Sunday, July 09, 2006

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்- நூல் விமர்சனம்- 3

தமிழரசன் பெர்லின்

துரையப்பா

துரையப்பா துரோகி என்ற கூட்டணிக்குரல் இன்னமும் புஸ்பராசவிடம் மாறவில்லை. இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக புகலிடத்தில் வாழ்ந்தும், ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகத்தின் மாற்றுக் கருததுச் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டும், இலக்கிய சந்திப்புக்களில் அதிகாரத்துவ எதிர்ப்பு, பன்மைவாதக் கருத்தியல் ஆதரவு பேசிக் கொண்டுமிருக்கும் புஸ்பராசா தமிழ்த்தேசியம், கூட்டணி என்ற தன் இரண்டு கண்களையும் இழக்கத் தயாராக இல்லை. 'துரையப்பாவை துரோகி' என்றும் கூட்டணியின் தமிழ்தேசியத் திருடர்களை தியாகிகள் என்பதும் காலம் கடந்த கூட்டணிக்கால தமிழ்த்தேசியவாத அரசியல், இளம்பருவக் கோளாறு, பிஞ்சுப்புலம்பல் என்று அவருக்கு இன்றும் கூடத் தோன்றவில்லை. பழைய சக்கேறிய சிந்தனை முறைமாறவில்லை. கூட்டணி போன்றே துரையாப்பாவும் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி. தன்வர்க்கம் சார்ந்து நின்றவர். தன் நலன்களை முதன்மைப்படுத்தியவர். இப்படியிருக்க கூட்டணியினர் தியாக சொருபங்களாகவும் துரையப்பா துரோகியாகவும் சித்தரிப்புக்குள்ளானது கூட்டணி ஜனநாயக உணர்வு வரண்ட சர்வாதிகார தமிழ் தேசிய விளக்கப்படிதானே தவிர வேறு எதுவுமல்ல. கூட்டணியோடு ஒப்பிடுகையில் துரையப்பா யாழ்ப்பாண நகரில் மட்டும் கோலோச்சிய நபர் ஆனால் கூட்டணியோ வடக்குக் கிழக்கில் கட்சி கட்டி நின்ற பெரிய அமைப்பு. ஆள் அணி பிரச்சாரபலம் அதனிடம் இருந்தது. அகிம்சை பேசிய கூட்டணி ஏன் சாதாரண ஜனநாயக வழி அரசியலில் துரையப்பாவை தோற்கடிக்க முடியவில்லை? ஏன் இளைஞர்களை தமது பேச்சின் மூலம் ஏவி விட்டனர்? மறைமுக ஆதரவு தந்தனர்? துரையப்பாவை துரொகி, துரோகி என்று கூட்டணிதான் இளைஞர்கட்கு திரும்பத் திரும்பக் கற்பித்தது. இன்றைய புலிகளின் துரோகி, தேசத்துரோகி, மாவீரர் என்ற பாசிச நியாயங்கட்கான மூலங்கள் கூட்டணியிடம் இருந்தே தோன்றின என்பது புஸ்பராசவிற்கு ஞாபகம் வருவதில்லை.

துரையப்பா கொலைக்கு தான் மட்டுமல்ல மக்களும் மகிழ்ந்தாக புஸ்பராசா எழுதுகின்றார் மாற்றுக்கருத்தியங்களை கொலையூடாக அகற்றும் அதே அரசியல் கலாச்சாரம் தான் புஸ்பராசாவின் தலைவர் அமிர்தலிங்கத்தையும் அவர் நண்பர் சபாலிங்கத்தையும் கூடக் கொன்றொழித்தது. தமிழ் துரோகிகளைப் பற்றி மேடைதோறும் பேசி வந்த அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மதிமுகராசா, சிவமகாராசா, ஆலாலசுந்தரம், தருமலிங்கம் என்று ஒரு தொகைக்கணக்கு இல்லாத கூட்டணி நபர்கள் துரோகி என்று அழிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது. துரையப்பாவின் கொலையில் மக்கள் மகிழ்ந்தார்கள் என்று புஸ்பராசா எழுவது உண்மையல்ல. உண்மையில் மக்கள் திகிலடைந்தனர், இது எந்ததிசையில் செல்லுமோ என்று குழம்பினர். யாழ் நடுத்தரவர்க்கத்தின் ஒரு பகுதி இதை கெட்டித்தனமான வேலை என்று கருதியபோதிலும் துரையப்பாவை அறிந்த பெரும் பகுதி யாழ்ப்பாண மனிதர்கள் பெரிதும் வருந்தினர் என்பதே உண்மை. திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கூட இவங்கள் தொடங்கி விட்டாங்கள. இது எங்க போய் முடியுமோ? என்று சொன்னதாய் கூறப்படுகிறன்து. எந்த துப்பாக்கிகள் துரையப்பாவைச் சுட்டனவோ அவையே இடதுசாரிகளையும் சுட்டன, கடைசியாக கூட்டணியிரையும் சுட்டன. துரையப்பா கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்த கரையூர், பாசையூர் பகுதிகளில் அஞ்சலிக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அநுதாப பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. நல்லூர் அரசடிச்சந்தியில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த இடங்களில் வாகனங்கள் மறிக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன. கூட்டணியோ த.இ.பே. இனரோ அப்பகுதிகளில் எவரும் நுழைய முடியாமல் இருந்தது. துரையப்பா கொல்லப்பட்டு கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்கு பின்பாக கூட்டணியைச் சேர்ந்த ஆலாலசுந்தரம் அரியாலை நெசவு நிலையத்திலிருந்த துரையப்பாவின் படத்தை அகற்ற முயன்ற போது அரியாலை மக்கள் அதனை ஒன்றுகூடி கடுமையாய் எதிர்த்தனர்.

இன்று எவ்வாறு புலிக்கு எதிரான போராட்ட வரலாறு குறித்து வைக்கப்படவில்லையோ, அவ்வாறே அன்று கூட்டணிக்கு எதிரான மக்களின் எதிர்ப்புக்களும் புறக்கணிக்கப்பட்டு கூட்டணி சார்பான வரலாறு மட்டுமே எழுதப்பட்டது. கூட்டணி தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்த போது துரையப்பா விளையாட்டரங்கு, தபாற்கந்தோர்,
நூல்நிலையம், நவீனசந்தை ஆகியவற்றை அமைத்ததுடன் தமிழ் அறிஞர்கள், சிந்தனையாளர்கட்கு சிலைகளை நிறுவினர். அதன் மூலம் அவரும் தமிழ் தேசிய உணர்வுகளில் பங்கு கொள்ள முயற்சித்தார். சங்கிலியனை கூட்டணி புகழ்ந்து தமிழரின் முதல் எழுச்சியின் வடிவமாய் காண்பித்தபோது, துரையப்பா சங்கிலியனுக்கு சிலை வைத்தார். துரையப்பா யாழ்ப்பாண நகரத்தை அழகுபடுத்தினார். கூட்டணியினரோ எமக்கு இத்தகைய சலுகைகள் அல்ல, உரிமைகள் தான் வேண்டும் என்றனர். கூட்டணியின் சிந்தனைச்சிற்பி, கோப்பாய் எம்.பி கதிரவேற்பிள்ளை சங்கிலியன் கொழும்பைக் கேட்டுக் கொண்டு தெருக்கள் அமைக்கவில்லை என்று சொன்னார். ஆனால் இன்றோ கூட்டணி, தமிழரசு முதல் புலிகள் வரை சகல தமிழீழவாதிகளும் அரசு மருந்து, உணவு தரவில்லை, அதைத்திருத்தவில்லை, இதை அமைக்கவில்லை என்று சலுகை கேட்டு யாசிக்கின்றனர். தமிழ் மக்களுக்கான சுயபொருளாதார அமைப்பைக்கட்டுவது பற்றிய ஆரமபத்திட்டம் கூட இன்றுவரை இவர்களிடம் கிடையாது. ஒப்பீட்டு ரீதியில் கூட்டணியின் எம்பி மாரை விட துரையப்பா நேர்மையானவர், எளிமையானவர், மேயராக இருந்த போதும் வெறும் சாரத்துடன் நகரில் நடமாடும் எவரும் எச்சமயத்திலும் கண்டு பேசக் கூடியவராவர். இத்தகைய நிராயுதபாணியான ஒரு நபரைக் கொல்ல பெரும்வீரம் தேவையில்லை.

இங்கு புஸ்பராசா கூட்டணிக்கு எதிரான மாற்றுக்கருத்துடைய எவருக்கும் உயிர்வாழும் உரிமையில்லை என்று மறுக்கிறார். கருத்தை கருத்தால் அல்ல ஆயுத வன்முறையால் அழித்தொழித்தல் நியாயம் என்று ஏற்றுப் பரப்புகின்றார். கருத்து வலியமையற்றவர்களே கொலையை ஏவுகின்றனர். அதன் மூலம் ஏனையோரை அச்சுறுத்துகின்றனர். துரையப்பா கொலையே அமிர்தலிங்கம் கொலைக்கு முன்னோடி என்று புஸ்பராசா புரிந்து கொள்ளவில்லை. தமிழ் மக்கள் சார்ந்த ஒரு கருத்து மட்டுமே நிலவ முடியும் என்பது சமூகமானது எதிர்கருத்துக்கள் இன்றி இயங்க முடியும் என்ற அரசியல் சூனியத்திற்கு புஸ்பராசாவை அழைத்துச் செல்கின்றது. துரையப்பாவை தமிழீழ விரோதி என்ற ஒதுக்கி வைக்கும் புஸ்பராசா துரையப்பாவின் அதே கட்சியின் தலைவியும் தமிழீழத்தின் மிக முக்கியமான எதிரியாக கூட்டணியினரால் வர்ணிக்கப்பட்ட சிறிமாவோ பண்டாராநாயக்கவுக்கு கூட்டணி கொடுத்த வரவேற்பையும் தானும் சேர்ந்து பாதுகாப்புக் கொடுத்தமையையும் எந்த முரண்பாடான உணர்வுமின்றி எழுதியுள்ளார்.

கூட்டணி துரையப்பாவை துரோகி என்று சாட்டிய போது துரையப்பா தமிழரசு, கூட்டணிக்கும்பல்கள் சிங்கள அரசாங்களுடன் சேர்ந்து, ஒத்துழைத்த, பதவிபெற்ற, சலுகைகள் பெற்ற சம்பவங்களை வரிசைப்படுத்தினார். கூட்டணி அரசாங்கத்திடம் இரகசிய உடன்பாடுகள் செய்ததை வெளியிட்டார். கூட்டணி துரையப்பாவின் வாயை மூட விரும்பியது. தமக்கு எதிர்ப்பற்ற அரசியல் போக்கை உருவாக்க முயன்றது. புஸ்பராசா போன்றவர்கள் இத்தகைய போக்குகளின் பிரச்சாரகர்களாவர். யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சிக்கோ, கூட்டணிக்கோ செல்வாக்கு குறைந்த பிரதேசமாகவே இருந்தது. தமிழரசுக் கட்சியை சேர்ந்த மாட்டின் 56 வாக்குகள் மட்டுமே மேலதிகமாப் பெற்று ஒரு முறை வெற்றி பெற்றார். அவரும் கட்சியில் நீண்டகாலம் நிலைக்கவில்லை. தனது மனசாட்சிப்படி கட்சியைவிட்டு வெளியேறியதாய்க் கூறினார். அதனால் "மனச்சாட்சி மாட்டின்" என்று தமிழரசுக்கட்சியால் பழிக்கப்பட்டார். துரையப்பா யாழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். துரையப்பாவை கொல்ல இளைஞர்கள் முயற்சி செய்து வந்தது அமிர்தலிஙகத்திற்கு நன்கு தெரியும். துரையப்பா கொல்லப்பட வேண்டியவர் என்று அமிர்தலிங்கமும் கருதினார், அதற்கு ஊக்கமளித்தார். துரையப்பாவைக் கொல்ல சிவகுமாரன், ஆனந்தகுமார், கிருபாகரன் ஆகியோர் மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபனும் முயன்று வந்தார். துரையப்பா ஆதரவுப் பத்திரிகையொன்றில் திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் ஆங்கிலப்படம் பார்க்க போன செய்தியை நையாண்டிய செய்து எழுதப்பட்டிருந்தமைக்காக துரையப்பாவைக் கொன்று பழிவாங்க காண்டீபன் முயல்கிறார் என்ற செய்தி அப்போது நிலவி வந்தது.

துரையப்பாவின் கொலைச் செய்தியை அமிர்தலிங்கம் புன்சிரிப்போடு கேட்டார் என்று சொல்லப்படுகின்றது. துரையப்பா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை கைவிட முடியாது என்று கூட்டணிப் பொதுச்சபை முடிவெடுத்தது. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நவரத்தினம் போன்றவர்கள் வழக்குகளில் வாதாடினர். துரையப்பா கொலை வழக்கில் கைதான இளைஞர்களை சிறையில் சந்தித்த ஈழத்துக்காந்தி, அகிம்சாவாதி செல்வநாயகம் "உங்களுக்கு யார் வழக்கறிஞர்களாக வேண்டும், ஜி.ஜி பொன்னம்பலம் தேவை என்றாலும் நான் ஒழுங்கு செய்து தருகிறேன்" என்று அவர்களிடம் சொன்னார். தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசார் கூட்டத்தைக் கலைக்க வானத்தை நோக்கி சுட்டபோது மின்சார ஒழுக்கு ஏற்பட்டு ஒன்பது பேர் இறந்தனர். இது பொலிசாரின் பொறுப்பற்ற செயலாகும். இந்த ஒன்பது பேரின் மரணமும் துரையப்பா, சந்திரசேகரா இருவரும் இணைந்து செய்த கொலை என்று கூட்டணி வாதித்ததின் மூலம் துரையப்பாவை கொல்ல வேண்டும் என்ற இளைஞர்களது தீவிரம் அதிகமாகியது. அமிர்தலிங்கம் முதல் காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராசா வரை துரோகி ஒழிப்புப் பேச்சுக்கள் வேகமாயின. புதிய இரைகள் தேடப்பட்டன. கூட்டணி தன் அரசியலுக்காக துரையப்பாவை துரோகியாக்கி கொலை நடைபெறுவதற்கான சூழலை தோற்றுவித்தது.

