கும் வேலையில் இருந்தான். அழுக்கான சறமும், பனியனும் அணிந்திருந்தான். அவன் இப்போது கொஞ்சம் உடம்பு தெளிந்திருந்தான். அப்போது எனக்கு ஒரு ஆசை எழுந்தது. நானும் அவனுடன் வேலையில் சேர்ந்துவிடுவதென முடிவெடுத்தேன். "எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்?" என ம.அன்ரனியிடம் கேட்டேன். சாப்பாடு மட்டும்தானாம். தீபாவளிக்கு ஒருசோடி உடுப்பு கொடுத்தார்களாம். மற்றப்படி சம்பளம் ஏதும் இல்லையாம். அங்கு வேலை செய்தால் வடை வாய்ப்பன் என்று விதவிதமாக சாப்பிடலாம் என்று தோன்றியது. முதலாளாளியோடு எனது வேலை விசயமாகப் பேசுவதாகவும் அடுத்த கிழமை வந்து தன்னைச் சந்திக்குமாறும் ம.அன்ரனி சொன்னான். அடுத்த கிழமை நான் போனபோது அந்தக் கடை எரிந்து கிடந்தது.அந்தக் கடைத் தொடரையே இராணுவம் எரித்து நாசப்படுத்தியிருந்தது.

ஆயிரத்துதொளாயிரத்து எண்பத்து அய்ந்தாம் ஆண்டின் கடைசிப்பகுதி என நினைக்கிறேன். கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து பழவந்தாங்கல் இரயில் நிலையத்திற்குச் சென்றேன். நிலையத்தில் இறங்கி நண்பன் ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். அந்த இடத்தில் நான் ம.அன்ரனியை எதிர்பார்க்கவில்லை. என்னைக் கண்டவுடன் ம.அன்ரனி என் கைகளைப் பிடித்துக் கொண்டான் "எப்படி இருக்கிறீர்கள் தோழர்?" என்று சுகம் கேட்டான். அவன் நின்றிருந்த பழவந்தாங்கல் ஏரியா, அவனின் இளந்தாடி, அவன் என்னைத் தோழர் என்று சிநேகிதமாய் அழைத்த முறை இவற்றை வைத்து அவன் என்ன இயக்கத்திற்கு வேலை செய்கிறான் என்று கணக்குப் போட்டேன். கணக்குத் தப்பவில்லை. அவன் கள்ளங் கபடம் இல்லாமல் தன்னுடைய இயக்கம் பற்றிக் கூறினான். என்னைப் பற்றிக் கேட்டான். "வெளிநாடு செல்வதற்காக வந்துள்ளேன்" என்று பச்சைப் பொய் சொன்னேன். அவன் என்னை ஆச்சரியத்தோடு கண்கள் சுருங்கப் பார்த்தான். அவன் கண்களில் இருந்தது ஏளனமா, இல்லை ஏக்கமா என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை. பணம் ஏதும் இருந்தால் கொடுக்கும்படியும் தானும் சில தோழர்களும் இரண்டு நாட்களாய் பட்டினியாய் கிடப்பதாயும் ம.அன்ரனி சொன்னான். நான் அவனுடன் அதிகம் பேச விரும்பவில்லை. பணமும் கொடுக்கவில்லை.

ஆயிரத்துதொளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டு நான் கொழும்பில் தங்குமிடமோ, சாப்பாடோ இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். என் வயிற்றுக்குள் இருக்கும் அக் கொடிய மிருகமும் என்னைப் போலவே வளர்ந்திருந்தது. அந்த விலங்கு என்னைத் தின்று கொண்டிருந்த அந்தக் கணத்தில் நான் ம.அன்ரனி பற்றிய ஒரு செய்தியை அவனின் படத்துடன் பத்திரிகையில் படித்தேன்.வவுனியா காவலரணில் இருந்த ம.அன்ரனி மறைந்திருந்த சுடப்பட்ட "சினைப்பர்" தாக்குதலில் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்டபோது அவன் திறந்த ஜீப்பினுள் அமர்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறான். அவனது இரத்தமயமான உடல் சோற்றுப் பருக்கைகளுக்கு நடுவே கிடந்ததாம். மறுபடியும் மறுபடியும் பத்தரிகைச் செய்தியைத் திருப்பித் திருப்பிப் படித்துப் பார்த்தேன். அவனில் வயிற்றில் குண்டு பாய்ந்திருப்பதாகவும் அவனுக்கு வயது இருபத்திரெண்டு எனவும் சூடுபட்ட உடனேயே அவனது உயிர் பிரிந்து விட்டது எனவும் எல்லாவற்றையும் விளக்கமாகப் பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். ஆனால் அவனின் வயிற்றினுள் இருந்த அந்த தேவாங்குக்கும் நரிக்கும் இடையேயான புசுபுசுவென்ற வெண் மயிர்கள் கொண்ட மிருகத்தைப் பற்றிய செய்திகள், குறிப்புகள் எதுவும் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை.

