Tuesday, March 31, 2009

வெற்றியும் தோல்வியும்

- சுகன்

எனக்கு மகன் முறையானவன்
நாலுநாள் முன்னர் இறந்தான்
யானை சிங்கம் புலி தவிர
அவன் எல்லாப் பிராணிகளையும் பறவைகளையும்
வளர்த்தான்.

அவன் எப்போதாவது படித்து நான் பார்த்ததில்லை
ஆனால் நானும் வேறெவரும் பார்க்காமலேயே
அவன் நன்றாகப்படித்திருக்கவுங்கூடும்
படிப்பை வெறுத்திருக்கவுங்கூடும்.

அவனும் அவனது நண்பன் ஜெயாவும் புலிகளோடு சேர்ந்தபின் ஜெயா மாத்தையாவின் கீழ் இயக்கத்தில் பெரிய ஆளாகி மாத்தையாவின் பெருந்தலைகள் பதினெட்டுப்பேரை பொட்டர் போட்டபோது பதினெண்கீழ்க்கணக்கில் வந்தான். ஜெயா அப்போது காதலித்துமிருந்திருக்கலாம். அவனுக்கு ஒரு காதல் இருந்தது என்றும் கேள்விப்பட்டதாக ஞாபகம். ஜெயாவும் எனது மகனும் அவனது இன்னொரு நண்பனான இன்சூரும் அவர்கள் உறவான சிங்கப்பரராச சூரியரின் மகன் 'ரெலோ' தவராசாவைப் போட்டார்கள். இன்சூர் தீவுப்பகுதிக்குப் பொறுப்பாக பின்னர் இருந்தான். இன்சூரின் மாமா பொலிஸ் நாதன் துரோகியாக
சிலவருடங்களின்முன் போடப்பட்டிருந்தார்.

எனது மகனுக்கு மானிப்பாயில் ஒரு காதல் இருந்தது
படித்த பிள்ளையான அந்தப்பிள்ளையை
இவன் தூக்கிக்கொண்டுவந்தான்.

ஆகவே அவன் அப்போது மிகவும் விபரமானவனாக
இருந்திருக்கவேண்டும்
சாதி வித்தியாசங்காரணமாக அந்தப்பிள்ளை வீட்டார்
இவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை.
இவர்களுக்கு இரண்டு இரண்டு இரணைப்பிள்ளைகளாக
நாலு குழந்தைகள்.

நாலு நாள் முன்னர் இவன் புதுமாத்தளனில்
'ஆட்லெறி'யால் கொல்லப்பட்டான்
மனைவிக்கு இரண்டு கால்களும் இல்லையெனவும்
மனைவி மன்னாருக்கு கொண்டுபோகப்பட்டார் எனவும்
இரண்டு நாளுக்குமுன் செத்தவீட்டுச் செய்தி வந்தது
இன்று மனைவியும் இறந்துபோனார் எனவும்
பிள்ளைகளை பொறுப்பெடுக்க அவன் அம்மாவும்
எனது அக்காவும் காத்திருக்கிறார்களெனவும்
செய்தி வந்தது.

மருமகள் சொன்னாள்: "அது உயிர்கொல்லி நிலம் மாமா,
எத்தினையோ சனம் வருத்தத்தாலையும் குண்டுகளாலையும் அங்கை செத்துப்போச்சு அம்மம்மா, அக்கா எண்டு, அங்கை ஒருத்தரும் இருக்க ஏலாது"


அவள் அம்மம்மா என்று சொல்கிற
எனது அம்மாவை எழுபது வயதில்
பிரபாகரன் தனது பாதுகாப்புக்காக
வன்னிப் பெருநிலத்திற்குக் கூட்டிச் சென்றார்.

Monday, March 23, 2009

யுத்தம்: தலித் கேள்வி

-சுகன்

யாழ்-மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் அரசியற் படுகொலையில் ஆரம்பித்த தமிழ்த் தேசிய அரசியல் எவருடைய கடைசிக் கொலையில் முடிவுறும் என்று இன்னுங்கூட நிச்சயிக்கமுடியாத நிலையிலும் முடிவுறும் என்பதுமட்டும் முடிவாகத் தெரிகிறது.

சமகால இலங்கை அரசியலில் சாட்சிகளாக இருப்பதைக்காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது பாதுகாப்பானது என்கிற நிலைமையும் தர்க்கமும் இருந்தபோதிலும் இந்த யுத்தத்தில் சாட்சிகள், பாதிக்கப்பட்டோர், கைதிகள், காரணவர் என யாவருமே ஒன்றில் மற்றொன்றாய் மாறிமாறி வினைபுரிந்தும் தேசத்தின் முதல் மகனிலிருந்து கடைசி மனிதர்வரை பங்காளிகளாக இருக்கிறார்கள்,இருக்கக்கூடும்,இருக்கமுடியும்.எல்லோருமே ஒருவகையில் நிரபராதிகள் எனவும்கூடும்.

யாரைத்தான் விட்டுவைத்தது இந்த யுத்தம்?

கொலையாளிகள் இருவர் தாம் செய்யப்போகும் கொலையை கடும்பிரயத்தனத்திலும் நிறுத்தமுடியாமல் போகும் நிலையைச் சொல்லும் லத்தீன் அமெரிக்க நாவல் கூறும் சூழ்நிலையை இலங்கைக்குப் பொருத்தமுடியாவிடினும் மூன்று பத்தாண்டுகளாக கொலைகளை நிறுத்தவும முடியவில்லை.

கொலைகளுக்கெதிரான மறுப்பறிக்கைகளினதும் கண்டன அறிக்கைகளினதும் தேவையும் இப்போது இல்லை. சமுகத்தின் பொது அறம், தர்மநியாயங்கள்பற்றிய கதை கூறுதலும் இப்போது இல்லை. அளவுகளும் இல்லை.

யுத்த தர்மம்! ஆம் யுத்த தர்மம் மட்டுமே நியாயமென்றாகி நீண்ட காலமாகிவிட்டது. சர்வதேசிய மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்புகள்கூட நவீன யுத்த தர்மத்தின் விழுமிய நியாயத்திலேயே கருத்துக்களையும் கண்டனங்களையும் ஆணித்தரமாகவும் பவ்வியமாகவும் வைக்கின்றன.