யாழ் மேயரான துரையப்பா திட்டமிட்டு தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு அழைக்காமல் புறக்கணிக்கப்ட்டார். இதன் மூலம் துரையப்பா கூட்டணியால் தீவிர எதிர்நிலைக்குத் தள்ளப்பட்டார். துரையப்பாவைக் கொல்ல கிட்டத்தட்ட மூன்று தீவிரவாதக் குழுக்கள் அப்போ முயன்று வந்தன. தமிழீழ இலட்சியத்தை எதிர்த்தமைக்காக துரையப்பா துரோகி எனப்பட்டார். இன்று கூட்டணி, புலிகள் இருபகுதியும் தமிழீழ இலட்சியத்தை விட்டு ஐக்கிய இலங்கையுள்தீர்வு, சர்வதேச சமூகம், சமாதானத்தீர்வு, உள்ளக சுயாட்சி, பேச்சுவார்த்தை என்ற அரசியல்போக்குள் செல்லத் தொடங்கி விட்டன. இவர்களை புஸ்பராசா துரோகிகள் என்று அழைப்பதில்லை. கூட்டணி வட்டுக்கோட்டை மாநாட்டில் சகலரையும் விட முன்னேறி விஞ்ஞான சோசலிச தமிழ் ஈழம் என்றது. 1977 இல் கூட்டணி தேர்தலில் வென்றவுடன் தமிழீழத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுவோம் சொந்த தமிழீழ அரசியல் சட்டத்தை அமைப்போம் என்றவர்கள் இன்று புலிகளின் கள்ளவோட்டில் வென்று பாராளுமன்றத்தில் வாழ்க்கை நடாத்துகின்றார்கள். சோசலிசத் தமிழீழம் பேசிய புலிகள் உள்ளக தன்னாட்சிபற்றி பேசத் தொடங்கி விட்டனர். தமிழீழத்தை கைவிட்டதுக்காக அமிர்தலிங்கத்தை சுட்ட பிரபாகரனை இன்று யார் சுடுவது? யார் துரோகிப்பட்டியலில் இடம் பெறச் செய்வது? குருக்கள் குசுவினால் குற்றம் இல்லை என்பதுதான் புஸ்பராசாவின் அரசியலாகும். இட்டாருக்கு இடவும் செத்தாருக்கு அழவும் தெரிந்த வலதுசாரி காரியவாதி புஸ்பராசா.

தமிழாராய்ச்சி மாநாடு

தமிழாராய்ச்சி மாநாடு தனியே இலங்கையரசு மற்றும் துரையப்பா ஆகியேரோலாயே குழப்பட்டதான தமிழர்விடுதலைக் கூட்டணிக் கதை சொல்லலே புஸ்பராசாவிடமும் எந்தவித மாறுதலுமின்றி வெளியிடப்படுகின்றது. அதில் கூட்டணியின் பங்கு குறித்த மீள்பர்வை அவரிடம் இல்லை. அவருடைய அரசியலிருப்பிற்கு அது தேவைப்படவுமில்லை. 1967 இல் பாரிசிலும் பின்பு மலேசியாவிலும் தமிழாராய்ச்சி மகாநாடுகள் நடைபெற்றபோது அது தமிழ் மொழி சார்ந்த ஆய்வாளர்கள் கலந்து கொண்ட மாநாடுளாக இருந்தன. ஆனால் தமிழ் நாட்டில் சென்னையில் தமிழாராய்ச்சி மாநாடு நடாத்தப்பட்ட போது தி.மு.க அதை தன் அரசியல் மாநாடாக்கியது. தனது தமிழின அரசியலுக்கேற்றதாக மாற்றியது. தமிழராய்ச்சி மாநாடு இலங்கையிலும் அதே கதியையே அடைந்தது. கூட்டணி தமிழ், சிங்கள முரண்பாட்டை தனக்கு சாதகமான அரசியலாக்க முனைந்தது. தமிழாராய்ச்சி மாநாட்டு நிர்வாகம் முதலில் மாநாட்டை கொழும்பில் நடாத்தவே திட்டமிட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. ஒரு சர்வதேச மாநாட்டை நடாத்துவதற்கான வசதிகள் கொழும்பிலேயே இருந்தன. இந்த நிலையில் கூட்டணியினர் இதனுள் தலையிட்டனர். அதை யாழ்ப்பாணத்திலேயே நடத்த வேண்டும் என்று வாதிட்டதுடன் மாநாட்டு ஏற்பாட்டாளர்களையும் இணங்க வைத்தனர். யாழ்ப்பாணத்தில் நடத்தினால் அது கூட்டணியின் அரசியலுக்கு சாதகமாகி விடும் என்றதால் அரசாங்கம் அதை எதிர்த்தது. இருபிரிவுக்கும் நடந்த இழுபறிகளின் பின்பு யாழ்ப்பாணத்தில் நடத்த அரசாங்கம் வேறுமார்க்கமின்றி ஒப்புக் கொண்டது. இதில் கூட்டணி தான் முதன் முதலாவது வெற்றியை ஈட்டியதாக கருதியது.

யாழ்ப்பாணத்து தமிழாராய்ச்சி மாநாடு ஒரு மொழியாய்வு மாநாடு, அறிவியல் ரீதியில் ஆய்வு செய்யும் நிகழ்வு என்பது போய் கூட்டணிப்பிரச்சாரம், தமிழ் தேசிய உணர்வுகளை தூண்டும் மாநாடு என்ற போக்கை எடுத்தது. மலிவான தமிழ் தேசிய உணர்வுகளை கிளறக்க கூடிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆய்வறிஞர்கட்கும் மொழியாய்வாளர்கட்கும் பதிலாக தமிழ் தேசியவாதிகளும், பழம் பெருமை பேசுபவர்களும் அழைக்கப்பட்டனர். கருணாநிதி முதல் சாலை இளந்திரையன் வரை வரவுள்ளதாய் பேரொலி கிளப்பட்டது. சுகல தடைகளையும் மீறி தமிழராய்ச்சி மாநாடு தமிழினத்தின் எழுச்சி மநாடாக நடைபெறும் என்று கூட்டணி அறிவித்தது. ஏட்டிக்குபோட்டியான காரியங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு அப்போபது அதன் மேயராக இருந்த துரையப்பாவிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை தமிழ் துரோகிகட்கு தமிழராய்ச்சி மாநாட்டில் இடமில்லை என்று கூட்டணி பிராச்சாரம் செய்தது. எனவே துரையப்பாவும் கூட்டணியின் பெயரால் தமிழராய்ச்சி மாநாட்டிற்கு எதிரானார். இடதுசாரி தமிழ் ஆய்வறிஞர்கள், சிந்தனையாளர்கள் போன்றோர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர். பாரிஸ், கோலாலம்பூர் போன்ற மாநாடுகளுக்கு அழைக்கப்பட்ட பேராசிரியார் கைலாசபதி உட்பட இடதுசாரி கருத்துக்களை உடையவர்கள் ஒதுக்கப்பட்டனர். தம் சொந்த மண்ணில் நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாடு அவர்கள் பங்கு கொள்ளவிடாது கூட்டணி தடை விதித்தது, அவமானப்படுத்தியது. மாறாக பேராசிரியர் வித்தியானந்தன் போன்ற தேசியவாதிகள், பண்டிதர்கள், புலவர்கள், பழம் தமிழரசுக்கட்சி தமிழனவாதிகள் அழைக்கப்பட்டனர். ஆனால் புஸ்பராசாவோ அன்று சுதந்திரன் பத்திரிகை குயுக்தியாய் கைலாசபதி போன்றவர்கள் பகிஷ்கரித்தாய் எழுதியது போன்று இவரும் எழுதுகிறன்றார். தமிழ் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக்கழகம், கொம்யூனிஸ்கட்சி தொழிற்சங்கங்கள், சிறுபான்மை தமிழர் அமைப்புக்கள் என்று கூட்டணிக்கு எதிரான எச்சக்திகளையும் கூட்டணி தமிழராய்ச்சி மாநாட்டில் நுழையவிடவில்லை. எல்லோரும் தமிழ் துரோகிகள் என்பதே கூட்டணியின் தீர்ப்பாகும். இதை அவதானிப்பவர்கட்கு இன்றைய புலிகளின் தாம் மட்டுமே தனிப் பெரும் இயக்கம் தமிழ் மக்களின் ஏக தலைமை என்ற குரல்கள் அதிசயமளிக்கமாட்டா.

தமிழராய்ச்சி மாநாட்டிற்கு இலங்கைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டவர்களில் ஒருவரான இரா.ஜனார்த்தனம் இரகசியமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அவர் கூட்டணியின் உதவியுடன் யாழ்ப்பகுதிகளில் சுற்றி வந்தார். முன்பு தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அறியப்படாத அநாமதேயமாய் இருந்த ஜனார்த்தனம் இந்த தமிழாராய்ச்சி மாநாட்டின் "சாகசம் மிக்க கதாநாயகன்" ஆக்கப்பட்டார். புஸ்பராசாவோ ஜனார்த்தனம் எந்த மேடையிலும் பேசவில்லை என்கிறார். யாழ்ப்பாணத்தில் கூட்டணி நபர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறு சிறு கூட்டங்களில் ஜனார்த்தனம் பேசினார். அத்தோடு மாநாட்டு மேடையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நயினார் முகம்மது பேசிக் கொண்டு இருந்த போது தான் பொலிசார் தாக்கியதாக புஸ்பராசா பொய் சாட்சியமளிக்கிறார். நடந்தது என்னவெனில் நயினார் முகம்மது பேசிக் கொண்டு இருந்த போது தான் கதாநாயகன் ஜனார்த்தனம் மேடையில் தோன்றினார். உடனே மேடைக்கு முன்பு இருந்த சில கூட்டணி இளைஞர்கள் எழுந்து "ஜனார்த்தனம் வாழ்க" என்று சத்தமிட்டனார். உண்மையில் அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஜனார்த்தனம் யார் என்பது தெரியாமல் தான் இருந்தது. " ஜனார்த்தனம் வாழ்க" குரலையடுத்து கூடியிருந்த மக்கள் ஜனார்தனத்தை பார்க்க எழுந்தனர். எனவே கூட்டம் குழப்ப நிலையை அடைந்தது உடனே ஜனார்த்தனம் "எதிர்வரும் தைப்பொங்கல் போல் தமிழின உணர்வு பொங்குவதை இங்கு நான் காண்கிறேன்" என்று மக்களை உணர்ச்சியேற்றனார். இதனை புஸ்பராசா அறியவில்லை என்பதை நம்பமுடியாது. பல பத்தாயிரம் மக்கள் திரண்டுள்ள இடத்தில் பொலிசாரல் கைது செய்யப்படக் கூடிய நிலையில் உள்ள ஜனார்த்தனம் போன்ற ஒருவரை மேடையில் தோன்ற அப்புக்காத்துமாரின் கட்சியான கூட்டணி எப்படி அனுமதித்தனர்? மாநாட்டின் ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்துமே கூட்டணியினரிடமும், அவர்களின் இளைஞர்களிடமும் தான் இருந்தது. மாநாட்டுக்குழுவில் பெரும் பகுதியை அவர்களே கைப்பற்றியிருந்தனர். எனவே இது தற்செயலாக நிகழவில்லை. கூட்டணி இந்தப் பரபரப்பை ஏற்படுத்த விரும்பியது. தம்மை வீரத்திற்கு எடுத்துக்காட்டாக காட்டிக்கொள்ள விரும்பியது. ஆபத்தான வெளிப்படையான ஆத்திரமூட்டல்கள் மூலம் பொலிசாரை மக்களுக்கு எதிராக இறக்கிவிட்டது. பகைமை நிறைந்த நிலையில் பொலிசார் தமிழ் மக்களுக்கு எதிராக எப்படி செயற்படுவார்கள் என்பது கூட்டணிக்கு நன்கு தெரியும். தெரிந்தே கூட்டணி இத்தகைய விளையாட்டுக்களை அரங்கேற்றியது. இதில் கூட்டணியின் பாத்திரம் ஏதோ அப்பாவிகளின் பாத்திரமல்ல.

ஜனார்த்தனன் மேடையில் தோன்றியதும் பொலிசார் ஜனார்த்தனத்தை கைது செய்யவும் மேடையை நோக்கி செல்லவும் முயன்றனர். இடையில் தடையாக இருந்த மக்களை வானத்தை நோக்கி சுட்டுக் கலைக்க முயற்சி செய்தனர். அதன் போது மின்சாரத் தொடர்புகள் அறுந்து மக்கள் மேல் விழுந்தன. இது எதிர்பாராமல் நடந்த சம்பவமே எனினும் ஒரு இனவாதப்போக்குக் கொண்ட பொலிசார் மக்களிற்கு எதிராக இறங்கியதில் கூடடணிக்கு எப்பங்கும் இல்லையா? பொலிஸ் பயங்கரவாதம் சிறிது ஆத்திரமூட்டல் ஏற்பட்டாலும் செயலில் இறங்கிவிடும் என்று கூட்டணியினரின் சட்ட மூளைகட்கு தெரியாதா? பொலிஸ் இறங்குமாயின் அதற்கு எதிராக பொலிசிடம் இருந்து மக்களை பாதுகாக்க கூட்டணியிடம் தயாரிப்புக்கள் ஏதும் இருந்ததா? ஆனால் கூட்டணியும், சுதந்திரனும் தமிழராய்ச்சி மாநாடு நிகழ்வில் 9 பேர்கள் மரணத்திற்கு அரசாங்கமும் துரையப்பாவுமே காரணமென்றும், பொலிசார் சுட்டு 9 பேர்கள் இறந்ததாயும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. துரைய்ப்பாவுக்கு யாழ்ப்பாண நகருக்குள் கூட்டணியை விட அதிக செவ்வாக்கு இருந்தது. துரையப்பா நினைத்திருந்தால் அவரால் கூட்டணிக்கு பலத்த எதிர்ப்புக்களை காட்டியிருக்க முடியும். கரையூர், பாசையூர், ஆரியகுளத்தடி ஆகிய பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உதவியைப் பெற்றுக் கூட்டாக பதிலடி கொடுக்க முடிந்திருக்கும். ஆனால் துரையப்பா அப்படிச் செய்யவில்லை.

தமிழாராய்ச்சி மாநாட்டின் மரணங்களிற்கு துரையப்பாதான் காரணம் என்ற வெறியூட்டுதலையடுத்து கூட்டணியின் தீவிரவாத இளைஞர்கள் துரையப்பாவைக் கொல்லச் சபதமெடுத்தனார். சத்தியசீலன், சிவகுமாரான், ஆனந்தகுமார், காண்டீபன், கிருபாகரன், பிரபாகரன், நடேசானந்தம், பிரான்சிஸ் போன்றோர் குழுக்களாக இதற்கு முயன்றனர். பொலிஸ் உதவியட்சராக இருந்த சந்திரசேகரா மீது கொலை முயற்சிகள் நடைபெற்றது. இளைஞர்கள் கொலைப்பட்டியல் தயாரிக்கத் தூண்டிய கூட்டணியினேரே பின்பு கொலைப்பட்டியலில் இடம் பெற்றனர் என்பது வரலாறாகும். தமிழ் - சிங்கள முரண்பாடுகள் இரு பகுதி முதலாளிய சக்திகளாலும் தூண்டப்பட்டதின் மூலம் ஒன்றிணைந்த தமிழ் சிங்கள மக்களின் எழுச்சி, சோசலிசப்புரட்சி என்பன சிதைக்கப்பட்டன. தமிழ் தேசியவாதத்தை சிங்கள இனவாதத்திற்கு பதிலீடாக்கியவர்கள் சொந்தத தமிழ்க் குறுந்தேசியவாத்தினாலேயே தின்னப்பட்ட காட்சி இன்று தீர்ப்புக்கு விடப்பட்டுள்ளது. இதிலிருந்தும் கற்க புஸ்பராசவிற்கு அரசியல் சேமிப்பு உதவிக்குவரவில்லை. அவர் இன்னமும் புலிப்பாசிசத்திற்கு காவல் சேவை செய்து வருகின்றார்.