ஷோபா சக்தி

Monday, April 10, 2006

தோழர் சி.புஸ்பராஜாவை நினைவில் நிறுத்தி

ஈழப்போராட்ட முன்னோடியும் மக்கள் கலை இலக்கியவாதியுமான


ஆவணப்பட வெளியீடும்

நினைவுரைகளும்

15.04.2006

சனி மாலை 3.00 மணி

Salle Rencontre

Rue Jean Francois Chalgrin

95140 Garges les Gonesse

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

குடும்பத்தினரும் நண்பர்களும்

தொலைபேசி : 01 39 86 31 30

06 64 81 43 62 / 06 61 80 36 90 / 06 03 83 96 79

vithuran84@hotmail.com

Wednesday, April 05, 2006

ஷோபா சக்தி - 'தம்பி' திரை விமர்சனம்




திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுக்களுக்குப் பாலபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காகக் கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களுக்காக விரலை வெட்டுவது, அரைவேக்காட்டுத்தனமான மிகை உணர்ச்சித் திரைப்படங்களுக்கும் மலிவுத்தனமாக பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்கும் விடலைத்தனமான 'காதல்' படங்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் திரைப்பட ஆய்வாளர்களும் பாராட்டுக் கட்டுரைகள் எழுதுவது, உலக இலக்கியத்தைச் சவால் செய்வதாய்ச் சொல்லிக் கொள்ளும் இலக்கிய எழுத்தாளன் பேய் பிசாசு நம்பிக்கைகளையும் சாதி பெருமிதங்களையும் தூக்கி நிறுத்தும், துப்பட்டாக்களைக் கண்காணிக்கும் சமூக விரோதத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப்படப் புகழ் நட்கத்திரங்களைத் தேர்ந்த சமூக சிந்தனையாளர்களாக உருவகித்து ஊடகங்கள் நேர்காணல் செய்வது, உணர்ச்சிப் பாவலர்கள் ஆணிய வக்கிரத்துடன் ஆபாசமாகத் திரைப்படப் பாடல்கள் புனைவது, சினிமா கவர்ச்சி என்ற ஒற்றை ஆயுதத்தின் துணையுடன் மட்டுமே திரைப்படத் துறையினர் அரசியல் பண்பாட்டு தளங்களின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய சக்திகளில் ஒன்றாக மாறிவிடுவது போன்ற அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ முடியும் என அடிக்கடி எமது தமிழகத் தோழர்கள் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு. தோழர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு செய்தி என்னிடம் உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையேயும் இந்த அட்டூழியங்களில் சிலவாவது நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன.

பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பாரிஸ் நகரத்தில் ஈழத் தமிழர்கள் நடமாடும் கடை வீதிகளில் எல்லாம் இயக்குனர் சீமானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட 'தம்பி' திரைப்படத்துக்கான விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. நடிகர் மாதவனின் விதம் விதமான தோற்ற நிலைகளின் கீழே 'அச்சந் தவிர், ரெளத்திரம் பழகு' என்ற புதிய ஆத்திசூடியின் வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. அச் சுவரொட்டிகளில் இப்படியாகவும் ஒரு வரி இருந்தது "முக்கிய குறிப்பு - இத் திரைப்படம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியது" . அதே நேரத்தில் அய்ரோப்பியத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தம்பி திரைப்பட முன்னோட்டம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. முன்னோட்டத்தில் முத்தாய்ப்பாய் சே குவேரா, மாவோ இருவரதும் புகழ்பெற்ற இரண்டு கூற்றுக்கள் திரையில் எழுத்துக்களாய் மின்னின. தம்பி திரைப்படம் வெளியானதும் புலம்பெயர் வாரப் பத்திரிகைகள் தம்பி படத்தைக் கொண்டாடின. மின் இலத்திரனியல் ஊடகங்களில் தம்பி திரைப்படமும் இயக்குனர் சீமானும் சே குவேரா பனியனும் முக்கிய பேசு பொருட்களாயின. மார்க்ஸின் மாணவன் பெரியாரின் பேரன் தம்பியின் தம்பி என்று என்று கிறுக்குத்தனமாகச் சீமான் பெரிய சாமானாக வர்ணிக்கப்பட்டார்.

இந்த அமளிதுமளிக்குள் சீமான் அவுஸ்ரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு 20.10.2005 அன்று வழங்கியிழுந்த நேர்காணலை இணையத்தளம் ஊடாகச் சற்றே தாமதமாகக் கேட்க நேர்ந்தது. அந் நேர்காணலில் சீமான் இவ்வாறு கூறினார்: "சிங்கள அரசு முழுப் பலத்துடன்தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போது அதை ஒரு அரசின் இறையாண்மையாக உலகம் பார்க்கிறது, ஆனால் நாங்கள் கையில் ஆயுதத்தை எடுக்கும் போது அதை வன்முறையாகத் தீவிரவாதமாக உலகம் சொல்கிறது. அப்படிச் சொல்லக் கூடாது என்பதையே உள்ளர்த்தமாகக் கொண்டு தம்பி திரைப்படத்தை எடுத்து வருகிறேன்" இவை எல்லாற்றினதும் உச்சமாகத் தம்பி வெளியானதும் சீமான் ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் "தம்பியின் வெற்றியைப் பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்றார். இனி வருவது தம்பி திரைப்படத்தின் கதை:

அன்பே உருவான பெற்றோரும் பாசமுள்ள ஒரேயொரு தங்கையும் உள்ள தமிழ் சினிமாவின் மாதிரிக் குடும்பமொன்றில் பிறந்தவன் தம்பி என்ற வேலுத் தொண்டைமான். இவனுக்கு முன்னதாகப் "படையப்பா", "பரமசிவன்", "திருப்பாச்சி" போன்றவர்களும் இத்தகைய மாதிரிக் குடும்பத்தில் பிறந்தவர்களே. கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவனான தம்பி மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கத் தொடங்குகிறான். வேலைக்குப் போய்க் கொண்டிருக்கையில் தெருச்சண்டியன் பாண்டியனின் தம்பி செய்யும் கொலையொன்றைத் தற்செயலாகச் சீமானின் தம்பி பார்த்துவிடுகிறான். தம்பி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால் பாண்டியனின் தம்பி உள்ளே தள்ளப்படுகிறான். இதனால் வெகுண்டெழுந்த தெருச்சண்டியன் பாண்டியன், தம்பியின் மாதிரிக் குடும்பத்தைக் கொன்றொழித்து விடுகிறான். இப்போது தம்பி சினந்தெழுந்து பாண்டியனைப் பழிவாங்க பாண்டியனின் வீட்டுக்குச் செல்லும் போது அங்கே பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைக் காண்கிறான். அந்தக் குடும்பம் தான் பாண்டியனைக் கொலை செய்வதால் பாதிக்கப்படக் கூடாது என எண்ணும் தம்பி பாண்டியனைச் சந்தித்து "நிறுத்திக் கொள்வோம்" என்கிறான். பாண்டியனோ தம்பியை அடித்து முள்ளுக் கம்பியில் காயப் போட்டுவிடுகிறான். காயங்கள் ஆறியதும் தம்பி வன்முறையை ஒழிக்கப் புறப்படுகிறான். வில்லன் குழுவினரை துரத்தித் துரத்தி மரண அடி அடிக்கிறான் தம்பி. தம்பி கொலை செய்வதில்லை ஆனால் கொலைக்கும் கோமாவுக்கும் உள்ள மயிரிழையில் தம்பியிடம் அடி வாங்கியவர்களின் உயிர் ஊசலாடுகிறது. இந்த மயிர் இழையில் தான் படமே நிற்கிறது.வன்முறைக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட வன்முறையைத் தம்பி கையில் எடுக்கிறான். "உதைக்கணும் உதைக்கணும் உதைப்பேன்" என்று முழிகளைப் புரட்டியவாறு ஒரு சைக்கோ மாதிரித் தம்பி அலையத் தம்பியின் சைக்கோவையும் தெருச் சண்டித்தனத்தையும் மாவீரம் என அர்த்தப்படுத்திக் கொள்ளும் அர்ச்சனா தம்பியை விரட்டி விரட்டிக் காதல் செய்கிறாள். தம்பிக்கு உலகைத் திருத்தும் வேலையிருப்பதால் அவன் அர்ச்சனாவின் திடீர்க் காதலை நிராகரிக்கிறான். என்றாலும், அர்ச்சனா விடாப்பிடியாக கனவில் தம்பியோடு இரண்டு காதற் பாடல்களை ஊரைச் சுற்றி மரத்தைச் சுற்றி பாடிவிடுகிறாள்.