ஆதிகால யுத்த தர்மங்களைத் தற்போது நோக்குமிடத்து ஆச்சரியமளிக்கின்ற அதேவேளை ஆராதிக்கத் தகுந்ததாகவும் போற்றுதலுக்குரியதாகவும் ஆகிவிட்டது.

1) நேரடியாக தம் எதிரிக்குத் தூதரை அனுப்பி நிலைமையை தெரிந்துகொள்ளல்.
2) புலவோரை எதிரியிடம் அனுப்பி ஏற்படப்போகும் விபரீதங்களை அளவளாவுதல், உசாவுதல்
3) மீண்டும் மேலுமொரு விசேட தூதரை அனுப்பி நிலைமையை நிச்சயித்துக்கொள்ளல்
4) தன்படை, நேச படை, ஆதரவளிக்கும் அண்டைநாட்டு மன்னர் நிலை,
இவற்றின் பலங்களையும் எதிரியின் பலம் பலவீனங்களையும் படைப்பலத்தையும் கணக்கிடுதல்.
5) வெற்றியை உறுதிப்படுத்தல்
6) தோல்வி நிச்சயம் எனில் சரண் அடைதல்,சமாதானமாகப்போதல்.
7) களபூமி என்றழைக்கப்படும் இருபடையினருக்கும் பொருத்தமான யுத்தப்பிரதேசத்தைத் தேர்ந்துகொள்ளல்.
8) குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், முதியோர், துறவிகள், அறவோர், 'அந்தணர்', மாடுகள், வளங்கள், இவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
9) போருக்கான நாள் நேரம் இவற்றை பரஸ்பரம் அறிவித்து (றாந்தே- வூ கொடுத்து) ஏற்றுக்கொள்ளச் செய்தல்
10) எதிரியைக்கொண்டே போருக்கான நாள் குறித்தல்
11) அன்றைய நாளிற்கான யுத்தத் தொடக்கத்தையும் முடிவையும் பரஸ்பரம் அவற்றிற்கான சங்கை ஊதி பின் தம் முகாங்களுக்குத் திரும்புதல்.

இவற்றைப்பார்க்கும்போது போரிற்கென ஒரு தர்மம் இருந்தது தெரிகிறது. ஊதுவதற்குச் சங்கு இல்லையே தவிர தற்போதைய போரிலும் தர்மம் இருக்கத்தான் செய்கிறது.

மக்களைப் பாதுகாப்பான இடங்களிற்கு அப்புறப்படுத்திவிட்டு போரில் ஈடுபடும் இருதரப்பினரினதும் இழப்புகளை நிகழ்வுகளைக் கலிங்கத்துப் பரணியையும் விஞ்சும்வண்ணம் முழு ஈடுபாட்டோடு பார்த்து கேட்டு அபிநயித்து ஆதாரமாகக் கொண்டு உலகு தழுவி இந்த யுத்தத்தின் முடிவை எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள்.

உற்பத்தி-பரிவர்த்தனை பொருளாதாரத்தை விஞ்சி யுத்தப் பொருளாதாரமும் யுத்தத்தோடு இணைந்த வாழ்க்கைமுறைமை, அதுசார்ந்த கலை, அழகியல், பண்பாடு, யுத்தம் தந்த புதிய மனிதர்கள், யுத்தமேற்படுத்திய நேச உறவுகள், எதிரிகள், புதிய வாழ் நிலங்கள் என இந்த யுத்தம் விட்டுச்செல்லும் விழுமியங்கள் மிகவும் காத்திரமானவை.

மிகப்பெரும் ஆளுமைகளை இந்த யுத்தம் தந்திருக்கிறதா இல்லையா?

'நம்மிற் சிலர் இது வேண்டாம் நாம் பழைய நிலைக்கே போய்விடலாம்' என்று இரண்டு பத்தாண்டுகளிற்குமேலாகவே கூறிவருகிறார்கள்.குறிப்பாக கவிஞர் அருந்ததி 1986 இல் தனது முதலாவது கவிதைத் தொகுப்பிற்கு "சமாதானத்தின் பகைவர்கள்" என்றே பேரிட்டார்."துப்பாக்கிக் கலாசாரத்திலிருந்து மீள்வது எப்போது" என்று ஆதிகால 'தூண்டில்' சஞ்சிகையில் தயபால திரணகம கட்டுரை எழுதியிருந்தார். போர் எதிர்ப்பு, சமாதானத்தைக் கோருதல் என்பது துரோகச் செயலாக நிறுவப்பட்டபோதிலும் அதைப் பெருமையாகவே ஏற்றுக்கொண்டு போர்நிறுத்தத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி நாம் பழைய நிலைக்கே போய்விடலாம் என்று எப்போதும் போலவே சிலர் இப்போதும் சொல்லிவருகிறார்கள். தமிழ்த்தேசியவாதம் நம்மைக் கொண்டுவந்துவிட்டிருக்கும் நிலையைப்பார்த்தீர்களா? என்று சிவசேகரம் இப்போதும் கேட்கவே செய்கிறார்.

இந்த அழகிய நாட்டை ரயில் பாதைகளால் எப்படி அழகாக இணைக்கலாம் என அவரொத்தவர்கள் கனவுகாணுகிறார்கள். தோழர். டக்ளஸ் தேவானந்தா எல்லோரும் இணைந்தால் இன்னும் இரண்டு வருடத்திலேயே மீண்டும் சீரழிந்தவற்றைச் சீர்செய்துவிடலாம் என்கிறார்.

யுத்தம் முடிந்து புதிய இலங்கை பழைய இலங்கையின் நிலையை அடைய எடுக்கும் காலத்தில் உலகம் எப்படி மாறியிருக்கும் என்பதை 2025 ஆம் ஆண்டிற்கான மேற்குலகின் திட்டமிடல்கள் ஓரளவு காட்சிப்படுத்துகின்றன.

தலித்துகளாகிய நாம் யுத்தமுடிவின்பின் எவ்வாறு எதிர்கொள்ளப்படுவோம்?அதற்கான சிறந்த உதாரணத்தையும் எச்சரிக்கையையும் இறந்தகாலமும் நிகழ்காலமும் நமக்குச் சொல்கின்றன.

