Wednesday, October 08, 2008

பொருளா ஆதாரம்? வால் ஸ்டிரீட் என்னும் மருள் உலகம்

- ராஜன் குறை

அண்டம் கிடுகிடுக்கிறது; ஆகாசம் நடுநடுங்குகிறது. "மூவுலகையும் ஒரு குடை நிழலில்" ஆளும் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தொலைக்காட்சியில் தோன்றி தேச மக்களிடம் நெருக்கடி, நெருக்கடி என்று அரற்றுகின்றனர். ஐஸ்லாந்து நாடே திவாலாகிவிடும் போலிருக்கிறது. "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே" என்று திருவாளையாடல் படத்தில் பாடும் சிவனைப்போல, உலக பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதால், உலகில் யாரும் பாதிப்பிலிருந்து தப்பமுடியாது என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். உலக வங்கித் தலைவரும் முதலீடுகள் குறையுமென்பதால் உலக பொருளாதாரம் தேக்கமடையும் என்கிறார். அரை வயிற்றுக்கும், கால் வயிற்றுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என வாழும் உலகின் பெரும்பான்மை மக்களுக்கு இதெல்லாம் நகைச்சுவைதான் என்றாலும், அவர்களைக் குறித்தும், தங்களைக் குறித்தும் அக்கறைப்படும் சிந்தனையாளர்கள், வரலாற்றுவாதிகள் என்னதான் நடக்கிறது இங்கே என்று கேட்காமலிருக்க முடியாது.

பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மூன்று முக்கிய போக்குகள் கூர்மையைடந்தன. "மக்களாட்சி" எனப்படும் புதிய அரசியலமைப்பு, அறிவியல் - தொழில்நுட்ப அணுகுமுறை, முதலீட்டிய சந்தை பொருளாதாரம். இவை மூன்றும் சேர்ந்து செய்த அறிவிப்பு: "வளர்ச்சி, வளர்ச்சி, அனைவருக்கும் வளர்ச்சி, எல்லையற்ற வளர்ச்சி" என்பது. அதனடிப்படையில் பிறந்தது வரலாற்றுவாதம். "வேகம், வேகம், போவோம் தூரம் மாஜிக் ஜர்னி" என்பது இதன் பாடல். இதற்கு தத்துவப் பரிமாணமளிக்க ஒரு கூட்டமே இயங்கியது. சிறந்த தத்துவ அறிஞர்களிடம் விமர்சனங்கள் பரிமளித்தாலும், அவர்கள் தத்துவம் பயணத்தை சீரமைக்க எத்தனித்தாலும் அவர்கள் காலத்தின் கைதிகளாகவே சிந்தித்தனர்; அதற்கு நீட்சே மட்டுமே விதிவிலக்கு என்று தோன்றுகிறது. பொதுவாக நவீன சிந்தனையில் எதுவும் தேங்கவும் கூடாது, நிற்கவும் கூடாது. வரலாறு என்பது ஓயாமல் நேர்கோட்டில் பயணிப்பது. ஆன்மீக ரீதியாக விடுதலைக்கு பதில் சுதந்திரத்தை முன்னிறுத்துவது. இதன் மையத்தில் எழுந்த மர்ம அடையாளமே நவீன "மனிதன்." (இச்சிந்தனைகளின் ஆண்சார்பை முன்னிட்டு ஆண்பால் விகுதியை பயன்படுத்துகிறேன்.) இந்தப் பிண்ணனியை மனதில் கொள்ள வேண்டும் முதலில்.

இன்றைய "நெருக்கடிக்கு" வருவோம். அமெரிக்காவிற்கு ஏன் பொருளாதார நெருக்கடி? மாதம் மும்மாரி பொழியவில்லையா? வானம் பொய்த்துவிட்டதா? நோய்க்கிருமிகள் பரவி மக்களும், மாக்களும் மடிந்தனரா? இயற்கை சீற்றமா? அல்லது பத்தொன்பதாம்/இருபதாம் நூற்றாண்டு போல தொழிலாளர் வேலை நிறுத்தமா? மக்கள் புரட்சியா? பின் லாடன் போன்ற எதிரிகளின் தாக்குதலா? அதெல்லாம் ஒன்றுமில்லை தோழர்களே. அமெரிக்காவில் ஒரு வீதி. அதன் பெயர் வால் ஸ்டிரீட். அங்கு பங்கு சந்தை மற்றும் நிதி முதலீட்டியத்தை (Finance Capital) செயல்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அந்த வீதியின் பெயர் அத்தகு நிறுவனங்களுக்கான ஆகுபெயராக செயல்படுகிறது. வால் ஸ்டிரீட் நிதி நிறுவனங்கள் தோற்றுவித்த நெருக்கடிதான் இது. அவை எப்படி இந்த நெருக்கடியை தோற்றுவித்தன என்பதையும், பொதுவாக எப்படி இயங்குகின்றன என்பதையும் குறித்த சிறு குறிப்புகளை எனக்குப் புரிந்தவரையில் விவாத நோக்கில் கீழே தருகிறேன்.

முதலீட்டு வங்கிகளுக்கு தங்கள் செயல்பாடுகளின் பரிமாணத்தை தொடர்ந்து விரிவாக்க வேண்டிய நிர்ப்பந்தம். இந்த CEO என்ற ஒரு இனம் இருக்கிறது. கடவுள், அரசர் என்பதுபோல ஒன்று அது. தலைமை செயல் நிர்வாகி என்று பொருள். நாம் சீயீவோ என்று அழைக்கலாம். அந்த வங்கிகளுக்கும் சீயீவோ உண்டு. அவர்களிடம் "நீங்கள் எப்படியாவது இந்த வங்கியின் சொத்து மதிப்பை அதிகம் செய்யுங்கள். உங்களுக்கு அதில் நல்ல கமிஷன் உண்டு" என அந்த வங்கியின் பங்குதாரர்கள் சொல்கின்றனர். அவர் ஒரு முடிவெடுக்கிறார். நிறைய கடன் தர வேண்டும். ஏனென்றால் வசூல் ஆக வேண்டிய கடன்களென்றால் நிறைய வட்டி - இலாபம் என்று பொருள். இந்த கடன்களுக்கு மதிப்பு உண்டு. அவற்றை விற்கலாம்.