இடையில் தம்பிக்கு மதியுரைஞராக வந்து வாய்க்கிறார் மணிவண்ணன். பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை இடிக்கும் வாலிப வயோதிக அன்பர்களை அடக்கிய தம்பியின் தீரச் செயல்களுக்குப் புரட்சிகர தத்துவார்த்தரீதியான விளக்கங்களை மதியுரைஞர் வழங்குகிறார். "நான் ஏன் தெருச்சண்டியன் ஆனேன்?" என்று பல்கலைக் கழகப் பரிசளிப்பு விழா மேடையில் தம்பி உருக்கமாக உரை நிகழ்த்துகிறான். அப்போது மேடையில் இருக்கும் செட் ப்ரொப்பர்டிகள் பின் வருமாறு :

மூன்று நாற்காலிகள், ஒரு மேசை, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி, ஒரு மைக் ஸ்ராண்ட், பாவலர் அறிவுமதி, ஒரு மின்விசிறி.

மீண்டும் தோன்றும் மதியுரைஞர் தம்பியிடம் கார்ல் மார்க்ஸ், சே குவேரா, பிரபாகரன் எல்லோரும் கல்யாணம் செய்ததால் தம்பியும் அர்ச்சனாவை காதலிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். உடனே தம்பி அர்ச்சனாவின் காதலை ஏற்றுக்கொள்ள அர்ச்சனா தம்பியின் காலில் தடாலென விழுந்து கும்பிடுகிறாள். கடைசி நேரக் கலவரத்தில் பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைச் சீமானின் தம்பி ஆபத்திலிருந்து காப்பாற்றுவதோடு பாண்டியனுக்கு அறிவுரையும் சொல்கிறான். மனம் திருந்திய பாண்டியன் சீமானின் தம்பியைத் தனது குலசாமியாக ஏற்றுக்கொள்கிறான் இது தெரியாத பாண்டியனின் தம்பி சீமானின் தம்பியை வெட்டி விடுகிறான். தம்பி குற்றுயிராக ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்க தம்பியின் காதலியும் நண்பர்களும் சோகத்துடன் நிற்கிறார்கள். இவர்களை விடப் படு சோகத்துடன் வில்லனும் வெட்டியவனும் கண்களைக் கசக்கிக்கொண்டு நிற்கிறார்கள்.அப்போது அங்கே தோன்றும் மதியுரைஞர் தம்பியின் காதுகளுக்குள் "தம்பி எழுந்திரு! இன்னமும் பஸ்ஸில் இடித்தபடியே தான் பயணம் செய்கிறார்கள் எழுந்திரு ! நமக்கு இன்னமும் வேலையிருக்கிறது" என்று கூறத் "தம்பி பொழைச்சிட்டான் "...............

மேலேயுள்ளது தம்பி திரைப்படத்தின் கதைச் சுருக்கம் என்று நினைத்துவிடாதீர்கள். தம்பி திரைப்படத்தின் முழுக்கதையும் இதைவிடச் சுருங்கியது, நான் தான் வாசிப்புச் சுவாரசியத்துக்காகக் கதையைச் சற்றே மினுக்கி எழுதியுள்ளேன்.தறுதலை தம்பிக்கும் தாதா பாண்டியனுக்கும் இடையில் நடக்கும் நாய்ச் சண்டையில் தமிழீழ மக்களின் போராட்டம் எங்கே வருகிறது ?காதலை ஏற்றுக்கொண்டவுடன் தம்பியின் கால்களில் காதலி விழுந்து தொழும் அசிங்கமான திரைப்படத்தில் ஈரோட்டுச் சிங்கத்துக்கு என்ன வேலை ?இந்த வெங்காயச் சினிமாவை வீரமணி, கொளத்தூர்மணிக்குக் கூட அர்ப்பணிக்க முடியாதே ? இதை எந்தத் துணிச்சலில் சீமான் பெரியாருக்கு அர்ப்பணிக்கிறார் ?

"தமிழ்த் திரைப்படங்களை குறித்துப் பேசுவது சிரங்கைச் சொறிந்து கொடுப்பதைப் போன்றது" எனப் பேராசிரியர் சிவசேகரம் ஒருமுறை எழுதியதாக நினைவு. பேராசிரியர் விரக்தியின் விளிம்பில் நின்று இதை எழுதியிருந்தாலும் கூட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நேர்மறைப் பண்புகளும் இல்லாமல் இல்லை. திராவிட இயக்கத்தினரின் திரைப்படங்களும் 'பாதை தெரியுது பார்', 'ஏழாவது மனிதன்', 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' போன்று மாற்றுத் திரைப்படங்களைக் கண்டடைவதற்கான எத்தனங்களுக்குள்ளால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவை.இது தவிர வணிக நோக்கில் தயாரிக்கப்படும் சனரஞ்சக மனோரதியத் திரைப்படங்களுக்கும் பரந்துபட்ட தமிழ்ப் பார்வையாளர்கள் திரளுக்குமிடையே உள்ள உறவுடன் ரசிக உளவியலும் குறித்த ஒரு உரையாடலை 'நிறப்பிரிகை' சில வருடங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தது. எனினும் அவை குறித்த சிந்தனை வளர்ச்சியும் ஆய்வு முயற்சிகளும், தமிழில் தொடராமலேயே போய்விட்டன. பாடல்கள், நடனங்கள், சண்டைக் காட்சிகள், மிகை உணர்சிகள், போன்ற கேளிக்கைக்கான நேர்மறைக் கூறுகளுடன் நடிகைகளைப் பாலியல் பிரதிமைகளாகக் கட்டமைப்பது, ஆதிக்க சாதிச் சாய்வு,மூடநம்பிக்கைகள், ஆண் மையவாதச் சிந்தனை முறைமை போன்ற எதிர்மறைக் கூறுகளும் சேர்ந்ததாகவே தமிழ்ச் சினிமாவின் பரப்பு இயங்கி வருகிறது. இந்தப் போக்கு தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகச் சினிமாவிலும் தொழிற்படும் ஒரு போக்குத்தான். ஆனால் தமிழ்த் திரைப்படத் துறையில் மாபெரும் வணிக வெற்றிகளை சாதித்த இயக்குனர்கள் தமது திரைப்படங்களுக்கு வெளியே புரட்சிகரமான வாய்ச் சொற்களை உதிர்ப்பதில்லை. 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் வெற்றியைக் கத்தாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கங்கை அமரன் சொன்னதில்லை. 'கப்டன் பிரபாகரன்' படத்தின் வெற்றியை ஈழப்போராளிகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று செல்வமணி சொன்னதில்லை. 'வைஜந்தி அய்.பி.எஸ்' திரைப்படத்தை ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அர்ப்பணிப்பதாக அத் திரைப்படத்தின் இயக்குனர் சொன்னதில்லை, ஆனால் மேற்சொன்ன படங்களையே கருத்துத் தளத்தில் ஒத்ததாக உள்ள தம்பி திரைப்படத்தின் வெற்றியைப் பெரியாருக்கும், பிரபாகரனுக்கும், அர்ப்பணிக்கிறேன் என்று கூறும் சீமானின் வாய்த் துடுக்குக்குப் பின்னால் இருப்பது எது ?


