Friday, February 27, 2009

கண்டன அறிக்கை

(பத்திரிகையாளர் டி.அருள்எழிலன் இந்த அறிக்கையை எனக்கு அனுப்பியிருந்தார். ஊடகவியலாளர்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளையும் கைதுகளையும் கடத்தல்களையும் இந்த அறிக்கை வன்மையாகக் கண்டனம் செய்கிறது. அறிக்கையில் சில நெருடல்களும் இல்லாமலில்லை. கேதிஸ் லோகநாதன், ரேலங்கி செல்வராஜா போன்றவர்களை இலங்கை அரசே கொன்றிருப்பதாக இவ்வறிக்கை சொல்லியிருப்பினும் அவர்கள் இருவரும் புலிகளால்தான் கொல்லப்பட்டார்கள். மறுபுறத்தில் இலங்கையின் இருபெரும் அதிகாரசக்திகளில் ஒன்றான புலிகளால் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்மீது இந்த அறிக்கை இரக்கம் காட்டவில்லை. ஆனால் அறிக்கையின் இந்தப் பலவீனமான அம்சங்களால் அறிக்கையின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை. தோழர்கள் வாய்ப்புள்ள தளங்களுக்கெல்லாம் இந்த அறிக்கையை எடுத்துச்செல்ல வேண்டும்.)

ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் இலங்கை அரசிற்கு எதிரான ஊடக அமைப்பின் கண்டன அறிக்கை:

Forum for Journalists Against Oppression
141,Eldams road, Vellala Teynampet,
Chennai- 6000018

இலங்கையில் எழுந்துள்ள போர்ச்சூழல் என்பது அங்கு வாழும் தமிழ் மக்களின் சிவில் சமூக வாழ்வை முற்றிலுமாக சீர்குலைத்திருப்பது நீங்கள் அறிந்ததே!

இலங்கையை ஒரு ஜனநாயக நாடாக சர்வதேச சமூகம் அங்கீகரித்திருக்கும் சூழலில் இலங்கையின் போர் வெறி மிக மோசமான அளவுக்கு பரவி வருகிறது. மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கூட யுத்த பூமிக்குள் எப்பக்க சார்பும் அற்று பணி செய்ய முடியாத சூழல். ஒட்டு மொத்தமாக இந்தப் பிரிவினர் அனைவரும் இலங்கை அரசால் அச்சுறுத்தப்படுகிறார்கள். இம்மாதிரி மனித உரிமையாளர்களையும் சமூகப் பணியாளர்களையும் அச்சுறுத்த சட்டவிரோதக் குழுக்களை இலங்கை அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. வெள்ளை வேன் எனப்படும் சட்ட விரோத ஆயுதக் குழுவால் அரசியல் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கடத்திக் கொலை செய்யப்பட்டு வருக்கின்றனர்.

இலங்கை, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நாடாக மாறிவிட்டது. போருக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டே அரசியல் கருத்துக்களை வெகு மக்களிடையே பகிர்ந்து கொள்ள நினைக்கும் பத்திரிகையாளர்கள் மிகக் கோரமாக கொல்லப்படுகிறார்கள். 2006ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை இருபதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இலங்கை அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை அரசின் இனவாதப் போக்கை சுட்டிக் காட்டியும் விமர்சித்தும் எழுதியவர்களே!