அதாவது நான் உங்களுக்கு ஐந்து வருடத்தில் ஐயாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று வையுங்கள். அதற்கு வட்டி மூவாயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் இன்று ஐந்து வருடம் கழித்து எட்டாயிரம் பெறக்கூடிய பத்திரம் இருக்கிறது. நீங்கள் அதை ஆறாயிரம் ருபாய்க்கு உடனே விற்கலாம். (வாங்குபவருக்கு மீத வட்டி இரண்டாயிரம் கிடைக்குமல்லவா) ஐயாயிரம் கொடுத்தீர்கள். உடனே ஆயிரம் ரூபாய் இலாபம். அடுத்த மனிதருக்கு ஆறாயிரம் ருபாய் கடன் கொடுக்கலாம். அந்த பத்திரத்தை 7,200 க்கு விற்கலாம். இப்படியாக தொடர்ந்து கடன் கொடுப்பதன் மூலம் சொத்தை அதிகரிக்கலாம். கடன் வாங்கியவர் திருப்பித்தராவிட்டால் நட்டமடையாமலிருக்க அக்கடன் பத்திரங்களை காப்பீடு (இன்ஷ்யூர்) செய்து கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல். ஒரு வங்கி கடன் தருவதற்கு, கடன் பெறும் நபருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி விதிமுறைகள் இருக்கின்றன. அவருக்கு திருப்பிக் கொடுக்குமளவு வருமானம் இருக்கிறதா போன்றவை. இதிலிருந்து தப்பிக்க சீயீவோ என்ன செய்தார்? அவர் ஒரு கடன் வழங்கு நிறுவனத்தை தனியாக தோற்றுவித்தார். அந்த நிறுவனத்திற்கும் சீயீவோ உண்டு. அவர் வேலையுமில்லாத, வருமானமுமில்லாத பீட்டரிடம் சென்றார். "பீட்டர், பீட்டர் உனக்கு ஐந்து இலட்சம் விலையுள்ள வீடு வேண்டுமா? நான் வாங்கித் தருகிறேன்" என்றார். பீட்டர் நான் எப்படி தவணை கட்டுவேன் என்று கேட்டார். அதற்கு சீயீவோ சொன்னார். "நாங்கள் நிறைய பேருக்கு கடன் தருவதால், வீடுகளின் விலைமதிப்பு அதிகரிக்கும். உன் வீடு ஒரு வருடத்தில் ஆறு இலட்சமாகி விடும். அப்போது நீ அதன் மீது கடன் வாங்கலாம். வாங்கி தவணையை கட்டலாம்." பீட்டருக்கு ஒரே சந்தோஷம். இருக்காதா பின்னே? கடன் நிறுவன சீயிவோ, அவரிடமிருந்த பத்திரத்தை வாங்கும் வங்கி சீயீவோ, காப்பீடு சீயீவோ எல்லோருக்கும் சந்தோஷம். எல்லோருக்கும் இலாபம், வியாபாரப் பெருக்கம், கமிஷன். உதாரணத்திற்கு, ஒர் கடன் நிறுவன சீயீவோவின் வருமானம், அதிகமில்லை, ஒரு மணி நேரத்திற்கு சுமார் எட்டு இலட்சம் இந்திய ரூபாய். நம்ப முடியவில்லையா? எனக்கும்தான்.
(பார்க்க: http://www.nytimes.com/2008/09/18/opinion/18kristof.html )

இப்படியாக தொடர்ந்து கடன் தர, தொடர்ந்து வீட்டின் மதிப்பு அதிகரிக்க ஒரே பொருளாதார வளர்ச்சி. திடீரென்று வீட்டின் விலை ஏற மறுக்கிறது. பீட்டர் தவணை கட்டவில்லை. கடன் பத்திரங்கள் மதிப்பிழக்கின்றன. கடன் நிறுவனம் மூழ்கிப்போகிறது. வங்கி, காப்பீடு நிறுவனம் எல்லாம் தவிக்கின்றன. இதுதான் நெருக்கடி.

கடந்த இரண்டாண்டுகளில் கடன் கட்ட முடியாமல் அமெரிக்காவில் பத்து இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர். அடுத்த ஆண்டு இன்னம் பத்து இலட்சம் பேர் வீடுகளை இழக்கப் போகின்றனர். கற்பிதமாக உருவாக்கப்பட்ட மதிப்பீட்டு மண்டலம் சரிவதால் பெரும் வர்த்தக நெருக்கடி உருவாகிறது. வங்கிகளின் மீதுள்ள நம்பிக்கையே முதலீட்டியத்தின் அடிப்படை. அதுவே எதிர்கால மதிப்பை இன்றைய மதிப்பாக்குகிறது. "இன்று கடன், நாளை ரொக்கம் (இடையில் வட்டி)" என்பதே முதலீட்டியத்தின் தாரக மந்திரம். உருண்டோடிடும் பணம் காசுகள் ஆங்காங்கே உறைந்து நிற்கின்றன. பங்குச் சந்தை பரிமாற்றங்கள் ஓய்கின்றன. கடன் வசதியின்றி உற்பத்தியும், வர்த்தகமும் சுருங்குவதால் வேலை வாய்ப்புகள் குறைந்து வறுமை எங்கும் அதிகரிக்கும் எனலாம். இதையே தேக்கம் (recession) அல்லது மந்தநிலை (depression) என்கின்றனர். இது எவ்வளவு முற்றும் எப்படி சரியாகும் என்பது குறித்து "பொருள்" ஆதார நிபுணர்கள் விவாதிக்கின்றனர்.

இந்த இடத்தில் நாம் இந்த பொருள்-ஆதாரம் எப்படி செயல்படுகிறது எனக் கவனிக்க வேண்டும். எதிர்காலத்தில் வரக்கூடிய இலாபத்தை கணக்கிட்டு அதை இன்றைய மதிப்பாக மாற்றி வர்த்தகம் செய்வது. பங்குகள் என்பதே அப்படித்தான் என்றால், பங்குகளின் மீது ஒப்பந்தங்கள் போடப்பட்டு அந்த ஒப்பந்தங்களை விற்பது அடுத்த கட்டம். கடன்களை விற்பது பற்றி பார்த்தோம். மிகச்சிக்கலான மதிப்பீடு வலைப்பின்னல் உருவாக்கப்படுகிறது. காலத்தில் முன்னோக்கிப் பாய்ந்து நாளைய தினத்தை இன்றே நுகர்வதான தோற்றம் வருகிறது. மாசக்கடைசியில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வருமென்றால் அதனடிப்படையில் இருபதாம் தேதியே ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்குபவர்களை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதை நிறுவனமயப்படுத்திதான் கிரெடிட் கார்டுகள் தோன்றின. உழைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு கடனே, நுகர்வே அடிப்படை மதிப்பாகிறது. இது எந்த அளவு என்றால் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்க ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுத்த அறைகூவல்: "சாமான்களை வாங்கிக் குவியுங்கள்" என்பது. தேவை நுகரும் உடல்கள்; உழைக்கும் கரங்களல்ல.