ஈழவிடுதலை இயக்கம்

ஈழவிடுதலை இயக்கம் ஏன் எப்படித் தோன்றியது? எந்தக் காலத்தில் தமிழர் இளைஞர் பேரவையிலிருந்து வேறுபட்டது? அதன் மரணம் எப்படி நிகழ்ந்தது? என்று எந்தவொரு அறிவித்தலையும் புஸ்பராசா எமக்கு தரவில்லை. த.இ.பேரவை போன்று ஈழவிடுதலை இயக்கத்திலும் இவரே பிரதான தலைமைக் கர்த்தராக மிளிர்ந்தார் என்ற செய்தி மட்டுமே எமக்கு விடப்பட்டுள்ளது. ஒரு வரலாறு பதிவு செய்யப்படுகின்றது ஆவணமாகின்றது வரலாற்றுணர்வு புஸ்பராசாவிடம் இல்லை. தனது சொந்த தனிமனித ஆசைகட்கு முதன்மை தருவதினூடு அவர் வாசிப்பவரை தவறாக நம்ப வைக்கிறார். ஈழவிடுதலை இயக்கம் 1975 இல் கூட்டணி நடாத்திய சட்ட மறுப்புப் போராட்ட ஊர்வலத்தில் எழுந்த முரண்பாட்டில் இருந்தே பிறந்தது. நீண்ட காலமாய் கூட்டணியின் வீர வசனங்களில் அலுததுப் போன இளைஞர்கள் இந்தச் சட்ட மறுப்பு நடவடிக்கையில் பொலிசார் ஏற்படுத்திய வீதித்தடையை உடைத்துக் கொண்டு போக வேண்டும் என்றனர். ஆனால் மேடைப்பேச்சுக்களில் வீரகாவியம் புனைந்து இளைஞர்களை சூடேற்றிய கூட்டணியோ தலைமை, கட்டுப்பாடு, அகிம்சை என்று கூறி தனது ஓட்டுக்குள் சுருங்கிக் கொண்டது. செல்வநாயகம் பொலிஸ் ஏற்படுத்திய தடைக்கு முன்பாக கதிரை போட்டு உட்கார வைக்கப்பட்டார். இளைஞர்களோ பொலிஸ் ஏற்படுத்திய தடையை உடைத்துக் கொண்டு போக வேண்டும் என்றனர். கூட்டணி வழக்கமான தனது அகிம்சை போராட்டங்களின் பொலிஸ் விதித்த தடைகள், வேலிகளில் வாழ்ந்து பழக்கப்பட்ட கட்சி. எனவே அண்ணன் அமிர் இளைஞர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்ற போது இளைஞர்களோடு முரண்பாடு ஏற்பட்டது. சட்டத்திற்குட்பட்ட சட்டத்தரணிகளின் கட்சியான கூட்டணியால் போராட்டப்பாதையில் எந்த வழிகாட்டலையும் வேலைத்திட்டத்தையும் முன்வைக்க முடியவில்லை. தொடர்ச்சியான அரசியலும் செயற்பாடும் இருக்கவில்லை. கூட்டணியின் அரசியல் வெறுமையை உணர்ந்த இளைஞர்கள் மாற்றுக்களைத் தேட முயன்றனர்.

இந்த இளைஞர்கள் உண்மையில் பெருந்தொகையானவர்களாகவோ, பரந்த மக்கள் போராட்டத்தில் பங்கேற்கும் அவசியத்தை உணர்ந்தவர்களாகவோ இருக்கவில்லை. தமிழ் தேசியம் சார்ந்த அரசியல் எத்தகையது என்ற மதிப்பீடுகளோ, போராட்டம் குறித்த ஞானம் கொண்டவர்களாகவோ இருக்கவில்லை. எனினும் தொடர்ந்து கூட்டணியை நம்பிப் பிரயோசனம் இல்லையெனவும் த.இ.பேரவை என்பது இளைஞர்களை தமக்குள் கட்டி வைத்திருக்கக கூட்டணி ஏற்படுத்திய அமைப்பு என்று இவர்கள் கருதினர். எனவே த.இ.பேரவையிலிருந்து பிரிந்த இந்த இளைஞர்கள் தேர்தலில் நம்பிக்கை கொண்ட கூட்டணிக்கு மாறக உள்ளேயும் வெளியேயும் வெளியேயும் தேர்தல் இல்லை என்ற கோசத்துடன், ஈழவிடுதலை இயக்கத்தை ஆரம்பித்தனர். எவ்வழி நல்வழியோ அவ்வழியே எம்வழி என்று அறிவித்துக் கொண்டனர். இவர்கள் போராட்டம் என்றால் மக்களிடம் செல்வது அவர்களிடம் அரசியலை தொடக்குவது என்ற புரிதலுக்கு பதிலாக இவர்கள் இளைஞர்களைமட்டும் திரட்ட முயன்றனார். முத்துக்குமாரசுவாமி, வரதராசா, புஸ்பராசா, பாலகுமார், பிரான்சிஸ் (கி.பி. அரவிந்தன்) குமரன் மாஸ்டர், பத்மநாபா, சந்திரமோகன், தங்கமகேந்திரன் போன்றோர் இதில் முக்கியமாக இருந்தனர். இவர்கள் மூன்று பேர்களைக் கொண்ட முதன்மைக் குழுவையும் 5 பேர்களைக் கொண்ட பொதுக்குழுவையும் தெரிவு செய்து கொண்டதோடு, ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் 3 பேர்களையும் நியமித்தனர். அமைப்பின் செயலாளராக சந்திரமோகனும் பொருளாராக தங்கமகேந்திரனும் இருந்தனர். தங்கமகேந்திரன் தவிர இவர்கட்கு யாழ் குடாநாட்டிற்கு வெளியே எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. த.இ.பே.போன்று இதுவும் யாழ் குடாநாட்டு இயக்கமாகவேயிருந்தது. 1975 இல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தொடங்கிய சில மாதங்களிலேயே துரையப்பா கொலை வழக்கில் முக்கியமானவர்கள் பிடிக்கப்பட்டு விட்டனர். இவர்கள் 'எரிமலை' என்ற பத்திரிகையை ஆரம்பித்து சில இதழ்கள் வெளியிட்டு ஓய்ந்தனர்.

1977 இல் கூட்டணி தேர்தலில் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு 'தமிழீழத்திற்கான அங்கீகாரம்' என்று குரல் கொடுக்கத் தொடங்கியிருந்தது. உள்முரண்பாடுகளினால் திணறி பலவீனமடைந்திருந்த ஈழவிடுதலை இயக்கம் இப்போக்கினுள் இழுபடத் தொடங்கியது. கூட்டணி அமிர் ஆதரவாளரான புஸ்பராசா மற்றும் முத்துக்குமாரசுவாமி போன்றோர் கூட்டணியை இத்தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்றனர். வரதராசா, குமரன் மாஸ்டர், பத்மநாபா, பாலகுமார் போன்றவர்கள் கூட்டணி, தேர்தல், இவைகட்கு அப்பால் தனிநாட்டு இலட்சியத்தை முதன்மைப்படுத்தி போராட வேணடும் என்றனர். ஏற்கனவே அரசியல் தத்துவார்த்த ஒன்றிணைப்போ, ஒழுங்கான இயக்கக்கட்டமைப்போ இல்லாதிருந்த இந்த அமைப்பு இத்தோடு உடைந்து சிதறியது. புஸ்பராசா, முத்துக்குமாரசுவாமி யைத் தவிர கிட்டதட்ட மற்றவர்கள் இயக்கத்தைவிட்டு வெளியேறிச் சென்றனர். புஸ்பராசா அமிர்தலிங்கத்திடம் மீண்டும் சரண் புகுந்தார். இயக்கதிலிருந்து வெளியேறியவர்கட்கு பத்மநாபா போன்றவர்கள் ஊடாக EROS இரத்தினசபாபதியின் தொடர்பும் தேசியம், சோசலிசம் என்பவை பற்றிய தொடக்க நிலைக் கருத்துக்களும் ஏற்பட்டு இருந்தனர். இவர்களில் பலர் பின்பு EROS,EPRLF இயக்கங்களாக மாறினர். புஸ்பராசா தனது நூலில் EROS இரத்தினசபாபதியை ஒவ்வாதவராக காணுவது இத் தொடர்புகளின் பின்புலத்தில் தான். இடதுசாரிப்போக்குள்ளவர்கள் மேலான வெறுப்பு புஸ்பராசவிடம் எல்லா இடமும் நிறைந்த நிற்கின்றது. கூட்டணி அமிர்தலிங்கம் மேலான நேசமோ சகல திசைகளிலும் முகம் காட்டுகின்றது. மீணடும் கூட்டணியில் சேர்ந்த புஸ்பராசாவிற்கு த.இ.பே இல் பதவி கிடைத்தது, கூட்டணி மேடைகள் கிடைத்தன.

புலோலி வங்கிக் கொள்ளையில் தனக்கு தொடர்பில்லை என்று புஸ்பராசா தனது நுhலில் எழுதியுள்ளார். இக் கொள்ளை இவர் சார்ந்த ஈழவிடுதலை இயக்கம் தான் நடாத்தியது. அப்போது புஸ்பராசா சிறையில் இருந்த போதும் இவரது குடும்பத்தினரும் இவரது இயக்கமும் இதில் பங்கு கொண்டிருந்தனர். புலோலி வங்கிக் கொள்ளையில் கற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களும் ஈழவிடுதலைஇயக்கத்தை சேர்ந்தவர்கள். தண்டனை விதிக்கப்பட்ட தங்கமகேந்திரன், ஜெயக்கொடி, நல்லையா, கோவை நந்தன் போன்றோரும் இதில் அடங்குவர். புஸ்பராசாவின் தாயார், தங்கை போன்றோரும் கைது செய்ய்ப்பட்டனர். கல்யாணி, தெய்வேந்திரராணி புஸ்பராணி போன்ற பெண்கள் கொள்ளைச் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைததாகி சித்திரவதைக்கும் பலவகை அவமானங்கட்கும் உட்படுத்தப்பட்டனர். அப்போ யாழில் இயங்கிய 4ஆம் மாடியின் பிரிவான DCDB க்கு பொறுப்பாக பத்மநாதன் இருந்தார் இவரே புலோலி வங்கிக்கொள்ளையை கண்டு பிடித்தவர். இவருடன் விசாரணை சித்திரவதைகளில் ஈடுபட்ட சண்முகநாதன், கருணாநிதி போன்றர் சிஐடி பொலிசாரும் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புலோலி வங்கிக் கொள்ளையில் கிட்டத்தட்ட எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டது. இந்த நகைகளின் ஒரு பகுதி புஸ்பராசா வீட்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாய் சொல்லப்படுகின்றது. புலோலி வங்கி ஒரு கூட்டுறவுக் கிராமிய வங்கியாகும். இதில் ஏழை விவசாயிகளே தம் நகைகளை அடைவுவைத்து இருந்தனர். இதில் கொள்ளையிடப்பட்ட நகைகள் பலரால் தாறுமாறாய் செலவு செய்யப்பட்டது. தம் சொந்த உல்லாசங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாய் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இக் கொள்ளையில் முக்கிய பங்கு வகித்த சந்திரமோகன் பின்பு அரசியலில் இருந்து ஒதுங்கி, ஒரு வியாபார நிலையத்தை தொடங்கினார். சந்திரமோகனின் தந்தையார் பொலிசில் செல்வாக்கு கொண்டு இருந்தமையால் முக்கிய குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார். கொள்ளையை நடத்தியவர்கள் பொலிசார் கண்காணிக்க கூடிய கூட்டணிசார்ந்த நபர்களின் வீடுகளிலேயே சென்று ஒழிந்தமையால் இலகுவாகப் பிடிபட்டனர். கொள்ளைப்பணத்தில் வெளிப்படையாக கார், மோட்டார்சைக்கிள் என்பன வாங்கி ஓட்டப்பட்டமை இயக்கக் கட்டுக்கோப்பு, தலைமறைவாழ்வு சார்ந்த கவனமின்மை என்பன கொள்ளை பிடிபட முக்கிய காரணமாகும். மக்களில் நம்பிக்கையற்ற இந்தச் நபர்கள் சிவகுமாரன் வழியில் வங்கிகளை கொள்ளையிட்டு, ஆயதம் வாங்கி கொஞ்ச இளைஞர்களைத் திரட்டி போராட முடியும் என்று நம்பி தோல்வி கண்டனர். இங்கு புஸ்பராசா சொற்பமாக எழுதி பெருந்தொகை செய்திகளை மறைத்து விட்டார். மறைக்கப்பட்டவை, தவிர்க்கப்பட்டவை, திட்டமிட்டே இருளில் தள்ளப்ட்டவை என்பன எதிர்காலத்தில் கிண்டப்படும், கிளறப்படும் என்பதை மறந்து விட விரும்புகிறார்.

தமிழ் இளைஞர் பேரவையும் தமிழ் மாணவர் பேரவையும்

தமிழ் இளைஞர் பேரவை> தமிழ் மாணவர் பேரவை போன்றவை பற்றிய புஸ்பராசாவின் வரைவுகள் கூட்டணியினரின் வரலாற்று எழுதலுக்குட்பட்டதாகும். த.இ.பே. தோற்றத்தை தமிழ் மாணவர் பேரவையின் உருவாக்கத்தினூடுதான் காண வேண்டும். புஸ்பராசா இரண்டையும்; வெவ்வேறாகக் காட்ட முயல்கின்றார். தமிழர் மாணவர் பேரவை கூட்டணிக்கு வெளியே சுதந்திரமாய் பிறந்தது. சத்தியசீலன், சிவகுமாரன், அரியரட்ணம் போன்ற நடுத்தரவர்க்கம் சார்ந்த உத்தியோத்தரின் பிள்ளைகளே இதைத் தொடங்கினார்கள். இவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக உதித்தெழுந்தாய் சொல்லப்பட்ட போதும் வெகுவிரைவாகக் கூட்டணியின் அரசியல் சுலோகங்களை தமதாக்கிக் கொண்டனர். இந்த மக்கள் அடிப்படையற்ற பொறுமை கெட்ட தீவிரவாத சக்திகள் துரோகிபட்டியல்களை முதன் முதலில் தயாரிக்கத் தொடங்கினர். ஒரு சில ஆயுதங்கள், வெடிகுண்டு நடவடிக்கைளில் இறங்கினர். இவர்களது ஆயுதக்கவர்ச்சி, துரோகி ஒழிப்பு முயற்சிகள் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்திற்கு வீரதீர காட்சியாக விளங்கியது. இளைஞர்களின் அரசியல் முயற்சிகள் வளருவதையும் தன்கட்டுகடங்காமல் போவதையும் கண்ட அமிர்தலிங்கம் சுதந்திரன் பத்திரிகையில் தமிழரசு வாலிப முன்னணி தொடங்கப்படுவதற்கான அழைப்பை வெளியிட்டார். தமிழரசுக் கட்சியில் முன்பே தமிழரசு வாலிப முன்னணி என்ற பத்து இருபது பேர்களைக் கொண்ட அமைப்பொன்று இருந்தது. இந்த அமைப்பு கட்சிக்கு கொடி கட்டும், மண்கிண்டி மேடைபோடும் அமைப்பாக இருந்தது.