1986 இல் நடந்தது இது: தலித் சமூகத்தைச்சேர்ந்த இரு அரசாங்க நிருவாக உயர் அதிகாரிகள் அரசாங்க அதிபர்களாகிக்கொள்வதற்கு சேவை, திறமை, அனுபவம், நேர்மை போன்ற தகுதிகள் இருந்தும் அவர்களது சாதிகாரணமாக ஒருபோதுமே அப்பதவிக்கு அவர்கள் நியமிக்கப்படவில்லை. யாழ்.உதவித்தேர்தல் ஆணையாளராகப் பதவி வகித்தவரை 1986 இல் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பதவிக்கு கொழும்பில் இருந்த சில சிங்கள உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்தனர். அன்றைய ஐ.தே.க. அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த அத்துலத்முதலி 'அவ்வாறான அரசாங்க அதிபர் நியமனத்தை ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு வழங்குவதை யாழ்ப்பாண சமூகம் ஏற்றுக்கொள்ளாது' எனக்கூறி அச்சிபாரிசினை மறுத்துவிட்டார். அவ்வாறே யாழ். உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரியான தாழ்த்தப்பட்டவர் மன்னார் அரசாங்க அதிபர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டபோதும் அவரது சாதி காரணமாக அந்நியமனம் கிடைக்கவில்லை. இதேபோன்று கல்வித்துறையின் உயர் நிர்வாகப் பதவிகளிலும் சாதியம் மிக நுணுக்கமாகப் பார்க்கப்பட்டது.

யுத்தமுடிவின் பின்னான மீள் நிர்மாணங்கள் சிவில் சமூக நிலைகள் எல்லாம் சீர்செய்யப்படும்போது சாதியம் எப்படிப் பரிமாணம் எடுக்குமென 2002 இன் சமாதான காலத்தில் நாம் அனுபவித்தோம்.

இந்த முப்பது வருட யுத்தச் சூழலிலும் தமிழீழ விடுதலை இயக்கங்கள், இலங்கை அரசு, இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், சர்வதேச சமாதான இயக்கங்கள், கண்காணிப்புக் குழுக்கள், தன்னார்வக் குழுக்கள், இடதுசாரிகள் என எல்லாவற்றிற்கும் யாழ் வெள்ளாள சமுகம் தண்ணிகாட்டிவிட்டு இன்னும் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் நிலையில் நமக்குத் தேவை அதிகார சக்திகளுடன் பேரம் பேசும் பிரக்ஞை.

Sunday, March 08, 2009

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை:

இலங்கையில் ஒரு துன்பியலான நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரான 30 வருட யுத்தத்தின் பின்னர் இராஜபக்சவின் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் உள்ள ஒரு சிறிய பிரதேசத்தினுள் அண்ணளவாக 250,000 மக்களை அடைத்து வைத்துள்ளதுடன், பொதுமக்களை குற்றம்மிக்கவகையில் கொலைசெய்கின்றது.

புதுமாத்தாளான் வைத்தியசாலையில் கடமை புரியும் பிராந்திய சுகாதாரத் தலைவரான வைத்தியர் துரைராஜா வரதராஜா Associated Press செய்தி நிறுவனத்திற்கு பெப்பிரவரி 13ம் தேதி கருத்து தெரிவிக்கையில் "மோசமான செல் வீச்சுக்களால் நாளாந்தம் 40 பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும் 100 இற்கு மேற்பட்டோர் காயமடைவதாகவும்" , பெரும்பாலான காயங்கள் ஷெல்களினால் ஏற்படும் வெட்டுக்காயங்கள் எனவும், 8 வைத்தியர்களே அப்பிரதேசத்தில் உள்ளதாகவும், ஆபத்தை எதிர்கொள்வதால் கூடுதலான ஊழியர்கள் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டார். வைத்தியசாலையில் பென்சிலின் உட்பட முக்கிய கிருமி எதிர்ப்பு மருந்துகள் தீர்ந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். உணவு, மருந்து உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் செல்வதை அரசாங்கம் கடுமையாக கட்டுப்படுத்தி வைத்துள்ளது.

அதேவேளை, தென் இலங்கையில் நடைமுறை ரீதியாக ஒரு சர்வாதிகாரம் நிறுவப்பட்டு, அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் கொலைப்படையினரால் கொலை செய்யப்படுகின்றனர். இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே முற்றுமுழுதாக இந்த குற்றச்செயல்களுக்கு பொறுப்பாக உள்ளன.

ஆரம்பத்திலிருந்து யுத்தத்தை எதிர்த்துவரும் ஒரேயொரு கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

லங்கா சமசமாஜ கட்சி (LSSP) ட்ரொட்ஸ்கிச கொள்கைகளைக் காட்டிக்கொடுத்து சிறிமாவோ பண்டாநாயக்காவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் 1964ம் ஆண்டு இணைந்து கொண்டதற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) 1968 இல் நிறுவப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் காட்டுக்கொடுப்பானது இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு மட்டுமல்லாது, ஆசியாவினதும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் பாரிய விளைவுகளை உருவாக்கியது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உருவாக்கமானது லங்கா சமசமாஜ கட்சியின் வரலாற்று காட்டுக்கொடுப்புடன் நேரடியாக பிணைந்துள்ளது. தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முதலாளித்துவ ஆட்சியின் பாரம்பரிய வழிமுறைகளான தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் சிங்கள இனவாதத்திற்கு லங்கா சமசமாஜக் கட்சி அடிபணிந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த யுத்தத்தை சர்வதேசியவாதத்தின் அடித்தளத்தில் எதிர்க்கின்றது. வடக்கு கிழக்கிலிருந்து நிபந்தனையின்றி இராணுவத்தை வெளியேற்று என அழைப்புவிடுகையில், ஸ்ரீலங்கா முதலாளித்துவத்திற்கும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும் எதிரான ஒரு பொதுப்போராட்டத்திற்கு சிங்கள - தமிழ் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையான ஒரு சுதந்திரமான தமிழ் அரசுக்கு ஆதரவளிக்கவில்லை. அவ்வாறான அரசு ஒன்று பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதும், ஏகாதிபத்திய சக்திகளின் கைகளில் ஒரு கருவியாகியும் விடும். இது தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களுக்கே சேவைசெய்வதுடன், இந்த முதலாளித்துவம் ஈழத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கான மலிவு கூலி மேடையாக்கியும் விடும்.