எதிர்கால மதிப்பை எப்படி கணக்கிடுவது? சந்தை நிலவரங்களை எப்படி கோட்பாடாக்குவது என்று பொருளாதாரம் என்ற சிந்தனைத்துறை யோசித்த போது அது இயற்பியலிலிருந்தே தன் மாதிரிகளைப் பெற்றது. அறிவியல் கணித்ததை பின்பற்ற, பொருளாதாரம் அறிவியலைப் பின்பற்றியது. கணிதம் என்பது மானுட சிந்தனையின் தர்க்கத்தின் வடிவம். அதை இயல்பெருவெளிக்கு பொருத்துவது இயற்பியல். அது பல நியதியாக்கங்களை கணித விதிகளின் அடிப்படையில் செய்கிறது. சந்தையில் மதிப்புகள் அடையும் மாற்றத்தை கணிக்க அந்த இயற்பியல் நியதியாக்கங்களை பின்பற்றுகிறது பொருளாதாரம். "ஈயத்தைக்கண்டு இளித்ததாம் பித்தளை" என்று ஒரு சொலவடை உண்டு. இந்த தொடர்புகளை பற்றி நுட்பமான விமர்சனங்களை எழுப்பி வருபவர் பிலிப் மிரோவ்ஸ்கி. அவரது நூலின் முன்னுரையொன்றை இந்த வலை விலாசத்தில் பார்க்கலாம்.
http://www.nd.edu/~pmirowsk/pdf/Effortless_Economy_Intro.pdf

புரூனோ லதூர், அவர் நண்பர்களின் சிந்தனைகளுடன், மிரோவ்ஸ்கியின் சிந்தனைகளை இணைத்துப் பார்த்தால் நம் சமகால உலகின் கற்பிதங்களின் வலைப்பின்னல் புரியும். நமது சாமிகளும், பூசாரிகளும், ஜோசியக்காரர்களும் வெகுளிகள் என்று தோன்றும்.

சூதாட்டத்தையே நிறுவனமாக்கி, தேசிய வாழ்வின், உலகளாவிய மானுட பயணத்தின் அடிப்படையாக மாற்றிவிட்ட இந்த சூனியக்காரர்களுக்கு முன்னால் பாவம் வேப்பிலை மந்திரவாதிகள் என்ன செய்யமுடியும்? அமெரிக்கா என்ற அவலம் மானுட தார்மீக வீழ்ச்சியை நிறுவனமாக்கியதில் முன்னின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இன்றையை நெருக்கடி எப்படியோ சரி செய்யப்படலாம். சொப்பன வாழ்வில் மகிழ்ந்து அற்பப் பணப் பேய் பிடித்து அறிவிழப்பதையே மனித நாகரிகம் என்று சாதிக்கும் அமெரிக்க அவலம் என்று மாறும் என்று சொல்ல முடியாது. அதற்கு கொடுக்க வேண்டிய விலை, ஜேம்ஸ் ஹான்சன் எச்சரிப்பதுபோல, ஒட்டுமொத்த மானுட அழிவாக இருக்கலாம். ( http://www.columbia.edu/~jeh1/ )

Monday, October 06, 2008

இன்றெமக்கு வேண்டியது சமாதானமே

தீராநதி: ஒக்டோபர் - 2008

விமர்சனமற்ற முறையில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது, அல்லது விடுதலைப் புலிகளை எதிர்ப்பது என்கிற வகையில் இலங்கை அரசையும்கூட ஆதரிக்கும் நிலையை எடுப்பது என்கிற இரு எதிரெதிர் நிலைப்பாடுகளுக்கிடையே ஈழப் பிரச்சினையில் நடுநிலையான ஒரு பார்வையைத் தொடர்ந்து பேணி வருபவர் எழுத்தாளர் ஷோபாசக்தி. சென்ற மாதத்தில் நான் பிரான்ஸ் சென்றிருந்தபோது ஈழப் போராட்டம் இன்றொரு தேக்கநிலையை எட்டியிருப்பது குறித்து அவரிடம் நானெடுத்த பேட்டி இது. இன்றைய தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகிய ஷோபாசக்தியின் இக்கருத்துக்களை வேறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கிறேன். பாரிசிலிருந்து சுமார் 800 கி.மி. தொலைவிலுள்ள Pau என்னும் நகரில் சென்ற ஆகஸ்ட் 3 அன்று பதிவு செய்யப்பட்டது இது.
-அ. மார்க்ஸ்

ஜூலை 83 இனப்படுகொலையின் 25-ம் நினைவு நாளை நீங்கள் எவ்விதமாக நினைவு கூர்கிறீர்கள்?

இன்றைக்கு மிகவும் துக்ககரமாகவும், வெட்கப்படக்கூடிய நிலையிலும் நமது முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களும், உதிரிகளாய் இருக்கும் முன்னாள் போராளிகளும் யூலைப் படுகொலைகள் இலங்கை அரசால் திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல என்றும், அங்கே நடந்தது இன அழிப்பு அல்லவென்றும் பிரச்சாரம் செய்யக்கூடிய நிலையை நாங்கள் பார்க்கிறோம். ஏதோ பாலும், தேனும் ஓடிக்கொண்டிருந்த ஒரு தேசத்தில் தமிழ் இளைஞர்கள், தமிழர்களின் உரிமைகளைக் கேட்டு ஆயுதம் தாங்கிய காரணத்தினாலேயே இலங்கை அரசு அப்படுகொலைகளை நிகழ்த்தியதென ஒரு சப்பைக் காரணம் சொல்லிக் கொண்டுள்ளனர். ஆனால், இலங்கை அரசால் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு, தெற்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களது வீடுகள், வியாபார நிறுவனங்கள் முதலானவை குறித்த தகவல்கள் துல்லியமாகத் தொகுக்கப்பட்டு, வெளிக்கடைச் சிறை ஆணையாளரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, மிக நிதானமாக, கட்டங்கட்டமாக இப்படுகொலைகளைச் செய்து முடித்தார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்ட அப்படுகொலை குறித்து இன்றுவரை ஒருவர் கூடச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டதில்லை.

இத்தனை தியாகங்கள், உயிரிழப்புகள், புலப்பெயர்வுகளுக்குப் பின் இன்று ஈழப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள தேக்கம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

ஏற்கெனவே ஈழத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், சாதி ஒழிப்புப் போராட்ட இயக்கங்கள் ஆகியவற்றால் உணர்வு பெற்றிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்தான் இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழர் தேசியப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்க வந்தனர்.

`சோஷலிசத் தமிழ் ஈழம்' என்பது அன்று அவர்களின் பிரதான முழக்கமாக இருந்தது. இதற்குப் புலிகளும்கூட விலக்கல்ல. முக்கியமாக இந்தப் பண்பு பல அறிவுஜீவிகளை, இளைஞர்களை ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகத் திருப்பியது. ஆனால் போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்திலே, ஒரு பக்கம் போராட்டம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இன்னொரு பக்கம் இந்திய அரசுக்கு இந்த இளைஞர்கள் முழுமையாக அடிபணிந்தார்கள். ஒட்டுமொத்த இயக்கங்களின் ஆயுத பலத்தை மட்டுமல்லாமல், அவர்களின் போராட்ட நெறிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக `ரோ' (Raw) அதிகாரிகளும், இந்திய ராஜதந்திரிகளும் விளங்கினர். ஆக போராட்டத்தைத் தொடங்கும்போதே இவர்கள் தாங்கள் வைத்திருந்த இடதுசாரி, சோஷலிசக் கருத்தாக்கங்களை ஒவ்வொன்றாகக் கைவிட்டுக்கொண்டே வந்தார்கள். எந்த முழக்கங்களால் பரவலாக இளைஞர்களிடமும், வெகு ஜனங்களிடமும் அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தார்களோ, அவை வெறும் வெற்று முழக்கங்களே என்பது எங்களுக்குப் புரியத் தொடங்கியது.