தமிழரசு வாலிப முன்னணி தொடக்கம் பற்றி செய்தி சுதந்திரனில் வெளிவந்ததும் தமிழர் மாணவர் பேரவை ஒரு சுதந்திரமான அமைப்பு எனச் சொல்லி வந்த சத்தியசீலன், அமிர்தலிங்கத்தை ஓடோடிச் சென்று சந்தித்து நாம் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டோம் என்று உறுதி தந்தார். எனினும் ஆயுத சாகசம் செய்த இளைஞர்கட்கு வெளியே தமது கட்சிக்கு அடங்கக்கூடிய இளைஞர் அமைப்பை தொடங்குவதன் மூலம் தமிழ் மாணவர் பேரவையை வலுவிழக்கச் செய்ய அமிர்தலிங்கம் முயன்றார். அமிர்தலிங்கம் இக்காலத்தில் அடிக்கடி இளைஞர்களின் கட்டுப்பாடு பற்றி பேசியதுடன் தமது தலைமையை ஞாபகமூட்டும் பேச்சுக்களை நிகழ்த்தினார். தி.மு.கவிற்கு தமிழ்நாட்டில் ஒரு தமிழ் இளைஞர் பேரவை இருந்தது போலவே இங்கும் கூட்ணிக்கும் ஒரு தமிழர் இளைஞர் பேரவை தொடங்கப்பட்டது. தலைவராக தமிழரசு வாலிப முன்னணியைச் சேர்ந்த மாவை சேனாதிராசா போன்றவர்களுடன் கூட்டணி ஆதரவு இளைஞர்கள் அதில் நிரப்பட்டனர். 1974 இல் நடந்த கூட்டணியின் வட்டுக்கோட்டை மாநாட்டில் இந்த அமைப்பு கூட்டணியின் இளைஞர் அமைப்பாக உத்தியோகபூர்வமாக ஏற்கப்பட்டது. கனகமனோகரன், எஸ்.கே.மகேந்திரன், மதிமுகராசா, சிவமகராசா, காங்கேசன்துறை கணேசமூர்த்தி, திருமலை சிறீஸ்கந்தராசா, மண்டூர் மகேந்திரன், ரகுபதிபாலசிறீதரன், குணாளன், பீற்றர் பொன்கலன், புஸ்பராசா, சேயோன் மற்றும் கூட்டணி ஆதரவுச்சக்திகள் இளைஞர் பேராவையினுள் அணி கட்டப்பட்டனர். இளைஞர் பேரவை கூட்டணியின் செல்வாக்கு பலம் ஊடாக விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அது மிகவும் சிறுபகுதி இளைஞர்களையே உட்கொண்டு இருந்தது. தமிழ் மாணவர் பேரவையானது சிவகுமாரனின் மரணம், சத்தியசீலன் கைதுடன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. தமிழ் இளைஞர் பேரவை கூட்டணியின் தொடர்பற்று சுதந்திரமாக இயங்கியது என புஸ்பராசா எழுவதுவது உண்மையல்ல. த.இ.பே கூட்டணியின் இளைஞர் அமைப்பு என்று அமிர்தலிங்கம் பல தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருக்கின்றார். கூட்டணியிலிருந்து த.இ.பேரவையிலிருந்து உடைத்துக் கொண்டு போக முயற்சித்தமைக்காகவே சந்ததியார் காலத்து த.இ.பேரவை - கூட்டணி நபர்ளால் சகல திக்குகளிலிமிருந்து தூசிக்கப்பட்டார்.

த.இ.பே உண்மையில் கூட்டணியின் கட்டளைக்குட்பட்டே இயங்கியது. மாவை சேனாதிராசா, கனகமனோகரன், புஸ்பராசா, சிவமகராசா போன்றவர்கள் கூட்டணித்தலைமையின் விசுவாசிகளாக, அண்ணன் அமிர்தலிங்கத்திற்கு எதிர்வார்த்தை பேசாத அன்புத்தம்பியராக இருந்தனர். த.இ.பே அலுவலகம் யாழ் மெயின் வீதியில் உள்ள கூட்டணியின் கட்சி அலுவலகத்தின் ஒரு பகுதியிலேயே இயங்கியது, கூட்டங்களை நடாத்தியது. தனது கடிதத் தொடர்புகட்கு அது கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட அரசபணி இலவச தபாற் சேவைகளைப் பயன்படுத்தினர். எம்பிமாரின் பஸ், புகைவண்டிப் பாஸ்களையும் பாவித்தனர். புஸ்பராசாவின் வர்ணனை போல் ஒருபோதும் கூட்டடணியின் செல்வாக்குக்கு வெளியே சுயமாக இயங்கியது கிடையாது. த.இ.பேரவையில் இருந்து உடைந்து ஈழவிடுதலை இயக்கம் பிறந்த போது ஒரு குறுகிய காலம் மட்டும் தான் புஸ்பராசா த.இ.பேரவைக்கு வெளியே இருந்தார். பின்பு அவர் அதற்கே விரைவாகத் திரும்பி விட்டார். ஈழவிடுதலை இயக்க உருவாக்கத்தில் வரதராசா, சந்திரமோகன், முத்துக்குமாரசுவாமி போன்றவர்களையே முக்கியமாய் குறிப்பிட வேண்டும். இதில் புஸ்பராசாவின் பங்கு சிறியதும் ஊசலாட்டம் நிறைந்ததுமாகும். த.இ.பேரவையில் கூட புஸ்பராசா முக்கியமாக இருந்த காலம் மிகவும் சொற்ப காலகட்டமாகும்;. த.இ.பேரவையிலிருந்து கூட்டணியின் மிதவாதத்திற்கு எதிராக முதலில் கலவரம் செய்தவர் சந்ததியார்தான். 1975 இல் த.இ.பேரவையில் இணைந்த சந்ததியார் த.இ.பேரவையின் மூத்த முதியவர்களை எல்லாம் தாண்டி விரைவாக முன்னேறி வந்தார். அவர் புஸ்பராசா போன்றவர்களை மாதிரி அமிர்தலிங்கத்தின் ஆளுமைக்கும் முகத்திற்கும் அஞ்சிப் பணிந்தவரல்ல. முதல் முறையாக அரசியலை முற்போக்குத்திசையில் எதிரொலிக்க முனைந்தார். த.இ.பே தனிவழி செல்லும் கூட்டணியின் அரசியல் சர்வாதிகாரத்திலிருந்து விடுபடும் என்று அவர் அறிவித்தார். ஆங்கிலப் புலமை சட்டதரணிகள், எம்பிமார் என்ற தராதரம், மேடைப்பேச்சுத்திறன் கொண்ட கூட்டணிக்கு எதிராக முதலாளித்துவம், சோசலிசம் என்று சிந்திக்க கூடிய இளைஞர் அணியொன்றை உருவாக்கினார். யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் வளைய வந்து கொண்டிருந்த த.இ.பே வன்னிக்கும், மன்னாருக்கும், கிழக்குமாகாணத்திற்கும் சென்றது. வன்னிப்பிரதேசத்தில் பீற்றர் பொன்கலன் போன்ற கூட்டணி ஆதரவு த.இ.பே நபர்களின் தனிமைப்போக்கிலிருந்து விடுபட்டு வன்னி எங்கும் கூட்டங்களை நடத்தினார். வவுனியா, முல்லைத்தீவு, மாங்குளம், புளியங்குளம், கனகராயன்குளம், முள்ளியவளை, வவுனிக்குளம் என்ற சகல இடமும் த.இ.பே கிளைகள் நிறுவப்பட்டன. இரவில் பெற்றோல்மாக்ஸ் வெளிச்சத்தில் மரங்களின் கீழே கூடக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன.

தமிழர் விடுதலைக்கூட்டணி எம்பிமார்கள் தமது தொகுதிகளில் முடிந்தளவுக்கு சந்ததியார் காலத்தைய த.இ.பே அமைப்புக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினர். இளைஞர்களைப் பிளவு படுத்தினர். முல்லைத்தீவு எம்பி செல்லத்தம்பு தனது தொகுதியில் த.இ.பே கூட்டங்கள் எதுவும் வைக்க கூடாது என்று கட்டளையிட்டார். சந்ததியார் காலத்தில் கிழக்கில் த.இ.பே வளர்ந்தது. அமைப்பின் செயலாளராக முதன்முதலாக மட்டக்களப்பைச் சேர்ந்த வாசுதேவா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 டிசம்பரில் கிழக்கில் புயல் வீசிய போது சந்ததியார் தலைமையிலான த.இ.பே மட்டக்களப்பு சென்று நிவாரண வேலைகளில் ஈடுபட்டது. அப்பிராந்திய மக்களின் நன்மதிப்பைப் பெற்றது. வடக்கு கிழக்கு இளைஞர்கள் இணைந்து பணியாற்றினர். த.இ.பே தமிழ் பகுதி எங்கும் பகிரங்கப் பொதுக் கூட்டங்களை முதன் முதலாக தனியே நடத்தியது. யாழ் முற்றவெளியில் நடத்திய பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு, வவுனியா உட்பட பல இடங்களில் இத்தகைய பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கூட்டணியும் அமிர்தலிங்கமும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டனர். கூட்டணியும், அமிர்தலிங்கமும் சந்தியார் அணியைத் தொலைக்க வழி தேடினர். அமிர்தலிஙகம் அடாத்தாக த.இ.பே. நிர்வாகத்துள் தலையிட்டு தானே கையெழுத்திட்டு த.இ.பே பொதுச்சபை உறுப்பினர்கட்கு பொதுச்சபை கூடவுள்ளதாய் அறிவித்தல் அனுப்பினார். உண்மையில் த.இ.பேரவை பொதுச்சபையைக் கூட்ட சந்ததியார் தலைமையிலான நிர்வாக அணிக்கு உரிமை இருந்தது ஆனால் அமிர்தலிஙகம் த.இ.பே கூட்டணியின் இளைஞர்அணி பிரிந்து போக உரிமையில்லை வேண்டுமானால் இவர்கள் போய் தனியான அமைப்பை உருவாக்கட்டும் என்று நியாயம் பேசினார்.

இதன் முன்பு கூட்டணியின் ஆட்கள் என்று கருதப்பட்ட மாவை சேனாதிராசா, எஸ்.கே. மகேந்திரன், வண்ணை ஆனந்தன், கனகமனோகரன் போன்றவர்களை சந்ததியார் அணி பெரும்பான்மையோரின் விருப்பபடி வெளியேற்றியிருந்தது. இவர்கள் த.இ.பேரவையில் இருந்தபடி உள்விவகாரங்களை அமிர்தலிங்கத்துக்கு உளவு சொல்லிவந்தனர். த.இ.பே அலுவலகமும் யாழ்ப்பாணாம் ஸ்ரான்லி வீதிக்கு மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில் புஸ்பராசா த.இ.பே செயற்பாட்டிலோ எப்பதவியிலோ இருக்கவில்லை. இவர் ஒதுங்கியிருந்ததுடன் பெரும்பாலும் கூட்டணி மேடைகளிலேயே தோன்றுபவராக இருந்து வந்தார். அமிர்தலிங்கம் த.இ.பே உடைக்கும் நோக்குடன் சேனாதிராசா, கனகமனோகரன், எஸ்.கே மகேந்திரன், பீற்றர் பொன்கலன், ரகுபதிபாலசிறிதரன், திசைவீரசிங்கம் உட்பட பல கூட்டணி ஆதரவாளர்களை திரட்டி ஒரு போட்டி த.இ.பே தொடங்கப்பட்டது. கூட்டம் கூட்டப்பட்ட அன்று எல்லோருக்கும் விசேடமாக 'பிரியாணி' வழங்கப்பட்டது. புதிய அமைப்பின் தலைவராக மாவை சேனாதிராசாவும் இடைக்கால அமைப்பாளர்களாக எஸ்.கே மகேந்திரன், பீற்றர் பொன்கலன், ரகுபதி பாலசிறிதரன் போன்றோர் நியமிக்கப்பட்டனர். அதன் பின்பு தமிழர் விடுதலைக்கூட்டணி இளைஞர்களைத் திருப்திப்படுத்த அமைத்த கூட்டணியின் 9 பேர் கொண்ட போராட்டக் குழுவில் இரண்டு இடங்களில் த.இ.பே உறுப்பினர்கட்கு பதவி வழங்கப் பட்டது. இப்படியாகத்தான் தளபதி அமிர் கூட்டணிக்கு எதிரான முற்போக்கு திசையில் வளர்ந்த இளைஞர்களை சிதறடித்தார் என்ற போதிலும் கூட்டணியின் மிதவாதப்போக்குக்கு எதிரான தீவிரவாதம் இளைஞர்களில் இருந்து வளர்வதை தடுக்க முடியவில்லை. அமிர்தலிங்கம் முதல் மாவை சேனாதிராசா வரை சந்ததியாரை வெறுத்தமையுடன் தமது எதிரியாய் கருதியமையின் போக்கு இங்குதான் மூலம் கொண்டிருந்தது. இடதுசாரிகளின் செல்வாக்கிற்குப் சந்ததியார் பலியாகிவிட்டதாய் அமிர்தலிங்கம் குற்றம் சொன்னார். புஸ்பராசா அரசியல் ரீதியாக சந்ததியாருடன் எந்த வகையிலும் ஒப்பிடப்படக் கூடியவரல்ல. கடின உழைப்பிலும் அரசியல் நேர்மையிலும் சந்ததியார் வேறு எவரையும் விட உயர்வாக இருந்தார். வடக்கு, கிழக்கு இணைந்த அரசியல் போக்கொன்றை இளைஞர்கள் மத்தியில் ஊன்ற முயன்றார். வன்னி, மட்டக்களப்பு கிராமப் பகுதிகட்கும் அமைப்புக்களை பரவலாக்கினார். புஸ்பராசா போன்றவர்கள் இப்பகுதிகயுக்கு ஒரு போதும் சென்றதோ கண்டறிந்தோ கிடையாது. வன்னிப்பகுதிகளின் முக்கியமானவர்களில், சிறையிருந்தவர்களில் ஒருவரைக் கூட புஸ்பரசா குறிப்பிட்டது கிடையாது. பொன் பத்மநாதன், இராஜரட்ணம், தவராசா, பரமநாதன், இராஜராஜேஸ்வரன் போன்ற தமிழ் இளைஞர் பேரவையின் வன்னிப்பகுதியின் முக்கியமானவர்களையோ, முல்லைத்தீவு தமிழ் இளைஞர் பேரவைத் தலைவராக இருந்த பறங்கி இனத்தைச் சேர்ந்த டேவிட் எலோய் என்பவரையோ புஸ்பராசா அறியாதவராக இருந்தார் என்று கட்டாயமாக நம்ப முடியும். த.இ.பே இருந்து கொண்டே த.வி கூட்டணி தலைமைக்கும் அமிர்தலிங்கத்திற்கும் அமைப்புத் தகவல்களை கொடுத்து வந்ததாய் குற்றம் சாட்டப்பட்டே மாவை சேனாதிராசா, எஸ்.கே மகேந்திரன், கனகமனோகரன் போன்றவர்கள் த.இ.பே இல் இருந்து வெளியேற்றபட்டதை புஸ்பராச அறியாமல் இருந்தார் என்று நம்பமுயாது. கூட்டணி சார்பு ஆட்களைப் பாதுகாக்கும் பொருட்டே அமிர்தலிஙம் போல் புஸ்பராசாவும் சந்தியாரை தாக்குகின்றார். உண்மைப் பிரச்சனைகளைப் பேசாது ஒதுங்கி நின்றுவிடுகின்றார். இடதுசாரிப்போக்குள்ள சந்ததியாரை பிசாசாகக் காட்டுவதன் மூலம் கூட்டணி சார்பு நபர்களையும் தன்னையும பாதுகாத்துக் கொள்கிறார்.