தம்பி திரைப்படத்துக்கு புறத்தே இயக்குனர் சீமான் கட்டமைத்த கட்டமைக்கும் போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே/ அவர் உதிர்த்தும் கைப்புள்ள, வெடிமுத்து வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின் வியாபார இலக்கு எது ? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன ? இந்தக் கேள்விகளைப் பரிசீலிப்பதற்கு முன்னதாக தம்பி படத்தின் திரைக்கதை வசனத்தைப் பற்றியும் அவற்றுள் பொதிந்திருக்கும் ஆபத்தான சாதிய ஆண்மையவாத அராஐகக் கூறுகளைப் பற்றியும் பார்த்து விடுவோம்.

தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்பட பாணியிலிருந்து வேறுபட்டது அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப் பாசறையிலிருந்து வரும் 'உண்மை' இதழும் எழுதுகிறது தமிழ்த் தேசியவாதப் பாசறையிலிருந்து வரும் 'தென் செய்தி' இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது ?
எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 130 படங்களில் இந்த கதை தானே நடந்தது ! எழுந்தமானமான எடுத்துக்காட்டாய் கஜேந்திரா பிலிம்ஸின் 'நாளை நமதே" திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம் அன்பே உருவான தாய், அறிவே உருவான தந்தை, சங்கர், விஜே, கண்ணன் என மூன்று குழந்தைகள்! தென்றல் நடைபயின்ற குடும்பத்தில் தீடீரெனப் புகுந்தான் கொள்ளைக்காரன் ரஞ்சித். தென்றல்கள் ஒவ்வொன்றும திசைக்கு ஒன்றாகப் பிரிந்தன. முடிவு என்ன? எம்.ஜி.ஆர் பெரியவனாக வளரவில்லையா? தன் குடும்பத்தையே நாசமாக்கிய நம்பியாரைக் கண்டு பிடிக்கவில்லையா? நம்பியாரைத் தண்டவாளத்தில் ஓடவிட்டுத் துரத்தித் துரத்தி நீதி மொழிகள் பேசவில்லையா நம்பியாரைப் பழிவாங்க எல்லா வாய்ப்புகள் இருந்தும் இறுதியில் எம்.ஜி.ஆர் நம்பியாரின் உயிரைக் காப்பாற்றி சட்டத்தின் கையில் ஒப்புவிக்கவில்லையா? அப்போது நாகேஷ் போலீசாரை ஜீப்பில் அழைத்துக்கொண்டு வரவில்லையா? எல்லாமே நடந்தன. ஒன்று மட்டும் தான் நடக்கவில்லை. இத் திரைப்படத்தின் வெற்றியை அண்ணாத்துரைக்கு அர்ப்பணிப்பதாக எம்.ஜி.ஆர் சொல்லவில்லை......!

'தென்செய்தி' இதழில் சுப.வீரபாண்டியன் தம்பி திரைப்படத்தைக் குறித்து எழுதும் போது தம்பியின் வீட்டில் பெரியார், கார்ல் மார்க்ஸ், பாரதிதாசன் படங்கள் தொங்குவதாக மகிழ்ந்து போகிறார். இவையெல்லாம் தம்பியின் உள் வீட்டில் மாட்டியிருந்த படங்கள். ஆனால் தம்பியின் வீட்டின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் -அண்மைக் காட்சிக்குள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வரும் ஒரு புகைப்படம்- எப்படித்தான் பேராசிரின் கண்களுக்குப் படாமல் போனதோ தெரியவில்லை. அம் முகப்பு படத்தில் இருப்பவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மார்க்ஸின் மாணவர்கள், பெரியாரின் பேரர்கள், ஒரு போதும் முத்துராமலிங்கத்தின் படத்தைத் தூக்கிப்பிடிப்பதில்லை. தலித் மக்களின் தலைமைப் போராளி இம்மனுவேல் சேகரனின் படுகொலைக்கு நேரடிக் காரணியாக இருந்தவர் முத்துராமலிங்கம். முத்துராமலிங்கத்தை கைது செய்யுமாறு அப்போது பெரியார் குரல் கொடுத்தார். பின் அவர் கைது செய்யப்பட்டார். முத்துராமலிங்கத்துக்கு அடிப்படைவாத இந்துத்துவ முகமும் உண்டு. இந்து மகா சபைத் தலைவராகவும் முத்துராமலிங்கம் இருந்தார். "ஒரு வேளை இன்று முத்துராமலிங்கர் உயிருடன் இருந்திருந்தால் அவரே இன்றைய தமிழக இந்துத்துவ சக்திகளின் தலைவராக இருந்திருப்பாரோ என்று ஊகிக்கவும் இடமுண்டு" என்பார் அ.மார்க்ஸ் (அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் பக்.107) இன்று தென்மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலோத்தரின் சாதிப் பெருமிதப் படிமமாக வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத் தம்பியின் வீட்டில் சீமான் மாட்டிவிட்டதற்க்குப் பின்னால் இருப்பது சுய சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன? இந்த இடத்தில் இயக்குனர் சீமான் திரைப்படத் துறையினுள் நுழைந்த விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