இன்று கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு முல்லைத்தீவுக்குள் இலங்கை ராணுவம் நுழைந்திருக்கும் சூழலில் பெரும் ராணுவ அடக்குமுறை இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் பத்திரிகையாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நீண்டகால கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதன் அடையாளமாக அய்யாத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன், ரிச்சர்ட்டி டி சொய்சா, தேவிஸ் குருகே, தர்மரத்தினம் சிவராம், ரேலங்கி செல்வராஜா, நடராஜா அற்புதராஜா ஐ. சண்முகலிங்கம், சுப்ரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜா, சம்பத் லக்மால் சில்வா, இசைவிழி செம்பியன், ரி.தர்மலிங்கம், சுரேஸ், கேதீஸ் லோகநாதன், சந்திரபோஸ், புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி, எனப் பலரும் படுகொலையாகி வீழ்ந்திருக்கிறார்கள். அறம் சார்ந்து எழுத நினைக்கும் ஒரு படைப்பாளி இன்று இலங்கை அரசின் பேரினவாதத்திற்கு பலியாகும் சூழல் உருவாகி இருக்கிறது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் ஜனவரி மாதம் 8ம் தேதி புகழ்பெற்ற சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் வழக்கறிஞருமான லசந்தே விகரமதுங்க கொழும்பில் வைத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சமீபத்தில் அவரது மனைவி சோனாலி சமரசிங்க தனது மூன்று குழந்தைகளுடனும் இலங்கைத் தீவை விட்டு வெளியேறி உள்ளார். ‘இதுவரை தன் கணவரின் கொலைக்கான விசாரணையை இலங்கை அரசு தொடங்கவில்லை’ என்று குற்றம் சுமத்தியும் இருக்கிறார். பாதுகாப்புக் காரணங்களுக்காக எப்படி சோனாலி சமரசிங்க வெளியேறினாரோ அதுபோல சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் அரசியல் தஞ்சம் கேட்டு தலைமறைவாக இலங்கையில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகையாளாரான இக்பால் அக்தாஸ் கூட இலங்கயில் வாழ முடியாமல் வெளியேறி இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 26-2-2009 வியாழன் அன்று யாழ்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகையின் ஆசிரியரும் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘சுடரொளி’ பத்திரிகையில் ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் (58) கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மூன்று வெள்ளை வேன்களில் வந்த ஆயுததாரிகளும், காவல்துறை சீருடையில் வந்தவர்களும் இவரை கல்கிசையில் வைத்து பொதுமக்கள் முன்னிலையிலேயே கடத்தியதாக தெரியவந்துள்ளது. இலங்கை அரசு நடத்தும் யுத்தம்பற்றியும், பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் செய்திகளை வெளிக்கொண்டு வருவதில் சுடரொளியும், உதயனும் மிக முக்கிய ஊடகப்பங்களிப்பை ஆற்றி வந்தன. இந்த நிலையில்தான் இந்த ஜனநாயக விரோத நிகழ்வு நடந்திருக்கிறது. இந்நிலையில் விதயாதரன் கடத்தப்பட வில்லை கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார் என்று இலங்கையின் ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்குள் வாழும் சிங்கள தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது, தமிழகத்திலும் துணைத்தூதர் அம்சாவின் நடவடிக்கைகள் ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரான ஒன்றாக மாறிவருகிறது. அக்கிரமான போரில் மடிந்து வரும் தமிழ் மக்கள் சார்ந்து செய்தி வெளியிட்ட நக்கீரனை மிரட்டும் வகையிலான அம்சாவின் அறிவிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.' மக்கள் தொலைக்காட்சி'யை ஒளிபரப்பு செய்யவிடாமல் அச்சுறுத்தும் இலங்கை அரசு ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

ஒரு ஊடகவியலாளரை அரசே கடத்திக் கைது செய்து விசாரிக்கும் விசாரணை முறைகளை வன்மையாக கண்டிக்கிறோம். சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணைக்குட்படுத்தவென்று நீதிமன்ற நடைமுறைகள் இருக்கும் போது இவ்விதமான நடவடிக்கைகள் அச்சமூட்டுகிற ஒன்றாக இலங்கையில் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது. இலங்கை அரசின் இவ்விதமான ஊடக ஒடுக்குமுறைகளை, பத்திரிகையாளர்களின் படுகொலைகளைகளை ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் என்ற முறையில் ந.வித்தியாதரனின் கைது அல்லது கடத்தல் குறித்து மிகந்த கவலை அடைகிறோம். மனித உரிமைகள் மீறப்பட்டு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சுழலில், இந்தக் கைதும் இலங்கை அரசின் போர் வெறியை நமக்கு உணர்த்துகிறது. ஏனைய பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி வித்தியாதரனுக்கும் நடந்துவிடுமோ என்று அச்சப்படுகிறோம்.

அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை சர்வதேச சமூகங்களுக்கு உண்டு. ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யும் இலங்கை அரசை கண்டிப்பான முறையில் சர்வதேச சமூகங்கள் அணுக வேண்டும். உடனடியாக ந.வித்தியாதரன் விடுதலை செய்யப்பட வேண்டும். வித்தியாதரன் மற்றும் அவரது உறவினர்களின் பாதுகாப்பை சர்வதேச சமூகங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக இலங்கையில் வாழும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் சர்வதேச சமூகங்கள் ஒரு உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என கோருகிறோம்.

இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்கு எதிராக நாம் பேசுவோம்! எழுத்துரிமைக்காக குரல் கொடுப்போம்!

-ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம்.

ஒருங்கிணைப்பாளர்கள்:
டி .அருள் எழிலன். (9444139983)
சரவணன் (9840903590)

Tuesday, February 24, 2009

நூல் அறிமுகம்

-சுகன்

கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள்
வீ.சின்னத்தம்பி
வெளியீடு:ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம்.

முற்குறிப்பு:
எனது ஊரவரான நூலாசிரியர் வீ.சின்னத்தம்பி அவர்களை 1984இன் இறுதிப் பகுதியில் கடைசியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குப் பின்புறத்தே உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். "வெள்ளைப் பூனையானாலென்ன கறுத்தப் பூனையானாலென்ன எலி பிடித்தாற் சரி" என்ற டெங் சியாவோ பிங்கின் புகழ்பூத்த பொன்மொழிக்கு அவரிடம் என்ன விளக்கம் எனப் பாடம் கேட்க நானும் ஒரு தோழரும் போயிருந்தோம்.

இதோ! இதில் இருக்கும் செத்த எலிகூட உனது முன்னேற்றத்திற்கு உதவும், என்று ஒருவர் அறிவுரை கூற அவன் அந்த செத்த எலியை எடுத்துக்கொண்டு வழியிற் போகும்போது பூனை வளர்க்கும் ஒருவர் எதிரே வர, செத்த எலியை அவரிடம் விற்பதற்காக அவன் முயன்றபோது கை விரலை நனைத்து கீரைக்கொட்டையில் குத்தி அதில் ஒட்டியுள்ள கீரைதான் அதன் பெறுமதி என அவர் கூற செத்த எலியைக் கொடுத்துவிட்டு அந்த விரலளவு கீரையை வாங்கி முளைக்கப்போட்டு அதை விற்று படிப்படியாக அவன் பெரும் செல்வந்தனானான், என்ற கதை நமக்கு நினைவிருக்கும். காட்டில் ஆயிரம் விலங்குகள் இருந்தாலும் எலிக்குப் பூனைதான் எதிரி என்ற வழக்கையும் கேள்விப்பட்டிருப்போம்.

தோழர்.சின்னத்தம்பி மிகப்பொறுமையோடு மாஒவிற்கும் டெங்கிற்கும் உள்ள வித்தியாசத்தை நமக்கு விளக்கிக்கொண்டிருந்தார். அவர் சிறிதுகாலத்திற்கு முன்னர்தான் சீன வானொலியில் பணியாற்றிவிட்டு வந்திருந்தார். சீனக் கம்யூனிஸத்தின் நுட்பங்களை அவரளவிற்கு பார்த்து அறிந்தவர்கள் ஈழத்தமிழரில் இல்லையெனலாம்.