அண்ணன் அமிர்தலிங்கம் சார்பான அன்புத் தம்பிமாரான புஸ்பராசா, சேயோன், நடேசானந்தம், இறைகுமாரன் உட்பட பலருக்கு C.O. (விவசாய உத்தியோகத்தர்) உத்தியோகம் கிடைத்தது. சத்தியசீலன், முத்துக்குமாரசுவாமி, திசைவீரசிங்கம் போன்றவர்கள் தமிழீழத்திற்காய் போராடிக் களைத்து அண்ணன் அமிரின் சிபாரிசுக் கடிதங்களுடன் ஐரோப்பிய அகதி வாழ்விற்கு தம்மை ஒப்படைந்தனர். ஆனால் சந்ததியார் தன் மண்ணை விட்டுப போகாது நேர்மையாய் அரசியல் செய்தமைக்காக தலையறுக்கட்ட மனிதராவர். தலைமையை விட்டு வெளியேறி எதையும் சாதிக்க முடியாது 'வடலி வளர்த்துக் கள்ளுக் குடிக்க முடியாது' என்று வாதிட்ட அமிர்தலிங்கத்தின் விசுவாசி கனகமனோகரனும் தமிழீழத்தை துறந்து வெளிநாட்டில் வாழ்கின்றார். த.இ.பேரவையில் இல்லாமல் இருந்து கொண்டே த.இ.பே சார்பில் அறிக்கை விட்டு சந்ததியார் காலத்து இளைஞர் பேரவையில் இருந்து வெளியேற்றபட்ட வண்ணை ஆனந்தனும் அமிர் அண்ணாவுக்காக சந்ததியாரை எதிர்த்தவர், பின்பு வெளிநாட்டு அகதி வாழ்வில் அமிர் அண்ணாவின் எதிரியாய் மாறுண்டு போனார்.

தமிழர் விடுதலைக்கூட்டணி

தமிழரசு, கூட்டணி மரபுப்படி புஸ்பராசா செல்வநாயகத்தை தந்தை செல்வநாயகம் என விழிப்பது அவர் இன்னமும் அக் கட்சிகளின் தனையனாக வாழ்ந்து கொண்டிருப்பதை இது புலப்படுத்துகின்றது. புஸ்பராசா தமிழ்தேசியம் சார்ந்த பல கதம்பவாதப்போக்குளில் சிக்கி உருக்குலைந்த அரசியலை பேசிக் கொண்டிருந்த போதும் அவர் அடிப்படையில் இப்போதும் கூட்டணியின் சிந்தனை முறைமைக்கு இணக்கமானவரே. இந்த வகையில் அவர் கடந்த காலத்தின் மனிதனாக கூட்டணியின் சுத்தமான யாழ்ப்பாண மனிதராக வாழையடி வாழையாக சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வருகின்றார். இலக்கிய சந்திப்பு மேடைகளில் அவர் பல வர்ணச் சிந்தனைகளை உடையவராக காலம், இடம், பொருள் ஏவலைப் பொறுத்த கட்டுடைப்புகளை ஆதரித்து கலகம் செய்பவராக தோன்றுவது அவரின் அரசியல் பலவீனத்தின் சந்தர்ப்பவாத வெளியீடுதான். நிலையற்ற அடிப்படையிலான புத்தியற்றவர்கள் சகல போக்குகளோடும் தாம் இணங்கிப்போவதாய் சுத்த சுதந்திர நடைமுயைகளை அனுட்டிப்பதாய் காண்பிக்க முயல்கின்றார்.

அடுத்து புஸ்பராசாவின் அரசியல் பாசறையான தமிழரசு - கூட்டணி கட்சிகளின் அரசியல் அருகதையென்ன? தமிழீழத் தந்தையாகிய செல்வநாயகம் காந்திய முறையிலான அறவழிப் போராட்டமே தமது அரசியலுக்கான வழியென்று நீண்ட காலமாய் உரைத்து வந்ததார். அவர் ஈழத்துக்காந்தி மூதறிஞர், தந்தை, தழிழீழ முதல்வர் என்று பல தொகைப் பட்டங்களைச் சூடிக் கொண்ட புகழ் விரும்பாத மனிதர். காந்தியைப் போன்று ஆச்சிரமங்கள், பாலியல் வாழ்வைத்துறப்பு, பந்தபாசம் அறுப்பு, உண்ணாநோன்பு, எளிய ஆடை மரக்கறி உணவு, இயற்கை வைத்தியம் தனக்கென்று பொருள் சேர்ககாமை போன்ற பண்புகள் பெற்று துறவி போய் வாழ்நதவரல்ல, செல்வநாயகம். நமது ஈழத்துக்காந்தியோ ஐரோப்பிய ஆடை புனைந்து வீட்டில் கூட ஆங்கிலம் பேசும் மனிதர். கொழும்பு, யாழ்ப்பாணத்தில் வீடுகள், சொத்துக்கள், பெருந்தோட்டங்கள் என்று வாழ்ந்த முதலாளி அவர். தனது தோட்டத்தில் உள்ள ஏழைத் தொழிலாளர்கட்கு நியாயமான கூலி தராத புண்ணியவான். தமிழனப் பெருமை பேசிய தந்தை ஒரு போதும் ஏழை மனிதர்களின் வறுமையை அது சார்ந்த வாழ்வுத் துயரத்தை பேசியறியாத மனிதர். இவர் மட்டுமல்ல தமிழரசு, தமிழீழம் கேட்ட பலருக்கு கொழும்பில் சொந்த வீடுகள் இருந்தன. இவர்கட்கு யாழ்ப்பாணத்தின் கொழுத்தும் வெய்யில், பனைமரக்கலாச்சாரம் ஒத்துக் கொள்வதில்லை என்பதால் இவர்கள் பெரும்பகுதி கொழும்பிலேயே வாழ்ந்தனர். திருச்செல்வம் சிவசிதம்பரம், ஈழவேந்தன், நாகநாதன் எனப்பலரை இதற்கு உதாரணமாக் குறிப்பிட முடியும்.

'அறவழிப் போராட்டத்தின் தந்தை' செல்வநாயகத்தின் காந்தியம் பற்றிய புரிதல் எத்தகையது? காந்தியின் குரு எனப்பட்ட டோல்ஸ்டோய் பற்றிக் கூட செல்வநாயகம் பேசியதில்லை. அரைநாள், ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்துடன் தான் அறவழிப் போராட்டத்தின் முதல்வராக அவர் ஆகிக் கொண்டார். காந்தியைக் கூட உண்மையாக அவதானித்தவராக, பின்பற்றியவராக செல்வநாயகத்தைக் கொள்ள முடியாது. அவர் அகிம்சைவாதி, அறவழிப்போராட்ட நம்பிக்கையாளர், காந்தியவாதி என்று அவரது கட்சி நபர்களால் தொடர்ந்து புனையப்பட்டு வந்தார். அவர் காந்தியைப்போல் கந்தை உடுத்தியவரோ, எளிமையாய் ராட்டையில் நூல் நூற்று சொத்து சுகம் சேர்க்காமல் வாழ்ந்தவரோ அல்ல. செல்வநாயகத்தின் அரசியல் இயலாமை கட்சியின் மிதவாதக் கோழைத்தனமே இங்கு அறவழிப்போராட்டம் என்ற சுலோகத்தை முன்வைக்க காரணமாயிற்று "தீமையானாலும் வன்முறையினால் எதிர்க்காதே" என்பது தான் காந்தியின் கொள்கையாகும். ஆனால் செல்வநாயகத்தை மேடையில் வைத்துக் கொண்டே அமிர்தலிங்கம் புறநானூற்றிலே முலையறுத்த தமிழிச்சியின் வீரம் புகழ்வார். ஆயுதப்போராட்டத்தின் மூலமேனும் தமிழீழ இலட்சியத்தை அடைவோம் என்று முழங்குவார். மங்கையற்கரசி அமிர்தலிங்கம் துவக்கு போரை "துவக்கு போதை என்று சொன்னவனை சிவக்குமாரை சிவக்குமாரை மறக்குமா நெஞ்சம்?" என்று ஆயதப்போராடட்டத்தை தேர்ந்து கொண்ட சிவகுமாரனை மேடைகள் தோறும் போற்றுவார், கலங்கிக் கண்ணீர் விடுவார்.
ஆக அறவழிப்போராட்டம் அகிம்சை பற்றி கூட்டணி பலவித கோளாறான தன்னைத்தானே மறுக்கும் கருத்துக்களைக் கொண்டிருந்தது. தமிழரசு, கூட்டணிக் கூட்டங்களில் கேள்வி கேட்கும் சாதாரண உரிமை கூட கிடையாது. கேள்வி கேட்பவர்கள் கூட்டத்தைக் குழப்ப முற்படுவர்களாக காட்டப்பட்டு அடித்து வெளியேற்றப் படுவது அடிக்கடி நடைபெறும் சம்பவமாகும். கேள்வி கேட்டமைக்காக இடதுசாரிகள் அடிக்கபட்டனர். ஆனால் தமிழரசு, கூட்டணி நபர்கள் ஏனைய கட்சிகளின் கூட்டங்களில் கேள்வி கேட்டு கூட்டம் குழப்பும் உரிமையை தம்மிடம் வைத்திருந்தனர். இத்தகைய போக்குகளை தந்தை செல்வநாயகம் கண்டித்ததாய் சரித்திரம் கிடையாது. தமது கட்சியினர் அடிதடிகளை துறந்து அகிம்சையைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று அவர் போதித்ததில்லை. 'தீப்பொறி' என்ற பத்திரிகையை நடாத்திய அந்தனிசில் செல்வநாயகத்தை 'காற்சட்டைக்காந்தி' 'கோழிசூப் காந்தி' என்று நக்கல் விட்டு அப்போது தனது பத்திரிகையில் எழுதினார். செல்வநாயகம் நல்ல மனிதர் என்ற பெயர் அவர் முதலாளிய அமைப்பை அதன் அநீதிகளை எதிர்க்காத பண்புக்காகத் தரப்பட்டதாகும். அவர் சாதாரண மனிதர்களோடு உறவு வைத்துக் கொள்ளவாதவர். கட்சியில் எம்.பிமாராக சட்டம் படித்தவர்களையே தேர்ந்தடுப்பார். படித்தவர்கள் என்று சொல்லப்பட்ட உயர் வர்க்கத்தைச் சேர்ந்த ஆங்கிலம் பேசும் நபர்களையே கட்சியின் முக்கிய இடத்தில் வைத்திருந்தார். கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டர்களை கல்வியறிவு குறைந்த கட்சி நபர்களையோ அவர் கட்சியின் முக்கிய இடத்தில் அமர்த்தியது கிடையாது புதுமைலோலன், ஈழவேந்தன் போன்றவர்கள் எம்.பி பதவிக்கு இலக்கு வைத்து பிரச்சனைப்பட்ட கதைகள் உள்ளன. சேல்வநாயகத்தை 'தந்தை, தந்தை' என்ற ஈழவேந்தன் செல்வநாயகத்துடன் முரண்பட்டுக் கொண்டு செல்வநாயகத்தை செவிடன் என்று பழித்து திரிந்த காலமொன்று இருந்தது. செல்வநாயகம் தன் உயர் வர்க்கம் சார்ந்த உணர்வுடன் சிந்தித்த மனிதர். சாதாரணமானவர்களை கட்சியின் முக்கிய இடங்கட்கு நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டவர். மட்டக்களப்பு இராசதுரை சிறந்த மேடைப்பேச்சாளாராக இருந்த நிலையிலும், கட்சிக்கு போட்டியிட ஆள் இல்லாத நிலையிலுமே விதிவிலக்காக கட்சியுள் சேர்க்கப்பட்டு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

மட்டக்களப்பு இராசதுரைக்கு ஆங்கிலம் தெரியாமையால் கட்சியுள் அடிக்கடி ஓரம் தள்ளப்பட்டார். பாராளுமன்றத்திலும் பொதுவாழ்விலும் இராசதுரையால் ஏனைய தமிழரசு கூட்டணி எம்.பிமார் போல் செயற்பட ஆங்கில மொழியறிவற்ற அவரது நிலை பெருந்தடையாக இருந்தது. மட்டக்களப்பில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது அவர்களைப்பற்றி விசாரிக்க ஆங்கில மொழியறிவு இன்மையால் பொலிஸ் நிலையம் செல்வதை இராசதுரை தவிர்த்துக்கொண்டார். அமிர்தலிங்கம் போன்றவர்கள் இதனை மிகவும் சாதுர்யமாக இராசதுரைக்கு எதிராகப் பயன்படுத்தினர். செல்லத்தம்பு எம்.பி முதல் சிலரை கட்சியுள் Sir. என்று அழைக்குமளவு நிலையிலேயே இராசதுரை இருந்தார். படித்தவர் என்ற கோதாவில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களாக இருந்த மாட்டின், இராஜலிங்கம் போன்றவகள் கூடக் கட்சியினுள் உள்வாங்கப்பட்டு எம்பிகள் ஆக்கப்பட்டனர். சாதாரண கட்சியின் ஏழைத் தொண்டனுக்கு கட்சியில் எந்தச் செல்வாக்கும் இருக்கவில்லை. சட்டத்தரணிகளே கட்சியை ஆண்டனர். தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தவரும் அண்ணன் அமிர்தலிங்கம் தந்தை செலவ்நாயகம் போன்றவர்களை ஒன்று சேரப் போற்றியவருமான நெடுங்கேணியைச் சேர்ந்த பீற்றர் பொன் கலன் எம்.பி பதவி கேட்டு நிராகரிக்கபட்டார். தானும் ஒரு கோட்டுப் போட்டிருந்தால் தனக்கும் சீற் தந்திருப்பார்கள் என்று வெளிப்படையாகவே இவர் பேசித்திரிந்தார். சாதி காரணமாக கரிகாலன் கட்சியில் உயர முடியவில்லை, தேர்தலிலும் அவருக்கு வாய்ப்புக்கிட்டவில்லை.