இந்த முன்னோக்கின் தோல்வியே இந்த யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கையாலாக நிலைமைக்குக் காரணமாகின்றது. வர்க்கப் பிரச்சனைகளை அல்லாது இனத்தை அடித்தளமாக கொண்டமையால் அதனால் சிங்கள மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கதிற்கு அழைப்புவிட முடியாதுள்ளது. அதற்கு பதிலாக; கொழும்பிற்கு முக்கிய ஆதரவைக் கொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக தனிமைப்படுத்திவிட்ட இந்திய முதலாளித்துவத்தினதும், ஏகாதிபத்திய சக்திகளினதும் ஆதரவை அது நாடி நிற்கின்றது.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், அண்மைய மாகாணசபைத் தேர்தலில் நுவரேலியா மாவட்டத்தின் தலைமை வேட்பாளருமான மயில்வாகனம் தேவராஜா மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினருமான பீட்டர் சுவார்ட்ஸ் ஆகியோர் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம் பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் முன்னோக்கு பற்றியும் உரையாற்றுவர்.

இந்த போராட்டத்தின் படிப்பினைகள் ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் மற்றும் ஐரோப்பாவிலும் பிரான்சிலுமுள்ள தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பொதுக் கூட்டம்
15 மார்ச் 2009.
நேரம்: 2.30 பிற்பகல்
இடம்: 177 rue de Charonne, 75011 Paris.


Métro: Charonne -ligne 9, Alexandre Dumas, ligne 2,
Tél: 06 19 85 55 07
E mail: balasooria@gmail.com





--------------------------------------------------------------------------------

Copyright 1998-2008

Friday, March 06, 2009

கொலைகளை நிறுத்துங்கள்!!

பேரணி

சனி 07 மார்ச் 2009, மாலை 3 மணி

இடம் : Place Georges Pompidou
Métro : Rambuteau, Hôtel de Ville ou Les Halles

- இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!

- இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுதந்திரம் வழங்கு!

- அராஐகம், படுகொலைகள், காணாமல்போதல்களிற்கு எதிராகத் தமிழ்பேசும் மக்களே - சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!

- பெண்கள், சிறார்களிற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!

- பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!

- பிரான்ஸிலும் இலங்கையிலும் உள்ள இலங்கைத் தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

.Comité De Difense Social
.Union Syndicale Solidaires Paris
.Fédération Anarchiste
.Bread And Roses

Tuesday, March 03, 2009

உண்மை அறியும் குழு அறிக்கை!

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது போலீசு தாக்குதல்: உண்மை அறியும் குழு அறிக்கை!

சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றது விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று யாருடைய ஆணையும் இன்றி உள்ள நுழைந்து தலைமை நீதிபதி (பொறுப்பு) வேண்டிக்கொண்டும் வெளியேறாமல் இரக்கமற்ற கொடுந் தாக்குதல் ஒன்றை வரலாறு காணாத வகையில் வழக்குரைஞர்கள் மீது மேற்கொண்டுள்ளது. காவல்துறையினரே பொதுச் சொத்துக்களையும் வழக்குரைஞர்களின் உடமைகளையும் கொடூரமாக அழித்துள்ளனர். இந்திய அளவில் இன்று பரப்பரபாகியுள்ள இச்சம்பவம் குறித்த உண்மைகளை அறிய தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்:

1. பேரா. என். பாபையா, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.
2. பேரா. ஜி.கே. இராமசாமி, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.
3. திரு. வி.எஸ்.கிருஷ்ணா, மனித உரிமைக் கழகம் (HRF), ஆந்திரா.
4. திரு. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
5. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு. 6. முனைவர். ப. சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை.
7. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி.
8. திரு. அயன்புரம் இராஜேந்திரன், பொறியாளர், தென்னிந்திய இரயில்வே, சென்னை.
9. திரு. சிவகுருநாதன், மனித உரிமைளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.
10. திரு. நடராசன், மனித உரிமை ஆர்வலர், சென்னை.

இக்குழு உறுப்பினர்கள் சென்ற பிப்ரவரி 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தையும் அழிக்கப்பட்டுள்ள பொது சொத்துக்களையும் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்களைச் சந்தித்தனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சிகிச்சைக்குப் பின் வெளியே அனுப்பப்பட்டுள்ள வழக்குரைஞர்களையும் சந்தித்தனர். சென்னைஉயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் திரு. பால் கனகராஜ், முன்னாள் தலைவர் திரு. கருப்பன், சென்னை சட்டக் கழகத் தலைவர் திரு.டி.வி.கிருஷ்ணகுமார், நீதிமன்றப் பதிவாளர் (மேலாண்மை) திரு.விஜயன், பாதிக்கப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரையும் சந்தித்தனர். பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான பதர் சயீத் அவர்களுடனும் உரையாடியுள்ளார். தலைமைப் பதிவாளர் திருமதி.மாலா பதிவாளர் (நிர்வாகம்) ஆகியோர் பார்க்க மறுத்துவிட்டனர். பதிவாளர் விஜயன் எங்களைச் சந்தித்த போதும் பிரச்சினை விசாரணையில் உள்ளது எனச் சொல்லி எந்தத் தகவலையும் அளிக்க மறுத்துவிட்டார். தாக்குதல் மற்றும் பொருள் அழிவு குறித்து புகார்கள் ஏதும் தரப்பட்டுள்ளதா என்பது போன்ற சாதாரணத் தகவல்களையும் கூட, பொது நல நோக்கில் ஆய்வுக்கு வந்துள்ள சிவில் சமூக உறுப்பினர்களுக்குத் தருவதற்கு விசாரணை எந்த வகையில் தடையாக உள்ளது என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அதேபோல் நகர காவல்துறை ஆணையர் திரு. ராதாகிருஷ்ணனை எமது குழு பிப்ரவரி 27 மாலை தொடர்பு கொண்டபோது, குழு உறுப்பினர்களின் பெயர்களை எல்லாம் விளக்கமாகக் கேட்டுக் கொண்ட அவர், அரசு பேச அனுமதி அளித்தால்தான் பேச முடியும் என்றார். அவர் கூறியபடி இரவு 8 மணிக்குத் தொடர்பு கொண்டபோது தொலைபேசியை எடுக்கவே மறுத்துவிட்டார்.

இக் குழு உறுப்பினர் அ.மார்க்ஸ் சென்ற பிப்ரவரி 26 அன்று மதுரையில் சில வழக்குரைஞர்களையும் மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினார். சுப்பிரமணிய சாமியைச் சந்திக்க நாங்கள் முயற்சித்தபோது அவர் டெல்லியில் உள்ளதாகப் பதிலளித்தார்.