அனைத்துப் பெரிய இயக்கங்களுமே அப்பாவி மக்களைக் கொலை செய்தனர். எல்லோரும் எல்லோரையும் கொலை செய்தனர். சகோதர இயக்கங்களின் மீதும் படுகொலை நிகழ்த்தினார்கள். இந்தியாவின் கருணை, தங்கள் இயக்கத்தின் சொந்த வளர்ச்சி, இவற்றைத் தவிர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தோ, அங்கே நிலவிய சாதியச் சிக்கல்கள், தமிழ், முஸ்லிம் முரண்பாடு, வடகிழக்கு முரண்பாடு குறித்தோ இவர்கள் சிந்தித்தது கிடையாது. இடைவிடாது மாறிக்கொண்டுள்ள சர்வதேச அரசியலைக் கவனித்து அதற்கு ஏற்றவாறு அவர்களின் போராட்ட உத்திகளை வகுத்ததும் கிடையாது. குறிப்பாக புலிகள் இயக்கத்தினுடைய அதிஉச்சமான அராஜகங்களாலும், மாற்று அரசியல் சக்திகளை அவர்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கியதாலும், விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி, தமக்கான பாதுகாப்பைத் தேடி மற்றைய இயக்கங்கள் இலங்கை அரசுக்கு அடிபணிந்ததாலும், அமைதிப்படை காலகட்டத்தில் அதை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திடம் புலிகள் தஞ்சம் புகுந்ததாலும் போராட்டத்திலிருந்து மக்கள் அந்நியப்பட்டனர். தமிழ் மக்களைப் போராட்ட சக்திகளாகக் கருதாமல் வெறுமனே தங்களுக்குக் கப்பம் கட்டும் மந்தைகளாகவும் தமது இராணுவத்திற்குப் பிள்ளைகள் பெற்றுத் தருபவர்களாகவும் மட்டுமே புலிகள் ஆக்கி வைத்துள்ளனர்.

இன்றைய தமிழ் இளைஞர்களின் போராட்ட அரசியல் என்பது, சோஷலிசம், இடதுசாரித் தத்துவமல்ல. வேறெந்தத் தத்துவமும்கூட அவர்களுக்குக் கிடையாது. எல்லாவற்றிலுமே அரசியல் நீக்கம் செய்யப்பட்ட குட்டிக் குட்டி யுத்தப் பிரபுக்களின் வலிமைகளைப் பரிசோதிக்கும் களமாக இன்று அது மாற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் வெளிகளில், தமிழ் மக்களுக்கு நீதியுடனான சமாதானத்தை வழங்குவதற்கு அருகதையுள்ள, விசுவாசமுள்ள எந்த ஒரு அரசியல் சக்தியும் இன்று கிடையாது. நாங்கள் ஒரு போராட்டத்தைத் தோற்றுவிட்டு நிற்கிறோம்.

இதிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் தென்படுகின்றனவா?

யுத்தத்தின் மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதில் முன் எப்போதையும்விட இன்றைய அரசு உறுதியாக நிற்கிறது. அது அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்துக்கொண்டுள்ளது. கிழக்கு முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. வடக்கில் புலிகளிடம் எஞ்சியிருக்கும் சிறு நிலப் பகுதியும்கூட எந்த நேரமும் இலங்கை இராணுவத்தால் வெற்றி கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. தமிழீழம் நிராகரிக்கப்பட்டு `ஒற்றையாட்சி' என்பதை தமிழர்களின் பல்வேறு இயக்கங்கள், சக்திகள், அமைப்புகள் ஏற்றுக்கொள்கின்றன. கூர்ந்து அவதானித்தோமானால் விடுதலைப்புலிகள் உள்ளிட்டு எந்த இயக்கங்களும் நீண்டகாலமாகத் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை முன் நிறுத்தவில்லை. இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகம் என்பதே பேச்சுவார்த்தைகளில் புலிகளின் கோரிக்கையாக இருந்தபோதும் அதையுங்கூட இலங்கை அரசு ஏற்கவில்லை. புலிகள் தொடர்ந்து ஏகப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திக் கொண்டுள்ளனர். வேறு யாரையும் பேச அழைக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இலங்கை அரசும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாக இருந்த நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா முதலான நாடுகளும் அதை ஏற்றுக்கொண்டன. இத்தனைக்குப் பின்னுங்கூட யுத்தத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலம் குறித்தோ, இந்த அர்த்தமற்ற போரை நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தோ, நிரந்தரமான சமாதானத் தீர்வை நோக்கி நாம் போகவேண்டிய அவசியம் குறித்தோ எந்தக் கரிசனையும் இல்லாமல், தங்களது இயக்கத்திற்கு அதிகாரங்களைப் பெற்றெடுப்பதிலேயும், இந்தப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி மாற்று அரசியல் இயக்கங்களை ஒழித்துக்கட்டுவதிலேயும் மட்டுமே புலிகள் குறியாக இருந்தனர். போர் நிறுத்த காலத்தில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட மாற்று இயக்கங்களின் முக்கியஸ்தர்களைப் புலிகள் கொன்றொழித்துள்ளனர்.

அன்று நீங்கள் உரையில் குறிப்பிட்டதுபோல அரசாங்கம் இன்று யுத்தத்தை மட்டுமே நம்பியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டிற்கு புலிகள் தவிர்த்த மற்ற இயக்கங்கள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

பேச்சுவார்த்தைகளில் புலிகள் மற்ற இயக்கத்தவரையும் அனுமதித்திருந்தால் இந்நிலை தவிர்க்கப்பட்டிருக்குமா?

அனுமதித்திருந்தாலுங்கூட இலங்கை அரசு எந்த அளவிற்கு யோக்கியமாக நடந்துகொள்ளும் எனச் சொல்ல இயலாது.

இதர அம்சங்களைப் பொறுத்தமட்டிலாவது புலிகள் பேச்சுவார்த்தைகளில் நேர்மையாக நடந்துகொள்கிறார்களா?

பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் மட்டுமல்ல, புலிகளும் நேர்மையாகவும், உண்மையாகவும் இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன. இருவருமே யுத்தத்தை விரும்புகின்றனர். யுத்தத்தின் மூலமாகவே இருவரும் தமது அதிகாரத்தையும், செல்வாக்கையும் நிலைநிறுத்திக் கொள்கின்றனர். இடையில் புகுந்து குட்டையைக் குழப்பும் அந்நிய வல்லாதிக்க சக்திகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மட்டுமல்லாமல், யுத்தத்தைத் தீர்மானிப்பதிலும் இவர்களுக்கு ஒரு பங்குள்ளது.

அந்நிய வல்லாதிக்க சக்திகள் என நீங்கள் எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?

இந்தியாவிற்கு முக்கியப் பங்குள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் இந்திய முதலாளிகள் முதலீடுகளைச் செய்து கொண்டுள்ளனர். உலக மகா போலீஸான அமெரிக்காவும், தன் பங்கைச் செவ்வனே ஆற்றுகிறது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதார நலன்கள் முக்கியமாக உள்ளது. இலங்கையில் அனல் மின் நிலையம் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கையின் மிகப் பெரிய சீமெந்துத் தொழிற்சாலையை இன்று இந்திய முதலாளிகள் வாங்கியுள்ளனர். தவிரவும் நாடு முழுவதிலும் இந்திய முதலாளிகள் நிலங்களையும், சொத்துக்களையும் வாங்கிக் குவிக்கின்றனர். இதற்குச் சிறு எதிர்ப்பும்கூட இலங்கையில் கிடையாது.

இந்திய விஸ்தரிப்பு வாதத்தை மையமாக வைத்து இயங்கிய ஜே.வி.பி. இயக்கம் கூடவா எதிர்ப்புக் காட்டவில்லை?

இந்திய விஸ்தரிப்பை எதிர்த்துப் போராடிய ரோஹண விஜயவீரவின் ஜே.வி.பி.க்கும் இன்றைய ஜே.வி.பி.க்கும் நிறைய வேறுபாடு உண்டு. இன்று ஜே.வி.பி. அரசின் பங்காளியாக உள்ளது. இனவாதத்தைக் கக்குவதில் `ஹெல உருமைய' போன்ற இனவாதக் கட்சிகளுக்கு இணையாக இன்று அவர்கள் உள்ளனர். இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு என்கிற கருத்து இருந்தால்தானே இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றிய உணர்வு இருக்கும். ஆனால் இன்று ஜனாதிபதி உட்பட யாருக்கும் இலங்கை ஒரு இறையாண்மையுடைய நாடு என்கிற கருத்து கிடையாது. இந்தப் போரைச் சாக்காக வைத்து நாட்டில் பல பத்து வருடங்களாக நடைமுறையிலுள்ள அவசர நிலை தொடர்கிறது. இந்த அவசரகால நிலை உள்ளதாலேயே மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காகப் போராட இயலாத நிலையுள்ளது. இதன் விளைவாகவே எந்த எதிர்ப்புமின்றி இந்தியா தனது விஸ்தரிப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றி வருகிறது.

நான் இங்கு வந்துள்ள சில நாட்களில் பல தரப்பட்ட ஈழத் தமிழர்களையும் சந்தித்துப் பேசும்போது கிழக்கு மக்கள், முஸ்லிம்கள், தலித்துகள் எனப் பல்வேறு பிரிவினரும் தமது தனித்துவத்தை வலியுறுத்துவதும், `ஈழத் தமிழர்' என்கிற ஒற்றை அடையாளத்திற்குள் தம்மை நிறுத்திக்கொள்ள விரும்பாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதையும் உணர்கிறேன்...

உண்மைதான். ஆனால் இந்த நிலைமை எப்போதிலிருந்து தொடங்குகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். 90களுக்குப் பின்புதான் இது உருவாகிறது. நான் தொடக்கத்தில் சொன்னதுபோல இந்தப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் 'சோஷலிசத் தமிழ் ஈழம்' என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இன்றுள்ள சூழலில் அது வேடிக்கையாகத் தோன்றினாலுங்கூட, அன்று அது சாத்தியம் என்கிற நம்பிக்கை நான் உள்ளிட்ட பலருக்கும் இருந்தது. அதை ஒட்டியே பல தலித் இளைஞர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், கிழக்கு மாகாணத்தினர் எல்லோரும் ஈழப் பேராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள நேர்ந்தது. நிகரகுவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இத்தகைய அணி சேர்க்கைக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. ஆனால் போகப் போக ஈழப் போராட்டம் இந்த சோசலிசம் முதலான எல்லாவித அரசியல், தத்துவப் பார்வைகளையும் விட்டுவிட்டு, ஜனநாயக நடைமுறைகளையெல்லாம் ஒழித்துவிட்டு, சக இயக்கங்களையெல்லாம் அழித்துவிட்டு, முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஒரு ஆதிக்க, அதிகாரப் போராட்டமாக மாறத் தொடங்கியது. இதன் விளைவுதான் இன்று தலித்களும், கிழக்கு மாகாணத்தினரும் தமது தனித்துவத்தை வலியுறுத்தி, தமிழ் ஈழக் கோரிக்கையிலிருந்து விலகி மட்டுமல்ல, அதற்கு எதிராகவும் நிற்க வைத்துவிட்டது. ஆனால் அதே நேரத்தில் உலக அளவில் பல விடுதலைப் போராட்டங்கள் இந்த வேறுபாடுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு செயல்பட்டதால் இன்று முன்னோக்கி நகர்ந்துள்ளன. நேபாளம் ஒரு நல்ல உதாரணம்.

`தலித் சமூக மேம்பாடு முன்னணி' என்னும் அமைப்பைத் தோழர்கள் தேவதாசன், நாதன் முதலியோர் முன் முயற்சி எடுத்து உருவாக்கியுள்ளனர். பாரிசிலும், லண்டனிலும் இரு மாநாடுகளும் நடைபெற்றுள்ளன. இதுகுறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள்.

சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு ஈழத்தில் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. குறிப்பாக 60களின் இறுதியிலும் 70களின் தொடக்கத்திலும் சாதி ஒழிப்புப் போராளிகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைச் சாதித்தார்கள். முன்னைவிட இப்போது ஈழத்தில் சாதிப் பிரச்சினை சற்றுத் தளர்வாக உள்ளதென்றால் அதை ஏற்படுத்திய பெருமை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தையும், உலகளாவிய மாற்றங்களையும்தான் சாருமேயொழிய தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இதில் எந்தப் பங்குமில்லை. டானியல் சொன்னது போல அடிமையும், எஜமானனும் ஒன்றிணைந்து, ஒரு சேரக் கலந்து தமிழ் ஈழத்தைக் கட்டுவது சாத்தியமில்லை. ஆனால் அதைத்தான் தேசிய இயக்கங்கள் முயன்றன. தமிழ்த் தேசியவாத அலையில் `தமிழர் ஒற்றுமை' என்கிற முழக்கமே சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் நீர்த்துப் போவதற்குக் காரணமாயின. சாதி ஒழிப்புப் போராட்ட அமைப்புகள், தமிழ் ஈழப் போராளிகளால் துப்பாக்கி முனையில் மௌனமாக்கப்பட்டன. முப்பது வருட காலமாகக் கவிந்த இந்த மௌனத்தை முதன்முதலாக இன்று `தலித் சமூக மேம்பாட்டு முன்னணி' கலைத்துள்ளது. 'புதிய ஜனநாயகக் கட்சி' போன்ற அமைப்புக்கள் சாதி ஒழிப்பைத் தொடர்ந்து பேசி வந்துங்கூட, சாதியம் குறித்த அவர்களது பார்வைகள் மரபு மார்க்சீயத்தைத் தாண்டமுடியாமல் இன்றுவரை தேங்கிப்போயுள்ளன. ஆனால் இன்று இந்தியாவிலும், தமிழகத்திலும் தலித்தியம் குறித்துப் பல சிந்தனைப் போக்குகள் உருவாகியுள்ளன. தீண்டாமை மற்றும் சாதியத்தை வெறுமனே நிலப்பிரபுத்துவத்தின் ஓரங்கமாகப் பார்க்காமல், அதை இந்து மதத்துடன் தொடர்ப்படுத்தியும், இந்து மதத்தை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பது போலவும் அங்கே பார்வைகள் உருவாகியுள்ளன. தலித்துகளின் தனித்துவம், அவர்களுக்குத் தனித்துவமான கட்சி ஆகியன பற்றியும் இன்று பேசவேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்ட வகையிலேயே த.ச.மே. முன்னணி, மற்றைய இதற்கு முந்திய சாதி ஒழிப்பு இயக்கங்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. இந்த அடிப்படையின்கீழ் இன்று த.ச.மே. முன்னணித் தோழர்கள் ஒரு உரையாடலை உருவாக்கியுள்ளனர். இது ஒரு முக்கியமான மாற்றம் என்பதில் ஐயமில்லை. ஈழ தேசியப் போராட்டத்தின் ஆரம்பத்தில் `ரவுடிகள்' என அடையாளங்காட்டப்பட்டுப் பல தலித் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் உண்மையில் தத்தம் பகுதிகளில் தலித் மக்களைத் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து பாதுகாத்தவர்களாகவுமிருந்தது குறிப்பிடத்தக்கது. யாழ் பொது நூலகத் திறப்பு விழா, தலித் மேயரான செல்லன் கந்தையனின் தலைமையில் நடக்கக்கூடாது என்பதற்காகவே பல்வேறு சாக்குப் போக்குகளையும் சொல்லி தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல வரலாற்றிலேயே முதன்முறையாக யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமிக்க யாழ் மத்திய கல்லூரிக்கு ராஜதுரை என்கிற தலித் ஒருவர் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து அவர் சாதி ரீதியாகப் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இறுதியில் 2005-ல் அவர் கொல்லவும்பட்டார். எல்லோரும் இந்தக் கொலையை ஒரு ஜனநாயக விரோதச் செயலாக மட்டுமே பார்த்து, இதற்குப் பின்னாலிருந்த சாதியக் காரணங்களைக் கண்டுகொள்ள மறுத்தனர். த.ச.மே. முன்னணி மட்டுமே நான் இப்போது குறிப்பிட்ட இந்தப் பிரச்சினைகளிலெல்லாம் பின்புலமாக இருந்த சாதியக் காரணங்களை அடையாளம் காட்டியது. இன்று புதிய ஜனநாயகக் கட்சியெல்லாம்கூட இந்த நோக்கிலிருந்து பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில்தான் த.ச.மே. முன்னணியின் முக்கியத்துவத்தை நாம் வரையறுக்கவேண்டி இருக்கிறது. ஐரோப்பாவிலிருந்துகொண்டு இதைச் செய்வதிலுள்ள எல்லைகள், வரம்புகள் ஒரு பக்கம் இருந்தபோதிலும் இன்று இதன்மூலம் உருவாகியுள்ள உரையாடல் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிலுள்ள தலித் இயக்கங்களிடமிருந்து போதிய ஆதரவு இம் முயற்சிக்குக் கிட்டியுள்ளதா?

த.ச.மே. முன்னணி ஒரு இளம் அமைப்பு. புதிதாக உருவாகியுள்ள ஒன்று. இன்றும் இப்படியொரு இயக்கம் உருவாகியுள்ள செய்தி உலக அளவில் பரவலாகவில்லை. எங்களாலும் விரிவாகத் தமிழகம் தழுவிய அளவில் கொண்டு செல்ல இயலவில்லை. இப்படி ஒரு அமைப்பு உருவாகியுள்ளதும், அது தலித் மாநாடுகளை நடத்தி வருவதும், தமிழ்ச் சிறு பத்திரிகை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ள நிலையுள்ளது. இது ஒரு காரணமென்றபோதிலும் இன்னொரு முக்கிய காரணத்தையும் நாம் மறந்துவிட இயலாது. இன்று தமிழக தலித்களின் முக்கிய பிரதிநிதியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுக்க முழுக்க விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. புலிகளை ஆதரிப்பது அவர்களது உரிமை அல்லது அரசியல் என நாம் ஏற்றுக்கொண்ட போதிலும், ஒரு தலித் கட்சி என்கிற வகையில் அது அங்குள்ள சாதி, தீண்டாமைப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாதிருப்பதும், ஈழத்தில் சாதிப் பிரச்சினை விடுதலைப்புலிகளுக்குப் பின் ஒழிந்துவிட்டது என்பது போன்ற கருத்துக்களைத் தமது மவுனத்தின் மூலம் ஆதரிப்பதும் விடுதலைச் சிறுத்தைகளுடனும், அவற்றின் தலைவர் திருமாவளவனிடமும் ஒரு உரையாடலை ஏற்படுத்துவதை இதுவரை சாத்தியமில்லாமற் செய்துவிட்டது. தேசிய விடுதலைப் போராட்டத்தினூடாக இன்று சாதிப் பிரச்சினை சற்றே குறைந்துள்ளது எனக் கருதுகிறவர்களுங்கூட, இன்று அங்கு சாதிப் பிரச்சினையே இல்லை எனச் சொல்வதில்லை.

ஆனால் விடுதலைச் சிறுத்தைகளோ அங்கே சாதிப் பிரச்சினையே இல்லை என்பது போல பேசுவது மற்றும் இணங்குவதன் மூலமும், முஸ்லிம் மக்களுக்கும், கிழக்கு மாகாணத்தினருக்கும் விடுதலைப் புலிகள் செய்துவிட்ட துரோகத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலமும் தலித் மக்களுக்குத் துரோகமிழைக்கின்றனர். இதுகுறித்து `தேனி' இணையதளத்தில், கிழக்கு மாகாணத்தினரின் தனித்துவத்தை வற்புறுத்தி இயங்குபவரும் `எக்ஸில்' இதழாசிரியருமான எம்.ஆர். ஸ்ராலின் திருமாவளவனுக்கு எழுதிய திறந்த மடல் குறிப்பிடத்தக்கது. எனினும் ஒரு முக்கிய தலித் கட்சி என்கிற வகையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புடன் ஒரு உரையாடலுக்கு த.ச.மே. முன்னணித் தோழர்கள் தயாராகவே உள்ளனர்.