தமிழரசு கூட்டணியின் அகிம்சையை எப்படி புரிந்து கொள்வது? இந்தச் சிந்தனை அடிப்படையில் ஒரு முதலாளிய கற்பனைவாதக் கருத்தியல்தான். காந்தியின் அகிம்சை இனத்தை கடந்ததாய் மதத்தை தாண்ட முயற்சிப்பதாய் கூறிக் கொண்டது. தன்னை மனிதம் தழுவியதாய் காட்டிக் கொண்டது. ஆனால் நமது ஈழத்துக் காந்தியின் அகிம்சையோ சிங்களவர் தமிழர் என்ற இனவாதத்துள் பிறந்தது. தமிழகர்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தியது. சாதாரண இலங்கை மக்களுக்காக தமிழரல்லாதவர்களுக்காக செல்வநாயகம் ஒருபோதும் பேசியது கிடையாது. மலையகத்தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை குடியுரிமை பறிப்பின் போது கூட இன்று இவர்கட்கு நாளை எமக்கு என்று சொன்னாரே தவிர அவர்களை தமிழ்சாதியின் ஒரு பிரிவாய் கூட பார்க்க அவருக்கு சம்மதம் இருக்கவில்லை. எனவே செல்வநாயகத்தின் அகிம்சை தமிழ் தேசியத்துள் அதாவது யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்துள் மட்டுமே குறுகிக் கிடந்த ஒன்று. மனிதம் என்ற கருத்தியல் செல்வநாயகம் அறியாத ஒன்று. அகிம்சை என்ற சிந்தனை அது கற்பனாவாதக் கருத்தியல் என்ற போதும் பரந்த மனிதம் தழுவிய போக்கு என்பது செல்வநாயகம் போன்ற பழைமைவாதிகட்கு எட்டாத விடயமாகும். செல்வநாயகத்தின் அகிம்சையானது சிங்கள வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. அவரின் சொந்த பத்திரிகை சுதந்திரன் சிங்கள மக்கள் முழுப்பேரையும் இனவாதிகளாய் கண்டது. சிங்களமொழியை நண்டெழுத்து என்ற எழுதி திருப்தி கண்டது. 'சிறி'யை அழிப்போம் சிறையை நிறைப்போம்' என்றவர்கள் 'சிறி' என்பது தமிழ் எழுத்தல்ல என்று கூடப் புரிந்து கொள்ளவில்லை. எப்படிக் காந்தியின் சொந்தக் கோழைத்தனம் சமயவாதக் கற்பனையும் அகிம்சையை தேடித்தந்ததோ, பிரிட்டிஷ் ஆட்சியுடன் சமரசத்திற்கு சாதகமான அரசியலுக்கு இட்டுச் சென்றதோ அதையே செல்வநாயகமும் இலங்கையில் வேறு வடிவில் அரசியலாக்கினார். செல்வநாயகம் சிங்கள மக்களை எதிர்த்த மட்டத்திற்கு பிரிட்டிஷ்காரரை எதிர்த்தவரல்ல. எதிரியாய் கருதியவரல்ல. மாறாக, அவர் ஒரு பிரிட்டிஷ் விசுவாசி. மற்றப்பக்கத்தில் இலங்கை வரலாற்றிலேயே ஆகப் பெரிய இனவாதக் கட்சியான UNP யுடன் அவர் உறவாக இருந்தார். வலதுசாரியாக இருக்க செல்வநாயகம் ஒரு போதும் வெட்கப்படாதவர். தமிழ் உயர்வர்க்கத்தின் பெரிய மனிதர் அவர். செல்வநாயகத்திற்கு மூதறிஞர் என்ற பட்டம் கூட்டணியினால் சூட்டப்பட்டது. செல்வநாயகம் N.M பேரேரா, கெல்வின், பீற்றர் கெனமன், சண்முகதாசன் போன்றவர்களைப் போல் சிந்தனை விருத்தி கொண்டவரல்ல. ஒரு சிறந்த மேடைப்பேச்சை நிகழ்த்தக் கூட அவர் தகுதி போதாதவர். ஒரு சிறு நுhலைக்கூட எழுதி வெளியிடுமளவிற்கு சிந்தனை பரப்புடையவரல்ல. தமிழீழம் கேட்ட செல்வநாயகம் பாராளுமன்றத்தில் "தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று தனது அரசியல் கையறு நிலைமையை வெளியிட்டார்.

செல்வநாயகம் அரசியல் தொலை நோக்கோ தமது தமிழீழம் எத்தகைய சமூக, அரசியல் போக்குகளை கொண்டு வரும் என்று எதிர்வுகூறும் ஞானமோ அற்ற மனிதராகவே இருந்தார். யாவற்றையும் தன்னிச்சைப் போக்கிற்கு விட்டு அதற்கேற்ப செயலாற்ற முனைந்தார். தமிழ் மக்களின் பிரச்சனை என்பது அவரைப் பொறுத்து சட்டப்பிரச்சனை, அரசியலமைப்பு சார்ந்த பிரச்சனை. தமிழ் மக்களின் சமூக அரசியல் பொருளாதாரம் சார்ந்து அவர் சிந்திக்கத் தெரியாதவர். அவரது சட்டத்தரணி மூளையானது சட்டவியல் நோக்கில் மட்டுமே சிந்திக்கக் கடமைப்பட்டதாகும். அவரது கடைசிப் பத்தாண்டுகள் புலன்கள் கூர்மையாய் செய்றபட முடியாத நரம்பு சம்பந்தமான வியாதியால் பாதிக்கப்பட்ட மனிதராக இருந்தார். மிகவும் குறைந்த உடல் சார்ந்த அசைவியக்கம் உடையவராக இருந்தார். அடுத்தவர் உதவியின்றி நடக்கக் கூடச் சிரமப்படும் மனிதராக இருந்தார். தன்னைச் சூழ என்ன நடக்கிறது என்பதை பூரணமாய் உணரும் நிலையில் அவர் செயற்பட்டார் என்று சொல்ல முடியாது. எனவே கூட்டணி அவரை ஒரு கட்டத்திற்குப் பின்னர் வெறும் பொம்மையாக்கிப் பயன்படுத்த தொடங்கியது. தந்தை செல்வா கூறியதாய் சொல்லி பல தகவல்கள் தமிழ் மக்களுக்கு சொல்லப்பட்டது. அவர் மிகவும் மெல்லிய குரலில் பேசும் போது அதை அருகில் இருந்து கேட்டு அமிர்தலிங்கமோ, ஈழவேந்தனோ, ஆலாலசுந்தரமோ மீண்டும் உரத்துச் சொல்லும் பழக்கம் நிலவியது.

செல்வநாயகம் இடதுசாரிகளுடன் ஒருபோதும் உடன்பாட்டிற்குப் போனது கிடையாது. திரும்பத் திரும்ப UNP யுடன் தான் அரசியல் கொடுக்கல் வாங்கல் கொண்டாட்டங்கள் வைத்துக் கொண்டார். கிட்டத்தட்ட எல்லாத தேர்தல்களிலும் வடக்கு, கிழக்கிற்கு வெளியே உள்ள தமிழ் மக்களை UNP க்கு வாக்களிக்கும்படி சுதந்திரன் தூண்டுவது வழக்கம். தமிழரசுக்கட்சி UNP யுடன் சேர்ந்து திருச்செல்வத்தையும் அமைச்சராக்கியது. அவர் உள்ளுராட்சி அமைச்சாராக இருந்தபோது தமக்கு எதிரான யாழ் நகரசபையைக் கலைத்து பெரும் அட்டகாசம் பண்ணினார். இவர்கள் அரசுடன் இணைந்திருந்தபோது தான் பெளத்த போயா தினங்கள் விடுமுறையாக்கபட்டது. இக்காலத்தில் வெசாக்க தினமும் மேதினமும் ஒரு முறை தற்செயலாக ஒரே தினத்தில் வந்தபோது வெசாக் தினத்தின் முக்கியத்துத்தைப் பாதுகாக்க மேதின ஊர்வலங்கட்கு தடை விதிக்கப்பட்டது. இக்காலத்தில் தமிழரசு UNP இரண்டும் தமிழ் சிங்கள் வேற்றுமைகளைக் கடந்து ஒன்றாய் செயற்பட்டன. 1965 இல் டட்லி சேனநாயக்காவிற்கு தமிழரசுக்கட்சி பிரமாண்டமான வரவேற்பை யாழ்ப்பாணத்தில் கொடுத்தது. UNP தலைவர்களுக்கு சந்திதோறும் சிகரம் கட்டி அலங்கார வளைவுகளை வைத்து வரவேற்ற தமிழரசுக் காலத்தை செல்வநாயகம் வழி நடத்தியவர்.

செல்வநாயகம் காலத்து தமிரசுக்கட்சி தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் உள்ள ஏழைச்சிங்கள முஸ்லிம் மக்களுக்கும் செய்த துரோகங்கள் கொஞ்சமல்ல. இலவசக்கல்வியூட்டும் திட்டத்தை கொண்டு வந்து தனியார் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்ற போது தமிழரசுகட்சி அதை எதிர்த்தது. இலவசக்கல்வியை எதிர்த்தமை காசு கட்டிப்படிக்கும் உயர்வர்க்கம் சார்ந்த செயலாக இருந்தது. என்பதோடு பரந்த கல்வியூடாக பெருந்தொகையானவர்கள் படித்து முன்னேறி தம் தொழிலுக்கு போட்டியாளராகி விடுவர் என்று தமிழரசுக்கட்சி பிரதிநிதித்துவப்படுத்திய நடுத்தர வர்க்கம் அஞ்சியது. இதை மறைத்து தனியார் பாடசாலைகளை அரசு எடுத்தால் அதனூடாக சிங்களம் புகுந்து விடும், தமிழ் அழிந்துவிடும் என்று தமிழரசுக்கட்சி விளக்கம் தந்தது. ஆங்கிலக் கல்வியூடாக தமிழ் அழியாதா? என்ற கேள்விக்கு இவர்களிடம் பதிலில்லை. வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் தமிழில் செயலாற்றம் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆங்கிலத்தில் பேசி, எழுதி, சிந்தித்து, வாதிட்டு வாழந்த கூட்டணி சட்டத்தரணிகளின் கட்சி அதைக் கடுமையாக எதிர்த்தது. ஆங்கிலத்தின் இடத்தை நீதிமன்றத்தில் தமிழுக்கு வழங்க மறுத்தது. பண்டாராநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தத்தில் செல்வநாயகம் தனிச்சிங்கள சட்டத்தை ஒத்துக் கொண்டே உடன்படிக்கைக்கு சென்றார்.

மேலும் புதிய நெற்காணி சட்டத்தின் மூலம் நிலத்தில் உழைக்கும்; விவசாயிகட்கு உதவும் சட்ட மூலம்கள் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்து காணி உடமையாளர்கள் சார்பில் சிறு விவசாயிகள், குத்தகை விவசாயிகட்கு எதிராக தந்தையின் கட்சி செயலாற்றியது. 1961 இல் அந்நிய பெற்றோலிய கம்பனிகளை தேசியமயமாக்கும் சட்டம் தமிழரசுக் கட்சியினால் எதிர்க்கப்பட்டது. செல் போன்ற ஏகாதிபத்திய எண்ணை நிறுவனங்கட்கு இதன் மூலம் தனது மறைமுக ஆதரவைத் தந்தது. தொட்டதெற்கெல்லாம் அந்நிய தூதரங்கட்கு சென்று நீதி கேட்டு மனுக் கொடுக்கும் தமிழரசுக்கட்சி வேறெவ்வாறாகவும் ஒரு போதும் செயற்பட முடியாது. 1980 இல் இலங்கை முழுவதும் நடந்த தொழிற்சங்க போராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாணவர் அமைப்புக்கள் என்பன கலந்து கொண்ட போது கூட்டணியோ இது தென்னிலங்கை சிங்களவரின் பிரச்சனை என்று தன் தமிழ் இனவாதத்தின் கூட்டுக்குள் சுருங்கிக் கொண்டது. கைலாசபதிக்கு எதிராக UNP ஆதரவுடன் கூட்டணி தமது ஆளான வித்தியானந்தனை யாழ்பல்கலைக்கழக துணைவேந்தராக்கியது. கைலாசபதியையும், கலைப்பீடத்திற்கு பொறுப்பாய் இருந்த இந்திரபாலாவையும் கூட்டணி முடிந்த மட்டும் இழிவு படுத்தியது. தென்னிலங்கையில் பல ஆயிரம் தமிழ் மாணவர்கள் பல்கலைகழகங்களில் தங்கயிருந்து படித்துக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் சில நூறு சிங்கள மாணவர்கள் தங்கி கல்வி கற்பதை எதிர்த்து கூட்டணி பிரச்சாரம் செய்தது. சுதந்திரன் சிங்கள மாணவர்கட்கு யாழ்ப்பாணத்தில் தங்க இடம் கொடுக்கக் கூடாது என்று இன வெறிப்பிரச்சாரத்தில் நின்றது.

காங்கேசன்துறை இடைத்தேர்தலில் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட வி.பொன்னம்பலத்தை ஆதரித்து அறிக்கை விட்ட யாழ்ப்பல்கலைக்கழக விரிவுரையாளர்கட்கு கொலைப்பயமுறுத்தல் கூட்டணியின் உற்பத்திகளால் விடப்பட்டது. பின்னர் வி.பொன்னம்பலத்தின் வீட்டுக்கும் குண்டு வீசப்பட்டது. தந்தை செல்வநாயகத்தின் இத்தகைய அகிம்சை அரசியல் வளர்ந்து M. சுப்பிரமணியம், கே.ஏ சுப்பிரமணியம் போன்ற இடது சாரிகளைக் கொல்ல முயற்சித்தது. பிற்காலத்திய தந்தையின் வழித்தோன்றல்கள் எஸ். விஜயானந்தன், சி.துரைசிங்கம் அண்ணாமலை போன்றவர்களைக் கொலை செய்தனர். தமிழரசுக் கட்சிக்கு இடதுசாரிகளுடன் பழைய பகைமைகளை இருந்தது என்பதுடன் தமிழீழம் கோரியவர்கட்கு எதிராக இடதுசாரிகள் மட்டுமே அரசியல் செய்ய முற்பட்டனர். சண்முகதாசன் தமிழர் கூட்டணியைச் சேர்ந்த ஈழவேந்தன், தருமலிஙகம் போன்றோருடன் பகிரங்கமான தமிழீழம் பற்றிய விவாதத்தை நடத்தினார்.
யாழ்பல்கலைக்கழகத்தில் 'குற்றவாளிக் கூண்டிலே தமிழீழப் பிரிவினைவாதிகள்' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் த.இ.பே சேர்ந்த சிவதாசனுக்கு எதிராக இடதுசாரிப்போக்கை எடுத்திருந்த புதுமை லோலன் வாதிட்டார். தமீழழம் சாத்தியமா? என்ற தலைப்பில் சி.கா செந்தில்வேல், ஈழவேந்தனுடன் விவாதம் நடத்தினார். இத்தகைய பகிரங்க விவாதங்களை கூட்டணி தடை செய்யத் தொடங்கியது. தமது நபர்களை கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதை நிறுத்தியது. இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சனையில் போதிய கவனம் எடுகக்கவில்லை என்பது புஸ்பராசாவின் மட்டுமல்ல முழுத்தமிழ் தேசியவாதிகளினதும் தொடர்ச்சியான குற்றச்சாட்டு. இடதுசாரிகள் காரிய சாத்தியமான வழியில்தான் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வைத் தேடினார்கள் யாழ்ப்பாண நடுத்தர வர்க்க கொதிப்புகட்கு ஏற்ப அவர்கள் ஆயதமேந்திய கூத்துக்களை இடதுசாரிகள் ஏற்கவில்லை. 1978 இல் சீனச்சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டமைக்கான முக்கிய காரணம் தேசிய பிரச்சனை சம்பந்தமாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடாகும். 1970 நடுப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் இடதுசாரி திசையில் சிந்திக்க தொடங்கிய போது நீங்கள் சீனச்சார்பு பொதுவுடைமைக் கட்சியால் திசை திருப்ப பட்டுவிட்டீர்கள் என்றும் பீக்கிங் கட்சி தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவி விட்டது. என்று அமிர்தலிங்கம் கூறினார். 1984 இல் இடதுசாரிகளால் தொடக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான வெகுஜன அமைப்புத்தலைவர் T .இராஜசுந்தரம் ஆயுதாரிகளால் கடத்திக் கொல்லப்பட்டார். 1987 இல் இந்தியவிமானங்கள் இலங்கையில் ஊடுருவி உணவுப் பொதிகளை வீசிய போது இது இந்திய இராணுவத்தலையீட்டிற்கான தொடக்கம் என்று இடதுசாரிகள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவத்தனர். ஆனால் தமிழ் இயக்கங்கள் போட்டி போட்டுகொண்டு இந்தியத் தலையீட்டையும் இராணுவத்தலையீட்டையும் வரவேற்றன.