பின்னணி:

ஈழத்தில் இன்று இனவாத இலங்கை அரசு மேற்கொண்டுள்ள போர், அதனால் தமிழ் மக்கள் பெரிய அளவில் அழிக்கப்படுதல், இந்திய அரசு அதற்கு இராணுவ ரீதியான உதவிகளைச் செய்தல் ஆகியவற்றை எதிர்த்து தமிழக வழக்குரைஞர்கள் பெரிய அளவில் கடந்த ஜனவரி, 29 முதல் வேலை நிறுத்தம் செய்து போராடி விடுகின்றனர். மனித உரிமை நோக்கிலும், மனிதாபிமான அடிப்படையிலும் தமிழகம் தழுவி நடைபெறுகிற இன்றைய போர் எதிர்ப்புப் போராட்டங்களில் வழக்குரைஞர்களும், மாணவர்களும் முன்னணியில் இருப்பது அரசுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்து வந்தது. கல்லூரி மற்றும் விடுதிகளை மூடி மாணவர் போராட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தியது போல வழக்குரைஞர்கள் போராட்டத்தை அரசால் முடிவுக்குக் கொண்டுவர இயலவில்லை. இந்நிலையில் அவர்களின் போராட்டத்தை கடுமையாக ஒடுக்குவது என்கிற முடிவை அரசு மேற்கொண்டது.

அரசின் இந்நிலைப்பாட்டின் முதல் வெளிப்பாடாக சென்ற பிப்ரவரி 4 நிகழ்ச்சிகள் அமைந்தன. அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்னும் கூட்டமைப்பு தமிழ்நாடு தழுவிய பந்த்தை அறிவித்திருந்தது. அன்று கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக மூன்று வழக்குரைஞர் குழுக்களைக் காவல்துறையினர் தனித்தனியே கைது செய்தனர். இரு குழுக்களை மாலையில் விடுதலை செய்த காவல்துறையினர் போராட்டத்தில் முன்னணியிலுள்ள இளம் வழக்குரைஞர்கள் அடங்கிய ஒரு குழுவை மட்டும் ‘ரிமாண்ட்’ செய்வதற்காக அன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். அதை அறிந்த பிற வழக்குரைஞர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் பிணை கோரவும் பெருந்திரளாக, முழக்கங்களுடன் அவர்கள் சென்ற போலீஸ் வேனைப் பின்தொடர்ந்தபோது எவ்விதத் தூண்டலும் இன்றி காவல்துறையினர் மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் வழக்கறிஞர் புகழேந்தியின் தலை உடைந்தது. வேறு சில வழக்குரைஞர்களும் அடிபட்டனர். தலையில் 5 தையல்களுடன் புகழேந்தி சென்னை பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. ‘ரிமாண்ட்’ செய்ய வேண்டியவர்களை ராஜராத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு சென்று இரவு வெகு நேரம் கழித்து நீதிபதி ஒருவரை அழைத்து வந்து ரிமாண்ட் செய்ய முயற்சித்துள்ளனர்.

தொடர்ந்து ஈழஆதரவு குற்ற நடைமுறைச் சட்டத் திருத்த எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிருத்தி வழக்குரைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டம் தீவிரமாக செல்வதையும், கொடும்பாவி எதிப்பு முதலான வடிவங்கள் எடுப்பதையும் அரசும் காவல்துறையும் ஆத்திரத்துடன் கவனித்து வந்தன. இங்கொன்றைக் குறிப்பிடுவது முக்கியம். வழக்குரைஞர் தொழிலில் இன்று இளம் வழக்குரைஞர்களின் வீதம் அதிகம். தவிரவும் ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள் தொழில் சமூகத்தின் மேற்தட்டுகளிலிருந்து வந்தவர்களாலேயே நிரப்பப்பட்ட நிலை இன்று மாறி அடித்தளச் சமூகத்தினர் பெரிய அளவில் பங்கேற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. முற்றிலும் மனித உரிமைகள் சார்ந்த இன்றைய பிரச்சினையில் போர் நிறுத்தம் கோரியும் இந்திய அரசு போருக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடத்திய இப்போராட்டத்தில் இத்தகைய இளம் வழக்குரைஞர்கள் முன்னணியில் நிற்பது யாரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அரசும், காவல்துறையும், பொதுவான மத்தியதர வர்க்க மனப்பாங்கும் இதைப் புரிந்து கொள்ள மறுத்தன.

இந்நிலையில்தான் சென்ற 17ந் தேதி நடைபெற்ற ஒரு சிறு சம்வத்தை வழக்குரைஞர்களுக்கு எதிராகக் காவல்துறை பயன்படுத்தியது. வழக்கம்போல அன்றும் வேலை நிறுத்தத்தில் உள்ள வழக்குரைஞர்கள், வேலை நடைபெறக்கூடிய நீதிமன்றங்களுக்கு எதிரில் முழக்கங்கள் இட்டுச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகம் ஒன்றில் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றம் கே.சந்துரு முன்னிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்வதற்கு எதிரான ‘ரிட் அப்பீல்’ வழக்கு ஒன்று விசாரிக்கப்பட இருந்தது. மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சாமி அங்கு வந்து வழக்குரைஞர்கள் அமரும் மேடையில் (Dias) அமர்ந்தார். அவருடன் அவரது வழக்குரைஞர் ராதா மோகனும் இருந்துள்ளார். ஈழப் போராட்டத்தில் மட்டுமின்றி இது போன்ற வழக்குகளில் இடையீடு செய்வதை வழக்கமாக கொண்ட அவரைக் கண்டதும் வழக்குரைஞர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.