இன்று கிழக்கிலுள்ள நிலைமை குறித்து சற்று விரிவாகச் சொல்லுங்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்த இரண்டு நாட்களில், இங்கே ஒரு வானொலி நிலையத்தில் அது குறித்த ஒரு உரையாடல் நடைபெற்றது. கோவை நந்தன், தேவதாஸன் கலந்துகொண்ட அந்த உரையாடலில் நான் தொலைபேசி மூலம் என் கருத்துக்களைச் சொன்னேன்.

"பிரிந்து வந்தவுடன், கிழக்கு மாகாணத்தினர் தொடர்ந்து புறக்கணிப்புச் செய்யப்படுவது, கிழக்கின் சுயாட்சி பற்றியெல்லாம் கருணா பேசியது வரவேற்கத்தக்கதுதான் என்ற போதிலும், இந்தப் பேச்சு ஒரு தவறான மனிதரின் வாயிலிருந்து வருகிறது'' என நான் அன்று சொன்னேன். பிரபாகரன் ஒரு 'ஹிட்லர்' என்றால் கருணா ஒரு 'முஸோலினி' என்றும் சொன்னேன். தொடர்ந்து அவரது செயற்பாடுகளும், பேச்சுக்களும் அதை நிரூபித்தன. கிழக்கின் சுயாட்சி பற்றியவை தவிர அவரது மற்ற பேச்சுக்கள் எல்லாம் கிட்டத்தட்ட புலிகளைப் போலவே இருந்தன. ஆள் கடத்தல், கொலை செய்தல் இவை எல்லாம் தொடர்ந்தன. இராணுவத்துடன் சேர்ந்து செயல்படும் நிலையும் இருந்தது. இந்நிலையில், சர்வதேச அழுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றையும் அரசு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் `தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' தவிர மற்றெல்லா அரசியல் கட்சிகளும் பங்குகொண்டன. தேர்தலும் பெரிய அராஜகங்களின்றி நடைபெற்றது. அரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முதலமைச்சரானார்.

தொடர்ந்து இன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. முதலில், பல ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக அங்கே போர் ஒழிந்து மக்கள் அமைதியாக உள்ளனர். கொலைகள், ஆட்கடத்தல்கள் எல்லாம் வெகுவாகக் குறைந்துள்ளன. குறிப்பாக ஏராளமான குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு, போர்முனையில் நிறுத்திக்கொல்லப்படும் அவலம் நின்றுவிட்டது.

தவிரவும் இன்று கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் பல நல்ல, முக்கியமான ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் ஏற்கெனவே நிறைய இழந்துவிட்டோம். போரில் களைத்துப் போய்விட்டோம். ஏராளமான விலையைக் கொடுத்துவிட்டோம். "பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை. ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, அனைவருமே ஜனநாயக அரசியல் நெறிகளுக்குத் திரும்பவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துகின்றோம். இலங்கை அரசியலிலே கிட்டிய ஒரு அண்மை உதாரணம் ஜே.வி.பி. கடுமையான ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட ஜே.வி.பி. இன்றுள்ள அரசியல் சூழலில் அதைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ளது. ஆயுதப் போராட்டத்தை நடத்தும்போது மக்களிடம் எந்த அளவு ஆதரவு பெற்றிருந்ததோ, அதைக் காட்டிலும் பலமடங்கு ஆதரவைப் பெற்றதோடு, இலங்கை அரசாங்கத்திலும் பங்கெடுத்துள்ளனர்.

நாளை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி, தேர்தலில் நின்றாரானால் அதைவிட மகிழ்ச்சிகரமான செய்தி தமிழ் மக்களுக்கு இருக்கமுடியாது. அதை நாங்கள் வரவேற்கிறோம். அந்த அடிப்படையிலேயே இன்று `தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்' (TMVP) தேர்தல் அரசியலுக்குத் திரும்பியதை நாங்கள் வரவேற்கிறோம். இதனுடைய அர்த்தம் சிவனேசதுரை சந்திகாந்தன் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளர் இல்லை என்பதோ, அவர் ஒரு நீதிதேவன் என்பதோ அல்ல. அவரது அரசியல் நெறிகள் மீது நமக்குக் கடும் விமர்சனம் எப்போதும் உண்டு.

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் முதலீடுகளை வரவேற்போம் எனக் கருணா இரண்டு நாட்களுக்கு முன் சொல்லியிருப்பது ரொம்பவும் ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. இந்த விமர்சனங்களுக்கப்பால் அவர்கள் ஒரு ஜனநாயக எல்லைக்குள் நின்று தம் அரசியலைச் செய்வது வரவேற்கத்தக்கதுதான்.

துக்ககரமான வேடிக்கை என்னவென்றால் ஈ.பி.ஆர்.எல்.எப், பிளாட், ஈ.பி.டி.பி., டெலோ முதலிய அமைப்புகளெல்லாம் தேர்தல் பாதைக்குத் திரும்பியபோது மகிழ்ந்து வரவேற்ற யாழ் அறிவுஜீவிகளும், ஜனநாயகத்தைப் பேசுபவர்களும் இன்று சந்திரகாந்தன் தேர்தல் பாதைக்குத் திரும்பியதை அங்கீகரிக்க மறுப்பதுதான். தமிழ் மக்களின் முக்கிய அறிவுஜீவிகளாகவும், சிந்தனைப் பிரதிகளாகவும் உள்ள இவர்களே இதை மறுப்பது ஒன்றே கிழக்கு மாகாணத்தின் சுயாட்சி உரிமைக்கு நிரூபணமாகிறது.