புஸ்பராசாவின் இடதுசாரி வெறுப்பு தமிழரசுக்கட்சிக் காலத்திய தொடக்கத்தைக் கொண்டது. 1970 இல் நடந்த தேர்தலில் வட்டுக்கோட்டை, உடுப்பிட்டி தொகுதிகளில் அமிர்தலிஙகம், சிவசிதரம்பரம் தோற்றமைக்கான காரணம் இடதுசாரிகளின் செல்வாக்குட்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் இவர்களை ஆதரிக்காமையே. வட்டுககோட்டையில் இடதுசாரி வேட்பாளர் அ.வைத்திலிங்கம் ஒருமுறை மிகவும் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே அமிர்தலிங்கத்திடம் தோல்வியடைந்தார். யாழ்ப்பாணத்தில் ஜி.ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்து த.கார்த்திகேயன், சமசமாஜக்கட்சி அ.விசுவானந்தன், காங்கேசன்துறையில் செல்வநாயகத்தை எதிர்த்து வி.பொன்னம்பலம், சமசமாஜக்கட்சி பி.நாகலிங்கம் போன்ற இடதுசாரிகள் போட்டியிட்டனர். சுன்னாகம், உடுப்பிட்டி, சங்கானை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை உட்பட பல பட்டின சபைகளை இடதுசாரிகள் கைப்பற்றியிருந்தனார். பொன்.கந்தையா, கார்த்திகேயன், சண்முகதாசன், அ.வைத்தியலிங்கம், தர்மகுலசிங்கம், R. தர்மரத்தினம், சீனிவாசகம் போன்ற வடபகுதியைச் சேர்ந்த இடதுசாரிகளைப் பற்றி புஸ்பராசா எதுவும் எழுதாமல்விட்டமை தற்செயல் விளைவல்ல. உலகத்தொழிலாளர் தினமான மேதினத்தில் கூட ஈழவேந்தன் போன்ற தீவிர தமிழின வெறியர்கள் எங்கள் தமிழ் மண்ணில் இராவணனார் பொன்மண்ணில் அங்குலமும் இனி நாங்கள் அயல் வெறியர் ஆள விடமாட்டோம் என்று இனவாதம் பேசினர். "தேர்தல் பாதை திருடர்பாதை, தேர்தலில் தமிழீழம் எடுக்க முடியாது" என்ற ஈழவேந்தன் இப்போ புலிகளின் பினாமி அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் எம்பியாகிவிட்டார்.

கூட்டணியின் அகிம்சையின் வெறுமையை புஸ்பராசா ஆராயவில்லை. செல்வநாயகம் முன்பாகவே மேடையில் காசி ஆனந்தன் புதிய அரசியலமைப்பை ஆதரித்த அரசு சார்பு துரையப்பா, அருளம்பலம், தியாகராசா ஆனந்தசங்கரி, சுப்பிரமணியம் போன்றோர் நோய் நொடி வந்து சாகக்கூடாது, இயற்கை மரணம் எய்தக் கூடாது என்று பேசினார். துரையப்பா சுடப்பட்ட போது கூட செல்வநாயகம் வன்முறையை எதிர்த்து அரசியல் படுகொலைகளை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பகிரங்கமாய்ப் பேசவில்லை. ஆயுத மேந்திய இளைஞர்களைக் கண்டிக்கவில்லை. அமிர்தலிங்கம் ஐயாயிரம் கட்டுப்பாடுள்ள இளைஞர்களைத் திரட்டினால் ஆயுதப்போராட்டத்தின் மூலம் தமிழீழ இலட்சியத்தை அடைய முடியும் என்று பேசத் தொடங்கினார். ஒரு முறை யாழ்ப்பாணத்தில் வின்சர் தியேட்டர் அருகே அமிர்தலிங்கம் மேல் நோட்டீசை எறிந்த தமிழ்க்காங்கிரசைச் சேர்ந்த இளைஞனை அமிர்தலிங்கம் தனது வாகனத்திலிருந்து இறங்கிப் போய் தானே கன்னத்தில் அறைந்தார். ஆனால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அமிர்தலிங்கத்தின் பிடரியில் அடித்த ஒரு பொலிஸ்காரனுக்கு எமது தமிழர் தளபதி திருப்பி ஒரு அடி கூட அடிக்கவில்லை. எனவே கூட்டணியின் அகிம்சை, ஆயுதப் பேச்சுக்கள் யாவுமே சந்தர்ப்பவாத அரசியலின் வடிவமாகும். தம்மை விட இளைத்தவர்கட்கு எதிராக கூட்டணியின் வன்முறையும், பலமிக்கவர்கட்கு எதிராக அகிம்சையும் பேசப்பட்டது. காந்தி முதல் தமிழரசுக்கட்சி வரை அகிம்சை என்பது முரண்பாட்டுக்குவியலின் முதலாளிய கருத்துப் படையலாக இருந்தது. முசோலினி எத்தியோப்பியாவைக் கைப்பற்றிய போது "உங்களை கொன்று குவிக்க அனுமதியுங்கள்" என்று எத்தியோப்பிய மக்களை நோக்கி காந்தி வேண்டுகோள் விடுத்தமை, இத்தாலிய பாசிசத்திற்கு சாதகமாகவே இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் நாசிகளின் சித்திரவதைக் கூடங்களில் யூதர்கள் அழிந்து கொண்டிருந்தபோது, யூதர்கள் மேல் இன அழிப்பு நடந்து கொண்டிருந்தபோது யூதர்கள் சுயஅழிப்பு, சுயதியானம், ஆகியவை ஊடாக நாசிகளை மாற்ற முடியும் என்று மடத்தனமாய் நம்பியவர் காந்தி. ஜேர்மனி மேல் பிரிட்டன் யுத்தம் தொடங்கிய போது அதை ஆதரித்த காந்தி இந்தியாவில் பிரிட்டன் இராணுவத்திற்கு ஆள் திரட்ட உதவியதுடன் அவரது அகிம்சை ஒத்துப்போனது.

காந்தி நவீன தொழில் துறை சார்ந்த உற்பத்தி முறையை எதிர்த்தவர். அதுவே சகல கேடுகட்கும் காரணம் என்று நம்பியவர். எனவே விஞ்ஞானம் தொழிநுட்பம் இல்லாத இந்தியாவை 6,00,000 கிராம மக்களின் விவசாய சமூகத்தை நம்பியவர். பாலும், நெய்யும், சாணமும், தானியவகையும் நிரம்பிய பழங்கால இந்தியாவை அவர் கனவு கண்டார். காந்தியின் இத்தகைய கற்பனைகள் காந்தியத்துடன் சேர்ந்து இன்று தூர வீசப்பட்டு விட்டது. அவரது ராட்டை நூதனசாலைக்கு போய்விட இந்தியாவில் பிரமாண்டமான துணித் தொழிற்சாலைகள் எழத் தொடங்கிவிட்டன. விஞ்ஞானத்தை நிராகரித்த காந்தி கடிகாரத்தையும், ஒலி பெருக்கியையும், மூக்கு கண்ணாடியையும், கப்பல், ரெயில், கார் பயணங்களையும் நிராகரிக்க முடியவில்லை. தொழிநுட்பம் விஞ்ஞானரீதியிலான வளர்ச்சி, அதுசார்ந்த சமூக பொருளியல் முன்னேற்றம், இந்தியப்பழைமைவாத, இந்திய மதவாத விவசாயக் கருத்துக்கள் தடையாக இருந்தன. காந்தி இறந்த போது 'காந்தியார்' என்ற தலைப்பில் கொல்வின் ஆர்.டி சில்வா நிகழ்த்திய உரை இதை எதிர்வு கூறியது. இந்தியாவின் வறுமை, அறியாமை, அசுத்தம், மனிதக்கேடுகட்கு இந்திய விவசாய சமூக அமைப்பும் அதை நியாயப்படுத்தும் காந்தியுமே காரணங்களாகும்.

ஜோர்ஜ், வில்சன்

பெர்லினில் வாழ்ந்து பின்பு EPRLF இல் இணைந்து இலங்கை சென்று புலிகளால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் என அழைக்கப்படும் ஜோர்ஜ் தவராசா மற்றும் வில்சன் பற்றி புஸ்பராசா பல குறிப்புரைகள் தந்துள்ளார். இவர்கள் இருவரும் தனது தலைமையின் கீழ் செயற்பட்டவர்கள், ஜெர்மனியில் தன்னால் நிர்வகிக்கப்பட்டவர்கள் என்ற தோற்றத்தையே புஸ்பராசாவின் எழுத்து எம்மிடம் தோற்றுவிக்கின்றது. EPRLF ற்கு வானொலிநிலையம் நிறுவுவதற்காக வானொலிக்கருவிகள் வாங்க பணத்துடன் வந்து பெர்லினில் ஜோர்ஜை சந்தித்தமை, நிக்கரக்குவா புரட்சியின் 6வது வருடக்கொண்டாட்டத்திற்கு உமாகாந்தனுடன் ஜெர்மனியில் இருந்து வில்சனையும் அனுப்பி வைத்தமை என்று பல செயற்பாடுகளை தனதென்று உரிமை கோருகின்றார், புஸ்பராசா. பெர்லின் வந்து வானொலி நிலையம் நிறுவுவதற்கான வேலை சம்பந்தமாக ஜோர்ஜை சந்தித்தமை தவிர, மற்றையவை நம்பிக்கையான நேர்மையான தகவல்களல்ல. ஜோர்ஜ், வில்சன் பற்றியும் அவர்களது அரசியல் செயற்பாடுகள் பற்றியும் சாட்சியம் சொல்ல அவர்களோடு வாழ்ந்த பல தமிழ், ஜெர்மனிய தோழர்கள் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள், இங்கு புஸ்பராசா தன்னை முதன்மைப்படுத்தும்போக்குகளை கண்டபாட்டிற்கு எழுதிவிட முடியாது. ஜோர்ஜ் 1981 முதல் பெர்லினில் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக நடவடிக்கைகட்காக அறியப்பட்டவர். தமிழ் தேசியப்பிரச்சனை, அகதிகள்> சர்வதேசியம் என்று பலவகை செய்றபாடுகளைக் கொண்டிருந்தவர். ஜோர்ஜ்> வில்சன் இருவரும் பிற்காலத்திலேயே EPRLF இற்கு ஆதரவாய் செய்றபடத்தொடங்கினார்.

ஜோர்ஜ் தொடர்பு கொண்டிராத எந்த அமைப்பும் பெர்லினில் இல்லை என்று கூடச் சொல்லாம். கியூபா, நிக்கரக்குவா நட்புறவு அமைப்புக்கள், லத்தீன் அமெரிக்க விடுதலை அமைப்புக்கள், பாலஸ்தீன, தென்ஆபிரிக்க அமைப்புக்கள், துருக்கிய இடதுசாரிகள் ஜெர்மனிய இடதுசாரிக்குழுக்கள், கிழக்கு ஜெர்மனியுடன் தொடர்புடைய SAW எனப்படும் இடதுசாரி அமைப்பு எனப்பல தொகை அமைப்புக்களோடு தொடர்பு கொண்டு இருந்தார். கியூபா நட்புறவுக்குழுவினால் வருடாவருடம் ஏற்பாடு செய்யப்பட்டு கியூபா செல்லும் தொண்டர் அணியில் ஜோர்ஜ் இணைந்து கியூபா சென்று மூன்று மாதங்கள் வரை அங்கு பண்ணைகள், தொழிற்சாலைகளில் உழைத்தார். பின்பு அவர் நிக்கரக்குவா சென்று இராணுவப்பயிற்சி பெற்று இலங்கைக்கு திரும்பி சென்றார். நிக்கரக்குவா செல்ல முன்பு அவர் பெர்லினில் ஸ்பானிய மொழியைக் கற்றார். இங்கு EPRLF க்கு சாண்டினிஸ்டு புரட்சியாளர்களுடன் ஏற்பட்ட உறவு ஜோர்ஜ், வில்சன் போன்ற பெர்லினில் இருந்து உழைத்த தோழர்களினூடாகவே பெறப்பட்டது. இதற்கு லண்டனில் இருந்த அல்லது பாரிசில் இருந்த EPRLF இனரோ காரணமாக இருக்கவில்லை என்பது கலப்படமற்ற உண்மையாகும். இங்கு நிக்கரக்குவா உறவுக்கு புஸ்பராசா உரிமை கோருவது, அவருக்கு உரிமையற்ற பகுதிகளில் பலவந்தமாய் நுழைவதாகும். புஸ்பராசா வானொலி நிலையம் அமைப்பதற்கான கருவிகளை எடுத்துச் சென்றது சம்பவத்தை மட்டும் குறிப்பிடுவது மட்டும் ஓரளவு சாத்தியமானதொன்று. எனினும் இந்தியாவில் EPRLF க்கான வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட போது அது சார்ந்த தொழிநுட்ப பணிகட்காக இரண்டு ஜெர்மனிய இடதுசாரித் தோழர்கள் இந்தியாவிற்கு ஜெர்மனியிலிருந்தே சென்றனர். முன்பு எல்சல்வடோர் புரட்சியாளர்களின் வானொலி நிலையம் அமைக்கபட்டபோது இந்த இரண்டு ஜெர்மனிய தோழர்களே அங்கும் சென்று வானொலி நிலையம் தொடங்க உதவியவர்களாவர். நிக்கரகுவாவிற்கு வில்சனை தான் அனுப்பி வைத்ததாய் சொல்லும் புஸ்பராசாவிற்கு பாரிஸ் நகரில் எந்த இடதுசாரி அமைப்புக்களுடனோ, நிக்கரக்குவா நட்புறவுக்குழுக்களுடனோ, சாண்டினிஸ்டு இடதுசாரி அரசுடனோ எந்தத் தொடர்பும் இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. புஸ்பராசா இடதுசாரிப்பக்கம் திரும்பியும் படுக்கக்கூட சம்மதிக்காத மனிதர். இன்னமும் அழுத்திச் சொல்லப்போனால் அந்த திசையில் எந்தப் புலமையுமே இல்லாத மனிதர்.