அவர்களின் கோபத்தைத் தூண்டும் வண்ணம் அவர் தனது வழக்குரைஞரிடம் இவர்களைப் பற்றி இழிவாகப் பேசியும் உள்ளார். முழங்கங்கள் தீவிரமானபோது யாரோ சிலர் சாமி மீது முட்டைகளை வீசியுள்ளனர். நீதிபதி சந்துரு கண்டித்த பின் வழக்குரைஞர்கள் கலைந்துள்ளனர். சுப்பிரமணியசாமியும் புகர் ஏதும் தராமல் வீடு சென்றுள்ளார். எனினும் பத்திரிகைகளில் இது செய்தியாகியது. நீதிபதி சந்துரு, நடந்த நிகழ்ச்சி குறித்து தலைமை நீதிபதிக்கு (பொறுப்பு) அறிக்கை ஒன்று அளித்துள்ளார். எனினும் அதில் எந்த வழக்குரைஞர்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை. நடந்த நிகழ்ச்சி வருந்தத்தக்கதுதான். தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதுதான். எனினும் இந்தச் சிறிய நிகழ்வை அதற்குரிய சட்டப்படி சந்திக்காமல் இதை முன்னிட்டு வழக்குரைஞர்களை வழிக்குக் கொண்டுவர அரசும் காவல்துறையும் முடிவு செய்தது தொடர்ந்த நிகழ்ச்சிகள் மூலம் உறுதியாகிறது.

பாதிப்படைந்த நபர் எந்தப் புகாரும் அளிக்காதபோதும் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த், விஜேந்திரன், கினி இமானுவேல், புகழேந்தி, ஜெய்குமார், மனோகர், சிவசங்கரன், வடிவாம்பாள், செங்கொடி, கயல் (எ) அங்கயற்கண்ணி, ரவிக்குமார், பார்த்தசாரதி மற்றும் 6 பேர்கள் மீது இ.பி.கோ 147, 451, 355, 353, 333, 506(II), 294(B), 153(A), 307 மற்றும் 3(1) TNPPD சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 18-ந் தேதி அன்று இவர்களில் கினி இமானுவேலைக் கைதும் செய்தனர். மற்றவர்களையும் கைது செய்வதற்குக் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில் சென்ற 19 முதல் வேலைநிறுத்தத்தை முடிந்துக்கொண்டு நீதிமன்றங்களுக்குச் செல்வது என்கிற முடிவை வழக்குரைஞர்கள் எடுத்தனர். அன்று நீதிமன்றம் இயங்கியது. மேற்கண்ட 20 பேரையும் கைது செய்ய காவல்துறை மும்முரமாக உள்ளதை அறிந்த தொடர்புடைய வழக்குரைஞர்கள் அதற்குத் தயாராக வந்தனர். எனினும் 17-ந் தேதி நிகழ்வின்போது தம்மை இழிவு செய்யும் வகையில் பேசிய சுப்பிமணிசாமியை விட்டுவிட்டு தம்மீது மட்டுமே இத்தகைய மோசமான பிரிவுகளில் வழக்கு மேற்கொள்ளபட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு, மேற்படி வழக்கில் ஏ1 ஆக உள்ள ரஜினிகாந்த், சுப்பிரமணியசாமி மீது புகாரளிப்பது என முடிவு செய்து, முன்னாள் தலைவர் கருப்பன் உள்ளிட்ட சுமார் 200 வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள பி4 காவல் நிலையத்திற்குச் சென்றனர். கடும் விவாதத்திற்குப் பின்னர் சுப்பிரமணியசாமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீங்கள் கேட்டபடி அறிக்கை பதிவு செய்தாகிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேனில் ஏறுங்கள் என காவல்துறையினர் கெடுபிடி செய்தனர்.

இதற்கிடையில் சுமார் 200 லத்தி ஏந்திய போலீசார் பி4 காவல்நிலையம் அருகே கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 20 பேரும் அந்த இடத்தில் இல்லை. ஒரு சில வழக்குரைஞர்கள் தமது சங்கக் கட்டிடத்திற்குச் சென்று 20 பேரில் கைதானவர் ஒருவர் தவிர மீதியுள்ளவர்களைத் திரட்டிக் கொண்டு வந்து முழக்கமிட்ட வண்ணம் கைதாகலாம் என்கிற முடிவுடன் சங்க அலுவலகத்திற்குச் சென்றனர்.

இந்நிலையில் உதவி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் இராமசுப்பிரமணி ஆகியோர் அங்கிருந்த சுமார் 15 வழக்குரைஞர்களை “ரவுண்ட் அப்” செய்து வேனில் ஏற்றினார். இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆத்திரமடைந்த வழக்குரைஞர்கள் முழக்கமிட்டு முன்னேறிவர காவல்துறையினரின் வரலாறு காணாத கொடுந்தாக்குதல் தொடங்கியது. அப்போது நேரம் சுமார் மாலை 3.30 மணி.

தாக்குதல்

உயர்நீதி மன்றத்தின் வாயில்களை அடைத்த காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர். மேலும் அதிக அளவில் தாக்குதல் படை (SAF) கொண்டு வந்து குவித்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வளாகத்திற்குள் நின்றிருந்த
வழக்குரைஞர்கள் மற்றும் எல்லோரது வாகனங்களும் மூர்க்கத்தனமாக தாக்கி அழிக்கப்பட்டன. காவல்துறையினர் தமது வேன்களில் கற்கள் கொண்டு வந்ததை நேரில் பார்த்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூவர் எங்களிடம் கூறினர். நகர சிவில் நீதிமன்றம், குடும்பநீதி மன்றம், ஆகிவற்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன.

காயமடைந்த வழக்குரைஞர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வளாகங்களுக்குள் ஒடி ஒளிந்து கொண்டனர். நடப்பதை அறிந்த தலைமை நீதிபதி (பொறுப்பு), காவல்துறைஆணையரைத் தொடர்புகொண்டு படைகளை வெளியே அனுப்புமாறு கேட்டுக்கொண்டும் பயனில்லை. 4மணி சுமாருக்கு நீதிபதி சுதாகர் வெளியே வந்து தாக்குதலை நிறுத்த முனைந்தார். பின் தலைமை நீதிபதியும் வெளிவந்தார். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ரத்தம் ஒழுகும் சுமார் 10 வழக்குரைஞர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டனர். நீதிபதிகள் திரும்பியவுடன் காவல்துறையின் வெறியாட்டம் மீண்டும் தொடங்கியது. இம்முறை சுமார் 1மணி நேரம் மாலை 5.30 வரை தாக்குதல் நடந்தது. 5.30 மணி சுமாருக்கு நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் உள்பட 5 நீதிபதிகள் வெளியே வந்தனர். சமாதானம் செய்வதும் தாக்குதலை நிறுத்துவதும் மட்டுமே அவர்களின் நோக்கம். ஆனால் இம்முறை நீதிபதிகளையும் விட்டுவைக்க காவல் துறையினர் தயாராக இல்லை. அவர்களும் தாக்கப்பட்டனர். நீதிபதி ஆதித்தன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டார். தலையிலும் காயம் அடைந்தார். மற்ற நீதிபதிகளும் தாக்கப்பட்டனர்.