என் ஞாபகம் சரியாக இருந்தால் சீமான் பாரதிராஜாவின் 'பசும்பொன்' திரைப்படத்ததுக்குக் கதை உரையாடல் எழுதித்தான் திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். தமிழ்க் சினிமாவின் மொழியை மாற்றிப் போட்ட வகையிலும் 'கிழக்கே போகும் ரயில்', 'கருத்தம்மா', போன்ற சில படங்களில் சமூகப் பிரச்சனைகளைச் சற்றே ஆழமாகப் பேசியவர் என்ற வகையிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பாரதிராஜாவின் வகிபாகம் முதன்மையானதாக இருக்கிறது. இதற்கு அப்பால் சுயசாதிப் பெருமிதங்களைப் பேசும் படங்களை எடுத்ததோடு மட்டுமில்லாமல் சாதிச் சங்கத்தின் நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர் பாரதிராஜா.சீமான் கதை உரையாடல் எழுதிய பசும்பொன் திரைப்படமும் சுயசாதிப் பெருமைகளைப் பேசிய ஒரு வன்கொடுமைத் திரைப்படம் தான். இத் திரைப்படத்தின் நாயகப் பாத்திரமான துரைராசுத் தேவர் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜி கணேசன் என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. அத் திரைப்படத்தில் தான் "தென்காசிச் சிங்கமே தேவர் அய்யா எங்கள் தேவர் குலத் தங்கமே தேவர் அய்யா" என்ற பாடல் வருகிறது. இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து என்பது கூடுதற் தகவல்.

"நமது மொழி சாதி காப்பாற்றும்" மொழி என்பார் பெரியார். நமது மொழியின் அடுக்குகளில் சாதி நுட்பமாகப் படிந்துள்ளது. சீமானின் தம்பி திரைப்படத்தில் பாத்திரங்கள் பிற பாத்திரங்களைத் திட்டும் போது 'சண்டாளா' எனத் திட்டுகிறார்கள். படம் நெடுகவும் இந்த சண்டாளா எனற சொற்ப் பிரயோகம் வருகிறது. சண்டாளர் என்பது புராணகள், இதிகாசங்கள் தோன்றிய காலங்களில் இருந்தே தலித்துக்களை இழித்துரைப்பதற்காக ஆதிக்கச் சாதியினர் பயன்படுத்தும் சொல். மதுரை மீனாட்சி கோயில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்த போது அடையாளமாகப் பறையர், பள்ளர், நாடார் சாதிகளிலிருந்து இரண்டிரண்டு பேர்களென ஆறு பேர்கள் ஆலயத்துக்குள் நுழைந்தனர். 'ஆறு சண்டாளர்கள்' என இவர்களைப் பற்றி 'பகிரதி' என்ற பார்ப்பனப் பெண் வசைப்பாடல் இயற்றிய கொடுமையைத் தமிழவேள் 'இம்மானுவேல் தேவேந்திரர் வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு மேலாக சண்டாளர் என்பது இந்தியாவின் அட்டவணைச் சாதிகளுள் உள்ள ஒரு தீண்டப்படாத சாதியின் பெயர் என்பதும் அறிய வருகிறது. இச் சாதியின் பெயரை வசைச் சொல்லாகச் சீமான் தம்பி திரைப்படத்தில் உபயோகித்திருப்பதை திரைப்படத் தணிக்கைக் குழுவினர் எப்படி அனுமதித்தனர் ? தணிக்கைக் குழு அனுமதித்திருப்பினும் உண்மையும் தென்செய்தியும் சுபவீயும் கோவி.லெனினும் எப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் ? சீமான் சார்ந்திருக்கும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் குஷ்புவிடம் இருந்து மட்டும் தான் தமிழைக் காப்பாற்றுமா ? சாதியிடமிருந்து தமிழைக் காப்பாற்றாதா ?

பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திலும் "கதாநாயகி", கதைக்கு சம்மந்தமில்லாமல் வந்துபோன அறிவுமதி ஆண்டாள் பிரியதர்சினி போலவே அவளும் வந்து போகிறாள். சற்றுக் காலத்துக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், பனியன் போன்ற உடைகளை அணியக் கூடாது என்ற ஒரு கலாச்சார அடிப்படைவாத விதி கொண்டுவரப்பட்டதே, அதை மாணவிகள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ சீமான் செம்மையாகக் கடைப்பிடிக்கிறார். படம் முழுவதும் கல்லூரி மாணவியான நாயகி சேலையிலேயே வருகிறாள். சீமானைப் போல மாதவனைப் போல அவளால் சே குவேரா படம் பொறித்த பனியன் அணிய முடியாது. விரும்பினால் சே குவேரா படத்தைச் சேலையில் பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டியது தான். புரட்சியாளனைக் காதலிக்கும் குற்றத்துக்காக அவள் புரட்சியாளனிடமிருந்து லூசு, இம்சை, பேய் போன்ற வசைகளைப் பெறுகிறாள். கடைசியில் சீமானின் தம்பி காதலை ஏற்றுக் கொண்டதும் அவனின் கால்களில் விழுகிறாள்.முற்று முழுதாக ஆணாதிக்கச் சிந்தனை வழியிலேயே சீமான் நாயகியின் பாத்திரத்தைக் கட்டமைத்திருக்கிறார். வெட்கத்தை விட்டு ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது: கே.பாலச்சந்தர் போன்ற பார்ப்பனப் பிற்போக்குவாதிகள் "அவள் ஒரு தொடர் கதை", "அவர்கள்", "மனதில் உறுதி வேண்டும்", "அச்சமில்லை அச்சமில்லை"," அக்னி சாட்சி",ஆகிய திரைப்படங்களில் அரைகுறையாகவேனும் சித்தரித்துக் காட்டிய பெண் ஆளுமைகளைக் கூட நமது பெரியாரின் பேரர்களாலும் தம்பியின் தம்பிகளாலும் உருவாக்க முடியாமல் உள்ளது.அவர்கள் தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் காலில் விழும் கலாச்சாரத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மாவோவின் மேற்க்கோளோடு தொடங்கி சே குவேரா வின் மேற்க்கோளோடு முடியும் இத் திரைப்படம் முழுவதும் சீமானின் தம்பி கிட்டத் தட்ட ஒரு போலிஸ் உளவாளி போலவே இயங்குகிறான். போலிசார் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சொல்லும் போது போலிஸ் வாகனத்துக்கு முன்னால் தம்பி பாதுகாப்பு அளித்துச் செல்கிறான். போலிசாரும் தம்பி சண்டித்தனம் செய்யும் போது கடைசிவரைக்கும் கண்டும் காணாமலேயே இருந்துவிடுகிறார்கள். வரலாற்றிலேயே இல்லாத புரட்சியாய் பொலிஸ் அதிகாரி (ராஜ்கபூர்)புரட்சியாளனை இரகசியமாகச் சந்தித்துப் சிலபல அய்டியாக்களும் கொடுக்கிறான். "புரட்சியாளன்" தம்பியும் போலிசும் கை கோர்த்துச் செயற்படுகிறார்கள். இவ்வாறாகப் போலிஸாருடன் கரங்களைக் கோர்ப்பவர்களை சனங்கள் புரட்சியாளன் என்று அழைப்பதில்லை, மாறாகப் "போலிஸ் உளவாளி" என்றுதான் காறியுமிழ்வார்கள். இந்தப் படத்துக்காக வீரப்பன் வேட்டை நிகழ்ந்த பகுதிகளிலும் நக்ஸல்பாரிப் புரட்சியாளர்கள் கொடூரமாகப் போலிசாரால் கொன்றொழிக்கப்பட்ட தருமபுரிக் கிராமங்களிலும் வாழும் இரத்த சாட்சியங்களான மக்கள் சீமானைச் செருப்பாலே அடித்தால் அது புரட்சி!