உண்மையில் மேற்கண்ட நடவடிக்கைகளில் புஸ்பராசாவுக்கு பங்கும் பதவியும் இல்லை. ஜோர்ஜ், வில்சன் போன்றவர்களின் அரசியல் உழைப்பை அவர்கள் அப்போது கொண்டிருந்த சர்வதேசிய உறவை அதனூடாக சம்பாதித்தவற்றை புஸ்பராசா நோகாமல் கொள்ளாமல் அபகரிக்க முயல்கிறார். பிறரின் பங்களிப்பை திருடிக் கொள்வதும் தனது சாதனையாய் காட்ட முயல்வதும் தமிழ் தேசியத்திலும் அது சார்ந்த வலது சாரி அரசியலுக்கும் பழக்கப்பட்ட புஸ்பராசவிற்கு சாத்தியமான ஒன்றாகி விடுகிறது. ஜோர்ஜ் அர்பணிப்புடன் நாளும் பொழுதும் செய்த அரசியல் முயற்சிகளுடன் புஸ்பராசாவை எச்சமயத்திலும் ஒப்பிட முடியாது. ஜோர்ஜ் போன்றவர்கள் ஜெர்மனியின் நகர்புற கொரில்லா அமைப்பான செம்படை ஆ.ஏ.எப் உடன் கூட தொடர்பு கொண்டிருந்தனர். இந்த செம்படை அமைப்பின் உறுப்பினரான பிரிக்கேட்டா என்ற பெண் போராளி சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஒன்றான PFLP யில் ஆயுதப்பயிற்சி பெற்றபோது அங்கு உமா மகேஸ்வரனை சந்தித்து இருந்தார். அவர் பயிற்சி முடிந்து பெர்லின் திரும்பிய பின்பு சர்வதேச அரசியல் தொடர்புகளில் நாட்டம் கொண்டிருந்த ஜோர்ஜ், கண்ணன் (பரமதாசன்) உட்பட பல தமிழ் இடதுசாரிப்போக்குக் கொண்டவர்களோடு தொடர்புகள் கொண்டு இருந்தார். இந்த விமர்சனத்தை எழுதுவதற்கு முன்பு பிரிக்கேட்டாவை சந்தித்து ஜோர்ஜ் பற்றிய கால பழைய நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஜோர்ஜைப் பற்றி பின்வருமாறு குறிப்பட்டார். "தமிழர்களில் நான் பெர்லினில் முதன் முதலில் சந்தித்த சர்வதேசவாதி ஜோர்ஜ் தான், அவர் தீவிரமும் வேகமும் கொண்டவர்" என்று நினைவு கூர்ந்தார்.

ஜோர்ஜ் பெர்லினில் இயங்கிய BAZ எனப்படும் மூன்றாம் உலக நாடுகட்கான பயிற்சி மற்றும் நடவடிக்கைக்கான அமைப்புடன் முதலாவது தொடர்பு ஏற்படுத்திய தமிழராக இருந்தனர். 1982 இல் முதல் முதலில் பெர்லினில் ஜோர்ஜ் மற்றும் அவர் சார்ந்த தோழர்களும் ஏற்பாடு செய்த தமிழர்கள் முதல் முதலில் கலந்து கொண்ட மேதின ஊர்வலம் நடைபெற்றது. 1983 இல் பெர்லினில் சமஸ்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்த துருக்கிய அரசியல் கைதியான Cemel Altun விசாரணை நடந்த கட்டிடத்தின் 4 ஆம் மாடியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்த கொண்ட நிகழ்ச்சியை அடுத்து அரசுக்கு எதிராக பல பத்தாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஊர்வலத்தில் பலநுhறு தமிழர்கள் பங்கெடுத்தனர். 1983 டீசம்பர் மாதம் 31 ஆம் திகதி பெர்லினில் உள்ள Ogustaplatz இல் உள்ள அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான தடுப்பு மூமில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட பல அகதிகள் எரிந்து மாண்டனர். இந்த சம்பவங்களின் பின்பு நடந்த பெரும் ஊhவலங்களில் பெருந்தொகையான தமிழர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜோர்ஜ்ஜின் உழைப்பு முக்கியமானது. அக்காலமானது பல பத்தாயிரம் இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக கிழக்கு பெர்லின் விமான நிலையம் ஊடாக மேற்கு ஐரோப்யிய நாடுகளுள் நுழைந்து கொண்டிருந்த சமயமாகும். இச்சமயத்தலேயே ஜோர்ஜ் மற்றம் தமிழ் இடதுசாரிகளில்போக்குடையவர்களுடன் தொடர்பு கொண்ட ஜேர்மனியத் தோழர்கள் அகதிகளின் நலன்கட்காய் போராடும் Asyl.e.v என்ற அமைப்பை 1984 தை மாதத்தில் தொடங்கினார். இந்த அமைப்பு பத்து வருடங்களிற்கும் மேலாக மருத்துவ, சட்ட, சமூக சேவைப்பகுதி, பொலிஸ், மொழிபெயர்ப்பு, ஜெர்மன் மொழிக்கல்வி போன்ற உதவிகளை இலவசமாக அகதிகட்கு வழங்கியது. பல ஆயிரக்கணக்கான தமிழர்களும் இந்த அமைப்பினூடு பலனடைந்தனர்.

1972 ஆண்டுகளில் பெர்லின் வந்து அரசியல் தஞ்சம் மற்றும் மாணவர்களாக வாழ்ந்த JVP யின் சிங்கள இளைஞர்களுடனும் ஜோர்ஜிற்கு தொடர்பு இருந்தது. பெர்லினில் முதன் முதலில் தமிழ் பள்ளி குழந்தைகட்காக ஜோர்ஜினாலும் அவர்களது தோழர்களாலும் தொடங்கப்பட்டது. பெருந்தொகையாய் புதிதாக வந்து கொண்டு இருந்த தமிழர்கள் மத்தியில் அரசியல் வேலைகள் செய்யப்பட்டது. புதிய அகதிகட்கு ஆரம்ப வாக்குமூலம் எழுதி தருவது, சட்டத்தரணி தேடித்தருவது, பொலிஸ் மற்றும் சமூக சேவைப்பகுதிக்கு அழைத்துச் செல்வது போன்ற நடவடிக்கை ஜோர்ஜினால் ஆரம்பத்தில் செயய்ப்பட்டது. பிரதிபலன் கருதாமல் அதற்காக அவர் நேர்மையாய் உழைத்தார். இன்று இருபது வருடம் கழிந்த பின்பும் ஜோர்ஜை நினைவு கூரும் அவரது சேவையை ஞாபகப்படுத்தும் தமிழர்கள் மட்டுமல்ல, ஜெர்மனியத் தோழர்களும் உள்ளனர். அது அவரது அன்றைய வாழ்நிலைக்கான சான்றாகும். பெர்லினில் நடைபெறும் எந்த சர்வதேச ஊர்வலத்திலும் அரசியல் நிகழ்விலும் அவரைக் காணமுடியும். தமிழர்கள் அதிகளவில் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட காலமாக அது இருந்தது. முதன் முதலில் EPRLF தலைமையில் இருந்து வந்து பெர்லினில் ஜோர்ஜை சந்தித்தவர்கள் ஜோர்ஜ் அதிகமான சர்வதேசிய உணர்வுகளை கொண்டவராகவும் தமது தேசிய விடுதலைக்கு பெருமளவு பொருத்தமற்றவராகவும் இருப்பதாய் கருதினர். அந்த மட்டத்திற்கு இடதூரிகளுடன் அவர் கரைந்து இருந்தார். மேற்கு ஜெர்மனியின் Stuttgard நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஜெர்மனியின் முதல் அரசியல் சஞ்சிகையான "எண்ணம்" இதழுடன் ஜோர்ஜிற்கு நெருக்கமான உறவு இருந்தது. அதன் முக்கிய தோழரான அழகலிங்கத்துடன் இணைந்து பல அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டவர்.

1984 செப்ரெம்பர் மாதம் பெர்லினில் EPRLF EROS பிரநிதிகள் ஜெர்மனிய தோழர்களுடன் இணைந்து Elam Solidaritat Komittee (ஈழம் நட்புறவுக்கழகம்) ஆரம்பிக்கப்பட்ட போது கடந்த காலத்தில் ஜோர்ஜ் உடன் இணைந்து பணிபுரிந்த பல ஜெர்மனியத் தோழர்கள் அதன் மூலமாக இருந்தனர். புஸ்பராசா பெர்லினில் ஜோஜ்ஜை சந்தித்தபோது அவர் பல விடுதலை அமைப்பை சேர்ந்தவர்களுடன் வாழ்ந்தவர் என்று புஸ்பராசா ஞாபகப்படுத்துகின்றார். ஜோர்ஜ் உடன் இடதுசாரிகள், அனார்கிஸ்ட்டுப் போக்குடையோரைக் கொண்ட ஆண், பெணகள் குழுவொன்று கொம்யூன் மாதிரியிலான கூட்டில் வாழ்ந்தனர். வீட்டுக்கடமைகள், உணவு தயாரிப்பு என்பன பங்கிடப்பட்டுச் செய்யப்பட்டது. ஜோர்ஜ் தாறுமாறாக ஒழுங்கற்ற உடை அணிபவராகவும், தமிழ் போக்குகளை கடந்தவராகவும் இருந்தார். பெர்லினில் இருந்த "புலிப்பிராணிகள்" அவரை மோசமாய் எதிர்த்தனர். வெறுப்பும் பொறாமையும் தமிழ் வெறியும் அரசியலுக்கு மாற்றாக அவர்களால் வைக்கப்பட்டது. தமது காற்சட்டைகளில் 'தமிழ் ஈழம்' என்று எழுதி திரிவதும் 'புலிகளை எதிர்ப்பவர்களை எல்லாம் வம்பில் பிறந்தவர்~ என்று மொழிவதுமே' அவர்களது அன்றைய உச்ச அரசியலாக இருந்தது.

பின்பு இலங்கையில் EPRLF காலத்தில் ஜோர்ஜ் செய்த அரசியலானது தயவு தாட்சண்யம் காட்டமுடியாதளவிலான விமர்சனத்திற்குரியதாகும். புலிகளின் அரசியல் இராணுவபயங்கரவாதம், ஜோர்ஜின் நடுத்தர வர்க்கத்தின் பொறுமையற்ற அரசியல், EPRLF இன் நடுத்தர வர்க்க அரசியல் சீரழிவுகள் சகலதும் இணைந்து ஜோர்ஜின் முற்போக்கு அரசியல் கனவுகளை சிதறடித்துவிட்டது. அவர் இலங்கை அரசியல் பரப்பில் தோல்வியடைந்ததுடன் புலிகளின் பயங்கரவாத்திற்குப் பலியாகிப் போனார். ஜோர்ஜின் அவசரப்புத்தி, மனித நல்வாழ்வு மேலான நடப்பு மீறிய வெறி, புலிகளை அழிக்க எந்த சக்தியுடனும் சேரலாம்> எந்த மனித அறத்தையும் அரசியலையும் மீறலாம் என்ற துணிவைத் தந்தது. இந்திய இராணுவம், தமிழ், சிங்கள, இனவாதம், முதலாளியப் பொருளாதார இயக்கம் என்ற பல்வகைப்போக்குகளின் முன்னே ஜோர்ஜ் நிர்ணயமாகத் தோற்றகடிக்கப்பட்டார். வில்சன் முதலில் சோவியத்யூனியனிலும் பின்பு கிழக்கு ஜெர்மனியிலும் கல்வி கற்றவர். பல வருடங்களாக மேற்கு ஜெர்மனியின் பெர்லினில் பல ஆயிரம் தமிழ் அகதிகட்கு மொழி பெயர்ப்பாளராக கடமை புரிந்தவர். இடதுசாரி அமைப்புக்களுடன் தீவிரமான உறவு கொண்டு இருந்தவர். இத்தகையவர்களையெல்லாம் தானே கட்டியவிட்டதாய் புஸ்பராசா புனைவதை, தான்மட்டுமே வருத்தப்பட்டுப் பாரம் சுமந்தவராக அபிநயிப்பதை சகிக்க எமக்கு திட சிந்தை வேண்டும். ஜோர்ஜ், வில்சன் போன்றவர்களது அரசியல் உழைப்பின் விளை பயன்கள் புஸ்பராசா போன்றவர்கட்கும் ஆங்கே பொசிந்தது என்பதே உண்மையாகும்.


பெர்லின்
07.01.2005

8 comments:

ஜூலியன் said...

பின்பு இலங்கையில் EPRLF காலத்தில் ஜோர்ஜ் செய்த அரசியலானது தயவு தாட்சண்யம் காட்டமுடியாதளவிலான விமர்சனத்திற்குரியதாகும்.

George got married to Thangamahendran's sister sagunthala who was also in EPRLF. If you ask anyone what George did during IPKF's time would tell you how ruthless and impatient he was.

Anonymous said...

அமைதிப்படை காலத்தில் என்ன எப்போதுமே தயவு தாட்சண்யமற்ற அரசியல் செய்தது பாசிசப் புலிகளே. ஜோர்ஜ் ம் ஈ.பி.ஆர்.எல்.எவ் உம் புலிகளின் கொடூரங்களுக்கு எதிர்வினையாகத்தான் அவ்விதமாக நடந்து கொண்டார்கள்.
1988 காலப்பகுதியில் ஏழாலைப் பகுதிகளில் ஒரு 3 மாத காலப்பகுதிகளில் மட்டும் 88 மனிதர்களை
(மாவட்டசபை நடராசா(கூட்டணி) உட்பட) லோலோ என்கிற புலிப்பையன் புலித் தலைவரின் உத்தரவுக்கிணங்கி மண்டையில் போட்டான். லோலோவின் சாதனையோடு ஒப்பிடுகிறபோது ஜோர்ஜ் எம்மாத்திரம்.

அம்மான் தமிழரசர் அந்தமாதிரித்தான் எழுதியிருக்கிறார். தமிழரசம்மானை நாமெல்லோரும் ஊக்குவித்து அவரின் கட்டுரைகளை அடையாளம் சாதிக் ஊடாக புத்தகமாக கொண்டுவரவேண்டும். இல்லாவிட்டால் சேரன் என்கிற கெட்ட சாமானும் காலச்சுவடும் சொல்வதும்தான் வரலாறாகிவிடும்.

Anonymous said...

Asura,
Why should you write in shanmugartnam's name

Anonymous said...

தேசிய விடுதலை என்ற கோரிக்கை முதலாளிகளின் கோரிக்கையே என்பதை தமிழரசனின் எழுத்து உறுதி செய்கின்றது. அதாவது வல்வெட்டித்துறை முதலாளிகளுக்காக எழுந்த போராட்டமே இந்த விடுதலைப் போராட்டம் என்றாகி
வுpட்டது.இனி என்ன செய்வது?

ஜூலியன் said...

ஜோர்ஜ் ம் ஈ.பி.ஆர்.எல்.எவ் உம் புலிகளின் கொடூரங்களுக்கு எதிர்வினையாகத்தான் அவ்விதமாக நடந்து கொண்டார்கள்.

Interesting arguement. If this is the logic, anyone - including LTTE and Sri lankan government- can reason out any atrocity. Even if I have to take your arguement as it is, what did the innocent kids, who were forcefully abducted and recruited by George & Co for Tamil National Army (TNA) with the approval of IPKF do to die. Pathetic. You were not around in the country while IPKF & George were roaming wild, were you?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

my Dear Tamilarasan,

I love U. You are a real and only tamil intellectual I could understand.
BUT I HAVE A REQUEST:
Please try to be shot.

Anonymous said...

LTTE killed Thangamahendrans brother.
I think it was a year ago .