ஆதித்தன் அவர்களைத் தாக்கும் போது “அவர் நீதிபதி அவரை அடிக்காதீர்கள்” எனக் கூவி பாதுகாப்புக்கு வந்த இளம் வழக்குரைஞர்கள் ஏழு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டு, ஒரு சிலர் மண்டை உடைந்து அப்போலோ மருத்துவமனையில் இருந்ததை குழு உறுப்பினர்கள் கண்டனர். நீதிபதி என்ற போது, “எந்த தேவடியா மகனா இருந்த என்னடா” என்று அடித்ததை அவர்கள் குறிப்பிட்டனர். பெண் நீதிபதி ஒருவரை, “நீதிபதியா இவ, ஆயா மாதிரி இருக்கா” எனச் சொல்லி அடித்துள்ளனர்.

நீதிமன்ற வளாகங்களுக்குள் புகுந்து கண்ணாடிக் கதவுகள், கணினிகள், நூலகங்கள், வழக்குரைஞர் அறைகள், வழக்கு மன்றங்கள் அனைத்தும் தாக்கித் தகர்த்து நொறுக்கப்பட்டன. கண்ணில்பட்ட கருப்பு வெள்ளை சட்டை அணிந்த வழக்குரைஞர்கள் ஒவ்வொருவரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.
மாலை 6.30 மணி வாக்கில் எப்படியோ தப்பி வெளியே என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு வந்தவர்கள் எல்லாம் அடித்து தாக்கப்பட்டனர். சாலையில் துரத்தித் துரத்தி வழக்குரைஞர்கள் அடிக்கப்பட்டனர். பெண் வழக்குரைஞர்களை “தேவடியாச் சிறுக்கிகளா” எனக் கத்தி தாக்கியதாக ஒரு பெண் வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

சாலையில் தங்களை விரட்டி விரட்டி அடித்ததைச் சொல்லும் போது வழக்குரைஞர் சுதாவின் கண்கள் கலங்கின. கயல் என்னும் பெண் வழக்குரைஞர் கடும் காயம்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுள்ளார். வழக்குரைஞர் அலுவலகங்கள் அதிகம் உள்ள தம்பு செட்டித் தெருவிலும் புகுந்து தாக்கியுள்ளனர்.

வழக்குரைஞர்களுக்கு சீருடை தைக்கும் கடை, செராக்ஸ் செய்து கொடுக்கும் டால்பின் செராக்ஸ் முதலிய கடைகளும் கூட உடைக்கப்பட்டன. அங்கிருந்தவர்களும் தாக்கப்பட்டனர். இரவு 7.00 மணிவரை வெறியாட்டம் தொடர்ந்தது.

எந்த அளவுக்கு காவல் துறையினர் வெறியோடு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லாம். பெண் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது தவிர, நீதிபதிகளும் பெண்களும் தம் வாழ் நாளில் கேட்டிராத வசவுகளால் இழிவுசெய்யப்பட்டது தவிர, குடும்ப நீதிமன்றம், வழக்குரைஞர் ஒய்வு பகுதியில் உள்ள குழந்தை காப்பகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை சட்டக் கழகம் மற்றும் வழக்குரைஞர் சங்க அலுவலகளிலுள்ள நூலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலை இனப்படுகொலைகளின் போது நூலகங்கள் எரியூட்டப்படுவதை நினைவுறுத்துகிறது.

சென்னை சட்டக் கழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சோனி தொலைக்காட்சி, இரு செராக்ஸ் எந்திரங்கள், நூலக அரங்கம், சலவைக்கல் மேஜைகள் ஆகியவை அழிக்கப்பட்டதோடு 60 வயதான அதன் மேலாளர் ராஜகுருவும் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார். மூன்று ஊழியர்களும் கூட தாக்கப்பட்டுள்ளனர். வழக்குரைஞர்கள் தவிர நீதிமன்ற ஊழியர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். தமது அலுவலகத்திலிருந்து சில ஆவணங்களைக் காவல்துறையினர் தூக்கிச் சென்றதாகவும் ஒரு பெண் ஊழியர் எங்களிடம் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். ‘தமிழ் ஓசை’யைச் சேர்ந்த கார்த்திக் பாபு, ‘மக்கள் தொலைக்காட்சி’ யைச் சேர்ந்த ஜோதிமணி, சேதுராமன் மற்றும் ‘நக்கீரன்’ இதழைச் சேர்ந்த ஒருவர், ‘தமிழ்ச்சுடர்’ புகைப்படகாரர் எனப் பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் (கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்) அடித்து நொறுக்கி நாசமாக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் வழக்குரைஞர்கள், பெண்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சம் உறைந்துள்ளது. பொருள் இழப்புகளை விட இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அச்சம் கவலைக்குரியதாக உள்ளது. பல ஊழியர்கள் பேச மறுக்கின்றனர். சுதாகர் என்னம் இளம் வழக்குரைஞர் மாடியிலிருந்து சன்ஷேட் ஒன்றில் குதித்து இரு கரங்களும் கூப்பி நிற்கும் காட்சி யாரையும் கலங்க அடிக்கும். கைது செய்யப்பட்டு 6 நாட்கள் வரை காவ-ல் இருந்து விடுதலையாகியுள்ள வழக்குரைஞர் கினி எங்ளிடம் பேசியபோது காவல்நிலையத்தில் “கோட்டா” வழக்குரைஞர்கள் எனப் போராடுகிறவர்களை இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் எனக் கேலி செய்ததைக் குறிப்பிட்டார். சுமார் 83 வழக்குரைஞர்கள் முதல் அரசு மருத்துவமனையிலும் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் மருத்துமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர சொந்தப் பொறுப்பில் தனியார் மருத்துவமனைகளில் தங்கிச் சிகிச்சை பெற்றவர்கள், வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றவர்கள் ஏராளம்.