சமூகத்தின் உண்மையான வன்முறையாளர்கள் சீமான் ஆனந்த விகடன் நேர்காணலில் கோபப்படுவது போல சாலையில் குப்பை எறியும் இளைஞர்களோ சாலை விதியை மீறும் எளிய மனிதர்களோ அல்ல. அல்லது சீமான் தம்பி திரைப்படத்தில் சித்தரிப்பது போன்ற பேருந்தில் உரசியபடியே பயணம் செய்யும் பாலியல் வறுமையில் உழல்பவர்களோ தெருச்சண்டியர்களோ அடியாட்களாக இயங்கும் விளிம்பு நிலை மனிதர்களோ அல்ல. அவர்கள் இந்த நிலப்பிரபுத்துவ முதலாளியக் கேடுகெட்ட சமூக அமைப்பின் விளைவுகள். சமூகத்தின் மிகப் பெரும் வன்முறை நிறுவனங்களாக அரசும் நீதிமன்றமும் காவல்துறையும் இராணுவமும், சிறைச்சாலைகளுமே விளங்குகின்றன.அவையே இந்த சமத்துவமற்ற சமூக ஒழுங்குகளையும் சுரண்டலையும் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. இவற்றின் வன்முறை குறித்துத் தம்பி திரைப்படம் பேசுவதில்லை. மாறாகத் தம்பி ஒரு இளைஞனுக்கு "நீயும் நானும் அடித்தால் குற்றம் போலிஸ் அடித்தால் சட்டம்" எனவே நீ படித்து போலிஸ்காரனாகு! கலக்டராகு! சமூகத்தைத் திருத்து" என்கிறான்.
'தாகம்' பெப்ரவரி 2006 இதழில் சீமான் தனக்குள் இலட்சியங்களை விதைத்தவர்களான மாவோவும் லெனினும் சே குவேராவும் தம்பி திரைப்படம் முழுவதும் விரவியிருப்பதாகக் கூறுகிறார். மாவோவும் லெனினும் அரசு இயந்திரத்தை நொறுக்குவது குறித்தும் அரசின் காவல் நாய்களான அதிகாரிகளையும் ஆயுதப்படையினரையும் செயலிழக்கச் செய்வது குறித்தும்தான் பேசுவார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக மாறச் சொன்னார்களே ஒழிய பொலிஸ்காரர்களாக மாறச் சொல்லவில்லை. " நீதி என்பது அரசின் வன்முறை- வன்முறை என்பது மக்களின் நீதி" என்பதே சர்வதேசிய அனார்கிஸ்டுகளிள் முதல் முழக்கமாய்த் திகழ்கிறது. அரசுக் கட்டுமானம், நீதியின் வன்முறை, வெகுசனங்களின் கலகம் போன்ற நுண் அரசியற் சிந்தனைகள் சே குவேராவின் பனியனைப் போட்டுக்கொண்டு கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றித் திரிவதாலோ அல்லது பிரபாகரனின் படத்தைச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அலைவதினாலோ சித்தித்துவிடப் போவதில்லை.இயக்குனர் சீமான் குத்துமதிப்பாய் மார்க்ஸிஸம் மாவோயிஸம் என அரைகுறையாய்ப் அனர்த்துவதை நிறுத்திக்கொண்டு, குறைந்தபட்சம் அவர் அவரின் இன்னொரு தோழரான தியாகு எழுதிய 'மார்க்சியம் ஆனா ஆவன்னா' என்ற நூலையாவது படிக்க வேண்டும். 'சொல்வது தெளிந்து சொல்லவேண்டும்.'


லெனினையும் பெரியாரையும் பாரதிதாசனையும் புகைப்படங்களாகத் தமிழ்த் திரையில் முதலில் காட்டியவர் சீமான் என்ற சிந்தனையாளன் தான் என்று சிறுபிள்ளைத்தனமாக சுப.வீரபாண்டியன் மகிழ்ந்து போவதில் எந்த அர்த்தமும் இல்லை. எம்.ஜி.ஆர் கூடத்தான் உலகம் சுற்றும் வாலிபனில் லெனின் சிலையை காண்பிக்கிறார்.பாரதிதாசனைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் புத்தரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பேசாததையா சீமான் பேசிவிட்டார் ? எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படத்தில் நாடோடி ஆட்சியில் அமர்ந்தவுடன் கொண்டு வரும் சட்டத் திருத்தங்களில் அரைவாசி கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பார்கள். வணிக இலக்குகளுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குள் இவ்வகையான போலிப் புரட்சிகரப் படிமங்களும் உணர்ச்சி முழக்கங்களும் எழுப்பப்படுவதற்க்கான நோக்கம் வியாபாரக் காரணங்களைத் தவிர வேறில்லை.
தம்பி திரைப்படத்தைப் போலவே 1981 ல் போலிப் புரட்சிகர முழுக்கங்களுடன் ஏ.வி.எம் தயாரிப்பில் 'சிவப்பு மல்லி' என்றொரு திரைப்படம் விஐய்காந்த்,சந்திரசேகர் நடிப்பில் வெளிவந்தது. அத் திரைப்படத்தின் போலி முழக்கங்களுக்குப் பின்னால் இருந்த வணிக உத்திகளை அறந்தை நாராயணன் 'தமிழ் சினிமாவின் கதை' என்ற நூலில் விமர்சிக்கிறார். இந்த விமர்சனம் 'நாடோடி மன்னனுக்கும்' பொருந்தும், 'உலகம் சுற்றும் வாலிபனுக்கும்' பொருந்தும், 'அன்பே சிவத்துக்கும்' பொருந்தும், நம் சீமானின் தம்பிக்கும் பொருந்தும். கீழே வருவது அறந்தை நாரயணின் 'சிவப்பு மல்லி' குறித்த விமர்சனம்:

1980 ல் ஏ.வி.எம் கூட்டத்திலிருந்து மெய்யப்பச் செட்டியாரின் மைந்தர்கள் 'முரட்டுக்காளை' என்றொரு பிரமாண்டமான பொழுதுபோக்குப் படத்தை வெளியிட்டனர். அது நடந்து கொணடிருந்த போது ஆந்திராவில் ஒரு தெலுங்குப் படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. அந்தப் படம் 'எர்ரமல்லி'. ஆந்திர மாநிலக் கம்யுனிஸ்டுகள் உருவாக்கிய படம். சகோதரர்கள் அந்தப் படத்தைப் பார்த்தனர் சிக்கனமான செலவில் தயாரிக்கக் கூடிய 'ப்ருவ்ட் சப்ஐக்ட்' என்பதை உணர்ந்தனர். தேசமெங்கும் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியால் அமைதியின்மையும் வாழ்க்கை நெருக்கடியும்... அதனை எதிர்த்து விவசாயிகள் தொழிலாளிகள் இளைஞர்கள் மாணவர்கள் மத்தியதர வர்க்கத்தினர் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் புறச் சூழ்நிலை. இதன் எதிரொலியாக அமிதாப்பச்சன் நடிக்கும் இந்தி மசாலாப் படங்களிலும் -ஏன் ரஜினிகாந்த் நடித்த தமிழ் 'காளி' படத்தி லும் - போராட்டக்கார இளைஞன் கம்யுனிஸ்டாகவும் கையில் செங்கொடி பிடிப்பவனாகவும் படங்களில் வரத் தொடங்கியிருந்தான். எர்ரமல்லி ப்ரூவ்ட் சப்ஜெக்டை ஏ.வி.எம் சகோதரர்கள் வாங்கினர். தமிழுக்கு தகுந்த மாதிரி திரைக்கதை எழுத வைத்து 'சிவப்பு மல்லி' என்ற படத்தை 1981 ல் வெளியிட்டனர். தமிழ்ப் படத்துக்கு வசனம் எழுதி இயக்கியவர் இராம.நாராயணன் . நிலப்பிரபுத்துவத்தையும் முதாலாளித்துவத்தையும் எதிர்த்து எழுந்த இரு கோபம் கொணட இளைஞர்களின் கதை. கடிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிச் சுரண்டும் முதலாளி அவனுக்கு நல்லவளான ஒரு மனைவி கோமாளிகளான மூன்றுநிலப்பிரபுகள். நிலப்பிரபுவுக்கு ஒரு மகள்.... என்று தமிழில் (மாற்றப்பட்ட) திரைக்கதை. வண்ணத்தில் நூற்றுக்கணக்கான கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகள், ஊர்வலத்தில் லெனின் படம் கூடவே பெரியார், அண்ணாத்துரை படங்கள். கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகளையும், சில வசனங்களையும் நீக்கி விட்டால் 'சிவப்பு மல்லி' - ஒரு எம்.ஜி.ஆர் பாணிப்படம்; அபாரமான வசூல். (தமிழ் சினிமாவின் கதை பக்:714)

தம்பி திரைப்படத்திலும் இரு மேற்கோள்களையும் ஒரு வசனத்தையும் நீக்கி விட்டால் சீமானின் தம்பி அசலான விஜயக்காந் பாணிப்படம். இராம.நாராயணனுக்கு 'முரட்டுக்காளையை' தயாரித்த ஏ.வி.எம் நிறுவனமென்றால் சீமானுக்கு 'ஜீன்ஸ்' படத்தைத் தயாரித்த முரளி மனோகர். ஏ.வி.எம்மும் இராம.நாராயணனும் சேர்ந்து தமிழ்த் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள் என்றால்; முரளி மனோகரும் சீமானும் தமிழகத் தமிழர்களுடன் சேர்த்து ஈழத் தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைக்கிறார்கள்....


இன்று புலம் பெயர்ந்த தேசங்களில் ஏறக்குறைய பத்து இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களே தமிழ்த் திரைப்படங்களின் வருவாயில் கணிசமான பகுதியைத் தீர்மானிப்பவர்களாக விளங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஈழத்தமிழர்களின் சினிமாக் கிறுக்கு மற்ற எந்த தேசிய இனத்தவர்களின் சினிமாக் கிறுக்கை விடவும் சற்றும் குறைந்ததல்ல. 'காதலுக்கு மரியாதை' 'ஆட்டோ கிராப்' போன்ற கிறுக்குத்தனமான திரைப்படங்களை புகலிடங்களில் பெரும் வெற்றியோடு ஓட வைத்தவர்கள் இவர்கள். பாரிஸ் நகரத்தில் இதுவரை திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிக காட்சிகள் ஓடிய திரைப்படம் 'கப்டன் பிரபாகரன்'. அந்தப் பெயருக்காகவே அத் திரைப்படம் ஓட்டமாக ஓடியது. இதே வணிக உத்தியோடு இப்போது சீமானின் தம்பி திரைப்படமும் புகலிட தேசங்களில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