"லங்கையின் வடபுலத்தில் கம்யூனிச இயக்கத்தின் வளார்ச்சியில் பெண்கள் ஆற்றிய பங்கு அவர்களுடைய கணவன்மார்களின் சேவையின் பகுதியாகவே கருதப்படுகிறது" என இச்சிறு கைநூலின் தொடக்கத்தில் சின்னத்தம்பி கூறிச்செல்கிறார். காலஞ்சென்றவர்களான திருமதி வேதவல்லி கந்தையா, திருமதி தங்கரத்தினம் கந்தையா, திருமதி பரமேஸ்வரி சண்முகதாசன், திருமதி வாலாம்பிகை கார்த்திகேசன், திருமதி பிலோமினாம்மா டானியல் ஆகியோர்களைப் பற்றிய சுருக்கமான அதேவேளை அவர்களது படங்களுடன் கூடிய அரியதோர் ஆவணமாக இக்கையேட்டை தந்தை டானியலின் அனுக்கத்தோழரான வி.ரி.இளங்கோவன் தொகுப்பாசிரியராக இருந்து ஒரு கம்யூனிஸ்டிற்குரிய ஓர்மத்தோடு செய்திருக்கிறார்.

"அறுபதுகளின் பிற்பகுதியில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் நேரடியாகக் களத்தில் நின்று போராடிய இளம்பெண்கள் சிலர் இன்றும் ஈழத்தில் வாழ்கிறார்கள்" என இளங்கோவன் சுட்டுவது நிச்சாமம் களம் கண்ட செல்லக்கிளி போன்றவர்களாக இருக்கலாம். நூலில் சிறப்பான கவனத்திற்குரியதாக தங்கரத்தினம் அவர்கள் பற்றிய சித்திரம் மெய்சிலிர்க்க வைக்கக்கூடியது.அதை முழுமையாக இங்கு தருவது சிறப்பானது, சால்பானது, காலப்பொருத்தமானது, முன்னுதாரணமானது,ஈழத்தமிழரின் வரலாறென்பது இதுதானென்பது,வரலாற்றைப் புரட்டிப்போடுவது.

எதேச்சாதிகாரத்தை எதிர்த்த தங்கரத்தினம்

திருமதி.தங்கரத்தினம் கந்தையா வட்டுக்கோட்டையில் (1920 - 1989)பிறந்தவர். உடுவில் மகளிர் கல்லூரியில் கல்விகற்று ஆசிரியையானவர். தொழிற்சங்கவாதி, சமூக சேவகி,கம்யூனிசப் போராளி. இலங்கை முற்போக்கு மாதர் முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான திருமதி தங்கரத்தினம் தொல்புரம் மாதர் சங்கத்தின் இயங்கு சக்தியாகவும் விளங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர் ஒருகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையொன்றின் செயலாளராகவும் பணிபுரிந்தார்.

திருமதி தங்கரத்தினத்தின் அரசியல் கொள்கைப்பிடிப்பு இலக்கிய அந்தஸ்த்துப் பெற்றுள்ளது.காலஞ்சென்ற டானியல் தமது நாவல் ஒன்றில் அவர் தொடர்பான நிகழ்ச்சியொன்றைக் குறிப்பிடுகிறார். சங்கானையில் ஒருபாடசாலையில் அது நிகழ்ந்தது. சரஸ்வதி பூசைத்தினம். உண்டிவகை செய்வதற்காக தேங்காயைத் தாழ்த்தப்பட்ட மாணவி ஒருத்தி துருவ முற்பட்டபோது மற்ற ஆசிரியர்கள் அதைத் தடுக்க முனைந்தார்கள். ஆசிரியை தங்கரத்தினம் ஏன் அம்மாணவி துருவக்கூடாது என்று கூறி அவரைத் துருவ விட்டார். விளைவு, இரவினில் பாடசாலை எரிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராகவும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் சேவையாற்றிய திருமதி தங்கரத்தினம் இவற்றின் காரணமாக எத்தனையோ இடர்களைச் சந்தித்தார். அரசியல் மேடைகளிற்கூட தமிழ்த்தலைவர்கள் எனப்படுவோரால் பெயர்சுட்டித் தாக்கப்பட்டார். ஒரு கம்யூனிஸ்ட் என்ற வகையிலும் ஒரு ஆசிரியர் சங்கத் தொழிற்சங்கவாதி என்ற முறையிலும்,ஒரு சமூக சேவகி என்ற முறையிலும் அவர் இந்த எதிர்ப்புகளிற்கு முன் துவண்டுவிடாமல் எதேச்சாதிகாரத்திற்கெதிராக போராடினார். இந்துமகாசபை பாடசாலைகளில் படிப்பித்த திருமதி தங்கரத்தினம் 12 தடவைகளுக்குக் குறையாமல் இடமாற்றம் செய்யப்பட்டார். 'இந்து போர்ட்'டின் பலம்வாய்ந்த செயலாளரான இராசரத்தினத்திற்கெதிராக அவர் நேருக்கு நேர் நின்று போராடினார். அரசாங்கம் பாடசாலைகளைக் கையேற்றபோது திருமதி தங்கரத்தினம் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டார். தேர்தற் கூட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரி அபேட்சகர்களூக்கு ஆதரவாக அவர் உரையாற்றினார்.