Thursday, October 02, 2008

இனவெறியின் இன்னொரு முகம்

- ராகவன்

வரலாறுகளிலிருந்து படிப்பினைகளை இலங்கை அரசோ, அதன் அதிகாரிகளோ இன்னமும் பெறவில்லை என்பதையே சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் கனேடிய தேசிய நாளிதளொன்றிற்கு வழங்கிய நேர்காணல் படம்பிடித்துக் காட்டுகிறது.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது நேர்காணலில் "இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்கள் அளவுக்கு மீறிய உரிமைகளைக் கோருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், இது சிங்கள மக்களது நாடு என நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் சிறுபான்மை சமூகங்கள் எமது நாட்டில் இருக்கின்றன. அவர்களை நாம் எமது மக்களாக நடத்துகிறோம். நாங்கள் இலங்கையில் எழுபத்தைந்து சதவீதமாக இருக்கிற காரணத்தால் இங்கு விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை. எமது நாட்டை பாதுகாக்க எங்களுக்கு உரிமை உண்டு. எமது நாடு பலம் வாய்ந்தது. அவர்கள் விரும்பினால் இங்கு இருந்து விட்டு போகலாம். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையின் கீழ் அளவுக்கு மீறி உரிமைகளை கோருவதை நிறுத்த வேண்டும்" என்றவாறாகவெல்லாம் துடுக்குத்தனமான கருத்துகளை உதிர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

இலங்கை அரசின் பெரும்பான்மையினத்துக்குச் சாதகமான பண்பு/ சிறுபான்மை இனங்களின் உரிமைகளை மதிக்கத் தவறி அவர்களை இரண்டாம் மூன்றாம் தரப் பிரசைகளாக்கியது போன்ற பல்வேறு இனவாதப் போக்குகளே இனப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்பதையும் இந்தப் போக்குகளிலிருந்தே இனமுரண்கள் கூர்மையுற்றன என்பதையும் 1994க்குப் பின்பு வந்த சிறிலங்கா அரசுத் தலைவர்கள் 'ஓரளவுக்கு' ஒத்துக்கொண்டுள்ளதாக ஒரு கருத்துண்டு.

ஜனாதிபதியிடமும் மத்தியிலும் குவிந்திருக்கும் அதிகாரங்களை பரவலாக்கல், பல்லின மக்கள் பல்வேறு கலாச்சார விழுமியங்களோடு வாழும் இலங்கையில் அந்தந்த இன - கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பது; அதேசமயம் இலங்கையர் எனத் தம்மைச் சிறுபான்மையினங்கள் உளப்பூர்வமாக கருதும் அரசியல் நிலையை தோற்றுவிப்பது முதலான முன்னெடுப்புகளாலேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியும் என்பன போன்ற கருத்து நிலைகள் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளாலும் அறிஞர்களாலும் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைக் உறுதி செய்யும் வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றத்தின் அவசியம் பற்றிய தேவையைப் பல்வேறு தரப்புகளும் உணர்ந்திருப்பதாகத் தெரியும் இக்காலகட்டத்தில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சரத் பொன்சேகாவின் இனவாதக் கருத்துச் சிதறல்கள் அமைந்துள்ளன.

'நாங்கள்' = சிங்களவர்கள்.
'அவர்கள்' = சிறுபான்மை இனங்கள்.

இந்த இரட்டைச் சூத்திரத்தின் பின் பெரும்பான்மைவாத கருத்தியலும் சிங்கள இனவாத கருத்தியலும் உறைந்து கிடக்கின்றன. 'நாங்கள்' என பொன்சேகா கூறும் போது எனது இனம், நாம் பெரும்பான்மையினர், இது எமது தேசம், எங்களுக்கே இங்கு முழு உரிமையும் உண்டு. அவர்கள் புறத்தியார்,'அவர்கள்' விரும்பினால் எம்முடன் சேர்ந்து இருக்கலாம். ஆனால் இருக்குமிடத்தில் இருக்கவேண்டும். எனவே 'நாங்களும்' 'அவர்களும் ' சமமானவர்களல்ல. 'அவர்கள்' அந்நியர்கள். 'நாங்கள்' மண்ணின் மைந்தர்கள் என்று இனஒதுக்கல் அரசியலையே பொன்சேகா பேசுகிறார். வேறுபாடுகளை அங்கீகரித்து பல்கலாச்சார, பல்லின மக்களின் நாடு இலங்கையென்பதை அவர் மறுக்கிறார்.

"இனப் பிரச்சனையை நாம் தீர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்கிறோம், ஆனால் விடுதலை புலிகள் தான் இதற்கு தடையாக இருந்து வருகிறார்கள்" என இலங்கை அரசு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூறிக்கொண்டு மறுபக்கம் இலங்கையில் இருப்பது ' பயங்கரவாத' பிரச்சனை எனத் தனது இராணுவ நடவடிக்கைகளுக்குத் தார்மீக நியாயமும் கற்பித்து கொண்டு கொழுந்து விட்டெரியும் இன முரண்பாடுகளிற்கு எவ்வித அரசியல் தீர்வுகளையும் முன்மொழியாமல் அரசு இயந்திரம் யுத்தத்தை முடுக்கிவிட்டிருக்கும் இவ்வேளையில் தளபதி சரத் பொன்சேகாவின் பொறுப்பற்றதனமான இனவெறிப் பேச்சு இன முரண்பாடுகளை மேலும் உக்கிரப்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல் வரலாற்றுரீதியாகவே அனைத்து சிறுபான்மை மக்களும் இலங்கை அரசு தம்மை இரண்டாம்தர பிரசைகளாக நடத்துகின்றதென்று நம்பி வந்துள்ளனர். சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்துச் சிதறல்கள் இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாகவே இருக்கின்றது.

"ஐக்கிய இலங்கையில் அனைத்து மக்களும் தங்கள் அரசியல் - பொருளாதார - சிவில் உரிமைகளை சமமாக நிலை நாட்டும் வண்ணம் இலங்கை அரசியல் சாசனம் மாற்றப்பட வேண்டும் இதுவே இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வாக அமையும். இதுவே நீதியும் ஜனநாயக நெறிகளும் கொண்ட வருங்கால இலங்கையைக் கட்டமைக்கும்" என்றெல்லாம் குரல் கொடுக்கும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்களையும் பெரும்பான்மை இனத்துக்குள்ளேயேயிருக்கும் ஜனநாயகக் குரல்களையும் அவமதித்து இராணுவ வெற்றிகளின் மமதையில் பேசும் ஒரு கடைந்தெடுத்த இனவாதியின் குரலாகவே தளபதி சரத் பொன்சேகாவின் குரல் அமைந்திருக்கிறது.

தளபதியின் பொறுப்பற்ற பேச்சுக் குறித்து அரசு இன்னும் மவுனமாகவேயிருக்கிறது. இந்தப் பேச்சுக்கு அரசுத் தலைவரிடமிருந்து வாயளவிலான கண்டனம் கூட இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்தும் இந்த இனவாதப் போக்குகளுக்குள் இலங்கை அரசும் அதன் அதிகாரிகளும் தளபதிகளும் சிக்குண்டிருக்கும் வரைக்கும் இலங்கையில் அமைதி திரும்புவதற்கான சின்னவொரு அறிகுறியும் கூடத் தோன்றாது. மகிந்தவின் வெற்றி வன்னிப் போர்முனையிலில்லை. மாறாக அந்த வெற்றி, அரசியல் தீர்வொன்றை உருவாக்கி எழுதப்படும் இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தின் பக்கங்களுக்குள்தான் ஒளிந்திருக்கிறது.