தமிழீழ விடுதலைப் போராளிகளின் தலைமைகள் மீதும் அவர்களின் குறுந் தேசியவாதப் பண்புகளின் மீதும் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன என்பதற்காகச் சிங்களப் பேரினவாத அரசுகளின் இன அழிப்புக் கொடுமைகளையும் ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க்கான நியாயமான காரணிகளையும் போராட்டத்தில் ஏராளமான மக்களும் அடிமட்டப் போராளிகளும் செய்த வீரஞ் செறிந்த தியாகங்களையும் நாம் மறந்து விடப் போவதில்லை. ஈழப் போராட்டத்துக்கு தமிழகத் தோழர்கள் செய்த பங்களிப்புகளும் அளப்பெரியன. அத் தோழர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக தீயில் எரிந்தார்கள். மாணவர்களும் இளைஞர்களுமாகத் திரண்டு ஈழ அகதிகளுக்குப் பெரும் உதவிகளைச் செய்தார்கள். பல தோழர்கள் ஈழப் போராட்டத்தின் நியாயங்களைப் பரப்புரை செய்வதையே தமது வாழ்நாள்ப் பணியாகக் கொண்டார்கள். பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்று ஈழத்தில் களப் போராளிகளாகவும் சில தமிழகத் தோழர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஈழப் போராட்டத்துக்கு பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்ததால் எண்ணுகணக்கற்ற தோழர்கள் சிறைக் கொட்டடிகளில் ஆண்டு கணக்காக அடைக்கப்பட்டார்கள். வாக்கு, மனம், காயம் எனச் சகலத்தையும் தமிழ்ப் போராட்டத்துக்கு ஒப்படைத்த சில தோழர்கள் சகோதரப் படுகொலைகளைத் தொடர்ந்து விரக்தியடைந்து தோழர் பாவரசுவைப் போல மனநோயாளிகளாக மாறிக் காணாமலேயே போய்விட்டார்கள். ஆக இவை எல்லாம் சேர்ந்தது தான் ஈழப்போராட்டத்தின் வரலாறு.
இன்று ஈழ விடுதலைப் போரட்டம் குறுந் தேசிய வெறியாலும் கலாச்சார அடிப்படைவாதத்தாலும் ஏகாதிபத்திய அடிபணிவாலும் பாஸிஸத்தாலும் திசை தவறிப் போயிருக்கலாம் . ஆனால் ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க் காரணங்களாய் அமைந்த இன ஒடுக்குமுறைக் காரணிகள் அப்படியே தான் இருக்கின்றன. அரசியல், இராணுவ முட்டுச் சந்துகளில் அகப்பட்டிருக்கும் ஈ ழவிடுதலைப் போராட்டத்தைச் சனநாயகப் படுத்துவதும் பாஸிஸத்தைத் தோற்கடிப்பதுவுமே ஈழப் போராட்டத்தை அடுத்த படியை நோக்கி நகர்த்தும் வழியாக இருக்கும். இத்திசை நோக்கி நகர்வதே சமூகப் போராளிகளின் அக்கறையாக இருக்கும். ஆனால் தமிழீழ விடுதலையின் ஆதரவாளராகச் சொல்லப்படும் திரைப்பட வியாபாரி சீமானுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. அவர் பிரபாகரன் எனற தனிமனிதனையே ஈழப்போராட்டமாக உருவகித்து பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் பேட்டிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். புறநானூற்றின் நிகழ்காலம பிரபாகரன் என்று அவர் தனிமனிதத் துதியைப் பாடிக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் ஆதரவு, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், பெரியார், அம்பேத்கர் என்று சொற்க் குவியல்களை உதிர்ப்பதின் மூலம் அவர் ஊடகங்களில் - குறிப்பாகப் புலம்பெயர் ஊடகங்களில் - தன்னை எப்போதும் தக்க வைத்துக் கொள்கிறார். இதனூடாக அவர் தனது வணிக வலையைக் கவனமாகப் பின்னுகிறார்.

சீமானின் வணிகப் புத்தி மிகவும் வெளிப்படையானது. தம்பி திரைப்படத்தில் நடிப்பதற்கு மாதவனைத் தவிர எந்த நடிகர்களும் தயாராக இருக்கவில்லை என்று அவர் வியாபார மதிப்புள்ள உச்ச நட்சத்திரங்களைக் குறித்துப் புலம்புகிறார். 'பாதை தெரியுது பார்' இயக்குனர் நிமாய்கோசும் 'ஏழாவது மனிதன்' இயக்குனர் ஹரிகரனும் 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' இயக்குனர் சிறீதர் ராஜனும் உச்ச நட்சத்திரங்களின் தேதிகளுக்காகச் சீமானைப் போல புலம்பவில்லை. அவர்கள் புது முகங்களையும் வணிக மதிப்பற்ற நடிகர்களையும் வைத்தே காலத்தால் அழியாத திரைப்படங்களை உருவாக்கிக் காட்டினார்கள். ஆனால் சீமானோ சே குவேரா பனியனை அணிந்து நடிக்க மாதவனைத் தவிர எந்தத் தமிழ் நடிகனுக்கும் துணிவில்லை எனறு பழித்துப் பேசிய அதே நாவால்தான் தனது அடுத்த படத்தில் விஜய் அல்லது விக்ரம் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ஆனந்த விகடன் ஊடாக உச்ச நட்சத்திரங்களிடம் மனுக் கொடுக்கிறார்.

அம்ஸ்ரர்டாமில் கஞ்சா விற்கும் கோப்பிக் கடைகளின் முகப்பில் பொப் மார்லியின் உருவத்தை வணிக இலச்சினையாகப் பொறித்திருப்பார்கள். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பனியன்களில் சே குவேராவின் உருவத்தை அச்சிட்டுச் சந்தைப்படுத்துவார்கள். அதே போல் இயக்குனர்

சீமானுக்குத் தனது திரைப்படத்தைச் சந்தைப்படுத்த பிரபாகரன் ஒரு வியாபார இலச்சினை.

ஈழப் பிரச்சினை அவருக்கு ஒரு 'ப்ரூவ்ட் சப்ஜெக்ட்'.
இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால் ஆதாயம் அடைபவர்கள் பலர். ஆயுத வியாபாரிகள், அரசுத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் ஒரு புறம் யுத்தத்தின் பெயரால் நிதியைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் தமிழ்த் தேசியத்தை முழக்கமிடும் பத்திரிகைகள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், அறிவு ஜீவிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் திட்டமிடலாளர்கள், தமிழ்த் தேசியத்தின் வெளிநாட்டு முகவர்கள், கோயில் முதலாளிகள் போன்றவர்களும் ஈழப் போரட்டத்தின் பெயரால் பெரும் பொருளியல் ஆதாயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இயக்குனர் சீமானும் தன் பங்குக்கு வாய் நனைக்க வந்துள்ளார். ஆற்றிலே போற வெள்ளம் அண்ணே குடி!தம்பி குடி!!

ஷோபாசக்தி
25.03.2006