குடும்ப வாழ்விலும் கம்யூனிச இலட்சியத்தைக் கடைப்பிடிப்பதில் அவர் முன்னுதாரணமான பங்கை வகித்தார். நான்கு புத்திரர்களையும் இரண்டு புத்திரிகளையும் பெற்ற அவர் தனது பிள்ளைகளின் கருத்துகளிற்கு மதிப்புக்கொடுக்கும் ஒரு அன்னையாகத் திகழ்ந்தார். பிள்ளைகள் பொதுவாக முற்போக்குக் கொள்கைகள் உடையவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமதி தங்கரத்தினம் ஒரு தாயார் என்ற முறையில் தமது பிள்ளைகளை வளர்க்க வறுமையுடன் போராடினார். அதற்காக தமது கொள்கையில் அவர் ஈடாட்டம் அடையவில்லை.

Friday, February 13, 2009

குஜராத் 2002

-Ashley Tellis
தமிழில்: அனுசூயா சிவநாராயணன்

ரு தீய்ந்துபோன மண்டையோடு
என் அறைக்குள் உருண்டு வருகிறது
அது என்னை வெறித்துப் பார்க்கிறது.
அதன் நிணமும் தசையும் எரிக்கப்பட்டு
கறுப்பு எலும்பும்
இந்த அகோரமான வெறித்த பார்வையும் மட்டுமே
அங்கே எஞ்சியுள்ளது.

மண்டையோடு
நான் வேலைக்குப் போகையில்
என்னைப் பின்தொடர்கிறது

அது வகுப்பறையின் வாசலில்
என் கால்களை இடறுகிறது
நான் அதன் பிளந்த வாயை
வீண் சொற்களால்
நிரப்ப எத்தனிக்கிறேன்.

ஆனால் சொற்கள்
மண்ணெண்ணையைப் போல
சிந்திப் பரவுகின்றன்

எந்தக் கையினால் நெருப்பைச் சொரிய முடிகிறது?
எந்தக் கையினால் வாளை ஓங்கி வெட்ட முடிகிறது?
எந்தக் கையினால் 'இந்தியன்' என்ற சொல்லை
'இந்து' என்ற சொல்லால்
குருதியினாலும் எரியும் தசையாலும் நிரப்ப முடிகின்றது?

நான் எனது முஸ்லீம் மண்டையோட்டை
கையில் எடுத்தேன்.
இதுதான் எனது தேசியக்கொடி.

Friday, February 06, 2009

Napoleon

Children, when was
Napoleon Bonaparte born,
asks the teacher.

Thousand years ago, the children say.
Hundred years ago, the children say.
Last year, the children say.
Nobody knows.

Children, what did
Napoleon Bonaparte do,
asks the teacher.
He won a battle, the children say.
He lost a battle, the children say.
Nobody knows.

At us the butcher had a dog
František says,
he was called Napoleon.
The butcher used to beat him, and the dog died
of hunger
last year.

And now all the children feel sorry for Napoleon.

-Miroslav Holub