ஊடகங்களில் ஏதோ வழக்குரைஞர்களும் காவல்துறையினரும் சம அளவில் ஒருவரை ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டதாகக் காட்டப்பட்டது. முதற் கட்டத்தில் வழக்குரைஞர்களும் கூட சிறிது நேரம் கல்வீசியிருக்கலாம். ஆனால், கொடுந்தாக்குதலுக்குப் பின் அவர்கள் எல்லோரும் தம்மைத் தற்காத்துக் கொள்வதிலும், ஓடி ஒளிந்து கொள்வதிலும், அச்சத்தில் திகைத்துத் தப்புவதிலும்தான் குறியாய் இருந்துள்ளனர். இடையில் பி4 காவல் நிலையம் எரிக்கப்பட்டது. மேல் தோற்றத்தில் இது வழக்குரைஞர்கள் செய்தது போலத் தோன்றினாலும் அப்போது அங்கிருந்த சூழல், காவல் நிலையத்திற்கு முன்னதாகப் பெரிய அளவில் போலீஸ் மற்றம் தாக்குதல் படை குவிக்கப்பட்டிருந்தது. எனவே வழக்குரைஞர்கள் இதைச் செய்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தலைமை நீதிபதி (பொறுப்பு), நீதிபதி தனபாலன், நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தமது ஆணையில் பதிவு செய்துள்ளபடி சம்பவத்தின் போதே பெண் வழக்குரைஞர்கள் பலரும் இதை மறுத்துள்ளனர். காவல்துறையே நிலையத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும் என்கிற ஐயமும் இன்று முன்வைக்கப்படுகிறது. இது தனியே விசாரிக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாகச் சில இளைஞர்களை அரசும் காவல்துறையும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி அடையாளம் காட்டுவதை எமது குழு மிகக் கவலையுடன் நோக்குகிறது. மிகவும் அடிப்படையான மனிதாபிமான நோக்கிலிருந்து நடத்தப்படுகிற ஒரு போராட்டத்தில் முன்னணியாக இருந்தார்கள் என்கிற ஒரே நோக்கிற்காகவும், மனித உரிமைகளுக்காகப் போராடக்கூடிய சில வழக்குரைஞர் அமைப்புகளில் இருக்கிறார்கள் என்பதற்காகவும் பழைய வழக்குகளை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்து தாதாக்களைப் போல காவல் துறையினர் இவர்களைச் சித்திரிக்கின்றனர்.

காவல்துறையினர் சொல்வதை அப்படியே ஏற்று “Gang of 20” என்பது போன்ற மொழியில் ஒரு சில பத்திரிகைகள் எழுதுவதும், படங்களை வெளியிடுவதும் வருத்தத்தை அளிக்கின்றன. அடிப்படை பத்திரிக்கை தருமங்களுக்கு இது முரணானது என்பதை எமது குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

1. சட்டத்தின் காவலாளர்களான, தமது உரிமைகளையும் சட்டங்களையும் நன்கறிந்த வழக்குரைஞர்களே இவ்வாறு சென்னை போன்ற ஒரு பெரு நகரில் வைத்துத் தாக்கப்படுவார்களேயானால், ஏழை, எளிய பாமர மக்களின் கதி என்ன என்கிற கவலை உருவாகிறது. ஜனநாயக அரசு ஒன்றில் காவல்துறை இப்படி மேலும் மேலும் அதிகாரம் பெறுவதும், அரசு மட்டுமின்றி ஏனைய அரசியற் கட்சிகளும் அதைக் கண்டு கொள்ளாததும் கவலையளிக்கிறது. மதுரையில் உயர் போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கையில் துப்பாக்கியை நீட்டி வழக்குரைஞர்களை நோக்கி வரும் புகைப்படம் எல்லா இதழ்களிலும் வெளிவந்துள்ளது. காவல்துறையின் ஈரலும் இதயமும் அழுகியிருப்பதற்கு இது ஒரு சான்று.

2. அமைதியாகப் போராடிக் கொண்டுள்ள வழக்குரைஞர்களைக் கைது செய்வதற்கு பெருங் கலவரங்களை ஒடுக்குவதற்காகப் பயிற்சி பெற்ற தாக்குதல் படை (SAF), அதுவும் இந்த அளவில் ஏன் குவிக்கப்பட்டது? இந்தப் படைக் குவிப்பிற்கு உத்தரவிட்டது யார்? தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார்? நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் அரசு பதிலளிக்கவில்லை? நீதிமன்றமும் ஏன் இதைக் கண்டுக்கொள்ளவில்லை? வெறும் 147 காவல்துறையினரே அன்று குவிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 122 பேர் காயமடைந்துள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு அரசு தன் வழக்கறிஞர் மூலம் தகவல் அளிப்பது எத்தனை அபத்தமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய பொய்யுரை இது.

3. முட்டை வீசியதாக குற்றம் சாட்டி கடும் பிரிவுகளின் கீழ் வழக்குரைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அரசு, சுப்பிரமணிய சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதா? அவர் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை அவசரம் ஏன் காட்டப்படவில்லை?

4. நேர்மையாளராகப் பெயர் பெற்றுள்ள நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதையும், அதற்கு வழக்குரைஞர்கள் முழுமையாக ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளதையும், இக்குழு வரவேற்கிறது .

5. அரசு ஆணைப்படியும், நீதிமன்ற உத்தரவின்படியும், ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலை போதாது. தாக்குதலுக்கு காரணமானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ள கீழ்கண்ட அதிகாரிகள்

1. கே. ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர்,
2. டி. ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஓழுங்கு),
3. ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்,
4. இராமசுப்பிரமணி, இணை ஆணையர்,
5. சந்தீப் ராய் ராத்தோர், இணை ஆணையர்,
6. சாரங்கன், துணை ஆணையர்,
7. பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்,
8. பன்னீர்செல்வம், துணை ஆணையர்

ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படவேண்டும்.

5. வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலகர்கள் மத்தியில் உறைந்துள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தவிர இழப்புகள் ஈடு செய்யப்படுவது அவசியம். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காவல்துறையினர் அனைவர் மீதும் தமிழ்நாடு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் நடவடிக்கை சட்டம் (TNPPD Act) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவேண்டும். சட்ட அமைச்சரும் முதலமைச்சரும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6. ஒரு சில இளம் வழக்குரைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாதாக்கள் போல சித்திரிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் செயல்பட்ட ஒரு சிலரை மட்டும் இப்படித் தனித்துப் பழிவாங்க அரசும், காவல்துறையும் முயற்சிக்கக்கூடாது.